Thursday, April 13, 2017

மன்னிப்பு கேட்குமா பிரிட்டன்?

ந.வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 13 ஏப்ரல், 2017

இந்தியாவில், சுதந்திரப் போராட்டத்தின்போது நடைபெற்ற ஒவ்வொரு சம்பவமும் வரலாறு. அவற்றில், ரத்தமும் கண்ணீரும் கலந்து இன்னமும் ஈரம் காயாமல் இருக்கும் ஒரு சம்பவம் ஜாலியன் வாலாபாக் படுகொலை. இன்னும் இரண்டு ஆண்டுகளில் நூற்றாண்டை எட்டவிருக்கும் அந்தச் சம்பவம், கடந்த சில மாதங்களாகத் தனக்கான நியாயத்தைப் பெறுவதற்கு, குரலை எழுப்பிவருகிறது. 

1919-ல் இயற்றப்பட்ட ரெளலட் சட்டம், அன்றைய வைஸ்ராய் ஆட்சிக்கு, அளவு கடந்த அதிகாரங்களை அளித்தது. போராட்டக்காரர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதியவும், பத்திரிகைகளை மெளனமாக்கவும், பிடி ஆணை எதுவும் இல்லாமல், சந்தேகிக்கப்படும் தனிநபர்களைக் கைது செய்யவும் விசாரணை ஏதுமின்றிச் சிறையில் அடைக்கவும் இந்தச் சட்டம் வழிவகை செய்தது. இவ்வாறு கைதுசெய்யப்படுபவர்களுக்கு, சட்ட உதவி பெறுவதற்கான உரிமையைக்கூட இந்தச் சட்டம் தரவில்லை.

பஞ்சாபில் இச்சட்டத்தை எதிர்த்து அமைதியான முறையில் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த சைபுதீன் கிச்சுலு, சத்யபால் ஆகிய தலைவர்கள் ஏப்ரல் 9-ல் முன்னறிவிப்பு இல்லாமல் கைதுசெய்யப்பட்டனர். இதையடுத்து, வன்முறை வெடித்தது. அமிர்தசரஸ் மக்கள் காவல் நிலையத் தலைமையகம் நோக்கிச் சென்றனர். அவர்களைக் கட்டுப்படுத்த முடியாத காவலர்கள், துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 10 பேர் இறந்தனர். இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 11-ல், ப்ரிகேடியர் ஜெனரல் ரெஜினால்ட் டயர் தலைமையில் சுமார் 600 ராணுவ வீரர்கள் அந்நகரத்துக்கு அனுப்பப்பட்டனர். முறையான அனுமதியின்றிப் போராட்டம் நடத்தக் கூடாது என்ற உத்தரவை ஏப்ரல் 13-ல் ஜெனரல் டயர் பிறப்பித்தார்.

இந்த உத்தரவைப் பற்றித் தெரியாத, சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 15 ஆயிரம் பேர், ‘பைசாகி’ திருவிழாவைக் கொண்டாட அமிர்தசரஸ் நகரத்துக்கு வந்தனர். அங்கு, பொது நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஏற்படுத்தப்பட்ட ஜாலியன் வாலாபாக் எனும் இடத்தில் அவர்கள் திரண்டனர். அது என்ன நிகழ்ச்சி என்பதைக்கூடத் தெரிந்துகொள்ள விரும்பாத டயர், அந்த மக்களுக்கு எச்சரிக்கை எதுவும் விடுக்காமல், துப்பாக்கிச் சூடு நடத்த ஆணையிட்டார். சுற்றிலும் சுவர்கள் கொண்ட அந்த இடத்திலிருந்து மக்களால் தப்பிக்க முடியவில்லை. அந்த இடத்தின் குறுகிய வாயிலும் காவலர்களால் அடைக்கப்பட்டுவிட்டது. சுமார் 1,650 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் 379 பேர் இறந்தனர். 1,137 பேர் காயமடைந்தனர். இது அரசின் கணக்கு. இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம். இந்தப் படுகொலையை எதிர்த்துப் பல்வேறு கண்டனங்கள், போராட்டங்கள் ஒரு பக்கம் நடக்க, ஜெனரல் டயருக்கோ விருதுகள் வழங்கி அழகு பார்த்தது வெள்ளையர் ஆட்சி.
 
மீண்டெழுந்த வரலாறு

ஜாலியன் வாலாபாக் படுகொலைச் சம்பவம் கடந்த சில மாதங்களாகப் பொதுவெளியில் மீண்டும் பேசப்பட்டுவருகிறது. அதற்குக் காரணம், 2015 மே மாதம் ‘ஆக்ஸ்போர்டு யூனிய’னில் நடந்த விவாதத்தில் சசி தரூர் நிகழ்த்திய உரை. இந்தியாவில் பிரிட்டிஷ் அரசு செய்த கொடுமைகளைப் பட்டியலிட்ட அவர், ‘இந்தக் கொடுமைகளுக்காக பிரிட்டிஷ் அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். இந்தியாவை அது 200 ஆண்டுகள் ஆட்சிசெய்தது. எனில், ஆண்டுக்கு ஒரு பவுண்ட் வீதம் சுமார் 200 பவுண்டுகள் தர வேண்டும்’ என்றார். 

 
தொடர்ந்து, சசி தரூர், தன் உரையை விவரித்து எழுத, அது கடந்த ஆண்டு ‘என் எரா ஆஃப் டார்க்னெஸ்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்தது. அதில், ஹிட்லர் காலத்தில் நடைபெற்ற நாஜி கொடுமைகளுக்காக 1970-ல், ஜெர்மனியின் அதிபராக இருந்த வில்லி ப்ராண்ட், வார்சா கெட்டோ எனுமிடத்தில் போலந்து யூத மக்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டதையும், 2016-ல் கோமகாட்டா மாரு சம்பவத்துக்காக கனடாவின் பிரதமர் ஜஸ்டின் த்ரூதோ, கனடா வாழ் சீக்கியர்களிடம் மன்னிப்பு கேட்டதையும் குறிப்பிட்டு, ஜாலியன் வாலாபாக் படுகொலைச் சம்பவத்துக்காக பிரிட்டனும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எழுதியிருந்தார்.

கோமகாட்டா மாருவின் கண்ணீர்

கோமகாட்டா மாரு சம்பவத்தைப் பற்றி, இந்தியர்கள் பலருக்கும் தெரியாது. 1914 மே 23-ல் பாபா குர்தித் சிங் எனும் வணிகரின் தலைமையில், 376 இந்தியர்களுடன் ‘கோமகாட்டா மாரு’ எனும் கப்பல் கனடாவின் வான்கூவரை வந்தடைந்தது. ஆனால், அந்தக் கப்பலில் இருந்த பயணிகளைக் கரையில் கால் வைக்க வெள்ளையர் அரசு, அனுமதிக்கவில்லை. கனடாவில் ஏற்கெனவே இருந்த வெள்ளையர்கள் இந்தியர்களின் இந்தக் குடியேற்றத்தை எதிர்த்தார்கள். கப்பலில் உணவுப் பொருட்கள் தீர்ந்துபோக, பயணிகள் பசியால் வாடினர். 376 பேரில், 20 பேர் மட்டும் கனடாவுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அதுவும், அவர்களின் முன்னோர் அந்த நாட்டில் இருந்ததால்தான், அவர்களுக்கு அனுமதி கிடைத்தது. கரை இறங்குவதற்கான எல்லா முயற்சிகளும் தோற்றுவிட, அந்த வருடம் ஜூலை மாதம் 23-ல், அந்தக் கப்பல் வந்தவழியே திரும்பியது.



கோமகாட்ட மாரு செப்டம்பர் 29-ல், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ‘பட்ஜ்-பட்ஜ்’ எனும் இடத்தை வந்தடைந்தது. கொல்கத்தாவை அடைய கொஞ்சம் தொலைவே இருந்த சமயத்தில், பயணிகளைக் கீழிறக்கி, ரயில் மூலமாக அவர்களைப் பஞ்சாபுக்கு அனுப்பத் திட்டமிட்டது அரசு. அவர்களைக் கொல்கத்தாவில் இறங்க அனுமதித்தால், அவர்களின் கஷ்டத்தை அறிந்த மக்கள், கலவரத்தில் ஈடுபடுவார்களோ என்று அஞ்சியது வெள்ளையர் அரசு. பயணிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கப்பலிலிருந்து இறங்கி கல்கத்தாவுக்குள் பேரணியாகச் செல்ல முயன்றனர். இதையடுத்து துப்பாக்கிச் சூட்டுக்கு ஆணையிடப்பட்டது. அதில் 19 பேர் இறந்தனர். 21 பயணிகள் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தில் மிக முக்கியப் பங்காற்றியவரின் பெயரும் டயர் என்பது வரலாற்றின் புதிர்களில் ஒன்று. சர் மைக்கேல் பிரான்ஸிஸ் ஓ’டயர் என்பவர் அப்போது பஞ்சாபின் கவர்னராக இருந்தார். ஜெனரல் டயரின் ஜாலியன் வாலாபாக் படுகொலையை நியாயப்படுத்தியவரும் இவரே.
 
கனடா வழிகாட்டுகிறது

கோமகாட்டா மாரு சம்பவம், கனடா வாழ் இந்தியர்களின் மனதில் இருக்கும் ஆழமான காயம். 1989-ல் இந்தச் சம்பவத்தின் 75-ம் ஆண்டு விழா அனுசரிக்கப்பட்டது. அப்போதிலிருந்து இந்தச் சம்பவத்துக்காக கனடா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. 1997-ல் இதற்கான கோரிக்கையை, கனடா நாடாளுமன்றத்தில் முதன்முறையாக குர்மந்த் சிங் க்ரெவால் எழுப்பினார். தொடர்ந்து 2008 ஆகஸ்ட் 3-ல் ‘கத்ரி தியாகிகள்’ எனும் சீக்கியர் விழாவில் அன்றைய கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், இந்தச் சம்பவத்துக்காக மன்னிப்பு கேட்பதாகக் கூறினார்.

ஆனால் இந்தியர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த மன்னிப்பு, நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கருதினர். சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிடம் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்ட கனடா, இந்தியாவிடமும் தனது நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் கருதியதில் நியாயம் இருந்தது.

கடைசியில், 2016 மே 18-ல் கனடா நாடாளுமன்றத்தில், பிரதமர் ஜஸ்டின் த்ரூதோ, கோமகாட்டா மாரு சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டார். அதுபோல, இன்னும் இரண்டு ஆண்டுகளில் நூற்றாண்டு காணவிருக்கும் ஜாலியன் வாலாபாக் படுகொலைச் சம்பவத்துக்கு, பிரிட்டன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. ‘பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்த யாரேனும் ஒருவர், ஜாலியன் வாலாபாக்குக்கு வந்து மன்னிப்புக் கேட்க வேண்டும்’ என்கிறார் சசி தரூர். அல்லது, குறைந்தபட்சம், அந்தச் சம்பவத்தை பிரிட்டனின் பள்ளிகளில் பாடமாக வைக்க வேண்டும் என்கிறார் அவர்.

இந்த இரண்டில் எது நடக்குமென்று தெரியவில்லை. ஆனால், பிரிட்டன் மன்னிப்பு கேட்டாலும் கேட்காவிட்டாலும், பிறரை மன்னிக்கும் குணம் நம்மிடம் எப்போதும் உண்டு. ஏனென்றால், நாம் இந்தியர்கள்! 

நன்றி: தி இந்து

Thursday, March 23, 2017

‘டெரர்' பகத்..?

ந.வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 23 செப்டம்பர், 2016

‘மேனுஃபேக்சரிங் கன்சென்ட்' எனும் நோம் சாம்ஸ்கியின் சொற்றொடர் மிகவும் பிரபலமானது. அதாவது, பொதுப்புத்தியில் பல ஊடகங்கள் ஒன்றுசேர்ந்து உண்மைக்கு மாறான ஒரு கருத்தை உருவாக்குவது என்பது இதன் பொருள். 

கிட்டத்தட்ட அதே சொற்றொடருக்குச் சமமான ஆனால் முற்றிலும் எதிரான ஒரு சொற்றொடர் உண்டு. அது 'மேனுஃபேக்சரிங் ஆங்கர்'. அதாவது, குறிப்பிட்ட குழுக்கள் ஒன்றுசேர்ந்து, ஏற்கெனவே பல காலம் வழக்கில் உள்ள ஒரு கருத்துக்கு எதிராக விஷமப் பிரச்சாரம் செய்வது.

அப்படி ஒரு விஷயம், விஷமம் சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் நடந்தது. அது பகத் சிங்கை முன்வைத்து!
 
அதிகாரப்பூர்வ ஆவணம்

பகத் சிங் பிறந்த 110-வது ஆண்டு இது. பகத் சிங் மற்றும் அவரது தோழர்கள் ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட 85-வது ஆண்டும் இது. அவர்கள் உருவாக்கிய ‘இந்துஸ்தான் சோஷியலிஸ்ட் ரிபப்ளிகன் ஆர்மி'க்கு இந்த செப்டம்பர் 9-ம் தேதி, 88 வயது.

இப்படி ஒரு முக்கியமான காலகட்டத்தில்தான் ‘பகத் சிங் தீவிரவாதியா?' என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அவர் புரட்சியாளரா அல்லது தீவிரவாதியா அல்லது புரட்சித் தீவிரவாதியா என்று பார்ப்பதற்கு முன்னால், இது குறித்த அடிப்படையான சில உண்மைகளை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

இந்திய விடுதலைப் போராட்டம் தொடர்பாக இன்று வரையிலும் எத்தனையோ புத்தகங்கள் வெளிவந்துள்ளன. ஆனால் இன்றளவும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வியாளர்கள், வரலாற்றாசிரியர்கள், சமூகவியலாளர்கள் எனப் பலதரப்பட்ட துறைசார் நிபுணர்கள் மத்தியில் ஒரே ஒரு புத்தகம்தான் ‘இந்திய விடுதலைப் போராட்டம் பற்றிய அதிகாரபூர்வமான ஆவணம்' என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது. அந்தப் புத்தகம் ‘இண்டியாஸ் ஸ்ட்ரகிள் ஃபார் இண்டிபெண்டன்ஸ்'.

மார்க்கிய அறிஞரும் பேராசிரியருமான‌ பிபன் சந்திராதான் இந்தப் புத்தகத்தின் முதன்மை ஆசிரியர். அவருடன் சேர்ந்து மிருதுளா முகர்ஜி, ஆதித்ய முகர்ஜி, சுசேதா மகாஜன் மற்றும் கே.என்.பணிக்கர் ஆகியோர் இணையாசிரியர்களாக இருந்து இந்தப் புத்தகத்தை உருவாக்கியுள்ளனர். மொத்தம் 39 அத்தியாயங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தில் பிபன் சந்திரா மட்டுமே 22 அத்தியாயங்களை எழுதியுள்ளார். 




அதில் பகத் சிங் தொடர்பான அத்தியாயம்தான் இப்போதைய சர்ச்சைக்குக் காரணம். அந்த அத்தியாயம் இந்தப் புத்தகத்தில் 20-வது அத்தியாயமாக இடம்பெற்றுள்ளது. அதன் தலைப்பு ஆங்கிலத்தில் ‘பகத் சிங், சூரிய சென் அண்ட் தி ரெவல்யூஷனரி டெரரிஸ்ட்' (பகத் சிங், சூரிய சென் மற்றும் புரட்சிகரத் தீவிரவாதிகள்) என உள்ளது.

‘அதெப்படி, பகத் சிங்கை ‘தீவிரவாதி' என்று பிபன் சந்திரா அடையாளப்படுத்தலாம்?' என்று நாடாளுமன்றத்தில் ஏப்ரல் 27-ம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுராக் தக்கூர் கேள்வி எழுப்பினார். இதைத் தொடர்ந்து இந்துத்துவக் குழுக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கின. முன்னாள் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி ஒரு படி மேலே போய் இதனை ‘அகாடமிக் மர்டர்' என்று கூச்சலிட்டார்.
 
பகத் சிங் தீவிரவாதியா?

'உண்மையில் பகத் சிங் தீவிரவாதியா?' என்று கேட்டால், 'ஆம்' என்று தைரியமாகச் சொல்லலாம். ஏன்?

அதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், அவர் செய்த தீவிரவாதச் செயலை முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இந்திய அரசியலமைப்பில் சில மாற்றங்களைச் செய்வதற்காக சைமன் கமிஷன் எனும் குழு ஒன்று ஆங்கிலேயர்களால் நியமிக்கப்பட்டது. அதில் இந்தியர் ஒருவர்கூட இடம்பெறவில்லை. இதனை எதிர்த்து லாலா லஜபதி ராய் போராட்டம் நடத்த, அதில் அவர் ஆங்கிலேயர்களால் தாக்கப்பட்டு மரணமடைகிறார்.

இதனால் கோபமடைந்த பகத் சிங் உள்ளிட்ட‌ இந்துஸ்தான் சோஷியலிஸ்ட் ரிபப்ளிகன் ஆர்மி உறுப்பினர்கள் ஆங்கிலேயே காவல் துறை அதிகாரி சாண்டர்ஸ் என்பவரைக் கொல்கிறார்கள். அதனைத் தொடர்ந்து, லாகூர் மத்திய சட்டமன்றத்தில் குண்டு வீசி கைதாகிறார்கள். இந்தக் குற்றங்களுக்காக பகத் சிங் மற்றும் அவரது தோழர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது.

அகிம்சை வழியில் நம்பிக்கை இழந்ததால் பகத் சிங் உள்ளிட்டோர் இத்தகைய தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ‘கேட்கும் திறனிருந்தும் செவிடாக இருப்பவர்களைக் கேட்கச் செய்யவே' இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அவர்கள் அறிவித்தனர். 

இந்தக் காரணங்களுக்காக ஆங்கிலேயே அரசு அவர்களை ‘தீவிரவாதி' என்று முத்திரை குத்தியது. ‘புரட்சி என்பது மக்களுக்காக மக்களால் முயன்றால் மட்டுமே தோன்ற முடியும்' என்று நம்பிக்கை கொண்டிருந்ததால் பகத் சிங் உள்ளிட்டோர் இத்தகைய தனிப்பட்ட சாகஸ நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தான் சிறையில் இருக்கும்போது பகத் சிங்கேகூட ‘புரட்சி மனநிலை மக்களைச் சென்றடையவில்லை என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலமே தீவிரவாதம். ஆகவே, அது எங்களின் தோல்வியின் வாக்குமூலமும் ஆகும்' என்று எழுதினார்.

ஆக, இதிலிருந்து நமக்குத் தெரிய வருவது பிபன் சந்திராவுக்கு முன்பே பகத் சிங்கே தனது செயல்களை ‘தீவிரவாதச் செயல்கள்' என்று ஒப்புக்கொண்டார் என்பதுதான்.
 
காவிமயமாகும் வார்த்தைகள்

இந்த வரலாற்றை பிபன் சந்திரா எழுதும்போது, வெறும் ‘தீவிரவாதி' என்ற சொல்லை மட்டும் பயன்படுத்தாமல், ‘புரட்சிகரத் தீவிரவாதி' என்றே குறிப்பிடுகிறார். இப்போதைய சர்ச்சைக்கு மேற்கண்ட இரண்டு வார்த்தைகளில், ‘தீவிரவாதி' என்ற சொல் மட்டுமே காரணமாகியிருக்கிறது. இந்துத்துவ குழுக்கள் அந்தச் சொல்லுக்கு முன்புள்ள ‘புரட்சிகர' என்ற சொல்லுடன் தீவிரவாதி என்ற சொல்லை இணைத்துப் பார்க்காமல் போனது துர்பாக்கியம்.

ஆங்கிலத்தில் ‘பெஜொரேட்டிவ்' என்ற ஒரு சொல் உண்டு. தமிழில் அதற்கு ‘அவமதிப்பு' என்று பொருள்கொள்ளலாம். நல்ல பொருளில் வழங்கப்படும் சில சொற்கள் காலப்போக்கில் அவமதிப்பான சொல்லாக, ஆபாசமான சொல்லாக மாறிவிடும் போக்கு எல்லா மொழியிலும் உண்டு. உதாரணத்துக்கு ‘லவ்' என்ற சொல்லுக்கு ‘அன்பு' என்ற அர்த்தமும் உண்டு. ஆனால் அது ‘காதல்' என்பதாக மட்டுமே பெரும்பாலானோர் இன்றைய தினத்தில் பொருள் கொள்கின்றனர். அதேபோலத் பட்டா இல்லாத நிலத்தை ‘புறம்போக்கு' நிலம் என்று சொல்வதுண்டு. ஆனால் அது இன்று பெரும்பாலும் ஒருவரைத் திட்டுவதற்கான சொல்லாகப் பொருள் கொள்ளப்படுகிறது. இதெல்லாமே இன்று ‘பெஜொரேட்டிவ்' சொற்கள்தான். 

இந்த நிலைதான் ‘தீவிரவாதி' என்ற சொல்லுக்கும் ஏற்பட்டுவிட்டது. ‘சிப்பாய்க் கலகம்' என்பதை இன்று எப்படி ‘சிப்பாய்ப் புரட்சி' என்று எழுதுகிறோமோ, அதுபோல எதிர்காலத் தலைமுறையினர் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது என்ற காரணத்துக்காகவே பிபன் சந்திரா ‘தீவிரவாதி' என்ற சொல்லை மட்டும் பயன்படுத்தாமல் ‘புரட்சிகரத் தீவிரவாதி' என்றே பயன்படுத்துகிறார்.

இவர் எழுதிய அந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பு 1987-ம் ஆண்டு வெளிவந்தது. வெளிவந்த அந்த வருடமே அனைத்துப் பிரதிகளும் விற்றுத் தீர்ந்து சாதனை படைத்தது. அதனால் 1988 மற்றும் 1989-ம் ஆண்டுகளில் அடுத்தடுத்து இரண்டாம் மற்றும் மூன்றாம் பதிப்புகள் வெளிவந்தன. கடைசியாக 1989-ம் ஆண்டு வெளிவந்த பதிப்புதான், இந்த ஆண்டு மத்தி வரை விற்பனைக்கு இருந்துள்ளது. 1987-ம் ஆண்டு முதல் இப்போது வரை இந்தப் புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றுள்ளது.

பின்னாளில், பிபன் சந்திராவே ‘புரட்சிகர தீவிரவாதி' என்ற சொற்களில், ‘தீவிரவாதி' என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கக் கூடாது, அது திருத்தப்பட வேண்டும் என்று கூறிவந்தார். ஆனால் துரதிர்ஷ்டம், 1989-ம் ஆண்டுக்குப் பிறகு நான்காம் பதிப்பு வெளிவரவில்லை. 2014-ம் ஆண்டில் அவர் காலமாகிவிடுகிறார். அதனால் அந்தத் திருத்தத்தை அவரால் செய்ய முடியாமல் போனது.

இந்த வாய்ப்பை இந்துத்துவக் குழுக்கள் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டன. ‘மேரே ரங் தே பசந்தி சோலா' (என் உடைகளைக் காவி நிறம் கொண்டு பூசு) என்ற பாடலை பகத் சிங்கும் அவரது தோழர்களும் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் வரும்போது பாடுவார்களாம். இங்கே ‘காவி நிறம்' என்பது துணிச்சல் மற்றும் தியாகத்துக்கான நிறம் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

இதனால் எங்கே தங்களையும் ‘தீவிரவாதி' என்று அழைத்துவிடுவார்களோ என்ற பயத்தினால்கூட‌ ‘புரட்சிகரத் தீவிரவாதி' என்ற சொற்களில் இருக்கும் ‘தீவிரவாதி' எனும் சொல்லை நீக்க வேண்டும் என்று இந்துத்துவக் குழுக்கள் அழுத்தம் தந்திருக்கலாம்.

அந்த அழுத்தத்தின் காரணமாக, இப்போது கடைகளில் இந்தப் புத்தகத்தின் நான்காம் பதிப்பு கிடைக்கிறது. அதில் குறிப்பிட்ட இந்த அத்தியாயத்தில் எங்கெல்லாம் ‘தீவிரவாதி' என்ற சொல் உண்டோ அங்கெல்லாம் ‘தேசியவாதி' என்ற சொல் இடம்பெற்றுள்ளது. ‘புரட்சிகரத் தீவிரவாதி' ‘புரட்சிகர தேசியவாதி' ஆனது இப்படித்தான்! 


சில இந்துத்துவக் குழுக்களின் மிரட்டுலுக்குப் பதிப்பகங்கள் எப்படிப் பணிந்துபோகின்றன என்பதற்கான ஒரு சான்று இது. ஆனால் வேடிக்கை, அத்தியாயத்தின் தலைப்பை ‘பகத் சிங், சூரிய சென் மற்றும் புரட்சிகரத் தேசியவாதிகள்' என்று மாற்றியவர்கள், ‘குறிப்புகள்' எனும் பின்னிணைப்பில் பழைய தலைப்பையே வைத்துவிட்டார்கள் (பார்க்கப் படம்). 

யார் தீவிரவாதி?

சிறையில் இருந்த பகத் சிங் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு இப்படி எழுதினார்: "நான் தீவிரவாதியைப் போலச் செயல்பட்டிருக்கிறேன். ஆனால் நான் தீவிரவாதி அல்ல. என்னிடம் உள்ள அத்தனை சக்திகளையும் ஒன்றுதிரட்டிச் சொல்கிறேன், நான் ஒருபோதும் தீவிரவாதி அல்ல. அப்படியான செயல்கள் மூலம் நாம் சாதித்துவிடப் போவதும் ஒன்றுமில்லை".

இன்று மக்களின் நலனுக்காகப் போராடுபவர்கள் மீது தேசத் துரோக வழக்குகள் போட்டு, தீவிரவாதி என்று அடையாளம் காட்டப்படும் வேளையில், கால் நூற்றாண்டுகூட வாழாமல் தன் இன்னுயிரை இந்த நாட்டுக்காகத் தியாகம் செய்து நூற்றாண்டுகள் கடந்தும் நினைவுகூரப்படும் பகத் சிங், புரட்சிகரத் தீவிரவாதியாகத்தான் இருந்துவிட்டுப் போகட்டுமே, என்ன இப்போது?

நன்றி: தி இந்து (இளமை புதுமை)

Sunday, March 19, 2017

சமகாலத்தின் மனிதன்!

ந.வினோத் குமார்  
பதிப்பிக்கப்பட்ட தேதி: 19 மார்ச், 2017
 
‘மனிதன் மகத்தான சல்லிப்பயல்’ என்பார் ஜி.நாகராஜன். இன்னொரு பக்கம் ஷேக்ஸ்பியர் ‘மனிதன் ஒரு மகத்தான பிறவி’ என்பார். சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப, இந்த இரண்டு நிலைகளும், எல்லா மனிதர்களுக்கும் பொருந்தும். 

இனம், நிறம், மொழி, மதம் என்ற வேறுபாடுகளின் அடிப்படையில், ஒரு மனிதரைக் கைகொடுத்துத் தூக்குவதும், அவரைக் கைகழுவி விடுவதும் உலகம் முழுக்கவும் பரவியிருக்கும் பிரச்சினை. மேற்கண்ட வேறுபாடுகளைத் தாண்டி ஒருவர் எப்படி உயர்ந்த நிலையை அடைகிறார் என்பதுதான், அவரை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்துகிறது.

இன்று பல முன்னேற்றங்களுக்கும் முன்னோடியாகக் காட்டப்படும் அமெரிக்கா, ஒரு காலத்தில் நிறவெறி எனும் கறுப்புப் பக்கத்தைக் கொண்டி ருந்தது. ஆஃப்ரோ அமெரிக்கர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைக்கு, வரலாற்றில் எந்த நிறம் பூசினாலும் அது தன் கோர முகத்தை அப்பட்ட மாக வெளிப்படுத்தவே செய்கிறது. அப்போது நிறவெறிக்கு எதிராகப் போராடியவர்கள் எல்லாம் இந்த‌ முழக்கத்தை முன் வைத்தனர்: ‘இவர்கள் எல்லாம் கீழ்மையானவர்கள் அல்ல. வித்தியாசமான தோற்றம் கொண்ட வர்கள், அவ்வளவே’. 

ஆனால், அமெரிக்கர்கள் அந்த வித்தியாசத்தை, எவ்வளவு தூரம் ஏற்றுக் கொண்டார்கள் என்பதை, ‘தி மேன்’ எனும் ஒரே ஒரு புத்தகத்தின் மூலம் நம்மால் தெரிந்துகொள்ள முடியும். ‘நியூயார்க் டைம்ஸ்’ இதழின் சுமார் 80 ஆண்டுகால வரலாற்றில், அதன் ‘பெஸ்ட் செல்லர்’ வரிசையில், தன் புனைவு, அபுனைவு புத்தகங்களுக்காக முதலிடத்தைப் பிடித்த எர்னெஸ்ட் ஹெமிங்வே உள்ளிட்ட ஆறு எழுத்தாளர்களில் ஒருவரான இர்விங் வல்லாஸ் என்பவர் எழுதிய இந்த நாவல் 1964-ம் ஆண்டு வெளிவந்தது.
 
ஓரிரவில் அதிபர்

அமெரிக்க அரசியல் வரலாற்றில் ஒரு ஆஃப்ரோ அமெரிக்கர் ஜனாதிபதியாக வந்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையின் அடிப்படையில் இந்த நாவலை எழுதினார் இர்விங் வல்லாஸ். சுமார் 44 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது கற்பனை பராக் ஒபாமாவின் வடிவில் நிஜமாகும் என்பதை இர்விங் வல்லாஸ் நினைத்துப் பார்த்திருப்பாரா என்பது சந்தேகம்தான். இந்த ஒரு காரணத்துக்காகவே தீர்க்கதரிசியாகப் போற்றப்படும் இவர் 1916-ம் ஆண்டு மார்ச் 19-ம் தேதி சிகாகோவில் பிறந்தார். இந்த ஆண்டு அவரின் பிறப்பு நூற்றாண்டு நிறைவடைகிறது. 'தி மேன்', 'தி பிரைஸ்', 'தி செகண்ட் லேடி' என அவரது பெரும்பாலான நாவல்கள் 'தி' எனும் ஆங்கில வார்த்தையுடன் சேர்ந்த தலைப்பைக் கொண்டிருக்கும் என்பது கூடுதல் தகவல்.



ஆஃப்ரோ அமெரிக்கர் ஒருவர் வெள்ளை மாளிகையை அலங்கரித்து விட்டு ஓய்வுபெற்ற பிறகு, ஊடகங்களின் சகல கருத்துக் கணிப்புகளையும் தகர்த்துவிட்டு மீண்டும் ஒரு வெள்ளையர் அமெரிக்காவின் அதிபராகப் பொறுப்பேற்றிருக்கும் நிலையில், அவரின் பதவியேற்பு உலகின் பல முற்போக்குப் பார்வைகளுக்கு அபாய மணி அடித்திருக்கும் இந்தத் தருணத்தில், இர்விங் வல்லாஸ் எழுதிய ‘தி மேன்’ நாவலை நாம் மறுவாசிப்புச் செய்வது முக்கியமாகிறது. ‘ஒரே இரவில் அமெரிக்காவின் அதிபர்!’ இதுதான் ஒரு வரிக் கதை. ‘ஒரு நாள் முதல்வன்’ போல, நேருக்கு நேராகச் சவால் விட்டு ஆட்சியைப் பிடிக்கும் கதையல்ல. அமெரிக்காவின் அதிபராக ஒரு வெள்ளையர் இருக்கிறார். அவர் அலுவலகப் பயணமாக வெளி நாடுக்குச் செல்லும்போது ஒரு விபத்தில் இறந்துவிடுகிறார். அவருக்குப் பின் பொறுப்பேற்கும் துணை அதிபரும் அந்த விபத்தில் இறந்துவிடுகிறார். எனவே, அலுவலக நடைமுறையின்படி, துணை முதல்வருக்கும் அடுத்த நிலை யில் உள்ள ட‌க்ளஸ் தில்மன் எனும் ஆஃப்ரோ அமெரிக்க செனட்டர், அதிபராகப் பொறுப்பேற்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. அவரது பதவிக்காலம் சுமார் 14 மாதங்கள்தான்.

அந்தக் குறுகிய காலத்திற்குள் நிறவெறி காரணமாக, வெள்ளையர்கள் அவரை எப்படி எல்லாம் கொடுமைக்கு உள்ளாக்கினார்கள் என்பதை இந்த நாவல் பதிவுசெய்கிறது. 

வெள்ளை மாளிகை அரசியல் 
 
1868-ம் ஆண்டு ஆண்ட்ரூ ஜான் சன் எனும் அதிபர் மீது ‘அரசியல் குற்றச்சாட்டு’ சுமத்தப்பட்டது. அதற்குப் பிறகு சுமார் 130 வருடங்களுக்குப் பிறகு 1998-ம் ஆண்டு அன்றைய அதிபர் பில் கிளிண்ட்டன் மீது அரசியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. பில் கிளிண்ட்டனுக்கு முன்பு, இந்தப் புனைவு இலக்கியத்தில் ஒரு ஆஃப்ரோ அமெரிக்க அதிபர் மீது அரசியல் குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. அதிலிருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார் என்பதுதான் கதையின் மையம்.

இந்தப் புத்தகம் சொல்லும் அரசியலைத் தவிர, இலக்கிய ரீதியாக இந்தப் புத்தகம் கொண்டாடப்படுவதற்கு இன்னொரு காரணம் இருக்கிறது. அது இர்விங் வல்லாஸின் அளப்பரிய கள ஆய்வு. அமெரிக்காவின் வெள்ளை மாளிகையைச் சுற்றி நடக்கும் கதை என்பதால், ஒரு பரந்த அஸ்திவாரத்தைக் கட்டமைத்துவிடுகிறார். அமெரிக்க வெள்ளை மாளிகை எப்படியிருக்கும், அங்கு பின்பற்றப்படும் நடைமுறைகள் எல்லாம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள நினைப்பவர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு வழிகாட்டி என்று சொன் னால் அது நூறு சதவீதம் உண்மை.

இந்த நாவலில் வரும் அதிபர் என்ன கொடுமையை எல்லாம் சந்தித்தாரோ, அதே கொடுமையை அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபரான பராக் ஒபாமாவும் சந்தித்திருப்பதற்கு அநேக சாத்தியங்கள் உண்டு. வெளி உலகத் துக்கு வேண்டுமானால், ஒபாமா பெரிய வீரர் போலச் சித்தரிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், அமெரிக்க செனட்டிற்குள் அவர் எப்படியான விமர்சனங்களைச் சந்தித்திருப்பார்? 

‘இங்கு இரண்டு கால் உள்ள ஜீவன்கள்தான் ஆள வேண்டும். உன்னைப் போன்ற நான்கு கால் ஜீவன்கள் அல்ல!’ என்று கறுப்பின‌ அதிபரை, ஒரு விலங்காகச் சித்தரிக்கும் ஒரு இடம் நாவலில் உண்டு. அதே விமர்சனத்தை ஒபாமாவும் சந்தித்திருக்கலாம். ஏனென்றால், அமெரிக்கர்கள் ‘வித்தியாசமான தோற்றம்’ கொண்டவர்களின் வித்தியாசத்தை, அவ்வளவு தூரத்துக்குத்தான் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். 

இன்றும் அந்த நிலை மாறிவிடவில்லை என்பதற்கு, அவ்வப்போது நடக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களே சாட்சி. இந்த சமகாலத் தன்மைதான் இந்த ‘மனிதனை’, புத்தகம் வெளியாகி 50 ஆண்டுகளுக்குப் பிறகும் நம்மை வாசிக்க வைக்கிறது. நேசம் கொள்ள வைக்கிறது! 

நன்றி: தி இந்து (தமிழ்)

Monday, February 27, 2017

The man who groomed the dreams

N.Vinoth Kumar

To begin with, I got introduced to Sujatha’s writing for the first time at the age of 17. During the annual vacations, I used to go to my grandparents house. There was no cable connection at that time. Cell phones were out of reach, from our thinking. No cinema theatres nearby. FM stations were not been intruded deeply in remote areas. For a teen, it was very hard to while away the time. Books, were the only solace.

My uncle, from young age, has developed an interest in reading Tamil weeklies. He used to buy Ananda Vikatan, Kumudam, Kalkandu, etc.  It was 90s. The price of those magazines was very much a pittance (Vikatan costed Rs.3, then!). He still has those collections, safely in his wooden box, where he used to keep brands like Kingfisher!

He allowed me to read those books. My reading gradually promoted from comics to start reading weeklies. I don’t know it was Vikatan or Kumudam, in which I found a story of writer Sujatha. I don’t remember the title of the story. But, the writer started the story with a caution, which goes like this: I warn you. The story is going to end in a dream!

Apparently, the story ends in a dream, but with a slight twist. It was a one page story. Within that constrained space, he managed to add copious amounts of details. For next two days, I read the story again and again, every time wearing a smile, in the end of the story. 

  
Then, I read a story titled ‘….’ (ah.. I forgot that too!), in which, hero plays as an electronic gadgets mechanic.  After reading the story, I, for a fleeting period, found an interest in electronics. Such was his narration!

When I took reading weeklies seriously, particularly Vikatan, my eyes searched for the pages containing Sujatha’s column, ‘Katradhum Petradhum’, every time I bought the magazine. His writing dealt with smorgasbord of subjects, starting from Aandal paasuram’s to nano science.

*******

Born in Chennai and brought up in Srirangam, Trichy, Rangarajan was basically an electronic engineer, worked at BHEL, Bengaluru. During this time, he contributed in developing Electronic Voting Machine, for which he won ‘Vasvik’ award.  Its important to mention, that, our former President APJ Abdul Kalam and Rangarajan were friends from the days of St.Joseph’s College, Trichy to MIT, Chennai.

He started to write from his young age. His first writing, a short story titled ‘Ezhuthil Himsai’ was published in the magazine ‘Sivaji’, in the year 1953, in his birth name, S.Rangarajan. Only after 12 years, he again started to pen the stories in popular magazines, under the pseudonym ‘Sujatha’, his wife’s name.  His writings on science, won him NCSTC’s award for popularising science through magazines.

Apart from writing stories and columns for magazines, he also penned dialogues for more than 20 films including Ninaithale Inikkum, Vikram, Roja, Indian, Enthiran, etc.

He died in Chennai, on 27 February, 2008. During his life time, he has written 64 novels, 39 novellas, 25 plays and numerous short stories. Attracted by his writing, many youngsters started to write in social media, often, imitating his word plays.

He possessed a sleight of hands, through which he given a new look to the language. His prose built a wonderland. One of my poet friends Shankar Rama Subramanian always says, ‘Sujatha groomed the dreams of a new generation, through his writings’.

His writings contained many nuances, word plays and tongue in cheek narrations. For example, in a short story titled ‘Manaivi Kidaithuvittaal’, he narrates the first night as follows:

“What’s the book you like most?” (Veni, the heroine asks his husband)

“Veni…!”

“Read..”

First he looked the cover, opened it, searched for the contents, started in the first chapter, appreciated the paintings, touched the poems, words, spaces, intrusions…

While, reading the translation, the above part will looks like an ordinary text. If you read the translation, after reading the original, then you will realise, the text has been translated flatly. 

  
Because of these qualities, until now no one attempted to translate his stories into English. But, recently, Vimala Balakrishnan translated six short stories and two novellas of Sujatha. The translated collection titled as ‘Reliving Sujatha’ has been published by Vitasta. Instead of saying the collection as 'His best stories', it should have been more appropriate to say 'His selected stories'.

Though, the translator maintains the pace of the stories, she at times misses the nuances of the original. But when looking at the whole attempt, we can pooh-pooh the shortcomings. Above all, it is to remembered, that this is a first translation of Sujatha’s work.  However, this kind of attempts should be welcomed and appreciated. Because, something is better than nothing, always!

Thursday, December 8, 2016

ஒரு அதிகாரத்தின் முடிவு!

ந. வினோத்குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 6 டிசம்பர் 2016

தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா 'இரண்டாவது முறையாக' இறந்துவிட்டார் என்று அதிகாரபூர்வமான செய்திகள் வரத் தொடங்கியிருக்கும் இந்தச் சமயத்தில் இந்தப் பதிவை எழுதுகிறேன். ஏனென்றால், 'முதல் முறையாக' அவரைக் கொலை செய்தன சில தொலைக்காட்சி சேனல்கள்! 

ரத்தத்தின் ரத்தங்களுக்கு 'புரட்சித் தலைவி'. அந்தத் தலைவியின் அம்மாவுக்கு 'அம்மு'. ஊடகங்களுக்கு 'ஜெ'. சாமான்ய மக்களுக்கு 'அம்மா!'

68 வயது. 16 வயதில் திரைப் பிரவேசம். 1982-ம் ஆண்டு ஒரு ரூபாய் செலுத்தி எம்.ஜி.ஆர்., தொடங்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அவரின் சுமார் 34 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் எத்தனையோ மேடு பள்ளங்கள் இருந்தாலும், அவை அனைத்துமே இந்திய அரசியலில் மிக முக்கியமானப் பக்க‌ங்களாக இருக்கின்றன.

தென்னிந்திய சினிமாவில் தனக்கெனத் தனியாக, சம்பளம் கொடுத்து மக்கள் தொடர்பு அலுவலரை வைத்துக்கொண்ட முதல் நடிகர், நாட்டிலேயே முதன்முதலாக மகளிர் காவல் நிலையங்கள் அமைத்தவர், சொத்துக் குவிப்பு வழக்கினால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் நாட்டில், முதல்வர் பதவியை இழந்த முதல் முதல்வர்... இப்படிப் பல 'முதல்'களுக்கு இவர் முன்னோடி!

திரையில் பிரகாசித்த நட்சத்திர அந்தஸ்த்திலிருந்து ஆறாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றது வரையிலான ஜெ.வின் பயணத்தைப் புத்தகமாக எழுதியுள்ளார் மூத்த பத்திரிகையாளர் வாஸந்தி. 'அம்மா' என்ற தலைப்பில், ஆங்கிலத்தில் அவர் எழுதிய அந்தப் புத்தகத்தை ஜக்கர்நாட் பதிப்பகம் மிகச் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. 


தமிழக அரசியலில் ஜெயலலிதா என்ற ஒருவர் இருந்தார் என்பதற்கான ஆவணமாக இன்று நம்மிடையே இருக்கும் ஒரே புத்தகம் இதுமட்டும்தான் என்பது, ஒரே நேரத்தில் ஆறுதலாகவும் துர்பாக்கியமாகவும் இருப்பது நம் காலத்தின் சாபம்!

ஜெ., குறித்து இப்படி ஒரு புத்தக முயற்சி இப்போதுதான் நட‌ந்திருக்கிறது என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. குமுதத்தில் ஜெயாவே தன் சுயசரிதையை எழுதிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில், அது எம்.ஜி.ஆரின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்துவது போலச் சென்றதால், ஜெ.விடம் எந்தவொரு காரணமும் சொல்லாமல் 'டக்'கென்று அந்தச் சுயசரிதைத் தொடர் நிறுத்தப்பட்டது. அது இன்று வரையிலும் புத்தகமாக வரவில்லை.

அதற்குப் பிறகு வாஸந்தி, 'ஜெயலலிதா - எ போர்ட்ரைட்' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஜெ.வின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். அதனை பெங்குயின் பதிப்பகம் 2011-ம் ஆண்டு வெளியிடுவதாக இருந்தது. ஆனால், அந்தப் புத்தகத்தை வெளியிடக் கூடாது என்று சொல்லி ஜெ., நீதிமன்றத்தில் வழக்குத் தொடர, அந்தப் புத்தகம் இதுவரை வெளியிடப்படவே இல்லை.

விகடன் பதிப்பக வெளியீடாக வந்த, 'புரட்சித் தலைவி - புகைப்பட ஆல்பம்', புகைப்பட ஆல்பம் என்ற வகையில் மட்டுமே நின்றுவிட்டது.

இந்த ஒரு பின்னணியில்தான் தற்போது வெளியாகியிருக்கும் 'அம்மா' என்ற புத்தகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. இந்தப் புத்தகத்தில் ஜெ.வின் ஆரம்ப காலம், ஜெ.வுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையிலிருந்த உறவு, ஜெ.வுக்கும் சசிகலாவுக்கும் இடையிலிருந்த உறவு உள்ளிட்ட ஜெ.வின் அந்தரங்க விஷயங்களை ஆழமாக அலசவில்லை என்றாலும் அங்கங்கே தொட்டுச் செல்கிறார் வாஸந்தி.

அந்தத் தகவல்களை ஒன்றிணைத்தால் இரண்டு பக்கங்களுக்குள் முடிந்துவிடும். ஜெ.வின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துச் சொல்வதற்கான விஷயங்கள் அவ்வளவுதானா? நிச்சயமாக இல்லை. 

மற்றபடி, இந்தப் புத்தகத்தில் ஜெ.வின் அரசியல் பயணம், 'ரோலர் கோஸ்டர் ரைட்' போல சுவாரஸ்யமான நடையில் மிக விறுவிறுப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் என்ன, அதில் பெரும்பாலான விஷயங்கள் ஜெ., வாழ்ந்த தலைமுறையினருக்குத் தெரிந்த தகவல்கள்தான்.

இந்தப் புத்தகம் ஜெயலலிதாவைப் பற்றிய ஆழமானப் பதிவு என்று சொல்லிவிட முடியாது. ஆனால், ஜெயலலிதா யார் என்றே தெரியாத வெளி மாநிலத்தவருக்கு, வெளி நாட்டினருக்கு இந்தப் புத்தகம் ஒரு அறிமுகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சிறு வயதில் ஜெ.வுக்குக் கிடைக்க வேண்டிய தாய் அன்பு முறையாகக் கிடைக்கவில்லை. எனினும் அந்தத் துயரத்தைத் தாங்கிக் கொண்டு, அவர் பள்ளியில் படிக்கும்போது 'மை மதர்: வாட் ஷீ மீன்ஸ் டு மீ' என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியதாகவும், அந்தக் கட்டுரைக்குப் பரிசு கிடைத்ததாகவும் வாஸந்தி இந்தப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். அந்தக் கட்டுரையில் ஜெ., அப்படி என்ன எழுதியிருந்தார் என்பது நமக்குத் தெரியாது.

ஜெ.வைப் பற்றி, ஓரளவு அரசியல் அறிவு கொண்டவர்களிடம் 'அம்மா: வாட் ஷீ மீன்ஸ் டு அஸ்' என்று எழுதச் சொன்னால் அவர்களின் பதில் என்னவாக இருக்கும்..? ஒரு அதிகாரத்தின் முடிவு..? 

நன்றி: தி இந்து டாட் காம் (தமிழ்)

Saturday, November 26, 2016

அந்த ஓபியத்தைப் புரிந்துகொள்வோம்!

ந.வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 2016 பிப்ரவரி 19

2015, பிப்ரவரி 20! இந்த நாளில்தான் கோவிந்த் பன்சாரே எனும் சமூகச் செயற்பாட்டாளரின் உயிர் பிரிந்தது. தன் வாழ்க்கை முழுவதும் மூடநம்பிக்கைகள், மதவாதம் ஆகியவற்றுக்கு எதிராகவும், மாணவப் பருவத்திலேயே மார்க்சியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டதன் காரணமாகத் தன்னை சி.பி.ஐ. கட்சியில் இணைத்துக்கொண்டு அடித்தட்டு மக்களின் மேம்பாட்டுக்காக உழைத்தும், பேசியும் எழுதியும்வந்தவர் கோவிந்த் பன்சாரே.

1933-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பிறந்த பன்சாரே மகாராஷ்டிரக்காரர். மராட்டிய வீரர் சிவாஜியை சிவ சேனா இந்துத்துவப் பின்னணியில் மக்களிடையே கொண்டு சென்றபோது, அதனைத் தடுத்து நிறுத்தும் விதமாக ‘சிவாஜி யார்?' எனும் புத்தகத்தை எழுதினார். அதன் காரணமாகவே இந்துத்துவவாதிகளின் எதிரியும் ஆனார்.

இப்படித் தன் வாழ்நாள் முழுவதும் அதிகார வர்க்கத்தின் துவேஷங்கள், காவிகளின் வரலாற்றுத் திரிபுகள் ஆகியவற்றை எதிர்த்து வந்தார். அதன் காரணமாக அவரின் தலைக்கும் ஒரு தோட்டா ‘இலக்கு' நிர்ணயிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி தனது மனைவியுடன் காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் அவரை நோக்கிச் சுட்டார்கள். அவரின் மனைவியைக் கீழே தள்ளிவிட்டுச் சென்றார்கள். நான்கு நாட்கள் கழித்து பன்சாரே உயிர் பிரிந்தது. அவரின் மனைவிக்குத் தலையில் அடிபட்டதால் அவர் இன்று வரை பக்கவாத நோயாளியாகப் படுக்கையில் இருக்கிறார்.

இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரை மட்டும் ஏழு மாதங்களுக்குப் பிறகு கைது செய்தது காவல்துறை. இது தொடர்பான விசாரணை மெத்தனமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதோ... இந்த ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி, பன்சாரேவின் முதல் நினைவு தினம்!

இந்தத் தருணத்தில் 'தி ரிபப்ளிக் ஆஃப் ரீசன்' எனும் புத்தகத்தை அறிமுகப்படுத்துவது அவசியமாகிறது.


மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடிய நரேந்திர தபோல்கர் கொலைக்குப் பிறகு, பன்சாரே கொல்லப்பட்டார். பன்சாரேவின் கொலைக்குப் பிறகு கர்நாடக மாநிலத்தில் எம்.எம்.கல்புர்கி கொலை செய்யப்பட்டார். இந்த மூவரின் கொலையும் நிகழ்கால இந்திய வரலாற்றின் பக்கங்களில் சிவப்பு மையால் அடிக்கோடிடப்பட வேண்டிய அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. காரணம், இவர்கள் மூவரும் நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் என்பதால் அல்ல. இவர்கள் மூவரின் உயிரும் துப்பாக்கித் தோட்டாவால் பறிக்கப்பட்டது என்பதால் அல்ல... இவர்கள் மூவரின் பணியும் இந்துத்துவத்துக்கு எதிராக இருந்தது என்பதுதான்!

'நீங்கள் பூக்களைப் பறிக்கலாம். ஆனால் வசந்தம் வருவதை உங்களால் தடுக்க முடியாது' என்ற பாப்லோ நெரூடாவின் வரிகளுக்கு ஏற்ப, இவர்கள் மூவர் இறந்துபோனாலும், இவர்களின் பணி, சுவடு தெரியாமல் போய்விடக் கூடாது என்பதற்காக, இவர்கள் எழுதிய மிக முக்கியமான சில கட்டுரைகளைத் தொகுத்து ‘தி ரிபப்ளிக் ஆஃப் ரீசன்' எனும் புத்தகமாக சஃப்தார் ஹாஷ்மி நினைவு அறக்கட்டளை வெளியிட்டுள்ளது. இது சென்ற ஆண்டு இறுதியில் வெளியானது.

இதில் கோவிந்த் பன்சாரே எழுதியிருக்கும் கட்டுரை மிகவும் முக்கியமானது. ‘மதம் மக்களுக்கு ஓபியத்தைப் போன்றது' எனும் கார்ல் மார்க்ஸின் வரியை நம்மில் பலர் பலமுறை கேட்டிருப்போம். சொல்லியிருப்போம். ஆனால் அந்த வரியின் உண்மையான அர்த்தம் தெரிந்திருக்குமா நமக்கு?

‘புரட்சியாளர்கள் மதத்தை எவ்வாறு அணுக வேண்டும்?' என்ற தலைப்பில் அமைந்த தன் கட்டுரையில், ‘இதுவரையில் மார்க்ஸின் இந்த வரியை நாம் தவறாகவே புரிந்துகொண்டு வந்திருக்கிறோம். ஏனெனில், இந்த வரி, தனியான வரி அல்ல. மார்க்ஸ் எழுதிய பத்தி ஒன்றில் வரும் வரி இது. இந்த வரிக்கு முன்பு உள்ள‌ வரிகளை எல்லாம் நாம் மறந்துவிட்டோம். அதனால் இந்த வரியின் உண்மையான அர்த்தம் நமக்கு விளங்கவில்லை' என்கிறார் பன்சாரே.

‘ஒடுக்கப்படுபவர்களின் இளைப்பாறலாக, இதயமற்ற உலகத்தில் அவர்களுக்கான இதயமாக, உயிரற்ற நிலையிலிருக்கும் தங்களுக்கு உயிராக மதம் இருக்கிறது. அது அவர்களுக்கு ஓபியம் போன்றதாக இருக்கிறது' என்று எழுதுகிறார் மார்க்ஸ்.

‘இதன் மூலமாக மார்க்ஸ் கூற வருவது என்னவென்றால், ‘மதம் தருகிற மாயையான இன்பத்தில் மூழ்காமல், மக்களை அதிலிருந்து வெளியே கொண்டு வந்து உண்மையிலேயே இன்பத்தை உருவாக்க முயற்சிக்க வேண்டும். இவ்வாறு மதம் தருகிற மாயையான இன்பம் என்பது ஓபியம் தரும் போதைக்கு நிகராக உள்ளது ‘என்பதுதான்' என்று புதிய விளக்கத்தைத் தருகிறார் பன்சாரே.

‘மதத்தைப் பற்றி நாம் எளிய மக்களிடையே விளக்கும்போது அலங்காரப் பூச்சுகள் இல்லாமல் நேரடியான மொழியைப் பயன்படுத்த வேண்டும். அதிகாரத்தையும், செல்வத்தையும் அடைவதற்கு மதம் ஆதிகாலத்திலிருந்து இன்று வரை எப்படியெல்லாம் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதை அவர்களுக்குச் சொல்ல வேண்டும். ஆனால் அதே சமயம், மதத்தின் சூழ்ச்சிக்குப் பலியானவர்களிடம் நாம் இரக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும். மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றுபவர்களின் உண்மையான முகத்தை நாம் தைரியமாக வெளிப்படுத்த வேண்டும். அவர்களைத் தோற்கடிப்பதுதான் நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும். இதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்' என்று அதே கட்டுரையில் சுட்டிக்காட்டுகிறார் பன்சாரே.

அந்த ஓபியத்தின் தன்மையைப் புரிந்துகொள்வோம். போராடுவோம்!

நன்றி: தி இந்து (இளமை புதுமை - சில திருத்தங்களுடன்)

Sunday, November 20, 2016

DR.B.R.AMBEDKAR 125 BIRTH ANNIVERSARY SERIES -VIII

இந்து தேசிய வியாபாரிகளின் அபகரிப்பு!


ந.வினோத் குமார்

அம்பேத்கரின் சிந்தனைகளை ஏற்றுக்கொள்பவர்களின் எண்ணிக்கை இன்றைய காலத்தில் அதிகரித்து வருகிறது. அதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. ஆனால் அரசியல் சுயலாபத்துக்காக அம்பேத்கரையே உரிமை கொண்டாடும் அபகரிப்பாளர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே வருவதுதான் ஆச்சரியம். அதில் முதன்மையான அபகரிப்பாளர்கள் யாரென்றால்... இந்து தேசிய வியாபாரிகள்!

அம்பேத்கரின் 125-வது பிறந்த ஆண்டு கொண்டாடப்படும் இந்த வேளையில், 'அம்பேத்கரும் எங்கள் செட்டுதான்' என்று கூவ ஆரம்பித்திருக்கின்றன இந்துத்துவ குழுக்கள்.

'அம்பேத்கர் ஒருபோதும் பிராமணியத்துக்கு எதிராக இருந்தவர் அல்ல' என்று இந்துத்துவவாதிகள் சொல்வது எவ்வளவு பெரிய புரட்டு, என்பதைத் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கிறது, 'அம்பேத்கர் அண்ட் இந்துத்துவா பாலிட்டிக்ஸ்' எனும் புத்தகம். மும்பை ஐ.ஐ.டி.யின் முன்னாள் பேராசிரியரும் தற்சமயம் சமூக நல்லிணக்கத்துக்காகத் தொடர்ந்து எழுதியும், களப்பணியாற்றியும் வரும் ராம் புனியானி இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். பாரோஸ் பதிப்பகத்தால் பதிப்பிக்கப்பட்ட இந்தப் புத்தகம் சமீபத்தில் வெளியாகியுள்ளது.


அம்பேத்கரின் 124-வது பிறந்த ஆண்டிலிருந்தே அவருக்குக் காவிச் சாயம் பூச முயற்சித்து வருகிறது ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு. அந்த அமைப்பைச் சேர்ந்த பிரச்சார் ப்ரமுக் மன்மோகன் வைத்யா, சர்சங்சலக் மோகன் பாகவத் போன்றோர் அம்பேத்கரின் கருத்தியலுக்கு இந்துத்துவப் பார்வையை வழங்க முற்படுகின்றனர். அதில் ஒன்றுதான் 'அம்பேத்கர் ஒருபோதும் பிராமணியத்துக்கு எதிராக இருந்தவர் அல்ல' எனும் கூற்று. அது உண்மைதானா?

நிச்சயமாக இல்லை. ஏனென்றால், அம்பேத்கர் 'பிராமணிய இந்து மதவாத'த்துக்கு எதிராகவும், மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதி ஆகியவற்றுக்கு ஆதரவானவராகவும் இருந்தார். ஆனால் ஆர்.எஸ்.எஸ். அமைப்போ பிராமணிய இந்து மதவாதம் மற்றும் இந்து தேசியம் ஆகிய இரண்டு தளங்களின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

ஒரு பேச்சுக்கு, அம்பேத்கரின் சிந்தனைகளைத்தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் கொண்டிருக்கிறது என்று வைத்துக்கொண்டாலும், 2015-ம் ஆண்டு குடியரசு தின விழா தொடர்பான ஊடக விளம்பரங்களில் 'மதச்சார்பின்மை', 'சோஷலிசம்' எனும் வார்த்தைகள் எப்படி விடுபட்டுப் போயின?

அம்பேத்கரின் 125-வது பிறந்த ஆண்டு கொண்டாடப்படும் இந்த வேளையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கியத் தலைவராகக் கருதப்பட்ட தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்தநாள் நூற்றாண்டை இந்துத்துவவாதிகள் கொண்டாடி வருகின்றனர்.

மகாத்மா காந்திக்கு இணையாக தீனதயாள் உபாத்யாயாவை சமூக‌ மைய நீரோட்டத்துக்குக் கொண்டு வரும் முயற்சிகள் நடந்து வருகின்றன. ஏனென்றால், அவர்தான் இந்து மதத்தின்படி வழி நடத்தப்படும் 'அகண்ட பாரதம்' எனும் கருத்தைப் பரப்பிவிட்டுச் சென்றார்.

அவருக்கு முன்பு சாவர்க்கர் 'இந்து தேசியம்' எனும் கருத்தை விட்டுச் சென்றார். ஆனால் அம்பேத்கர் அந்த 'இந்து தேசியம்' என்ற கருத்துக்கு எதிராக இருந்தவர். தன்னுடைய 'தாட்ஸ் ஆன் பாகிஸ்தான்' எனும் நூலில் அம்பேத்கர் இப்படிக் குறிப்பிடுகிறார்:

"சாவர்க்கரும் முகமது அலி ஜின்னாவும் 'இரண்டு தேசங்கள்' என்ற கருத்துக்கு உடன்படுபவர்களாகவே உள்ளனர். பாகிஸ்தான் என்றும், இந்துஸ்தான் என்றும் இரண்டு தேசங்கள் இருக்க வேண்டும். முன்னதில் இஸ்லாமியர்களும் பின்னதில் இந்துக்களும் இருந்துகொள்ளலாம் என்கிறார். சாவர்க்கரோ, இந்தியாவில் இந்துக்களும் இருக்கலாம். இஸ்லாமியர்களும் இருக்கலாம். ஆனால் இஸ்லாமியர்கள் 'இந்து தேசிய'த்தின் கீழ்தான் இருக்க வேண்டும். இந்து மத அரசியலமைப்புக்கு அவர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்கிறார்.

அவர் சொல்வது போல 'இந்து தேசியம்' ஏற்பட்டால், அது நாட்டுக்குக் கேடு விளைவிக்கும். இந்து மதம் என்பது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றுக்கு எதிரானதாக இருக்கும். அது ஜனநாயகத்தை நமக்கு வழங்காது. எனவே, இந்து ராஜ்ஜியம் அமைக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்".

அப்படியான இந்து தேசியம்தான், சாதி ஒழிக்கப்படுவதற்குத் தடையாகவும் இருக்கிறது என்கிறார், அம்பேத்கர். ஆனால் தீனதயாள் உபாத்யாயாவோ, "நம் சமூகத்திலிருக்கும் நான்கு வர்ணாசிரமங்கள் என்பது கடவுளுக்கு இருக்கும் நான்கு கைகளைப் போன்றது. அது ஒவ்வொன்றுக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. இதைப் புரிந்துகொண்டால், சாதி நமக்கு நல்லது செய்யும். இல்லையென்றால், அது அழிவைக் கொண்டு வரும்" என்று சாதியத்தைப் போற்றுகிறார்.

சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் மேம்பட்ட நிலைக்கு வந்துவிடக் கூடாது என்ற கடுப்புதான் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தொடக்கமாக இருக்கிறது என்கிறார் ராம் புனியானி. சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை மத அடையாளத்தை முன்னுக்குக் கொண்டு வருகிறதென்றால், மதக் கலவரங்களின் மூலம் சாதிய அடையாளம் மறைக்கப்பட்டு விடுகிறது. அப்படிப் பார்த்தால், சிறுபான்மையினருக்கு எதிரான‌ ஒவ்வொரு வன்முறைக்குப் பிறகும், இந்து மத அடையாளம்தான் தலித்துகளுக்கு முக்கியமாகிறது என்கிறார் அவர்.

இவ்வாறு மதக் கலவரங்கள் மூலம் 'இந்து தேசியம்' காண விரும்புகின்றன இந்துத்துவக் குழுக்கள். அப்படி ஒன்று ஏற்பட்டால், சாதி ஒழியாது. சாதி ஒழியாமல் சமத்துவம் இல்லை. ஆக, நாம் புரிந்துகொள்ள வேண்டியது... சனாதன தர்மம் ஒருபோதும் சமாதானத்தைக் கொண்டு வராது!

(அம்பேத்கரின் 125வது பிறந்த ஆண்டையொட்டி, இந்த ஆண்டு முழுக்க அம்பேத்கர் படைப்புகள், அம்பேத்கரைக் குறித்த படைப்புகள் ஆகியவை பற்றிய அறிமுகங்கள் இங்கு தொடர்ந்து பதிவேற்றப்படும். அதில் எட்டாவது பதிவு இது.)