Friday, February 15, 2019

நகரக் காதல்..!

ந.வினோத் குமார்

எதற்கும் தலைப்பை இன்னொரு முறை படித்துவிடுங்கள். ‘நகரக் காதல்’தான்… ‘நரகக் காதல்’ இல்லை..!
’இரண்டு இதயங்கள் மட்டும் போதும் காதலுக்கு’ என்பது இளைஞர்களின் இயல்பு. இடங்களும் முக்கியம் என்பது பலருக்கும் புரிவதில்லை. சொல்லப் போனால், ஒருவர் வாழ்கிற அல்லது வசிக்கிற இடத்தைப் பொறுத்துத்தான் அவரது காதலின் விஸ்தீரனமும் இருக்கிறது. கிராமம் என்றால் அதற்குரிய சுபாவங்களோடும் கட்டுப்பாடுகளோடும், நகரம் என்றால் அதற்குரிய நவீனத்தோடும் எல்லை மீறுதல்களோடும் என காதல், நிகழும்.
ஆல மரத்தின் மறைவில் நின்று கொஞ்சிக் கொள்கிற  காதலர்களை ஊராரின் கண்கள் சாதி, உறவு முறை போன்ற கண்ணாடிகளைக் கொண்டு  பார்த்தால், மேம்பாலத்தின் தூண் மறைவில் களிப்புறுகிற காதலர்களை நகரவாசிகளின் ‘எக்ஸ்-ரே’ மனங்கள் ‘கருமம் கருமம்… எங்க பார்த்தாலும் இதுங்க ‘அது’க்குன்னே சுத்துதுங்க...’ என்று அங்கலாய்க்கின்றன.
பலரும் கிராமத்தில் காதல் செய்வதைவிட, நகரத்தில் செய்வதுதான் அதிக சுதந்திரத்தோடு இருக்கிறது என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இல்லை… கிராமங்களில் கோயில், குளம், அரச மரத்தடி, திருவிழாக்கள், உறவினர் வீட்டு விசேஷங்கள், பேருந்துப் பயணங்கள் என காதலர்கள் சந்தித்துக் கொள்ளவும், விரல்கள் பிணைத்துக் கொள்ளவும் போதுமான இடங்கள் உள்ளன.
ஆனால் நகரத்தில், திரையரங்குகள், பூங்காக்கள், கடற்கரை என எங்கு சென்றாலும், ‘பெர்வெர்ட்’களின் கண்கள்  மொய்த்துக்கொண்டே இருக்கின்றன. ‘எவன் எங்கே கேமரா வெச்சிருக்கானோ’ என்ற பயத்துடனேயே உரசிக் கொள்ள வேண்டியிருக்கிறது. கொஞ்சம் கவனம் பிசகினால், ‘எக்ஸ் வீடியோஸ்’ தளத்தின் ஏதேனும் ஒரு பக்கத்தில் ‘தேசி செக்ஸ்’ என்ற தலைப்புடன் அந்தத் தருணங்கள் இணையத்தில் பரவுவதற்கான சாத்தியங்கள் அதிகம்.
நகரக் காதல்களின் இன்னொரு முக்கியமான அம்சம்… நீங்கள் ஒருவரின் மீது காதல் கொள்வதற்கு முன், அந்த நகரத்தின் மீதே காதல் கொள்ள வேண்டும். அதன் அழுக்குகளை ‘அடடா… என்ன அழகு’ என்று ஏற்றுக்கொள்கிற பக்குவம் வேண்டும். கூட்ட நெரிசலிலும் ‘க்யூ’ வரிசையிலும் தொங்கப்போட்ட தலை நிமிராது செல்போனில் மூழ்கிக் கிடக்கத் தெரிய வேண்டும். வெயிலையும் மழையையும் ஒன்று போல் கருதுகிற ஞானியின் திடம் வேண்டும். காதலரின் தாமதமான வருகையை, அவர் வரும் ரயில், பேருந்து ஆகியவற்றின் தாமதத்துடன் இணைத்துக் காத்திருக்கும் ரசனை பழக வேண்டும்.
நான் அப்படித்தான் ‘நகரக் காதல்’ பழகினேன். அதற்கு உதவியாக இருந்தவை ’இதயம்’, ‘ஆசை’, ‘பூவே உனக்காக’, ‘காதல் தேசம்’, ‘சொல்லாமலே’ போன்ற 90-களின் தமிழ் சினிமாக்கள். இன்றும் எம்.எம்.சி பக்கம் போனால், ஏதேனும் மரத்தடியில் முரளி உட்கார்ந்திருப்பாரோ என்று தோன்றும். ‘போனி டெய்ல்’ போட்ட, கையில் ‘ஸ்டெத்’ உடனும் மார்போடு அணைத்த புத்தகங்களுடனும் காட்டன் புடவை கட்டிய எனக்கான ‘ஹீரா’ எந்த மாடிப்படிகளிலேனும் இறங்கிக் கொண்டிருக்கக் கூடும் என மனம் கனவு காணும். எதிர்த்திசையில் வரும் பேருந்தில் ஜன்னலோரமாய் அமர்ந்திருக்கும் இளம்பெண்ணைப் பார்த்தால், இந்தப் பேருந்தில் ஜன்னலோரமாய் உட்கார்ந்திருக்கும் என்னை அஜீத் ஆகக் கற்பனை செய்து பார்க்கத் தூண்டும் விதி. மாடிகளின் மேல் இருக்கும் குடிசைகளைப் பார்க்கும்போது, ‘ஆனந்தம் ஆனந்தம் பாடும்’ விஜய் துணி துவைத்துக் கொண்டிருக்கலாம் என்ற எண்ணம் வரும். கூடவே இலவச இணைப்பாக எஸ்.ஏ.ராஜ்குமாரின் ‘லாலலா...  லாலலா…’
நகரத்துக்கு வந்த 10 ஆண்டுகளில் நான்கு காதல்கள் பார்த்துவிட்டேன். காதலும் காதலிகளும்தான் என்னைப் பார்க்கவில்லை. அவர்களுக்கெல்லாம் நான் ‘அனானிமஸ்’ ஆகப் போய்விட்டதில் எனக்குக் கொஞ்சம் வருத்தம்தான்.
நிற்க… நகரத்தின் மீது காதல் கொள்வது குறித்தும், அந்தக் காதலினூடே தனக்கான காதலியைக் கண்டடைவது குறித்தும் அருமையானதொரு புத்தகத்தை எழுதியிருக்கிறார் ஊடகவியலாளர் ரவீஷ் குமார். என்.டி.டி.வி.யில் பணியாற்றும் அவர், ஒரு சிறந்த ஊடகவியலாளர் என்று பலருக்கும் தெரியும். தெரியாத ஒன்று, அவர் சிறந்த எழுத்தாளரும்கூட..!
பிஹாரில் பிறந்து, வளர்ந்து, உயர்கல்விக்காக முதன்முறையாக அவர் டெல்லிக்கு வரும்போது, அங்கே காணப்பட்ட கலாச்சார வித்தியாசங்கள் அவரை அச்சுறுத்துகின்றன. கூச்சப்பட வைக்கின்றன. அந்தக் காலத்தில்தான், தனக்கானத் துணையை அவர் காண்கிறார். 7 ஆண்டு காதலுக்குப் பிறகு, நய‌னா தாஸ்குப்தாவைக் கரம் பிடித்தார் ரவீஷ். 
அவர்கள் காதலித்த காலத்தில், தனது கையில் பணம் இல்லாததாலும், கல்வியும் ஆய்வும் நிறைய நேரங்களை எடுத்துக்கொண்டு காதலியைப் பார்க்க முடியாத தவிப்பாலும் கடும் வலிக்கும் வேதனைக்கும் உள்ளானார் ரவீஷ். அப்போது தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பத்து வரிகளுக்குள் முடிந்துவிடுகிற ‘மைக்ரோ’ கதைகளை எழுத ஆரம்பித்தார். ‘லகு பிரேம் கதா’ (சுருக்கமாக, லப்ரேக்) எனும் வகைமையைச் சேர்ந்த அந்த எழுத்துகள் தொகுக்கப்பட்டு ‘இஷ்க் மெய்ன் ஷஹர் ஹோனா’ என்ற தலைப்பில் புத்தகமாக 2015-ல் ‘ராஜ்கமல் பிரகாஷன்’ பதிப்பக வெளியீடாக வந்தது. அது அகில் கத்யால் என்பவரால் ’எ சிட்டி ஹேப்பன்ஸ் இன் லவ்’ என்ற தலைப்பில் இந்தியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, ‘ஸ்பீக்கிங் டைகர்’ வெளியீடாக 2018-ல் வெளியானது. விக்ரம் நாயக்கின் ஓவியங்கள் கதைகளுக்குக் கூடுதல் பொலிவைத் தருகின்றன.
இதில் உள்ள பெரும்பாலான கதைகள் அவரது சொந்த வாழ்க்கையில் நடந்தவை. கதைகளில் காதலைவிட, காதலர்களைவிட, டெல்லி நகரம் நிறைந்திருக்கிறது. பல இடங்களில் கவித்துவம் தெறிக்கிறது. பெரும்பாலான கதைகளின் சாரம், அந்தத் தெறிப்புகளில் அடங்கிக் கிடக்கிறது. அந்தத் தெறிப்புகளை தமிழ்ப்படுத்தாமல் ஆங்கிலத்தில் வாசிப்பது இன்னும் அழகாகவே இருக்கிறது. உதாரணத்துக்குச் சில:
‘…what kind of a city is this? Always chasing the body!’ (நிஜம்தான்..!)
‘It was this electricity of touch that was making them into city folks’.
‘When in love you don’t just see, you learn to unsee too’. (’லவ் இஸ் ப்ளைண்ட்’ என்பதை நம்பாதவர்களுக்கு!)
‘We’ve become so unemployed in love’.
‘Love stories in the city are always like this. They start in traffic and then, in traffic, they are lost’.
‘Why do you always seek me out in the dark? This one question turned the cinema hall into a police station’. (கார்னர் சீட் தேடும் ஆண்களுக்கு..!)
‘As she got down, she was right when she said --- you worry less about me and more about the world. You could have at least held my hand under the bag. Coward!’ (நீங்கள் புன்னகைப்பது தெரிகிறது..!)
‘Not every fight over status has to be fought with English!’ (பீட்டர் விடுபவர்களுக்கு..!)
‘The most dangerous is the dying of our dreams’.
‘Touch was like that blessing in whose search they’d roam in temples…’
‘…our shoulders brushing against each other’s brush against the lines of a poet’.

புத்தகத்தைப் படிக்கும்போது, ‘இதை தமிழில் மொழிபெயர்க்கலாமே’ என்கிற ஆவலை அடக்க முடியவில்லை. எனவே ஒரே ஒரு கதையை மட்டும் இங்கே மொழிபெயர்க்கிறேன்.
“ஒபாமாவைப் போன்ற ஒருவர் நம் மாவட்டத்தின் ஆட்சியராக வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எல்லா கட்டப்பஞ்சாயத்துகளையும் ஒரே நாளில் ஒழித்துவிடுவார்.
ஆமாம். நீ இப்படி ஆசைப்படுவது, ஒரு இனிய கனவைப்  போல இருக்கிறது. ஆனால் ஒன்றை மறந்துவிடாதே. தன் கையில் துப்பாக்கி இருந்தால், ஒபாமாவும் தீவிரவாதியைப் போலத்தான் பேசுவார். அப்போது, எங்கே போய் ஒளிய முடியும்?
இரவில் கூட, ஒளியின் துணையின்றி அவரால் பார்க்க முடியும் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
அடடா… சரி வா, நாளை காலையில் இருந்து ஜனநாயகப்பூர்வமாக ஒரு விஷயத்தைச் செய்வோம். இன்னும் எத்தனை நாள் நாம் மாமரத்தின் மறைவிலும் அரச மரத்தின் அடியிலும் சந்திப்பது? ஒரு நாவல் பழம் விழுந்தால்கூட, அது ஏதோ ஒரு கட்டப்பஞ்சாயத்துக்காரனின் தோட்டா தாக்கியதைப் போல உணர்கிறேன் நான்”
எல்லாம் சரி..? ஒரு நகரத்தின் மீது எப்படி காதல் கொள்வது? அதற்கு ரவீஷ் தரும் பதில்… ’தெரிந்த இடத்திலிருந்து தெரியாத இடங்களுக்குச் செல்லும்போது!’
‘அமெரிக்கா செல்வதற்குக் கொடுக்கும் மறைமுகமான விலை ஒன்று உண்டு. அதைப் புரிந்துகொண்டு செல்லுங்கள். அது, திரும்ப  வரமாட்டீர்கள்’ என்று வெளிநாட்டு மோகத்தைப் பற்றி எழுத்தாளர் சுஜாதா ஒரு கட்டுரையில் சொல்லியிருப்பார். அது படிப்பு, வேலை ஆகிய காரணங்களுக்காக நாம் செல்லும் வெளியூர், வெளி மாநில நகரங்களுக்கும் பொருந்தும். ஆனாலும் இன்னமும் நம்மில் பலர், ‘பெர்மனன்ட் அட்ரஸ்’ என்பதன் கீழ், நம் கிராமத்தின் முகவரியைத்தான் எழுதிக்கொண்டிருக்கிறோம். இந்த முரணை என்னவென்பது..?

Tuesday, January 15, 2019

யார் அந்த பிர்ஸா முண்டா..?

ந.வினோத் குமார்

புகழ்பெற்ற ஒருவரின் வாழ்க்கையைப் படமாக எடுப்பது புதிதல்ல. வெவ்வேறு காலகட்டத்தில், வெவ்வேறு இயக்குநர்களால் குறிப்பிட்ட ஒரு மனிதரின் வாழ்க்கையைப் படமாக எடுப்பதும் புதிதல்ல. ஆனால், ஒரே காலகட்டத்தைச் சேர்ந்த இரண்டு இயக்குநர்கள், ஒரே மனிதரைப் பற்றி, வேறு வேறு மொழிகளில் படம் எடுப்பது முற்றிலும் புதிது. இந்தப் புதுமைக்குக் காரணமான அந்த நபர்… பிர்ஸா முண்டா..!

இந்த ஆண்டு அக்டோபர் மாதம், பிர்ஸா முண்டாவைப் பற்றி முண்டாக்கள் பேசும் ‘முண்டாரி’ மொழியிலேயே ஒரு படத்தை இயக்கப் போவதாக ‘அறம்’ புகழ், கோபி நயினார் தெரிவித்திருந்தார். அந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கப் போவதாகவும் தகவல் வெளியானது.

அதற்கு அடுத்த மாதமே, பிர்ஸா முண்டாவின் பிறந்தநாள் (நவம்பர் 15) அன்று, அவரைப் பற்றி இந்தியில் ஒரு படத்தை இயக்கப் போவதாக அறிவித்தார் இயக்குநர் பா.ரஞ்சித்.


இந்த இருவருமே மேற்கு வங்க எழுத்தாளர் மகாஸ்வேதா தேவி, பிர்ஸா முண்டாவின் வாழ்க்கையைப் பற்றி ‘ஆரண்யேர் அதிகார்’ எனும் தலைப்பில் எழுதிய நாவலை அடிப்படையாக வைத்துத்தான் திரைக்கதையை உருவாக்கியிருப்பதாகக் கூறுகிறார்கள். இந்த நாவல் 1977-ம் ஆண்டு வெளியாகி, 1979-ம் ஆண்டு, மகாஸ்வேதா தேவிக்கு சாகித்ய அகாடெமி விருதைப் பெற்றுத் தந்தது. பிறகு, இந்த நாவலை நேரடியாக வங்க மொழியிலிருந்து தமிழுக்கு ‘காட்டில் உரிமை’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார் பிரபல மொழிபெயர்ப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி.

***
அது அன்றைய வங்காள மாகாணம். அங்கு உலி ஹாத்து என்கிற கிராமத்தில் 1875-ம் ஆண்டு, சுகானா முண்டா – கர்மி தம்பதியருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார் பிர்ஸா முண்டா. அந்தப் பகுதி இன்றைய ஜார்க்கண்ட மாநிலத்தில் உள்ளது. அவரது பெற்றோர், விவசாயக் கூலிகளாக இருந்தனர்.

பிர்ஸாவின் ஆரம்பக் கால வாழ்க்கை, சல்கட் எனும் கிராமத்தில் கழிந்தது. இதர முண்டா சிறுவர்களைப் போலவே, மாடு மேய்ப்பதும், குழல் ஊதுவதும், மண்ணில் புரண்டு விளையாடுவதும் என அவரது இளமைக் காலம் சென்றது. வாலிபனாக வளர்ந்து வந்தபோது, ‘டுயிலா’ எனும் இசைக் கருவியையும் அவர் வாசிக்கப் பழகியதோடு, மல்யுத்த விளையாட்டிலும் சிறந்து விளங்கினார்.

ஊரிலும் வீட்டிலும் நிலவிய வறுமை, அவரை அயுபாட்டு எனும் கிராமத்துக்கு அழைத்துச் சென்றது. அங்கு ஜெய்பால் நாக் என்பவர் நடத்தி வந்த பள்ளி ஒன்றில் அவர் சேர்ந்து தொடக்கக் கல்வியைக் கற்றார். படிப்பில் படு சுட்டியாக விளங்கிய பிர்ஸாவை கிறிஸ்த்துவ மதத்துக்கு மதம் மாறச் சொன்னார் ஜெய்பால் நாக். காரணம், அப்போதுதான், பிர்ஸாவால் ஜெர்மன் மிஷனரிகள் நடத்தி வந்த பள்ளியில் சேர்ந்து, மேற்படிப்புப் படிக்க முடியும். கல்வி மீது கொண்டிருந்த ஆர்வத்தால், பிர்ஸாவும் மதம் மாறி, அந்தப் பள்ளியில் சேர்ந்தார்.

அந்தப் பள்ளி, சாய்பாஸா எனும் இடத்தில் அமைந்திருந்தது. அங்கு ‘சர்தார்’ எனும் இனக்குழுவினர் ஆங்கிலேய அதிகாரிகள், மிஷனரிகள் ஆகியோருக்கு எதிராகப் போராடி வந்தனர். அந்தப் போராட்டம், இளம் பிர்ஸாவின் மனதில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும், முண்டா போன்ற ஆதிவாசிகள் மீது ஆங்கிலேயர்கள் மேற்கொண்டு வந்த ஒடுக்குமுறையைப் பற்றியும் அவருக்குப் பல விஷயங்கள் விளங்கின. தான் படித்த பள்ளியிலும் சாதிய ரீதியானப் பாகுபாடுகள் கடைப்பிடிக்கப்படுவதைக் கண்டு மனம் நொந்தார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மத குருமார்களிடம் அவர் வாக்குவாதம் நடத்தினார். இதனால், அவர் தனது பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட வேண்டியதாயிற்று. பள்ளியிலிருந்து வெளிவந்தது முதல், ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராட வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் மேலோங்கியிருந்தது.


ஆங்கிலேயர்களைத் தனி ஒருவனாக இருந்து எதிர்த்துவிட முடியாது என்பது பிர்ஸாவுக்குப் புரிந்தது. போராட்டத்துக்கு ஆட்களைத் திரட்ட வேண்டும். அவ்வாறு ஆட்களைத் திரட்ட, முதலில் அவர்களின் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். ஆங்கிலேயர்களுக்கும் அவர்களுக்குத் துணைபோகும் ஜமீந்தார்களுக்கும் தாங்கள் அடிமையாக இருக்கிறோம் என்பதை முண்டாக்களுக்குப் புரிய வைக்க வேண்டும். இதைச் சாத்தியப்படுத்த வேண்டுமானால், அவர்களை மத ரீதியாக மடைமாற்ற வேண்டும் என்று கருதினார்.

அப்படித்தான் உருவானது, ‘பிர்சாயித்’ எனும் மதம். அதில் ஆர்வமுடன் பலர் இணைந்தனர். அவர்களுக்குத் தாங்கள் முண்டா என்பதில் கர்வம்கொள்ள வேண்டும் என்று அவர் போதித்தார். காடுகளும் விளைநிலங்களும் நதிகளும் எல்லோருக்கும் பொதுவானது என்றும், அவற்றை முன் வைத்து, ஆங்கிலேயர்களோ ஜமீந்தார்களோ பத்திரத்தில் கைநாட்டுப் பெற்றுக்கொண்டு தங்களை அடிமைப்படுத்திவிட முடியாது என்றும் அவர்களுக்கு உணர்த்தினார். பள்ளியில் தான் பெற்ற அறிவைக் கொண்டு, முண்டாக்கள் பின்பற்றி வந்த பயனில்லாத மருத்துவ முறைகளையும், கால்நடைகளைப் பலி கொடுப்பதையும், பேய், பூத மூடநம்பிக்கைகளையும் பிர்ஸா அகற்ற முயன்றார். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றார்.

இந்தக் காரணங்களால் அவர் ‘தர்த்தி ஆபா’ என்று அழைக்கப்பட்டார். அதாவது, ‘பூமியின் தந்தை’ எனக் கடவுள் ஸ்தானத்தில் வைத்து அவரை முண்டாக்கள் வணங்கினர். கூட்டத்தைத் திரட்டியாகிவிட்டது, ஆங்கிலேயர்களை எதிர்க்க இதுதான் சரியான நேரம் என்று முடிவு செய்தார் பிர்ஸா. உதித்தது, ‘உல்குலான்!’


‘உல்குலான்’ என்றால் புரட்சி என்று பொருள். மறைந்திருந்து தாக்கும் ‘கெரில்லா’ போர் முறையைப் பின்பிற்றினார்கள் முண்டாக்கள். அதில் பல நூறு போலீஸார் கொல்லப்பட்டனர். பிர்ஸாவைப் பிடித்துக்கொடுப்பவர்களுக்கு 500 ரூபாய் சன்மானம் வழங்குவதாக அறிவித்தது பிரிட்டிஷ் அரசு. பணத்துக்கு ஆசைப்பட்டு, முண்டா இனத்தைச் சேர்ந்த சில நம்பிக்கைத் துரோகிகள் பிர்ஸாவைக் காட்டிக்கொடுத்தனர். 1900-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி கைது செய்யப்பட்ட அவர், ஜூன் 9-ம் தேதி சிறையில், காலராவால் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால், காலரா தாக்கியதற்கான எந்த அறிகுறியும் பிர்ஸாவிடம் தென்படவில்லை. பிரிட்டிஷார் செய்த எத்தனையோ சூழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. எனவே, அவரது இறப்புக்கு உண்மையான காரணம் என்ன என்பது இன்று வரை மர்மமாகவே இருக்கிறது!

அந்த மாவீரனின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும், அவரது பிறந்த தினம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. நாடாளுமன்ற மத்திய மண்டபத்தில் இதர விடுதலைப் போராட்ட வீரர்களுடன் இவரது படமும் உள்ளது. இந்தப் பெருமையை அடைந்த ஒரே ஆதிவாசித் தலைவர் பிர்ஸா முண்டா மட்டும்தான்.

பிர்ஸா இறந்தபோது அவருக்கு வயது 25. கால் நூற்றாண்டுக் காலமே வாழ்ந்த ஒருவன், நூற்றாண்டு கடந்தும் கொண்டாடப்படுகிறான் என்றால், அவன்தானே உண்மையான தலைவன்..?

நன்றி: காமதேனு (03/12/2018), மகாஸ்வேதா தேவி படம்: creativeyatra.com

Friday, December 28, 2018

எல்லாம் ஒரு விளம்பரம்!

ந.வினோத் குமார்
பதிப்பிக்கப்பட்ட தேதி: 25 டிசம்பர் 2015
‘உங்களுக்குப் பியுஷ் பாண்டேவைத் தெரியுமா?', என்று கேட்டால் நம்மில் பலர் தலையை இட வலப்பக்கமாக ஆட்டுவோம். சரி. '90-களில் தூர்தர்ஷனில் அவ்வப்போது ஒளிபரப்பான‌ ‘மிலே சுர் மேரா தும்ஹாரா' என்ற பாடலைக் கேட்டிருக்கிறீர்களா' என்றால், தலையை மேலும் கீழும் ஆட்டுவோம். இந்தியாவில் உள்ள மொழிகளைப் போற்றும் விதமாக உருவான அந்தப் பாடலை எழுதியவர்தான் இந்த பியுஷ் பாண்டே!
90-களில் பிறந்து வளர்ந்தவர்கள் 'டெய்ரி மில்க்' சாக்லேட் சாப்பிட்டுக்கொண்டு கிரிக்கெட் மைதானத்துக்குள் புகுந்து ஒரு பெண் ஆட்டம் போடும் விளம்பரத்தை அனைவரும் சிலாகித்திருப்போம். அதேபோல ராஜஸ்தானில் ஒரே ஒரு வண்டியில் ஊரே செல்ல, அந்த வண்டியின் பின்புறத்தில் 'ஃபெவிகால்' போர்ட் தொங்கும் விளம்பரம், தங்கள் கல்லூரியிலிருந்து பிரியாவிடை பெறும் பேராசிரியருக்கு, அவரின் மாணவர்கள் கடிகாரம் ஒன்றைப் பரிசளிக்கும் 'டைட்டன்' விளம்பரம் எனப் பல விளம்பரங்களை சேனல் மாற்றாமல் நாம் பார்த்து ரசித்திருப்போம் இல்லையா..?
அந்த விளம்பரங்களின் கர்த்தா பியுஷ் பாண்டே. விளம்பர உலகத்துக்கு ‘ஆகில்வி அண்ட் மேதர்' நிறுவனம் ஒரு அடையாளமென்றால், அந்த நிறுவனத்துக்கே அடையாளமாக விளங்கிவருபவர் பியுஷ் பாண்டே. தற்போது அந்த நிறுவனத்தின் இந்தியக் கிளையின் தலைவராக இருக்கிறார்.
கேட்பரிஸ், ஃபெவிகால், ஏசியன் பெயின்ட்ஸ், டைட்டன், வோடஃபோன் (அந்த நாய்க்குட்டி, ஸுஸு விளம்பரங்கள்) உள்ளிட்ட‌ பல 'படா படா' நிறுவனங்களுக்கு 'பளீர், ஜிலீர்' விளம்பரங்களை உருவாக்கிக் கொடுத்தவர், தனது விளம்பரங்களுக்காக சர்வதேச அளவில் 800-க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றவர், விளம்பரங்களில் 'க்ளே அனிமேஷன்' என்ற உத்தியை இந்தியாவில் முதன்முதலில் பயன்படுத்தியவர், இந்திய தபால் துறைக்கான 'சைனேஜ்' (மஞ்சள் நிறத்தில் 'டிக்' வடிவத்தில் உள்ள சின்னம்) உருவாக்கியவர் எனப் பல பெருமைகளுக்கு உரியவர் பியுஷ்.
சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக விளம்பரத் துறையில் தான் பெற்ற அனுபவங்களைத் திரட்டி, 'பாண்டேமோனியம்' என்ற தலைப்பில் சமீபத்தில் புத்தகமாகக் கொண்டுவந்திருக்கிறார். இந்தப் புத்தகத்தை பென்குவின் பதிப்பகக் குழுமம் வெளியிட்டுள்ளது.
அவரின் அனுபவங்களிலிருந்து, விளம்பரத் துறையில் ஈடுபட ஆர்வமுள்ள இளைஞ‌ர்களுக்கு மட்டுமல்லாது, பொதுவாகவே நமது வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்வதற்கான வெற்றிச் சூத்திரங்களையும் படம் பிடித்துக் காட்டுகிறார்.
# நாம் ஒரு துறையில் வெற்றி பெற, நம்மைச் சுற்றி விதவிதமான திறன்களைக் கொண்ட மனிதர்களை இணைத்து நட்புறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
# வாடிக்கையாளரின் திருப்திதான் அவரை நம்மிடம் திரும்பத் திரும்பக் கொண்டுவந்து சேர்க்கும்.
# உங்களுக்குள் இருக்கும் குழந்தையைக் கொன்றுவிடாதீர்கள். அவனோ, அவளோதான் ஜீனியஸ். நீங்கள் அல்ல!
# வெளிநாட்டு விளம்பர நிறுவனங்கள் நுகர்வோரின் மனநிலையைத் தொந்தரவு செய்யும் விதமாக விளம்பரங்களை அமைத்து, அதன் மூலம் பொருட்களையோ சேவைகளையோ வாங்க‌ச் செய்யும். ஆனால், இந்திய விளம்பர நிறுவனங்களோ, நுகர்வோர் மனம் விரும்பும்படியான விளம்பரங்களைச் செய்கின்றன.
# விருதுகளைக் குறி வைத்தே வேலை செய்வது நம்மை நாமே தோற்கடித்துக்கொள்வதற்கு ஒப்பாகும். விருதுகளைத் துரத்தாதீர்கள். நல்ல பணிகளைத் தேடுங்கள்.
இப்படி ஏகப்பட்ட அனுபவத் தெறிப்புகள். தான் கடந்து வந்த பாதையைப் பகிர்ந்துகொள்ளும் முறை அவரின் விளம்பரங்களைப் போலவே மிகவும் எளிமையானதாகவும், மனதைத் தொடும் விதமாகவும் அமைந்திருக்கின்றன. ஆங்கிலத்தில் 'பேண்டிமோனியம்' (pandemonium) என்ற சொல்லுக்கு 'அமளி' என்று அர்த்தம் காட்டுகின்றன அகராதிகள். ‘பாண்டேமோனியம்' (Pandeymonium) எனும் இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது, பலரின் மனதில் ஆனந்த அமளியை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.
நன்றி: தி இந்து (இளமை புதுமை)

Monday, November 12, 2018

வால்டருக்குப் போகட்டும் அந்தக் கோப்பை!

ந.வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 29 ஜூன் 2018

இங்கிலாந்து கால்பந்து வரலாற்றில், 20-ம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களில் ஒரு கறுப்புச் சூரியன் உதயமானது. தனது கால்களின் திறமையால், இளமையில் அது ஒளிவீசியது. நாட்டுக்காக, விளையாட்டைத் துறந்து போரில் ஈடுபட்டது. இளமையிலேயே அஸ்தமித்தது. அந்தச் சூரியன்… வால்டர் டல்!

‘சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம்’ என்று பெருமைகொள்வார்கள் இங்கிலாந்துக்காரர்கள். ஆனால், இங்கிலாந்து நாட்டின் இந்த முதல் கறுப்பினக் கால்பந்துச் சூரியனை இன்றுவரையில் இங்கிலாந்து அங்கீகரிக்காமல் இருக்கிறது. 

‘கிராஃபிக்’ வடிவத்தில் காமெடி

அந்தச் சூரியன் விட்டுச் சென்ற தகிப்பை, ‘தி இல்லஸ்ட்ரேட்டட் ஹிஸ்டரி ஆஃப் ஃபுட்பால்: ஹால் ஆஃப் ஃபேம்’ எனும் புத்தகத்தில் கார்ட்டூன் போட்டுச் சொல்கிறார் டேவிட் ஸ்குவிர்ஸ். ‘தி கார்டியன்’ இதழின் கார்ட்டூனிஸ்ட்டான இவர், எழுதி வரைந்துள்ள இந்தப் புத்தகம் சமீபத்தில் வெளியானது.

 
டீகோ மரடோனா, பீலே, ரொனால்டோ, மெஸ்ஸியைப் போன்று இந்தத் தலைமுறைக்குத் தெரிந்த வீரர்களை மட்டுமல்லாது, சாக்ரடீஸ், ஆண்ட்ரியா பிர்லோ, மரியோ சகால்லோ போன்ற கடந்த தலைமுறை வீரர்களைப் பற்றியும், அலெக்ஸ் ஃபெர்கூஸன் போன்ற கிளப் நிர்வாகிகளைப் பற்றியும் காமெடியாக, கறுப்பு வெள்ளையில் ‘கிராஃபிக்’ புத்தக வடிவத்தில் சொல்லியிருக்கிறார் டேவிட்.

அதிகம் கோல் போடும் அல்லது அதிகம் ரசிகர்களைக் கொண்ட வீரர்களைப் பற்றிப் பேசும் வழக்கமான விளையாட்டு வரலாற்றுப் புத்தகங்கள்போல் அல்லாமல், கோல் கீப்பர்கள், மிட்ஃபீல்ட் ஆட்டக்காரர்கள், டிஃபெண்டர்கள், ஃபார்வேர்டு ஆட்டக்காரர்கள் எனப் பல நிலை வீரர்களைப் பற்றியும் இந்தப் புத்தகம் சுவாரசியமாகப் பேசுகிறது. 

முதல் கறுப்பின வீரர்

பார்படாஸ் நாட்டைச் சேர்ந்த தந்தைக்கும் இங்கிலாந்தின் உள்ள கெண்ட் நகரத்தைச் சேர்ந்த தாய்க்கும் மகனாக 1888 ஏப்ரல் 28 அன்று பிறந்தார் வால்டர் டல். இப்படி, வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்தவர்களை மேற்கத்திய நாடுகளில் ‘கலப்பினத்தவர்கள்’ என்றுஅழைக்கும் வழக்கம் உள்ளது. இங்கிலாந்து கால்பந்து அணியில் இடம்பிடித்த முதல் கறுப்பர், கலப்பினத்தவர் வால்டர் டல்!

தனது 9 வயதில் பெற்றோர்களைப் பறிகொடுத்த வால்டர், லண்டனில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குக்கால்பந்தவிளையாட்டின் மீது ஆர்வம் ஏற்பட்டது. அவரது திறமையைப் பார்த்து ‘டோட்டென்ஹாம் ஹாட்ஸ்பர்’ எனும் கால்பந்து கிளப், வால்டரைத் தங்கள் அணியில் சேர்த்துக்கொண்டது. அந்த கிளப்பில் சில காலம் விளையாடியபிறகு 1911-ல் ‘நார்த்தாம்ப்டன் டவுன்’ கிளப்பில் சேர்ந்து விளையாடத் தொடங்கினார். அங்கிருந்தபோது சுமார் 110 போட்டிகளில் அவர் தனது திறமையை வெளிப்படுத்தினார்.

 
முதல் உலகப் போர் தொடங்கியபோது, கால்பந்தை விட்டுவிட்டு இங்கிலாந்து ராணுவத்தின் ‘மிடில்செக்ஸ் ரெஜிமெண்ட் 17-வது பட்டாலியன்’ படைப் பிரிவில் சேர்ந்தார் வால்டர். அங்கு அவரது தலைமைப் பண்பைப் பார்த்த வெள்ளை அதிகாரிகள், அவரை ‘சர்ஜெண்ட்’ நிலைக்கு உயர்த்தினார்கள். இவ்வாறு, இங்கிலாந்து ராணுவத்தில் அதிகாரியான முதல் கறுப்பினத்தவரும் வால்டர் டல்தான்! 

சூரியன் அஸ்தமித்த நூற்றாண்டு

முதல் உலகப் போரில், தனது தலைமையில் 26 வீரர்கள் கொண்ட குழுவை வழிநடத்தி, ஜெர்மனி ராணுவ முகாம்களுக்குச் சென்று போரிட்டு, 1918-ம் ஆண்டு, மார்ச் 25-ம் தேதி வீர மரணமடைந்தார் வால்டர் டல். ஆனால், எவ்வளவோ தேடியும் அவரது உடலை மீட்க முடியவில்லை. முதல் உலகப் போர் முடிந்த நூறாவது ஆண்டு மட்டுமல்ல, வால்டர் டல் எனும் அந்தக் கால்பந்துச் சூரியன் மறைந்த நூறாவது ஆண்டும் இதுதான்!

போரில் காட்டிய அவரது வீரத்தை அங்கீகரிக்கும் விதமாக, ராணுவத்தின் மூலம் அவருக்கு விருது வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், ‘இறந்தவர்களுக்கு அவ்வாறு விருது வழங்கும் வழக்கமில்லை’ என்று இங்கிலாந்து ராணுவ அமைச்சகம் மறுத்து வந்தது.

ஆனால் 2016-ல், வால்டர் டல்லின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஃபில் வஸிலி எனும் வரலாற்றாசிரியர், ‘வால்டர் டல் போன்ற கறுப்பர்களுக்கு விருது வழங்கக் கூடாது’ என்று அன்றைய வெள்ளை அதிகாரி ஒருவர் கொடுத்த ரகசிய ‘மெமோ’வைக் கண்டு பிடித்தார். அதைச் சாட்சியமாக வைத்து, ‘நிறவெறி காரணமாக, வால்டருக்கு அன்று விருது வழங்கப்படவில்லை’ என்று நிரூபித்தார்.


இதைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே, வால்டருக்கு விருது வழங்கப்பட வேண்டும் என்று குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஆனால், அதற்கேற்றபடி சட்டத்தைத் திருத்த, இங்கிலாந்து அரசு முன் வருவதாக இல்லை.

இந்நிலையில், இந்த ஆண்டு உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் பங்கேற்றிருக்கும் இங்கிலாந்து அணி, ஒரு விஷயம் செய்யலாம். அதாவது, இந்த முறை ‘ஃபிஃபா’ கோப்பையை இங்கிலாந்து வென்றால், அணி வீரர்கள் அதை வால்டருக்குச் சமர்ப்பிக்கலாம். ஏனென்றால், விருது கொடுப்பதைவிட, வால்டருக்குச் செய்யும் மிகச் சிறந்த மரியாதை அதுவே!

நன்றி: இந்து தமிழ் நாளிதழ்

Tuesday, October 30, 2018

ஆதிக்கத்தை வென்ற அன்னா பர்ன்ஸ்!

ந.வினோத் குமார் 

அவளுக்கு வயது 18. பத்துக் குழந்தைகள் உள்ள குடும்பத்தில் ஏழாவதாகப் பிறந்தவள். அதனால் அவள் ‘மிடில் சிஸ்டர்’ என்று அழைக்கப்படுகிறாள். பிரெஞ்சு மொழி வகுப்பில் படிக்கும் அவள், எப்போதும் சாலையில் நடந்து செல்லும்போது, 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தகங்களைப் படித்துக்கொண்டே செல்வாள். அது ஏன் 19-ம் நூற்றாண்டு? ஏனென்றால் அவளுக்கு 20-ம் நூற்றாண்டு, விரும்பத்தக்கதாக இல்லை.  

அன்றும் அப்படித்தான். பிரெஞ்சு வகுப்பை முடித்துவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, சர் வால்டர் ஸ்காட் எழுதிய ‘இவான்ஹோ’ நாவலைப் படித்துக்கொண்டே நடந்து போகிறாள். அப்போது, ஒரு வெள்ளை நிற வேன், அவள் அருகில் வந்து நிற்கிறது. ‘லிஃப்ட் வேண்டுமா?’ என்று கேட்கிறார் வேனுக்குள் இருந்தவர். கேட்டவர், 41 வயது ஆண். அவள் மறுக்கிறாள்.  

வெள்ளை நிற வேனில் வந்ததால் அவருக்கு ‘மில்க்மேன்’ என்று பெயரிடுகிறாள் அவள். அடுத்த சில நாட்களில், அவள் ‘ஜாகிங்’ சென்றுகொண்டிருக்கும்போது, இரண்டாவது முறையாக அவளைச் சந்திக்கிறார் ‘மில்க்மேன்’. அவர்கள் இருவரும் சாலையில் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்த சிலர், அவர்கள் இருவரும் காதலர்கள் என்று முடிவு கட்டுகிறார்கள். 

இதனால் அவளது வீட்டில் பிரச்சினை ஏற்படுகிறது. உண்மையில், அவள், ‘மில்க்மேனை’ காதலிக்கவில்லை. மாறாக, தனக்கு அறிமுகமாகி ஒரு வருடமேயான ‘இவனை நாம் ‘பாய் ஃபிரெண்ட்’ ஆக வைத்துக்கொள்ளலாமா..?’ என்று யோசிக்கச் செய்கிற ‘மேபீ – பாய் ஃபிரெண்ட்’டை காதலிக்கிறாள். அது காதல்கூட இல்லை. சும்மா ஒரு ‘டேட்டிங்’. அவ்வளவுதான். 

அவள் வேறொருவனைக் காதலிப்பது ‘மில்க்மேனு’க்குத் தெரிந்துவிடுகிறது. ‘என்னுடைய ஆசைக்கு அடிபணிந்து விடு’ என்று அவளைத் திரும்பத் திரும்ப ‘ஸ்டாக்கிங்’ செய்கிறார் அவர். அவள் மறுத்துவிடுகிறாள். ‘இதற்கு நீ சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால், உன் ‘மேபீ – பாய் ஃபிரெண்ட்’டைக் கொன்றுவிடுவேன்’ என்று மிரட்டுகிறார். அவருக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது? ஏனென்றால், அவர் அந்த தேசத்தின் அரசை எதிர்க்கும் மிக முக்கியமான தீவிரவாதக் கூட்டத்தில் மிக முக்கியப் பொறுப்பில் இருப்பவர். அந்த மாவட்டத்தில் அவர்தான் பெரிய ஆள்!  

அவரின் அந்தப் பயமுறுத்தலுக்கு ‘மிடில் சிஸ்டர்’ ஆற்றிய எதிர்வினை என்ன? அவளது ‘மேபீ – பாய் ஃபிரெண்ட்’ காப்பாற்றப்பட்டானா? இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது அன்னா பர்ன்ஸ் எழுதிய ‘மில்க்மேன்’ நாவல். 2018-ம் ஆண்டுக்கான புக்கர் பரிசை, இந்த நாவல் கடந்த 16-ம் தேதி பெற்றது!

 
*** 
இந்த நாவலில் எந்தக் கதாப்பாத்திரத்துக்கும் பெயர்கள் இல்லை. அவர்களின் உறவு முறை, அவர்கள் செய்யும் வேலை போன்றவற்றின் அடிப்படையில், அந்த உறவு முறையும், செய்யும் வேலையுமே பெயர்களாக வழங்கப்பட்டுள்ளன. இதனால், நாவலைப் படிக்கும்போது, யார், எதைச் சொல்கிறார்கள் என்ற குழப்பமும் அயற்சியும் ஏற்படுகிறது. எனவே விமர்சகர்கள் இதை, ‘உங்களைச் சோதிக்கும் நாவல்’ என்று சொல்கிறார்கள். ஆம்… நம் பொறுமையை ஏகத்துக்கும் சோதிக்கிறது! 

நாவல் முழுவதும், ‘மிடில் சிஸ்டர்’ எனும் நாயகி, தன் கதையைச் சொல்வது போல அமைந்திருக்கிறது. கதையில், வடக்கு ஐயர்லாந்து சிவில் போர், சர்வதேச அளவிலான பெண்ணியக் குழு உருவாதல், தலிபான்களின் அடக்குமுறை, ஸ்டாலின் கால ரஷ்யாவில் இருந்த நிலை, இன்றைப் பெரும் பரபரப்பைக் கிளப்பி வரும் ‘மீ டூ’ போன்ற பல அரசியல் நிகழ்வுகளின் சாயல் ஆங்காங்கே தென்படுகின்றன.  

புகழ்பெற்ற ஐயர்லாந்து நாடகாசிரியர் சாமுவேல் பெக்கெட்டின் எழுத்துச் சாயல், இந்த நாவலில் தெரிவதால், இதை ‘பெக்கெட்டியன்’ நாவல் என்றும் கருதுகிறார்கள் விமர்சகர்கள். ஆனால், அன்னாவோ, ‘இந்த நாவலை எழுதி முடிக்கும் வரை, நான் பெக்கெட்டைப் படித்ததே இல்லை’ என்கிறார். 

*** 
அன்னா பர்ன்ஸ், ஐக்கிய ராஜ்ஜியத்துக்கு உட்பட்ட வடக்கு ஐயர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளர். இதுவரை இரண்டு நாவல்களும், ஒரு குறுநாவலும் எழுதியிருக்கிறார். ‘மில்க்மேன்’, இவரது நான்காவது படைப்பாகும்.


இந்த நாவல், வடக்கு ஐயர்லாந்தின் தலைநகரமான பெல்ஃபாஸ்ட் நகரத்தில், 1970-களில் நடப்பதாகச் சித்தரித்துள்ளார் அன்னா. அந்தக் காலகட்டம் வடக்கு ஐயர்லாந்துக்கு மிகவும் சோதனையான காலகட்டம். ‘தி ட்ரபிள்ஸ்’ என்று அழைக்கப்பட்ட வடக்கு ஐலர்லாந்து சிவில் போர், அப்போதுதான் உச்சத்தில் இருந்தது.  

புரொட்டெஸ்டண்ட் மதப் பிரிவினரைப் பெரும்பான்மையினராகவும், கத்தோலிக்கர்களைச் சிறுபான்மையினராகவும் கொண்ட நாடு, வடக்கு ஐயர்லாந்து. சிறுபான்மையினருக்கு எதிராகத் தொடர்ந்து பல அநீதிகள் நடைபெற்று வந்தன. அதற்கு எதிராக, 1969-களின் மத்தியில், கத்தோலிக்கர்கள் போராட்டங்கள் நடத்த ஆரம்பித்தனர். புரொட்டெஸ்டண்ட்கள் அதை ஒடுக்க ஆரம்பிக்க, தொடங்கியது ‘தி ட்ரபிள்ஸ்’ சிவில் யுத்தம்.  

நாட்டின் அரசியலமைப்பு, இந்த யுத்தத்தின் மிக முக்கியமான அம்சமாக இருந்தது. புரொட்டெஸ்டண்ட்களோ, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஐக்கிய ராஜ்ஜியத்துடனேயே, வடக்கு ஐயர்லாந்து இணைந்திருக்க வேண்டுமென்று கூக்குரலிட்டார்கள். கத்தோலிக்கர்களோ, ஒருங்கிணைந்த ஐயர்லாந்துக் குடியரசுடன், வடக்கு ஐயர்லாந்து இணைய வேண்டும் என்றனர்.  

இந்த யுத்தம் அடுத்த சுமார் 30 ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது. இறுதியாக 1998-ம் ஆண்டு, ‘புனித வெள்ளி உடன்படிக்கை’ மூலம், அந்தப் போர் முடிவுக்கு வந்தது. அந்த உடன்படிக்கையின்படி, ஐக்கிய ராஜ்ஜியத்தின் நாடாளுமன்றத்தின் பொறுப்புகள், வடக்கு ஐயர்லாந்துக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. இன்று வரையில், அந்த உடன்படிக்கையின் அடிப்படையிலேயே வடக்கு ஐயர்லாந்தில் ஆட்சி நடைபெற்று வருகிறது.  

இப்படி ஒரு யுத்தப் பின்னணியைக் கொண்ட தேசத்திலிருந்து வந்த நாவலாசிரியர் அன்னா பர்ன்ஸ், புக்கர் பரிசை வென்ற முதல் ஐயர்லாந்து நாட்டு எழுத்தாளர் எனும் பெருமையைப் பெற்றிருக்கிறார்.  

புக்கர் பரிசு, அடிப்படையில், இங்கிலாந்து, அயர்லாந்து மற்றும் காமென்வெல்த் நாடுகளைச் சேர்ந்த ஆங்கில எழுத்தாளர்களுக்குத்தான் என்று இருந்தது. பிறகு, விதிகள் தளர்த்தப்பட்டு, 2014-ல்தான் அமெரிக்க எழுத்தாளர்களையே இதில் சேர்க்க ஆரம்பித்தார்கள். இந்த ஆண்டு, இந்த விருது தொடங்கப்பட்ட 50-வது ஆண்டு. ஆனால், கடந்த 49 வருடங்களில் வடக்கு ஐயர்லாந்தில் இருந்து, ஒரு எழுத்தாளருக்குக்கூட இந்த விருது போய்ச் சேரவில்லை. அந்த விருது, முதன்முதலில் அந்த நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்குப் போய்ச் சேர்ந்திருப்பது மட்டுமல்லாமல், இதுவரையில் இந்தப் பரிசுக்கான போட்டியில் இங்கிலாந்து எழுத்தாளர்கள் செலுத்தி வந்த ஆதிக்கமும் முடிவுக்கு வந்திருப்பதால், அன்னா பர்ன்ஸ் பெற்ற வெற்றி கொண்டாடப்பட வேண்டியதாகிறது!  

ஆ… சொல்ல மறந்துவிட்டோமே…. அன்னா பர்ன்ஸ், ஒரு கத்தோலிக்கர்!

நன்றி: காமதேனு (29/10/2018 - 05/11/2018)

Monday, October 15, 2018

துணிந்து நின்றாய் பெண்ணே!

ந.வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 14 அக்டோபர் 2018 

முதலில் ஹாலிவுட், பிறகு நோபல் இலக்கியப் பரிசுக் குழு, பின்னர் அமெரிக்க நீதிமன்றம், தொடர்ந்து பாலிவுட், அதைப் பின்பற்றி இந்தியப் பத்திரிகை, எழுத்துத் துறை என்று நீண்டு இப்போது கோலிவுட் வரை வந்து நிற்கிறது ‘மீ டூ’ (#MeToo). அதனால்தான், இது ‘மீ டூ’க்களின் காலமாக இருக்கிறது!

‘எந்த ஒரு வன்முறையிலும் முதலில் சீரழிக்கப்படுவது பெண்ணும் பேருந்தும்தான்’ என்பார்கள். வன்முறைக் காலத்தில் மட்டுமல்ல. அமைதிக் காலத்திலும், பெண்கள் ஆகப் பெரிய வன்முறைக்கு ஆளாகி வருகிறார்கள்.

2017 அக்டோபரில்தான் முதன்முறையாக ‘மீ டூ’ பிரசாரம் தொடங்கியது. இந்த ஆண்டு அக்டோபரில் ஓராண்டை நிறைவு செய்வதற்குள், இந்தியாவில் ‘மீ டூ’ பூகம்பம் வெடிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்தத் தருணத்தில், ‘மீ டூ’ பிரசாரத்தின் தொடக்கப்புள்ளியாக இருக்கும் ஹாலிவுட் நடிகை ரோஸ் மெக்கோவன், எழுதிய ‘பிரேவ்’ புத்தகம் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. அது பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களுக்கு மட்டுமல்லாது, மொத்த மானுடத்துக்குமே பல படிப்பினைகளைத் தருவதாக அமைந்துள்ளது.

  
கடவுளின் பெயரில் களியாட்டம் 

பிறந்த வீடுகளில், விரும்பி வந்த துறைகளில், ‘உன் உயர்வுக்கு நான் பொறுப்பு’ என்று கூட நின்றவர்களாலேயே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும்போது, பெண் முதல்முறையாக அவமதிக்கப்படுகிறாள். ‘உனக்கு நேர்ந்த துயரத்துக்கு நீயேதான் காரணம்’ என்று குற்றம்சாட்டும்போது, பெண் இரண்டாவது முறையாக அவமதிக்கப்படுகிறாள்.

ரோஸ் மெக்கோவனுக்கும் அதுதான் நேர்ந்தது. இத்தாலி நாட்டில் உள்ள கிராமம் ஒன்றில், ‘சில்ட்ரன் ஆஃப் காட்’ எனும் அமைப்பு நடத்தும் விடுதியில் பிறந்தார் ரோஸ். அவருடன் பிறந்தவர்கள் 5 பேர். அவரது பெற்றோரும் அங்குதான் மதப் பிரசாரம் செய்து பணியாற்றி வந்தார்கள். சிறு வயது முதலே இறை நம்பிக்கையற்றவராக ரோஸ் வளர்ந்தார். அதனால், அங்கு பணியாற்றிய ஊழியர்களால் உடல் ரீதியான தண்டனைகளுக்கு ஆளானார்.

அங்கு அவரைப் போன்ற சிறுவர்களுக்குப் பாலியல் ரீதியான தொந்தரவுகள் கொடுக்கப்பட்டு வந்தன. அதை எதிர்த்த சிலர், மர்மமான முறையில் கொல்லப்பட்டார்கள். இதனால், தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் அந்தத் துன்பம் நேரலாம் என்று அஞ்சிய ரோஸின் பெற்றோர், குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு அங்கிருந்து தப்பித்து அமெரிக்காவில் குடியேறினர்.

அமெரிக்கா காட்டிய வறுமை 

அமெரிக்காவுக்கு முதன்முறையாக விமானத்தில் வந்தபோதுதான், உலகில் நிலைக் கண்ணாடி என்ற விஷயம் இருப்பது ரோஸுக்குத் தெரிய வந்தது. கண்ணாடியில் முதன்முறையாகத் தன் முகத்தைப் பார்த்தவருக்கு எந்த உணர்வும் தோன்றவில்லை. காரணம், அவருக்கு அப்போது ‘அழகு’ என்றால் என்ன என்பதே தெரிந்திருக்கவில்லை. அப்போதுதான் அவர் பதின்பருவத்தில் காலடி எடுத்து வைத்திருந்தார்.

அமெரிக்கா என்பது பணக்கார நாடு என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில், அது பணம் படைத்தவர்களுக்குத்தான் அது பணக்கார நாடு. மற்றபடி, நிலையான வேலை இல்லாமல், முறையான வருமானம் இல்லாமல், ஒரு வேளை மட்டும் கிடைக்கக் கூடியதை உண்டுவிட்டு, நடைபாதைகளிலும் கல்லறைத் தோட்டங்களிலும் படுத்துக் கிடப்பவர்கள் நிறையப் பேர்.

அமெரிக்காவில், ரோஸின் தந்தை தொடங்கிய மதப் பிரசார அமைப்புக்குச் சரியான கூட்டம் இல்லை. அதனால் போதிய வருமானம் இல்லை. இதன் காரணமாக, வீட்டில் தினமும் சச்சரவுகள் ஏற்பட்டன. பெற்றோர்கள் விவாகரத்துப் பெற்றார்கள். ரோஸும் அவரது உடன்பிறந்தவர்களும் தனித்துவிடப்பட்டார்கள். காலப் போக்கில் அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசை நோக்கிப் போனார்கள். ரோஸ், போதைப் பொருளுக்கு அடிமையானார். மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு பாலியல் தொல்லைகள் ஏற்பட, அங்கிருந்து தப்பித்தார். இடுகாட்டிலும் திரையரங்கிலும் சொற்ப சம்பளத்துக்கு சில காலம் வேலை பார்த்தார்.

சினிமா தந்த சிக்கல்கள் 

திரையரங்கு ஒன்றில் ரோஸ் பணியாற்றிபோது, ‘ஹூ ஃபிரேம்ட் ரோஜர் ரேப்பிட்’ மற்றும் ‘வொர்க்கிங் கேர்ள்’ ஆகிய இரண்டு படங்கள் அவரை மிகவும் பாதித்தன. ஹாலிவுட்டில் கால் பதிக்கும் ஆசை அவருக்குத் துளிர்விட்டது. போதாக்குறைக்கு, அவர் மிகவும் அழகாக இருந்தார். நீண்ட கூந்தலும் இருந்தது.

அப்போது ரோஸ், தன் தந்தையுடன் வாடகை வீடு ஒன்றில் தங்கியிருந்தார். அந்த வீட்டுக்கு வாடகை கட்ட முடியாமல் திணறிக்கொண்டிருந்தபோது, படம் ஒன்றில் ‘எக்ஸ்ட்ரா’வாக வந்து செல்ல ஒரு வாய்ப்புக் கிடைத்தது. ஒரு நாளைக்குச் சுமார் 2 ஆயிரம் ரூபாய் கூலி என்பதால், ‘கிளாஸ் ஆஃப் 1999’ என்ற படத்தில் நடித்தார் ரோஸ். அதுதான் அவர் திரையில் தோன்றிய முதல் படம். அதற்குப் பிறகு, ‘டூம் ஜெனரேஷன்’, ‘ஸ்கிரீம்’ என அடுத்தடுத்துப் பட வாய்ப்புகள் வந்தன.

‘ஸ்கிரீம்’ படத்தைத் தயாரித்த ‘மிராமாக்ஸ்’ நிறுவனம்தான் 1997-ல் ‘ஃபேண்டம்ஸ்’ என்ற திரைப்படத்தையும் தயாரித்தது. அதில் நடித்துக் கொண்டிருந்த போதுதான், மிராமாஸ் உரிமையாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீனால் பாலியல் வன்கொடுமைக்கு ரோஸ் ஆளாக்கப்பட்டார். அதைப் பற்றி, அந்த நிறுவனத்தின் வழக்கறிஞர், நிர்வாகிகள் எனப் பலரிடம் முறையிட்டும் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ‘ஹாலிவுட்டில் அப்படித்தான் இருக்கும். பெண் என்றால் இவை அனைத்தையும் சந்தித்தே தீர வேண்டும்’ என்று ரோஸுக்குச் சொல்லப்பட்டது. அடுத்த 20 வருடங்களுக்கு அந்தத் துயரத்தைத் தன் மனதில் மறைத்து வைத்திருந்தார்.

இதற்கு இடையில், சில காதல்கள், சில திருமணங்கள், சில பிரிவுகளும் ரோஸ் வாழ்வில் அரங்கேறின. அந்தப் பிரிவுகள், தோல்விகள், அவை தந்த வேதனைகள் அனைத்துக்கும் ‘நீதான் ரோஸ் காரணம்’ என்று சொல்லப்பட்டதை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

  
தொடங்கியது ‘மீ டூ’ பூகம்பம்!  

இந்நிலையில் 2016-ல் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது டொனால்ட் ட்ரம்புக்கு எதிராகப் பெண்கள் பலர், ட்ரம்ப் தங்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினார் என்று வாக்குமூலம் கொடுத்தார்கள். அதையொட்டி, தனக்கு நேர்ந்த வன்கொடுமைகளை ரோஸ், ட்விட்டரில் பதிய, ‘நியூயார்க் டைம்ஸ்’ இதழ் புலனாய்வு மேற்கொண்டது. அப்படித்தான் வெளியாகின ஹார்வி வெய்ன்ஸ்டீனின் லீலைகள். ரோஸ் கொடுத்த துணிச்சலால், வெய்ன்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட இதர பெண்களும் வாக்குமூலம் கொடுக்க முன் வந்தார்கள். தொடங்கியது ‘மீ டூ!’. இதனால் ‘2017-ம் ஆண்டின் நபர்’ என்று ‘டைம்’ இதழால் கவுரவிக்கப்பட்டார். 

தான் சந்தித்த கசப்புகளை ‘பிரேவ்’ என்ற தலைப்பில் நூலாக எழுதியிருக்கும் ரோஸ், தன் புத்தகத்தில் ஹார்வி வெய்ன்ஸ்டீனின் பெயரைக் குறிப்பிடாமல், அவரை ‘மான்ஸ்டர்’ (பூதம்) என்றே குறிப்பிடுகிறார். எனில், அவர் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கக்கூடும்?

பெண்ணுக்கு, கூந்தல் என்பது அழகின் ஓர் அங்கம். ‘மீ டூ’ பிரசாரம் தொடங்கிய பிறகு, தனது கூந்தலை வெட்டி, மொட்டை அடித்துக்கொண்டார் ரோஸ். அதற்கு அவர் சொன்ன காரணம்: “நீண்ட கூந்தல் இருந்தால், நீ செக்ஸியாகத் தெரிவாய் என்றும், செக்ஸியாகத் தெரிந்தால்தான் எனக்குப் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் எண்ணம் என்னுள் இந்தச் சமூகத்தால் திணிக்கப்பட்டது. அதிலிருந்து வெளியேறவே நான் மொட்டையடித்துக்கொண்டேன். என் சுதந்திரத்தை உணர்ந்தேன்!”

‘பெண்களை எப்படி நடத்த வேண்டும் என்று உங்கள் மகன்களுக்குச் சொல்லிக்கொடுங்கள்’ என்று சொல்லும் ரோஸ், பெண்களுக்குச் சொல்லும் அறிவுரை இது: ‘எப்போதும் துணிச்சலுடன் இருங்கள். நீங்கள் விரும்பாத விஷயங்கள், உங்கள் மீது திணிக்கப்பட்டால் ‘முடியாது’ என்று சொல்லப் பழகுங்கள்!’

நன்றி: இந்து தமிழ் - பெண் இன்று (சில மாறுதல்களுடன்),  (ரோஸ் படம்) time.com

Monday, October 1, 2018

சமூகத்தை விசாரிக்கும் கொலைகள்!

ந.வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 18 டிசம்பர் 2016

வாழ்க்கையின் மீது நம்பிக்கையற்றும், வாழ்க்கை தந்த கசப்புகளாலும் ஒருவர் அடைந்த வெறுமையால் இன்னொருவரைக் கொல்ல முடியுமா?

முடியும் என்கிறது ‘இன் கோல்ட் ப்ளட்’ எனும் ஆங்கில நாவல். 1959-ம் ஆண்டு அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் ஹோல்காம்ப் எனும் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்டார்கள். அந்தக் கொலைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து ட்ரூமன் கபோட் எழுதியதுதான் இந்த நாவல்.


நாவலாக வருவதற்கு முன், இது ‘தி நியூயார்க்கர்’ பத்திரிகையில் 1965-ம் ஆண்டு நான்கு பாகங்கள் கொண்ட தொடராக வெளியானது. பின்னர் ரேண்டம் ஹவுஸ் பதிப்பகத்தால் 1966-ம் ஆண்டு புத்தகமாக வெளியிடப்பட்டது.

நாவலின் சிறப்பம்சம் என்னவென்றால், அந்தக் கொலைகளைச் செய்த இளைஞர்கள் ரிச்சர்ட் டிக் ஹிக்காக், பெர்ரி ஸ்மித் ஆகியோரின் வாழ்க்கையை மிக ஆழமாக கபோட் ஆராய்ந்திருப்பதுதான். இரண்டு பேருமே வேறு வேறு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அவர்களுக்கு ஏற்படுகிற பிரச்சினை ஒன்றுதான். தத்தமது அடையாளத்தை இழப்பதுதான் அது!

தங்கள் குடும்பத்தில் தங்களுக்கு நேர்ந்த கசப்புகளால் காயமடைந்தவர்கள் அவர்கள். வீட்டை விட்டு வெளியேறியவர்கள். இருவருமே தங்களின் திறன்களை நிரூபிக்கத் தேவையான வாய்ப்புகள் கிடைக்கப் பெறாதவர்கள். பெண்களால் போஷிக்கப்பட்டவர்கள். குற்றம் புரிந்தவர்கள். சிறை சென்றவர்கள்.

இப்படியானவர்கள் எந்த ஒரு காரணமும் இல்லாமல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரைக் கொல்வது ஆச்சர்யப்படத்தக்க விஷய மல்ல. ‘ஆளுமைச் சிதைவு’ உள்ள யாரும் ஒரு கட்டத்தில் அந்த இளைஞர்களின் நிலைக்குத்தான் தள்ளப்படுவார்கள். அவர்களைச் சிறையில் வைத்துத் தண்டிப்பதைவிட, மனநல மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும். ஆனால், நாம் ஏற்படுத்தியிருக்கும் சட்டங்கள் அதற்கு ஏற்றவை அல்ல, என்கிறார் கபோட். இப்படிச் சொல்வதன் வாயிலாக, சமூகத்தையும் அவர் இந்தக் குற்றத்தின் பின்னணியில் கொண்டுவருகிறார்.


சட்டங்கள் பற்றிப் பேசுகிற இந்த நாவல், மரண தண்டனை குறித்தும் பேசுகிறது. நாவலின் ஓரிடத்தில் ரிச்சர்ட் டிக் ஹிக்காக் இப்படிச் சொல்வான்: “மரண தண்டனை என்பது ஒரு பழிவாங்கல்தான். நான் தூக்கிலிடப்படாத வரை, அந்தப் பழிவாங்கல் தேவை என்றுதான் நானும் சொல்வேன்”.  இன்னொரு பக்கம், பெர்ரி ஸ்மித் இப்படிச் சொல்வான்: “நான் செய்த குற்றத்துக்காக மன்னிப்புக் கேட்பது முறையாகாது. அது அர்த்தமற்றது. ஆனாலும் நான் மன்னிப்புக் கேட்கிறேன்”.

மரண தண்டனை குறித்து அதிகளவில் உரையாடல்கள் நடைபெறும் இந்தக் காலகட்டத்தில், நாம் மேற்கண்ட இரண்டு பேரின் நிலைகளிலிருந்தும் சிந்தித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

நன்றி: இந்து தமிழ், (கபோட் படம்:  nypost.com)