Showing posts with label Sri Lanka. Show all posts
Showing posts with label Sri Lanka. Show all posts

Sunday, November 24, 2019

காலத்தைக் கடந்த கட்டிடக் கலை ராணி

ந.வினோத் குமார்
பதிப்பிக்கப்பட்ட தேதி: 26 அக்டோபர் 2019
இந்திய விடுதலைக்குப் பிறகு, நாட்டை வளர்ச்சிப் பாதையில் கட்டமைப்பதில் ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் அளித்த பங்கு, அளப்பரியது. இந்தியாவில் தான் என்றில்லை, பக்கத்து நாடான இலங்கையிலும் அப்படித்தான். ஆனால், பெண்களின் பங்களிப்பை இருட்டடிப்புச் செய்வதில் எந்த நாட்டவரும் சளைத்தவரல்ல. ஆண்கள் எப்போதும் ஆண்கள்தாமே? 

இன்றும் பொறியியல் கல்லூரியில் கட்டுமானப் பொறியியல் பிரிவில் ஒரு பெண் சேர்ந்தால், அவரை ஏற இறங்கப் பார்க்கும் சமூகம் இது. ‘செங்கல், சிமெண்ட், கம்பி... இதெல்லாம் நமக்கு ஒத்து வருமாம்மா..?' என்று பரிதாபத்துடன் கேட்க ஒரு கூட்டம் கிளம்பி வந்துவிடும். ஆண்கள் கோலோச்சும் கட்டுமானப் பொறியியலுக்கே இப்படி என்றால், ஆண்களாலேயே சுவடு பதிக்க இயலாத ‘ஆர்க்கிடெக்சர்' எனப்படும் கட்டிடக் கலைத் துறை பற்றிக் கேட்கவே வேண்டாம்.
ஒரு நாலைந்து கட்டிக் கலைஞர்களின் பெயர்களைச் சொல்லுங்கள் என்று கேட்டால் அந்த ஐந்து பெயர்களுமே ஆண்களுடையதாகத்தான் இருக்கும். அவர்களைப் பற்றி நிறைய எழுதப்பட்டுவிட்டன. முதன்முறையாக, ஒரு பெண் கட்டிடக் கலைஞரைப் பற்றி ‘பிளாஸ்டிக் எமோஷன்ஸ்' என்ற தலைப்பில் ஷிரோமி பின்டோ என்பவர் எழுதிய நாவலை பெங்குவின் பதிப்பகம் சமீபத்தில் வெளியிபட்டுள்ளது.
இலங்கையின் முதல் பெண் கட்டிடக் கலைஞரான மின்னெட் த சில்வாதான் இந்த நாவலின் மையக் கரு. அன்றைய இலங்கை அரசியல்வாதி ஜார்ஜ் சில்வாவுக்கும், இலங்கையில் பெண்களுக்கு வாக்குரிமை வேண்டுமென்று போராடிய ஆக்னஸ் சில்வாவுக்கும் பிறந்தவர் மின்னெட் சில்வா. படிப்பை முடித்துவிட்டு இவர் இந்தத் துறைக்குள் வந்த வேளையில் லு கார்பூசியே எனும் பிரஞ்சுக் கட்டிடக் கலைஞர், மிகப் பெரிய ஆளுமை. மின்னெட்டுக்கு 25 வயதென்றால், அவருக்கு 45 வயதாவது இருந்திருக்கும். முதலில் கலைஞர்- ரசிகை என்ற நிலையில் அறிமுகமாகி, நண்பர்கள் என்று வளர்ந்து, பிறகு காதலர்கள் என்ற நிலைக்குச் சென்றார்கள்.
ஒரு பக்கம் இந்தியாவின் சண்டிகர் மாநிலத்தில் கார்பூசியே கட்டிடக் கலையில் தன் நிபுணத்துவத்தைக் காட்டிக்கொண்டிருக்க, அதே வேளையில் இலங்கையில் தனது திறமையைப் பறைசாற்றினார் மின்னெட். அந்த நாட்டின் இரண்டாம் பெரிய நகரமான கண்டியில், வீட்டு வசதி வாரிய பணியாளர்களுக்காகக் கட்டிய ஒவ்வொரு வீடும் தனித்துவம் மிக்கது.
தமிழ்நாட்டில் கட்டிக்கொடுக்கப்படும் தொகுப்பு வீடுகள் போன்று ஒரே மாதிரியாக அல்லாமல், குடியிருக்கப் போகும் ஒவ்வொரு பணியாளரின் வாழ்க்கை முறை, அவர்களது தேவைகள் ஆகியவற்றை அறிந்துகொள்ள ஒரு வினாத்தாளைத் தயாரித்து, அதன் மூலம் அவர்களது விருப்பங்களைத் தெரிந்துகொண்டு, பிறகே வீடுகளைக் கட்டத் தொடங்கினார் மின்னெட்.
இந்தக் காலகட்டத்தில் அந்த இரண்டு மேதைகளும் சந்தித்துக் கொண்ட தருணங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். எனினும், அவர்களுக்கு இடையில், தொடர்ந்து கடிதப் போக்குவரத்து நடந்துகொண்டிருந்தது. கார்பூசியேவை மின்னெட் ‘கார்பூ' என்று செல்லமாக அழைக்க, மின்னெட்டை கார்பூசியே ‘என் பறவையே' என்று விளித்தார்.
நாவலில் இந்த இரண்டு ஆளுமைகளும் எழுதிக் கொள்வதாக இடம்பெற்றுள்ள கடிதங்கள், பெரும்பாலும் கற்பனையானவையாகவே இருந்தாலும், நிஜ வாழ்வில் கடிதங்களின் வாயிலாக அவர்கள் என்ன மாதிரியான உரையாடலை நடத்தியிருப்பார்கள் என்பதை நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது.
மின்னெட் எழுதிய ஒரு கடிதத்தில், ‘என்னதான் நான் திறமை மிக்க கட்டிடக் கலைஞராக இருந்தாலும், என் திறமையைப் பார்க்காமல், ‘கேர்ள்' (பெண் பிள்ளை) என்ற நிலையிலேயே என்னை நடத்துவது எனக்குப் பெரும் அவமானமாக உள்ளது' என்று எழுதுகிறார். எனில், அவர் எப்படிப்பட்ட போட்டி, பொறாமை மிகுந்த சூழலில் சிறந்த கட்டிடக் கலைஞராகப் பரிணமித்திருப்பார் என்பதை நம்மால் விளங்கிக்கொள்ள முடியும்.
என்னதான் அவர் திறமைமிக்கக் கலைஞராக இருந்தாலும், 50-களில் எல்லாம் அவருக்கு ‘புராஜெக்ட்' வருவது நின்றுபோனது. அவரிடம் தொழில் கற்ற ஒரு ஆண் கட்டிடக் கலைஞரே, மின்னெட்டின் யோசனைகளை, புதுமைகளைத் தன்னுடையது என்று சொல்லி, கட்டிடங்கள் கட்டி, சம்பாதித்து, பெயர் வாங்கிக் கொண்டு போனார். ஜியோஃபரி பாவா எனும் ஆண் கட்டிடக் கலைஞரை, இலங்கை மிகப் பெரிய திறமைசாலியாகக் கொண்டாடுகிறது. அவருக்கு பத்து ஆண்டுகளுக்கு முந்தையவர் மின்னெட்.
ஆனால், பாவாவுக்கு தங்க மெடல் கொடுத்து கவுரவித்த 14 ஆண்டுகளுக்குப் பிறகே 1996-ல் மின்னெட்டுக்கு அந்தக் கவுரவம் அளிக்கப்பட்டது. இந்த அவமானங்களை எல்லாம் தாங்கி வாழ்ந்த மின்னெட், தனது 80-ம் வயதில் மருத்துவமனையில் தனிமையில் இறந்துபோனார்.
மின்னெட் இந்தியாவில் இருந்த காலங்களில் எழுத்தாளர் முல்க் ராஜ் ஆனந்த், அணு விஞ்ஞானி ஹோமி பாபா போன்றோரின் அறிமுகம் கிடைத்தது. இந்த அறிமுகங்களின் பயனாக, முல்க் ராஜ் ஆனந்த், மின்னெட்டின் தங்கை அனில் த சில்வா ஆகியோருடன் சேர்ந்து ‘மார்க்' எனும் கட்டிடக் கலைக்கான இதழ் ஒன்றைத் தொடங்கினார் மின்னெட். அதில் கட்டிடக் கலை குறித்துப் பல கட்டுரைகளை அவர் எழுதினார். அந்த இதழ் இன்றும் வெளிவந்து கொண்டிருக்கிறது.
நாவலின் ஓரிடத்தில் மின்னெட்டை கார்பூசியே ‘ஷி இஸ் டைம்லெஸ்' (அவள் காலங்களுக்கு அப்பாற்பட்டவள்) என்று தன் கடிதம் ஒன்றில் குறிப்பிட்டிருப்பதாக வரும். மின்னெட் செய்திருக்கும் சாதனைகளைப் பார்த்தால் அது உண்மைதான் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்..!
நன்றி: இந்து தமிழ் திசை (சொந்த வீடு இணைப்பிதழ்)

Saturday, September 22, 2018

புலிகளுக்கு இடையே ஒரு புனிதி

ந.வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 16 செப்டம்பர் 2018 

மனித வாழ்க்கையில் மிகப் பெரிய குற்றம் எது? உரிமைகள் மறுக்கப்படுவதுதான். உயிர் வாழ்வதற்கு, பிடித்த தெய்வங்களை வணங்குவதற்கு, தனக்கான உணவைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு, மனதில் நினைப்பதைப் பேசுவதற்கு, எண்ணங்களை எழுத்தாக்குவதற்கு என மனித உரிமைகள் பல வண்ணங்களைக் கொண்டவை. இவற்றில் எந்த உரிமைகள் அடிப்படையானவை, எந்த உரிமைகள் அவசியமில்லாதவை என்ற ஆய்வுகள் எல்லாம் தேவையற்றவை. மனிதர்கள் சுதந்திரமாக வாழ, எவையெல்லாம் அத்தியாவசியமோ அவை அனைத்துமே அடிப்படை உரிமைகள்தான்!

இந்த உரிமைகள் மறுக்கப்படும்போது, அதற்கான எதிர்ப்புகளும் எழவே செய்யும். பெரும்பாலும், அதிகார பீடங்களால்தான் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. மீறப்படவும் செய்கின்றன. ஒரு ஜனநாயக அமைப்பில் மாற்றுக் கருத்துகளுக்கு எப்போதும் இடம் கொடுக்கப்பட வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில், அங்கு எதிர்ப்பு இருந்தே தீரும். மாற்றுக் கருத்துகளைச் சொல்ல அனுமதிக்கப்படாத நிலையே ‘பாசிஸ’ நிலை. உலக வரலாற்றில், இந்த ‘பாசிஸம்’ அரசுகளிடம் மட்டுமல்ல, மக்களின் விடுதலைக்காகப் போராடுகிறோம் என்று சொல்லிக்கொள்கிற போராளிக் குழுக்களிடமும் தென்பட்டிருக்கிறது.

இலங்கையில், சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுக்கும் போராளிக் குழுக்களுக்கும் இடையே நடைபெற்று வந்த போரில், மனித உரிமைகள் கிஞ்சித்தும் பின்பற்றப்படவில்லை. போராளிக் குழுக்களில், மாற்றுக் கருத்துகளை முன் வைத்தவர்கள் எல்லாம் கொல்லப்பட்டார்கள். அப்படிக் கொல்லப்படுவோம் என்று தெரிந்தும் மிகச் சிலரே, தொடர்ந்து  ‘பாசிஸ’ தலைமைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தார்கள். அவர்களில் ஒருவர்தான் மனித உரிமைச் செயற்பாட்டாளர் ராஜனி திராணகம. சிங்கள ராணுவம், இந்திய அமைதிப் படைகள், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட போராட்டக் குழுக்களின் மனித உரிமை மீறல்களைத் தொடர்ந்து உலகத்துக்குச் சொல்லி வந்தவர், 1989-ம் ஆண்டு கொல்லப்பட்டார். வரும் செப்டம்பர் 21-ம் தேதி அவரது 29-வது நினைவு நாள்!

  
மருத்துவம் கற்ற போராளி 

1954-ம் ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதி, இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்தார் ராஜனி ராஜசிங்கம். இவர்களுடையது தமிழ்க் கிறித்துவக் குடும்பம். அதனால் ‘சக உயிர்கள் மீது அன்பு கொள்ள வேண்டும்’ என்கிற எண்ணம் இவருக்கும் இவருடன் பிறந்த சகோதரிகளுக்கும் இளமையிலிருந்தே இருந்தது. தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணத்தில் முடித்தவர், தனது மருத்துவக் கல்வியை கொழும்பு பல்கலைக்கழகத்தில் படித்தார். மாணவப் பருவத்திலேயே அவருக்கு அரசியல் ஈடுபாடு இருந்தது. நிறைய கூட்டங்களுக்குப் போவதும் வருவதுமாக இருந்தார்.

அப்படி ஒரு மாணவர் அரசியல் கூட்டத்தில்தான் களனி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் தயாபாலா திராணகமவைச் சந்தித்தார் ராஜனி. அவர் ஒரு சிங்கள பவுத்தர். அவரது அரசியல் ஈடுபாடுகளால் ஈர்க்கப்பட்ட ராஜனி, இனம், மதம், மொழி கடந்து 1977-ல் தயாபாலாவை மணம் முடித்து ராஜனி திராணகம ஆனார். அவர்களுக்கு நர்மதா, சரிகா என இரண்டு மகள்கள் உண்டு.

ராஜனியின் அக்கா நிர்மலா, அமெரிக்காவுக்குப் படிக்கப் போனார். அவர் போன நேரம், வியட்நாம் போர் உச்சத்தில் இருந்தது. வியட்நாம் மீதான அமெரிக்காவின் போரை எதிர்த்து, மாணவர்கள் போராடினர். அது நிர்மலாவுக்கு அரசியல் ரீதியான விழிப்புணர்வைத் தந்தது. இடதுசாரி அரசியலைத் தேர்வு செய்தார் அவர். படிப்பு முடிந்து தாயகம் திரும்பிய அவர், விடுதலைப் புலிகளுடன் இணைந்தார்.

ஒருமுறை, காயமடைந்த ‘இயக்கத்தினர்’ ஒருவருக்கு உதவ நிர்மலாவை நாடினார். நிர்மலா, ராஜனியை நாடினார். ராஜனி அவருக்கு மருத்துவ உதவிகள் செய்தார். அப்படித்தான் அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குள் வந்தார்.

ஆவணப்படமான போராட்ட வாழ்க்கை 

மருத்துவப் படிப்பை முடித்தவுடன், சில காலம் யாழ்ப்பாண மருத்துவமனை ஒன்றில் பணியாற்றினார் ராஜனி. பின்னர் 1983-ம் ஆண்டு காமன்வெல்த் கல்வி உதவித்தொகை பெற்று, உடற்கூறியல் துறையில் பட்ட மேற்படிப்பு படிக்க இங்கிலாந்தில் உள்ள மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்துக்குச் சென்றார். பிறகு லிவர்பூல் மருத்துவக் கல்லூரியில் மனிதக் குரங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான கை நரம்புகள் குறித்து ஆய்வு செய்து வந்தார்.

  
இந்த நேரத்தில்தான், நிர்மலா கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இங்கிலாந்தில் இருந்துகொண்டு, தனது சகோதரியின் விடுதலைக்காகக் குரல் எழுப்பி வந்த ராஜனி, லண்டனில் இருந்த விடுதலைப் புலிகள் சிலருடன் இணைந்து, இலங்கையில் சிங்கள ராணுவம் மேற்கொண்டு வந்த மனித உரிமை மீறல்கள் குறித்து உலகின் பல்வேறு மனித உரிமை அமைப்புகளிடம் எடுத்துரைத்து வந்தார். பிறகு, நிர்மலா விடுதலையானார்.

80-களின் மத்தியில் தாயகம் திரும்பிய ராஜனி, யாழ் பல்கலைக்கழகத்தில் உடற்கூறியல் பேராசிரியராகப் பணியாற்றினார். அந்தச் சமயத்தில்தான் இந்திய அமைதிப் படைகள் வந்தன. சிங்கள ராணுவம், அமைதிப் படைகள் ஆகியவை அப்பாவிப் பெண்களைப் பாலியல் வன்புணர்வு செய்து வந்தன. அவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களைச் சந்தித்து, அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்தார். பின்னர் அவற்றை ‘நோ மோர் டியர்ஸ் சிஸ்டர்’ என்ற தலைப்பில் சிறு புத்தகமாகத் தொகுத்துக் கொண்டிருந்தார். அவர்களது மறுவாழ்வுக்காக ‘பூரணி மகளிர் மையம்’ என்ற அமைப்பையும் ஏற்படுத்தினார்.

அதே நேரம், அவரும் அவரது சக ஆசிரியர்களும் இணைந்து ‘மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள்’ என்ற அமைப்பைத் தொடங்கினர். சிங்கள ராணுவம், அமைதிப் படைகள், விடுதலைப் புலிகள் ஆகியோரின் மனித உரிமை மீறல்களை ‘தி புரோக்கன் பாமைரா’ (தமிழில், ‘முறிந்த பனை’ என்று வெளியானது) என்ற தலைப்பில் புத்தகமாகக் கொண்டு வந்தனர்.

  
ராஜனி தனியாகத் தொகுத்த ‘நோ மோர் டியர்ஸ் சிஸ்டர்’ எனும் ஆவணமும் அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றது. 2005-ல் அந்த ஆவணத்தின் பெயரிலேயே ராஜனி திராணகம குறித்த ஆவணப்படம் ஒன்று வெளியானது. அந்தப் படத்தில் அவரது மகள் சரிகாவே ராஜனியாக நடித்திருந்தார். அந்தப் படத்துக்குப் பின்னணிக் குரல் கொடுத்தவர் பிரபல எழுத்தாளர் மைக்கேல் ஒண்டாஜ்ஜி.

நாவலில் நிலைபெற்ற ராஜனி 

ராஜனியை மையமாகக் கொண்டு, மலையாளத்தில் 2014-ல் ‘சுகந்தி என்ன ஆண்டாள் தேவநாயகி’ எனும் நாவலை டி.டி.ராமகிருஷ்ணன் எழுதியிருந்தார். அது தற்போது,  ‘சுகந்தி அலைஸ் ஆண்டாள் தேவநாயகி’ எனும் தலைப்பில், பிரியா நாயர் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

போருக்குப் பிந்தைய இலங்கையில் நடைபெறுவதாக அமைந்திருக்கும் இந்த நாவலில், ராஜனியை ஆண்டாள் தெய்வநாயகி எனும் கற்பனையான பெண் கடவுளின் வழித் தோன்றலாகச் சித்தரித்து, அந்தக் கடவுளைப் பற்றியக் கதையைச் சொல்வதன் மூலமாக, இலங்கையில் மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற போரின் பாதிப்பு சொல்லப்பட்டிருக்கிறது.

 
‘என்றாவது ஒரு நாள் ஒரு துப்பாக்கி என்னை அமைதியாக்கிவிடும். ஆனால் அது வேற்று மனிதன் ஒருவனால் ஏந்தப்படுவதாக இருக்காது. மாறாக எனது வரலாற்றைப் பகிர்ந்துகொள்ளும் இச்சமூகத்தில் வாழும் ஒரு பெண்ணின் கருவறையில் இருந்து பிரசவிக்கப்பட்ட ஒரு புத்திரனால் ஏந்தப்படும் துப்பாக்கியாகவே அது இருக்கும்’ என்று சொன்ன ராஜனியின் வார்த்தைகள் பலித்தன. விடுதலைப் புலிகளால் அவர் கொல்லப்பட்டார். அதை மறுப்பவர்களும் இருக்கிறார்கள்.

‘முறிந்த பனை’ புத்தகத்தின் ஆரம்பத்தில் ‘ராஜனியை யார் கொன்றார்கள் என்பது முக்கியமல்ல. அவர் எதற்காகக் கொல்லப்பட்டார் என்ற கேள்வியே முக்கியம்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. ‘பாசிஸம்’தான் அந்தக் கேள்விக்கான பதில் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டுமா என்ன?

நன்றி: இந்து தமிழ் - பெண் இன்று ‍(சற்றே மாறுதல்களுடன்)