Showing posts with label Arundhati Roy. Show all posts
Showing posts with label Arundhati Roy. Show all posts

Wednesday, October 2, 2019

உண்மையான மருத்துவரும் 'போலி' சாமியாரும்..!


.வினோத் குமார்

ரயிலில் இருந்து வெளியே தள்ளப்படுவதும், விடுதி அறையிலிருந்து வெளியே தள்ளப்படுவதும் ஒன்றல்ல. ஏன்..?

அகிம்சாவாதி காந்திக்கும், அண்ணல் அம்பேத்கருக்கும் இடையிலான மோதல் குறித்து பலருக்கும் தெரியும். முன்னவர், 'இந்து மதம் காக்கப்பட சாதி வேண்டும்' என்றார். பின்னவர், 'இந்து மதத்தில் இருக்கும் வரை யாரும் சாதியத்திலிருந்து தப்பிக்க முடியாது' என்றார்.

அப்படியான இந்து மதத்தைக் குறித்து அம்பேத்கர் தயாரித்த உரையை, 'ஜாட் பட் தோடக் மண்டல்' அமைப்பினர் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசுவதற்காகத்தான் அவர் அந்த உரையைத் தயாரித்திருந்தார். ஆனால் அந்த உரையில், அவர் இந்து மதத்தைப் போட்டுக் கும்மியிருக்கும் விதத்தைப் பார்த்து, அந்த அமைப்பினர் அம்பேத்கரிடம், 'கொஞ்சம் மெதுவா..!' என்று சொல்ல, 'உங்களுக்கு வலிக்கிறது என்பதற்காகவெல்லாம் என்னுடைய கருத்தை நான் மாற்றிக் கொள்ள முடியாது' என்று சொல்ல, அவர் பேசவிருந்த நிகழ்வை அந்த அமைப்பினர் ரத்து செய்தார்கள்.

நல்ல வேளை அம்பேத்கர் அந்த உரையைப் பேசவில்லை. பேசியிருந்தால் காற்றோடு போயிருக்கும். தன்னுடைய தயாரிப்பை வீணாக்க விரும்பாத அம்பேத்கர், அந்த உரைக்கு 'அனிஹிலேஷன் ஆஃப் காஸ்ட்' (சாதியை ஒழிக்கும் வழி) என்று தலைப்பிட்டு, அதை ஒரு சிறுபதிப்பாகக் கொண்டு வந்தார். அந்தச் சிறுநூலின் அப்போதைய விலை எட்டணா. ஒரு தலித்தாக, தலித் மக்களின் அவலநிலையைச் சொல்லும் அந்தப் புத்தகத்தைப் பதிப்பிக்க அம்பேத்கர் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என்பதை எல்லாம் கொஞ்சமும் நினைத்துப் பார்க்காத காந்தி, 'நானாக இருந்திருந்தால் அந்தப் புத்தகத்தை இரண்டணாவுக்கு விற்றிருப்பேன்' என்று அங்கும் தனது 'என்.ஜி..தனத்தை' காட்டினார்.

தலித்துகளின் அரசியல் விழிப்புணர்வில் மிக முக்கியப் பங்காற்றிய அந்தப் புத்தகத்தைக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 'நவயானா' பதிப்பகம், பிரபல எழுத்தாளர் அருந்ததி ராயின் முன்னுரையோடு வெளியிட்டது. 'என்னது... அம்பேத்கரை அறிமுகப்படுத்த அருந்ததி ராய் வேண்டுமா..?' என்று அந்தப் புத்தகத்துக்கு அப்போது எழுந்த விமர்சனங்கள் நிறைய.

அருந்ததி ராயின் 'தி டாக்டர் அன்ட் தி செயின்ட்' எனும் அந்த முன்னுரை, தற்போது 'பெங்குயின்' பதிப்பக வெளியீடாக அதே தலைப்பில் தனி நூலாகவே கிடைக்கிறது. அம்பேத்கரின் நூலோடு சேர்த்து அந்த முன்னுரையைப் படிப்பதற்கும், தனி நூலாக அந்த முன்னுரையைப் படிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. 'ஸ்டேன்ட் அலோன்' நூலாகப் படிக்கும்போது, பல புதிய வெளிச்சங்களைத் தருகிறது அந்த முன்னுரை.

அந்த முன்னுரையில், சாதியை அம்பேத்கரும் காந்தியும் எப்படி அணுகினார்கள் என்பதை இருவரின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களுடனும், அவர்களின் எழுத்துகளை ஆதாரமாகக் கொண்டும் இணைத்துச் சொல்லியிருக்கிறார் ராய்.


இன்று வரையிலும் கிராமங்களில்தான் அதிக அளவிலான சாதிய வன்முறைகளைப் பார்க்கிறோம். அங்கிருந்தால் சாதியிலிருந்து தப்பிக்க முடியாது என்பதால்தான் இளைஞர்களிடம் 'நகரங்களுக்குச் செல்லுங்கள்' என்றார் அம்பேத்கர். ஆனால் காந்தியோ 'கிராமங்களில்தான் இந்தியாவின் ஜீவன் இருக்கிறது' என்று சொல்லி அவர்களைத் திரும்ப கிராமத்துக்கே அனுப்பினார்.

'கிராம மக்கள் தங்கள் கிராம விஷயங்களைச் சாதிய அமைப்பின் மூலம் நிர்வகித்துக் கொண்டு வருகிறார்கள். அந்த அமைப்பின் மூலம் தங்கள் மீது மேற்கொள்ளப்படும் அதிகார துஷ்பிரயோகத்தை அவர்கள் சமாளித்தார்கள்' என்று காந்தி என்னவோ பிதற்றினார். அதுவும் இந்தப் பிதற்றலை 1916‍-ல் சென்னையில் சொன்னார் என்பது நமக்குத்தான் எவ்வளவு 'எம்பராஸ்மென்ட்..?'

தான் ஒரு 'பனியா'வாக இருந்தாலும், 'பிராமணீயம்' என்பதைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியவர் காந்தி. அவரது பக்தர்களும் அந்தப் பணியைச் செவ்வனே செய்து வருகிறார்கள். உண்மையில், 'ஒவ்வொரு நபருக்குள்ளும் குறிப்பிட்ட சதவீத அளவு பிராமணீயம் இருக்கிறது' என்கிறார் ராய். அதனால்தான், வன்னியர்கள் பறையர்களை அடிப்பதையும், பறையர்கள் அருந்ததியர்களை அடிப்பதையும் நம்மால் தடுக்கவே முடியவில்லை என்கிறார் அவர்.

காந்தியைப் பற்றிப் பேசுகிறபோது பலரும் சொல்லும் ஒரு கட்டுக்கதை 'அவர், இந்தியர் என்பதால் ரயிலில் இருந்து வெளியே தள்ளப்பட்டார்' என்பது. ரயிலில் இருந்து அவர் வெளியே தள்ளப்பட்டது உண்மை. ஆனால் அவர் இந்தியர் என்பதற்காக, 'இனவெறி' கொண்டெல்லாம் ஆங்கிலேயர்கள் அவரை வெளியே தள்ளவில்லை. அவர் பயணித்தது 'வெள்ளையர் மட்டும்' பயணிப்பதற்கான பெட்டி. 'மகளிர் மட்டும்' பேருந்தில் எப்படி ஆண் பயணிகள் சென்றுவிட முடியாதோ அப்படித்தான் இதுவும்.

ஆனால் காந்தி என்ன சொன்னார் தெரியுமா? 'பிரிட்டிஷ் அரசாங்கத்தால் தென்னாப்பிரிக்காவுக்குக் கொண்டு வரப்பட்ட இந்தியர்களை, இங்குள்ள கறுப்பர்களுக்கு நிகராக நடத்தக்கூடாது. எங்களை ஆங்கிலேயர்களுக்கு நிகராக நடத்துங்கள்' என்று தன்னுடைய மேட்டிமைத்தனத்தைக் காட்டினார். இந்த வாய்க்கொழுப்புக்காகத்தான் அவர் ரயிலில் இருந்து வெளியே தள்ளப்பட்டார்.

காந்திக்காவது இந்த அவமானம் தென்னாப்பிரிக்காவில்தான் நடந்தது. ஆனால், அம்பேத்கரோ தன் சொந்த மண்ணிலேயே அவமானப்படுத்தப்பட்டார். தான் தங்கியிருந்த பார்ஸி ஓட்டல் அறையிலிருந்து அம்பேத்கர் வெளியே தள்ளப்பட்டதற்குக் காரணம், அவரது சாதி. ஆம், வேறு வழியில்லாததால், 'நானும் பார்ஸி'தான் என்று பொய் சொல்லித்தான் அம்பேத்கர் அங்கு தங்கினார்.

காந்தி ரயிலில் இருந்து தள்ளப்பட்டது அவர் கேட்ட சலுகைக்காக. ஆனால் அம்பேத்கர், விடுதியிலிருந்து தள்ளப்பட்டது அவர் சாதிக்காக..!

காந்தி ரயிலில் இருந்து வெளியே தள்ளப்பட்டதை வைத்து தென்னாப்பிரிக்காவில் அன்று ஒரு 'ஜோக்', கறுப்பர்கள் மற்றும் இந்தியர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது. அது இதுதான்:

'தென்னாப்பிரிக்காவில் 1893-ல் எல்லாம் நன்றாகவே இருந்தது. காந்தி வந்தார். ரயிலில் இருந்து வெளியே தள்ளப்பட்டார். 1920-ல், நம்மால் ரயிலில்கூட ஏற முடியாத நிலையை ஏற்படுத்திவிட்டார்'.

அதேபோல, காந்தி அரையாடை உடுத்தியிருந்தாலும் அவர் தனது போராட்டங்களுக்காக பிரபல தொழிலதிபர் ஜி.டி.பிர்லாவிடம்  கையேந்தி நின்றார். 'காதி முன்னேற்றம், தீண்டாமை ஒழிப்பு மற்றும் கல்வி. இந்த மூன்று விஷயங்களுக்கு எனக்கு இரண்டு லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. இந்த மூன்றில் உனக்கு எதில் விருப்பமோ அதற்கு உன்னுடைய நன்கொடையை வழங்கு' என்று பிர்லாவிடம் சொன்னார் காந்தி. இன்றைய 'கார்ப்பரேட் என்.ஜி..' கூட்டுக் களவாணித்தனம் வழியாக மேற்கொள்ளப்படும் 'கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்ஸிபிலிட்டி' (சி.எஸ்.ஆர்) இப்படித்தான் தோன்றியிருக்க வேண்டும்.

இப்படி நன்கொடை வாங்கினாலும், அவர் தன்னை வறியவனாகவே காட்டிக்கொண்டார் காந்தி. மக்கள் 'ஐயோ பாவம். என்ன எளிமையான மனிதன்?' என்று புகழ்ந்தார்கள். உண்மையில், எளிமை என்பது ஒரு சிந்தனை. அதை உடைகளில் காட்டி வெளிப்படுத்த முடியாது. அது உங்கள் செயல்களில் வெளிப்படும் ஒன்று. அதேபோல, வறுமை என்பது செயற்கையாக மேற்கொள்ளப்படும் விஷயம் அல்ல. வறுமை என்பது அதிகாரமற்றிருப்பது. அந்த அதிகாரத்தைப் பெற காந்தி செய்த 'பிஸினஸ்'தான் அவரது அரசியல்!

இந்த காந்தி ஜெயந்தி தினத்தில், மத்திய அரசின் 'ஸ்வச் பாரத்' திட்டம் குறித்துப் பரவலாகப் பேசப்படுகிறது. என்னதான் 100 சதவீத வெற்றி என்று பீற்றிக்கொண்டாலும், திறந்தவெளியில் மலம் கழித்ததற்காக இரண்டு தலித் குழந்தைகள் கொல்லப்பட்ட நாடு இது. எனில், அவர்களுக்கு முறையான கழிவறை வசதியை ஏற்படுத்தித் தர தவறியது யார்? வேறு யார், சாதி இந்துக்கள்தான்..!

தலித்துகள் கழிவறையைச் சுத்தம் செய்வது பற்றி எழுதுகையில், காந்தி தன்னுடைய வாழ்வின் இறுதி வரையிலும், அந்தப் பணியை 'புனிதமான' பணி என்றே சொல்லி வந்திருக்கிறார். பார்ப்பானின் மலத்தைத் தன் கையால் அள்ளுவதில் ஒரு தலித்துக்கு என்ன புனிதம் இருக்கிறது?

ஆனால் அப்படியான புனிதப் பணியை மேற்கொள்ளுபவர்களைக் கோயிலுக்குள் விடமாட்டார்களாம். கேரளத்தின் வைக்கத்தில், சாதி இந்துக்குள் பயன்படுத்தும் சாலையைத் தாங்களும் பயன்படுத்ததாழ்த்தப்பட்டோர் போராடினர். அந்தப் போராட்டத்துக்கு ஜார்ஜ் ஜோசப் எனும் காந்தியவாதி தலைமை ஏற்றார். ஆனால் காந்தி என்ன சொன்னார் தெரியுமா... 'இந்துக்களின் பிரச்சினையில் வேற்று மதத்தவர் தலையிடுவது சரியில்லை' என்றார். ஆனால் இதே காந்திதான், வைக்கம் போராட்டத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இஸ்லாமியர்களின் 'கிலாஃபத் இயக்கத்துக்கு' தலைமையேற்றார். இதிலிருந்தே தெரியவில்லையா... காந்தியின் இரட்டை வேடம்..!

காந்தி ஒரு சிறந்த நடிகர். அவரது நடிப்புக்குச் சரியான தளம் அமைத்துக் கொடுத்தது, தலித்துகளுக்கான இரட்டை வாக்குரிமை தொடர்பான அம்பேத்கரின் முயற்சிகள். அப்போது காந்தி நடத்திய உண்ணாவிரத நாடகம் ஏற்படுத்திய தாக்கம்தான் எத்தகையது..! பூனா ஒப்பந்தம் மூலம் அவர் செய்த சதி, காலத்துக்கும் அவர் பெயர் சொல்லும்.

தீண்டத்தகாதவர்களைப் பசுவுக்கும் கீழாகக் கருதிய புனிதரை வேறு எப்படி நினைவு கொள்ள முடியும்? அந்த ஒப்பந்தம் தலித்துகளின் அரசியல் எழுச்சியை மேலும் தாமதப்படுத்தியது என்றால் அது மிகையில்லை.

'ஜனநாயகம், சாதியை ஒழிக்கவில்லை. மாறாக அதை இன்னும் ஆழமாக, மேலும் நவீனப்படுத்தியிருக்கிறது. எனவே அம்பேத்கரை வாசிக்க இதுவே சரியான நேரம்' என்கிறார் ராய். 

'வாசிப்பதன் மூலமாக மட்டுமே புரட்சிகள் நடைபெறும்' என்று இந்த முன்னுரையில் ஆரம்பத்தில் சொல்கிறார் ராய். உண்மைதான் அது..!

Saturday, June 17, 2017

கல்லறைத் தோட்டத்தின் சந்தோஷக் கணங்கள்!

ந.வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 11 ஜூன் 2017

முதல் நாவலை எழுதி முடித்துவிட்டு, அடுத்த நாவலைக் கொண்டு வருவதற்கு, ஒரு நாவலாசிரியருக்கு இருபது ஆண்டுகள் தேவைப்படுகின்றன என்பது வாசகருக்கு வேண்டுமானால் மலைப்பாக இருக்கலாம். நாவலாசிரியருக்கோ, ‘உள்ளுக்குள் ஒரு படைப்பு உருவாகிக்கொண்டிருக்கும் காலம்’ அது!

 தான் எழுதிய முதல் நாவலுக்கே புக்கர் பரிசு கிடைக்கப் பெற்றவர் அருந்ததி ராய். அப்போது அவர் எழுத்தாளராக மட்டுமே இருந்தார். 1997-ம் ஆண்டு ‘காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்’ எனும் அவரின் முதல் நாவல் வெளியானது. சரியாக 20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘தி மினிஸ்ட்ரி ஆஃப் அட்மோஸ்ட் ஹேப்பினஸ்’ எனும் நாவல் பெங்குவின் பதிப்பக வெளியீடாக இந்த மாதம் 6-ம் தேதி உலகெங்கும் வெளியானது.

இந்த 20 ஆண்டுகளில் அருந்ததி ராய் என்பவர் எழுத்தாளராக மட்டுமே இல்லாமல், குறிப்பாக, புனைவு எழுத்தாளராக மட்டுமே தன்னைக் கருதிக்கொள்ளாமல், நாட்டில் அவ்வப்போது நிகழும் அரசியல் நிகழ்வுகளின் அடிப்படையில், அபுனைவு எழுத்துகள் மூலமும் தன் கருத்துகளைப் பிரதிபலித்துவந்திருக்கிறார். நர்மதா அணை உள்ளிட்ட மக்களுக்கு எதிரான வளர்ச்சித் திட்டங்களை விமர்சித்தல், தூக்குத் தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுத்தல், மாவோயிஸ்ட்டுகளுடன் தண்டகாரண்யம் காட்டுக்குள் பயணம் செய்தல் எனப் பல்வேறு விதங்களில் தன்னை ஒரு செயற்பாட்டாளராகவும் முன்னிறுத்திக்கொண்டிருக்கிறார்.

எழுத்தாளர் என்ற நிலையிலிருந்து செயற்பாட்டாளர் என்ற நிலைக்கு அவர் வர நேர்ந்திருக்கும் இருபது ஆண்டு அனுபவங்களின் அடிப்படையில் அவர் எழுதியிருக்கிற படைப்பாகத் தான் நாம் அவரின் இரண்டாவது நாவலை அணுக வேண்டும். இந்த நாவலின் கதை, இந்தியாவின் கடந்த இருபது ஆண்டு கால வரலாற்றில் நிகழ்ந்திருக்கும் அரசியல் நிகழ்வுகளின் திரட்சியாக அமைந்திருக்கிறது. அஞ்சும் என்ற திருநங்கை, காஷ்மீர் பிரிவினைவாதியைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட திலோத்தமா, காவல்துறையின் வன்புணர்வால் பிறந்த தன் மகளை டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் விட்டுச்செல்லும் ரேவதி எனும் மாவோயிஸ்ட் போராளி ஆகிய மூன்று பெண்களின் பார்வையில் கதை சொல்லப்படுகிறது. 


அஞ்சும் தனது வாழ்க்கையை நேர்க்கோட்டில் சொல்லிச் செல்ல, திலோத்தமாவின் வாழ்க்கையோ முன்னும் பின்னுமாகச் சொல்லப்படுகிறது. ரேவதியின் வாழ்க்கையோ கடித முறையில் சொல்லப்படுகிறது. இப்படி அந்தப் பெண்களின் வாழ்க்கையைச் சொல்லும் முறையில் வித்தியாசம் காட்டியதோடு, அவர்கள் நடமாடிய இடங்களான முறையே டெல்லி, காஷ்மீர், தெலங்கானா ஆகியவற்றின் நிலப்பரப்பையும் அந்தந்தக் காலச் சூழலில் நிலவிய அரசியல் பின்னணியோடு கதையை நெய்திருப்பதில் தேர்ந்த எழுத்தாளராக வெற்றி பெற்றிருக்கிறார் ராய். நாவலாசிரியராக வெற்றி பெற்றிருக்கிறாரா என்பது, இந்த நாவல் பரவலான வாசகப் பரப்பில் என்ன மாதிரியான அதிர்வலைகளை ஏற்படுத்தப்போகிறது என்பதைப் பொறுத்து அமையும்!

இறந்தவர்களைப் புதைக்கும் கல்லறைத் தோட்டம்தான் நாவலில் முக்கியமான சம்பவங்கள் நடைபெறும் இடம். அதுதான் பல்வேறு அரசியல் சூழல்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் ஒன்றுகூடும் இடமாகவும், எங்கோ தொலைத்த தங்களின் சந்தோஷக் கணங்களைத் தேடிக் கண்டடைகிற இடமாகவும் இருக்கிறது. ‘மனிதர்கள் தங்களின் உண்மையான மகிழ்ச்சியை இறந்த பிறகுதான் கண்டடைகிறார்கள்’ எனும் சிந்தனையின் குறியீடா கவும் கல்லறைத் தோட்டத்தை நாம் அணுகலாம்.

அவுரங்கசீப் காலத்தில் கடவுள் இல்லை என்று சொன்ன ஹஸ்ரத் ஷர்மத் ஷாஹீத்தின் வரலாற்றைச் சொல்வதில் தொடங்கி, இந்தியப் பிரிவினை, நெருக்கடிநிலைக் காலம், இந்திரா காந்தி கொலை, சீக்கியர் மீதான தாக்குதல், போபால் விஷ வாயுத் தாக்குதல், காஷ்மீர் தீவிரவாதம், பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம், இரட்டைக் கோபுரத் தாக்குதல், இராக்கில் அமெரிக்கா நடத்திய போர், ஆப்பரேஷன் ‘க்ரீன் ஹன்ட்’, மாட்டு அரசியல், அண்ணா ஹசாரே போராட்டம், உனா எழுச்சி உள்ளிட்ட இந்திய, உலக அரசியல் நிகழ்வுகளை எல்லாம் நாவலின் ஆங்காங்கே வரும் ஓரிரு கதாபாத்திரங்களின் மூலம் தொட்டுச் செல்கிறார் ராய். இந்தியாவின் கடந்த இருபது ஆண்டுகால வரலாற்றை இந்த நாவலின் மூலம் ஒரு கழுகுப் பார்வை பார்த்துவிட முடியும் என்பது இந்நாவலின் சிறப்பம்சம். தமிழகத்தில் சாதியம் எப்படி வேரூன்றியிருக்கிறது என்பதற்கு முருகேசன் எனும் ராணுவ வீரர் கதாபாத்திரம் மூலமாக அருந்ததி ராய் சொல்லும் செய்தி, மிகவும் அழுத்தமான ஒன்று!

‘சில்லுசில்லாக உடைந்திருக்கிற ஒரு கதையை எப்படி மொத்தமாகச் சித்தரிப்பது? எல்லாருமாக மாறுவதன் மூலம். இல்லை. எல்லாமுமாக மாறுவதன் மூலம்!’ என்று நாவலின் பின்னட்டையில் குறிப்பிடுகிறார் அருந்ததி ராய். நாமும் அப்படி நாவலின் ஒவ்வொரு கதாபாத்திரமாக மாறும்போது, ஒவ்வொரு அரசியல் சம்பவத்திலும் தன்னைப் பொருத்திப் பார்த்துக்கொள்ளும்போது, இந்த நாவலின் முழுமையை நம்மால் உணர முடியும். 

நன்றி: தி இந்து (கலை இலக்கியம்)