Showing posts with label environment. Show all posts
Showing posts with label environment. Show all posts

Monday, December 2, 2019

நான் பேசுறது கேட்குதா..?


.வினோத் குமார்

'என் பேர் கிரெட்டா துன்பெர்க். என்னோட வயசு 16. இந்த மைக் 'ஆன்' ஆகி இருக்கா..? நான் பேசுறது கேட்குதா..?'.

கிரெட்டா துன்பெர்க்கின் பெரும்பாலான உரைகள் இப்படித்தான் தொடங்குகின்ற. 'ஆமா... கேட்குது.. ரொம்ப சத்தமா கேட்குது..' என்று மக்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். ஆனால் பலர் அவரது உரையைக் கேட்டும் செவிடாக இருப்பதுதான் உலகின் பருவநிலை மாற்றப் பிரச்சினை மேலும் தீவிரமடைந்து வருவதற்குக் காரணம் என்பதை நாம் உணரவில்லை!

'ஸ்வென்ஸ்கா தாக்ப்ளாதத்' (Svenska Dagbladet) என்ற ஸ்வீடன் நாட்டு நாளிதழ் ஒன்று, மே 2018-‍ம் ஆண்டில் சூழலியல் பாதுகாப்பு தொடர்பாக குழந்தைகளுக்கான கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்தியது. அதில் கலந்துகொண்டு வெற்றிபெற்றவர்தான் இந்த கிரெட்டா. அவரது கட்டுரையைப் படித்த சூழலியல் செயற்பாட்டாளர்கள் சிலர், கிரெட்டாவைத் தொடர்புகொண்டு பருவநிலை மாற்றம் குறித்து மேலும் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர். அதன் பிறகு, அவர்கள் நடத்தும் கூட்டங்களுக்குச் சென்று வந்துகொண்டிருந்தார் கிரெட்டா.

இப்படியான தொடர்புகளும் சந்திப்புகளும் பருவநிலை மாற்றம் தொடர்பான அவரது புரிதலை மேலும் ஆழமாக்கின. 'சரி இப்படியே பேசிக்கொண்டிருந்தால் எப்படி, செயலில் இறங்க வேண்டாமா..?' என்று யோசித்தார் கிரெட்டா. தன் நண்பர்களுடன் விவாதித்தார். தன் வீட்டாருடன் ஆலோசித்தார். வீட்டார், 'உனக்கு ஏம்மா இந்த வேலையெல்லாம்... ஏதாவது பண்றதா இருந்தா நீயே பண்ணு, எங்க உதவியை எதிர்பார்க்காதே' என்று கைவிரித்துவிட, நண்பர்கள் மட்டும் துணை நின்றார்கள்.

சரி என்ன செய்யலாம்? 16 வயதில் நம்மால் என்ன செய்துவிட முடியும், பள்ளிக்குப் போகாமல் இருப்பதைத் தவிர..? யெஸ்... அதேதான். பள்ளிக்குப் போகாமல், பாராளுமன்றத்துக்குப் போனால்..?

செயலில் இறங்கினாள் கிரெட்டா. 2018 ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி, எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல், ஸ்வீடன் நாட்டு நாடாளுமன்றத்தின் முன் அமர்ந்தாள் அவள். உலகம் திரும்பிப் பார்த்தது.

அன்று முதல் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் பருவநிலை மாற்ற போராட்டத்தின் முக்கியமான அடையாளமாகிவிட்டாள் கிரெட்டா. இந்த ஒன்றரை ஆண்டில் அவள் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில், பருவநிலை மாற்றப் பிரச்சினை குறித்துத் தனது உரையை ஆற்றியிருக்கிறாள். அந்த உரைகளில் சில 'நோ ஒன் இஸ் டூ ஸ்மால் டு மேக் டிஃபரென்ஸ்' எனும் தலைப்பில் தொகுக்கப்பட்டு, பெங்குயின் பதிப்பகத்தால் சமீபத்தில் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் 2 முதல் 13-ம் தேதி வரை, ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மாட்ரிட்டில் பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் மன்ற மாநாடு நடைபெற உள்ள நிலையில், இந்தப் புத்தகத்தை அறிமுகம் செய்வது சாலப் பொருத்தம்.


'பாரிஸ் ஒப்பந்தத்தின் குறிக்கோள்களை நாம் அடைய வேண்டும் என்று சொன்னால், மூன்று ஆண்டுகளுக்குள் பசுங்குடில் வாயுக்கள் வெளியாகும் அளவைக் குறைக்க வேண்டும்' என்று 2017-ல், பருவநிலை மாற்ற விஞ்ஞானிகள் சொல்லியிருந்தனர். அதில் நாம் ஏற்கெனவே ஒன்றரை ஆண்டுகளை இழந்துவிட்டோம். இந்த உண்மை மக்களுக்குத் தெரிந்திருந்தால், நான் ஏன் பருவநிலை மாற்றம் குறித்து ஆர்வமாக இருக்கிறேன் என்று அவர்கள் கேட்க மாட்டார்கள்...' என்று தொடங்குகிறது அந்தப் புத்தகத்தில் இருக்கும் முதல் கட்டுரை.

இன்னொரு உரையில் அவர் இப்படிச் சொல்கிறார்: "ஆறிலிருந்து 12 ஆண்டுகளுக்குள் பணக்கார நாடுகள் தங்களது பசுங்குடில் வாயுக்கள் வெளியேறும் எண்ணிக்கையைக் குறைத்தால் மட்டுமே, சாலைகள், மருத்துவமனைகள், மின்சாரம், பள்ளிகள், சுத்தமான குடிநீர் போன்ற தேவைகளைப் பூர்த்தி செய்து தங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள முடியும்.? இந்தத் தேவைகளில் ஏற்கெனவே தன்னிறைவு அடைந்திருக்கும் நாம் பருவநிலை மாற்றம் குறித்துக் கவலைப்படவில்லை என்றால், இந்தியா அல்லது நைஜீரியா போன்ற நாடுகள் அந்தப் பிரச்சினையைப் பற்றிக் கவலைப்பட வேண்டும் என்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?"

'எதிர்காலம் என்று நீங்கள் சொல்கிறபோது, 2050-ம் ஆண்டுக்கு மேல் நீங்கள் சிந்திப்பதில்லை. அப்போது, என் வாழ்நாளில் பாதியைக் கூட தாண்டியிருக்க மாட்டேன். 2078-ல் நான் எனது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடினால், அப்போது நான் எப்படி இருப்பேன், என் குழந்தைகள், என் பேரக் குழந்தைகள் ஆகியோரின் நிலை என்னவாக இருக்கும் என்றெல்லாம் நீங்கள் யோசித்துப் பார்த்தீர்களா?' என்று இன்னொரு உரையில் கேள்வி எழுப்புகிறாள் கிரெட்டா.

'ஹோமோ சேப்பியன்கள் என்று சொல்லப்படும் மனித இனம் சந்திக்கும் மிகப்பெரிய சிக்கலான பிரச்சினை, பருவநிலை மாற்றம். ஆனால் அந்தப் பிரச்சினைக்கு எளிய தீர்வு உண்டு. அது சிறு குழந்தைகளுக்குக் கூடத் தெரியும். பசுங்குடில் வாயுக்கள் வெளியேறுவதை நிறுத்தவேண்டும். அவ்வளவுதான். இந்தப் பிரச்சினைக்குச் சிறிய அளவில் கூட பங்காற்றியிருக்காத மக்கள்தான், இந்தப் பிரச்சினையால் அதிகம் பாதிப்படையவும் செய்கிறார்கள்.

இதுகுறித்தெல்லாம் நான் அரசியல்வாதிகளிடம் பேசும்போது, 'மக்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்க நாங்கள் விரும்பவில்லை' என்கிறார்கள். பருவநிலை மாற்றம் தொடர்பான அறிவியல் தகவல்கள், உண்மைகள் தெரியாத காரணத்தால்தான், மக்கள் விழிப்புணர்வில்லாமல் இருக்கிறார்கள். எனவேதான் நான் எல்லாரையும் அறிவியலின் பின்னால் அணி திரளச் சொல்கிறேன். நம்மிடையே இருக்கும் மிகச் சிறந்த அறிவியலை, அரசியல் மற்றும் ஜனநாயகத்தின் இதயமாக மாற்றுங்கள் என்கிறேன்.

பசுங்குடில் வாயுக்களை 'நிறுத்துங்கள்' என்று சொல்வதற்குப் பதிலாக அதை 'குறையுங்கள்' என்று சொல்வதால்தான் இந்தப் பிரச்சினை நீண்டுகொண்டே இருப்பதற்குக் காரணம். அதனால் ஏற்பட்டிருக்கும் அழுக்கை பெரியவர்கள் நீங்கள் கண்டுகொள்வதில்லை. அதனால்தான் அந்த அழுக்கைச் சுத்தப்படுத்த சிறியவர்கள் நாங்கள் வந்திருக்கிறோம். பூமி சுத்தமாகும் வரை நாங்களும் ஓயமாட்டோம்' என்று அழுத்தமாகச் சொல்கிறாள் கிரெட்டா.

இப்படி அவர் உரை முழுவதும் வெறுமனே உணர்ச்சிப்பூர்வமாக மட்டுமல்லாது, அறிவியல் தகவல்களோடும் இருப்பதால்தான், அவரது உரை பலருக்கும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. 

'ஆஸ்பெர்ஜர் சிண்ட்ரோம்' எனும் வியாதியால் பாதிக்கப்பட்டவள் கிரெட்டா. அந்த நோய் உடையோருக்கு, சமூகத்தில் மற்றவருடன் தொடர்புகொள்வதில் சிக்கலிருக்கும். எனினும், சில குறிப்பிட்ட விஷயங்கள் மீது அவர்களுக்கு அதீத ஆர்வம் இருக்கும். பருவநிலை மாற்றம் குறித்த கிரெட்டாவின் ஆர்வத்துக்கு இதுவும்கூட காரணமாக இருக்கலாம். ஆனால் தனது குறைபாட்டையே தனக்கான பலமாக மாற்றி வெற்றி பெற்றுவிட்டாள் கிரெட்டா. அதைப் பாராட்ட மனமில்லாதோர் ஆயிரம் விமர்சனங்களை முன் வைக்கிறார்கள்.

இப்போதெல்லாம் எங்கேனும் குழாய் நீர் வழிந்து கொண்டிருந்தாலோ, யாருமில்லாத அறையில் மின்விசிறி சுற்றிக்கொண்டிருந்தாலோ, மனம் பதறுகிறது. உடனே ஓடிச் சென்று அவற்றை 'ஆஃப்' செய்கிறேன். அந்தப் பதற்றம்தான் கிரெட்டா நம்மிடம் எதிர்பார்ப்பது. ' வான்ட் யூ டு பேனிக்!' (I want you to panic).

Tuesday, August 13, 2019

யுத்த நாளின் யானைகள்…!

வரலாற்றாசிரியர் தாமஸ் ஆர்.ட்ரவுட்மேன் நேர்காணல்


பேட்டி, படங்கள்: ந.வினோத் குமார் 

பதிப்பிக்கப்பட்ட தேதி: 28 பிப்ரவரி 2019


“குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் எப்போதும் வசீகரிக்கும் தன்மையுடையவை யானைகள். அவை என்னையும் வசீகரித்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை. இந்த ஒரு காரணம் போதாதா நான் யானைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்கு…” என்று சொல்லிப் புன்னகைக்கிறார் தாமஸ் ஆர்.ட்ரவுட்மேன்.

பிரபல வரலாற்றாசிரியர் ஏ.எல்.பாஷம் என்பவரின் மாணாக்கராக, லண்டனில் உள்ள ‘ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் அண்ட் ஆப்பிரிக்கன் ஸ்டடீஸ்’ மையத்தில், ‘அர்த்தசாஸ்திரம்’ குறித்து முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டவர் ட்ரவுட்மேன். பிறகு, அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் மானுடவியல் பேராசிரியராக இருந்தவர். அங்கு 1988 முதல் 2010 வரை பண்டைய இந்திய வரலாறு தொடர்பாகப் போதித்திருக்கிறார்.

அன்றைய சென்னையில் வாழ்ந்த ஆங்கிலேய அதிகாரி எல்லீஸ் குறித்து இவரது ஆய்வு, ‘திராவிடச் சான்று: எல்லீஸும் திராவிட மொழிகளும்’ என்ற தலைப்பில் பல ஆண்டுகளுக்கு முன்பு புத்தகமாகப் பதிப்பிக்கப்பட்டது. இந்தியாவில் போருக்காகப் பயன்படுத்தப்பட்ட யானைகள் குறித்து இவரது ஆய்வு, ’எலிஃபன்ட்ஸ் அண்ட் கிங்ஸ்: ஏன் என்விரான்மென்ட்டல் ஹிஸ்டரி’ என்ற தலைப்பில் 2015ஆம் ஆண்டு புத்தகமாக வெளிவந்தது. அந்தப் புத்தகத்தைத் தற்போது தமிழில் மொழிபெயர்த்து வருகிறார் பிரபல பறவையியலாளர் ப.ஜெகநாதன். 


ட்ரவுட்மேன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு (எம்.ஐ.டி.எஸ்) ‘ஆனையின் அடிச்சுவட்டில்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்த வந்திருந்தார். அப்போது நாம் அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து…

இப்போதெல்லாம் வரலாற்றாசிரியர்கள் சூழலியலாளர்களாக மாறி வருகிறார்களே..?

இறந்த காலத்தைப் பற்றி ஆய்வு செய்த வரலாற்றாசிரியர்கள் இப்போது வருங்காலம் குறித்துச் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். சுற்றுச்சூழலியல் வருங்காலத்துக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று என்பதை அவர்கள் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். ‘சூழலியல் வரலாறு’ என்பது சமீபகாலமாகத்தான் பேசப்பட்டு வருகிறது. முற்றிலும் புதிய துறைதான். ஆனால் மிகவும் வேகமான, ஆழமான, பரந்துபட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்போது வரை சூழலியல் வரலாறு தொடர்பாக நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளும், வெளிக்கொணரப்பட்ட படைப்புகளும் கடந்த இரண்டு நூற்றாண்டுகளை அடிப்படையாக வைத்துத்தான் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும்.

வரலாற்று ஆசிரியரான உங்களுக்கு யானைகளின் மீது ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

யானைகள் என்று சொல்லும்போது, குறிப்பாக ஆசிய யானைகள். இந்தியாவில் இருந்த யானைகள். இங்கு யானைகளின் வரலாறு என்பது, போருக்காகப் பயன்படுத்தப்பட்ட யானைகள்தான். அந்த யானைகளை அரசர்கள் பயன்படுத்திய விதமும், அந்த யானைகளுக்காக, யானைகளால் நிகழ்ந்த நிலப் பயன்பாட்டு மாற்றங்களும்தான் எனது ஆய்வு.

பல ஆண்டுகளாக இந்திய வரலாற்றை ஆய்வு செய்துவந்த நான், ஒருகட்டத்தில் டெல்லியில் இருந்த சுல்தான்களைப் பற்றிப் படிக்க நேர்ந்தது. அப்போதுதான் பேராசிரியர் சைமன் டிக்பி எழுதிய ‘வார் ஹார்ஸ் அண்ட் எலிஃபன்ட்ஸ்’ எனும் புத்தகம் எனக்கு அறிமுகமாகியது. அதைப் படித்தபோது, இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் குதிரைகளும், கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் யானைகளும் போருக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்ற உண்மை விளங்கியது.

அது தொடர்பாக மேலும் படிக்க நினைத்தபோது, சொற்பமான தகவல்களே கிடைத்தன. இந்தியாவில் இருந்த போர் யானைகள் பற்றி இன்னும் ஆழமான ஆய்வுகள் வேண்டும் என்று எண்ணினேன். அதை நாமே செய்யலாமே என்று இறங்கினேன்.


அந்த ஆய்வு குறித்துக் கொஞ்சம் விளக்குங்கள்…

ரிக் வேதத்தில் யானைகளை ‘ம்ருக ஹஸ்தின்’ என்று அழைத்திருக்கிறார்கள். அங்கிருந்துதான் இந்தியாவில் யானைகளின் வரலாறு தொடங்குகிறது. யானைகளை மனிதர்கள் பழக்கப்படுத்தியது அதற்குப் பின்னர்தான். சிந்து சமவெளி நாகரிகக் கால ஓவியங்களில் யானைகள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், அதன் மீது மனிதர்கள் சவாரி செய்வது போன்ற ஓவியங்கள் எதுவும் இல்லை. அவை வேட்டையாடப்பட்டிருக்கின்றன. ஆனால் அவை பழக்கப்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் இல்லை.

இந்தியாவைத் தவிர சீனாவிலும் யானைகள் இருந்திருக்கின்றன. அங்கு அவை பழக்கப்படுத்தப்பட்டிருந்தாலும், போருக்காகப் பயன்படுத்தப்படவில்லை. ‘போர் யானைகள்’ என்பது முழுக்க முழுக்க இந்தியாவின் கண்டுபிடிப்புதான். இந்தியாவின் மீது மாவீரன் அலெக்சாண்டர் படையெடுத்து வந்து சென்ற பிறகு, அவன் மூலமாகத்தான் மேற்கத்திய நாடுகளில் யானைகள் போருக்காகப் பயன்படுத்தப்பட்டன. மேற்கே ஸ்பெயின் நாடு வரைக்கும், கிழக்கே கம்போடியா நாடு வரைக்கும் யானைகள் போருக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அங்கிருந்த மன்னர்கள் எல்லோரும் இந்திய மன்னர்கள் பின்பற்றிய நுட்பங்களைப் பயன்படுத்தியே யானைகளைப் போருக்காகப் பழக்கப்படுத்தியிருக்கிறார்கள். அங்குசம் என்ற கருவிகூட இந்தியாவிலிருந்துதான் சென்றிருக்கிறது.


இந்திய மன்னர்கள் யானைகளைப் பயன்படுத்திய விதம் குறித்துக் கூறுங்கள்.

மகாபாரதத்தில் 60 வயது நிரம்பிய யானைகள்தான் போருக்காகப் பயன்படுத்தப்பட்டன என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையில் 20 வயதுள்ள யானைகள்தான் போருக்காகப் பழக்கப்படுத்தப்பட்டன. அதுவும் ‘மஸ்த்’ சுரந்து மதம் பிடித்த யானையைத்தான் பழக்கப்படுத்தினார்கள். யானை பிறந்து சில நாட்களே ஆன நிலையில் அவற்றைப் பிடித்துச் சென்றால், அவற்றுக்குச் சோறிட்டு மாள முடியாது என்ற காரணத்தால், அவை 20 வயதை நெருங்கும் வரை காட்டில் சுற்றவிட்டு, அந்தக் காட்டு யானைகளையே பிடித்துப் பழக்கினார்கள்.

சில நேரங்களில் நேரடியாகப் போரில் பயன்படுத்தாமல், போரைத் தவிர்ப்பதற்கும் யானைகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆம்… தங்கள் நாட்டின் மீது போர் தொடுத்து வராமல் இருப்பதற்காக, இதர நாட்டு அரசர்களுக்கு யானைகளை அன்பளிப்பாகக் கொடுக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. அலெக்சாண்டரின் வழித்தோன்றல்களுக்கு சந்திரகுப்தர் சுமார் 500 யானைகளைப் பரிசாக வழங்கியதாகக் குறிப்பு உள்ளது. யானைகளை மட்டுமல்லாமல், யானைப் பாகன்களையும் சேர்த்தே அனுப்பும் வழக்கம் இருந்திருக்கிறது. அதனால்தான், அன்றைய கிரேக்கத்தில் யானைப் பாகன்களை ‘தி இந்தியன்ஸ்’ என்று அழைத்திருக்கிறார்கள்.

‘கஜ சாஸ்திரம்’, ‘மானசலோஸா’ போன்று யானைகள் தொடர்பான அறிவியல் இலக்கியங்களும் இந்தியாவில்தான் தோன்றின. சீன மன்னர்கள், தங்கள் நாட்டு விவசாயிகளைக் காப்பதற்காக, யானைகள் விவசாய நிலங்களை அழித்துவிடாமல் இருக்க, அவற்றைக் கொன்றார்கள். ஆனால் இந்தியாவிலோ, யானைகளையும் விவசாயத்தையும் சமமாக வைத்துப் பேணியிருக்கிறார்கள். தந்தங்களுக்காக யானைகளை வேட்டையாடிய குற்றத்துக்காக மரண தண்டனை விதித்திருக்கிறார்கள். மாறாக, இயற்கையாக இறந்துபோன யானைகளின் தந்தங்களைக் கொண்டு வந்து கொடுத்தால், அவர்களுக்குச் சன்மானம் அளித்திருக்கிறார்கள்.


போர் யானைகள் என்றில்லாமல், பொதுவாகவே யானைகளின் நிலை இன்று எப்படியிருக்கிறது?

19ஆம் நூற்றாண்டு வரை போர் யானைகள் பயன்பாட்டில் இருந்தன. எனக்குத் தெரிந்து 1833ஆம் ஆண்டில் கம்போடியாவில் நடந்த போரில்தான் கடைசியாக யானைகள் போருக்காகப் பயன்படுத்தப்பட்டன. அதற்குப் பிறகு போருக்காக யானைகள் பயன்படுத்தப்படவில்லை. இந்தியாவில், ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பிறகு, வேட்டையாடலுக்காக யானைகள் பயன்படுத்தப்பட்டன. தென்னாப்பிரிக்காவில் யானைகளின் மீது அமர்ந்து ஐரோப்பியர்கள் வேட்டையாடி வந்தனர். அவர்களிடமிருந்து ஆங்கிலேயர்கள் ‘காப்பி’ அடித்தார்கள்.

பழக்கப்படுத்தப்பட்ட யானைகளின் வாழ்க்கை பரிதாபகரமானதுதான். தாய்லாந்தில், மர வேலைப் பயன்பாட்டுக்காக யானைகள் பழக்கப்படுத்தப்பட்டன. சில ஆண்டுகளுக்கு முன்பு அப்படி யானைகளைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டது. இப்போது அவை சாலைகளில் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கின்றன. இந்தியாவிலும் கோயில்களில் யானைகள் அதைத்தானே செய்கின்றன?

ஆனால், காட்டு யானைகளுக்கு நல்வாழ்க்கை அமைந்திருக்கிறது. அதுவும் தமிழகம், கேரளம் உள்ளிட்ட தென்னிந்தியக் காடுகளில் யானைகள் நலமுடன் வலம் வருகின்றன. சுற்றுலா போன்றவற்றால், அவற்றுக்குப் பொருளாதார மதிப்பும் கிடைத்துள்ளன. யானைகள் அதிகரித்தால் மனித - விலங்கு எதிர்கொள்ளல் நிகழ்ச்சிகள் அதிகரிக்கத்தான் செய்யும். அவற்றை எப்படிக் கையாள்கிறோம் என்பதில் தெரியும் அவற்றுக்கு நாம் செய்யும் மரியாதை..!

நன்றி: மின்னம்பலம்