Sunday, November 8, 2015

மூலதனம் @ 21ம் நூற்றாண்டு!

ந.வினோத் குமார்

'சமூகப் பாகுபாடுகள் என்பது பொது பயன்பாட்டின் அடிப்படையில் இருக்க வேண்டும்'!

மூலதனம் மற்றும் முதலாளித்துவம் குறித்த ஒரு புத்தகத்தை, பிரஞ்சுப் புரட்சியின் அடிப்படையான‌ 'மனிதர்கள் மற்றும் குடிமக்களின் உரிமைகள் சாற்றுரை'யின் வரிகளைக் கொண்டு தொடங்குவது ஓர் அழகிய முரண்.

'கேபிட்டல் இன் தி ட்வென்டி ஃபர்ஸ்ட் செஞ்சுரி' (Capital in the Twenty- First Century) என்ற தலைப்பில் அமைந்த அந்தப் புத்தகம் முழுக்க முழுக்கப் பேசும் விஷயம் அரசியல் பொருளாதாரம். எனவே, அதன் ஆசிரியர் தாமஸ் பிக்கெட்டி, மேற்கண்ட வரிகளைப் பயன்படுத்தியிருக்கலாம்.

'ராக்ஸ்டார் எகனாமிஸ்ட்'! இப்படித்தான் அவரை அடையாளப்படுத்துகிறது லண்டனில் இருந்து வெளிவரும் பத்திரிகையான 'தி கார்டியன்'.

ஓரளவு அது உண்மையும் கூட! இத்தனை ஆண்டுகளாக 'தாமஸ் பிக்கெட்டி யார்' என்று கேட்டிருந்தால் அவரது பக்கத்து வீட்டாருக்குக் கூடத் தெரிந்திருக்காது. ஆனால் இந்த ஒரே புத்தகத்தின் மூலம் அவர் உலக அளவில் பிரபலமாகிவிட்டார். அப்படி என்னதான் இருக்கிறது அந்தப் புத்தகத்தில்?

 
ஒரு நாட்டின் பொருளாதாரத்துக்கு மூலதனம் என்பது மிகவும் அவசியம். அந்த மூலதனத்தில் இருந்து கிடைக்கும் லாபத்தை அதன் உரிமையாளருக்கும், லாபம் கிடைக்க உழைத்த பாட்டாளிகளுக்கும் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுகிறது என்பதில் ஏற்படுகிறது 'வருவாய் ஏற்றத்தாழ்வு'. இது சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளுக்கும் மூலாதாரமாக இருக்கிறது.

பாட்டாளிகளுக்கு குறைவாக வழங்கி, அதிகளவு பங்கை மூலதனத்தின் உரிமையாளர் எடுத்துக்கொள்கிறபோது அவரிடம் செல்வம் மேலும் மேலும் கூடிக்கொண்டே போகிறது. இவ்வாறு பல முதலாளிகளின் மூலதன வளர்ச்சி, ஒரு கட்டத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் காட்டிலும் அதிகமாகும்போது, பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக மாறுகிறார்கள். ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகிறார்கள்.

முதலாளிகளிடம் சேரும் இந்த செல்வத்தைக் கட்டுப்படுத்த இருபதாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட மாபெரும் கருவிதான் வரி என்று சொல்லும் பிக்கெட்டி, காலம் செல்லச் செல்ல அந்த வரி ஒவ்வொரு நாட்டிலும் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது, அதன் மூலம் தங்களின் செல்வத்தைப் பதுக்க எப்படி சில நாடுகள் அடையாளம் காணப்பட்டன, தனியாரிடம் வளரும் செல்வத்தைக் கட்டுப்படுத்த முடியுமா, 21ம் நூற்றாண்டில் மூலதனத்தின் பங்களிப்பு எப்படி இருக்கும் என்று பல கேள்விகளை எழுப்பி அதற்கு விடைகாண முயற்சிக்கிறார்.

பாரிஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் கல்லூரியில் பொருளாதார பேராசிரியராகப் பணியாற்றும் பிக்கெட்டியின், சுமார் 15 ஆண்டுகால ஆய்வின் விளைவாக இந்தப் புத்தகம் தோன்றியிருக்கிறது.

பொதுவாகவே, பொருளாதாரம் தொடர்பான புத்தகங்கள் என்றால் வறட்சியாக இருக்கும் என்பது பலரின் எண்ணம். ஆனால் இந்தப் புத்தகம் ஒரு விதிவிலக்கு! காரணம், பொருளாதாரத்தில் 'பணம்' என்பதன் பங்கு குறித்து ஜேன் ஆஸ்டன், ஹோனர் து பால்சாக் போன்ற இலக்கியவாதிகளின் படைப்புகளில் 'பணம்' என்ற விஷயம் எவ்வாறு சித்திரிக்கப்பட்டது என்பதை விலாவரியாகச் சொல்கிறார்.

பிக்கெட்டிக்கு இத்தகைய இலக்கிய வாசிப்பு இருந்ததாலோ என்னவோ, மிகக் கடினமான விஷயங்களைக் கூட சிறுகதை ஒன்றை சொல்லிச் செல்வது போல மிக லாவகமாகப் புரிய வைத்துவிடுகிறார்.

இதன் காரணமாகத்தான் இந்தப் புத்தகத்தை விமர்சனம் செய்த 'தி கார்டியன்' பத்திரிகை, 'இந்தப் புத்தகம் 'பிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே' புத்தகத்தை விட அதிகமாக விற்பனையாகிறது' என்று சுவாரஸ்யமாகச் சொல்கிறது.

அதே நேரத்தில், அளவில் மிகப்பெரிய புத்தகங்களை நகைச்சுவையாகக் குறிப்பிட ஆங்கிலத்தில் 'டோம்'(tome) என்ற ஒரு வார்த்தை உண்டு. அதைக் கொண்டுதான் இந்தப் புத்தகத்தை 'கார்டியன்' மதிப்பீடு செய்கிறது. இது உண்மை என்றாலும் கூட (இந்தப் புத்தகம் சுமார் 700 பக்கங்களைக் கொண்டது) பிக்கெட்டி ஒரு பிரெஞ்சுக்காரர் என்பதால் அந்தப் பத்திரிகை அவ்வாறு விமர்சனம் செய்திருக்கலாம். பிரான்ஸ் நாட்டில் ஒரு பகுதியினர் தவளைக் கறி சாப்பிடுபவர்கள் என்பதால் ஒட்டுமொத்தமாகவே பிரெஞ்சுக்காரர்கள் என்றால் ஆங்கிலேயர்களுக்கு சற்று இளக்காரம்தான்!

கடந்த ஆண்டு வெளியான இந்தப் புத்தகம் பெரிய அளவில் பொருளாதார நிபுணர்கள் மத்தியில் பேசப்படுகிறது. மேலும், ஜோசப் ஸ்டிக்லிட்ஸ், ராபர்ட் சோலோ, பால் க்ருக்மோன் போன்ற பொருளாதார அறிஞர்களின் வரிசையிலும் வைக்கப்படுகிறார். காரணம், தாமஸ் பிக்கெட்டியும் முன்னவர்களைப் போலவே 'ஏற்றத்தாழ்வுகள்' குறித்து ஆய்வு செய்துள்ளார்.
 
இதற்காக அவர் 19 மற்றும் 20ம் நூற்றாண்டுகளின் 20 நாடுகளின் நிலம், வாடகை பயன்பாடுகள், வரி விதிப்பு முறைகள், பொருளாதார வளர்ச்சி ஆய்வுகள் உள்ளிட்ட விஷயங்களைக் கருத்தில் கொண்டு ஆய்வு செய்துள்ளார். இவ்வளவு பெரிய ஆய்வுக்காக இன்னும் சில ஆண்டுகளில் அவருக்கு நோபல் பரிசு கிடைத்தாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த இடத்தில் தனது சாதனைகளுக்காக வழங்கப்பட இருந்த பிரான்ஸ் அரசின் உயரிய விருதான 'லிஜியன் ஆஃப் ஹானர்' விருதை மறுத்திருக்கிறார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

அதற்கு அவர் சொன்ன காரணம், 'யார் போற்றுதலுக்கு உரியவர் என்பதை அரசு முடிவு செய்யக் கூடாது!' என்பதுதான்.

பால்சாக்கின் 'லு பெர் கோரியோட்' நாவலில் வாட்ரின் எனும் கதாபாத்திரம் சட்டம் படிக்கும் மாணவனான ரஸ்டிக்னாக் என்பவனிடம் 'முன்னோர் சேர்த்து வைத்த சொத்துகள் கொண்டு வாழும் சுகமான வாழ்க்கையை விட உன் உழைப்பால் சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு என்னவகையான வாழ்க்கையை வாழ முடியும் என்று நீ நினைக்கிறாய்?' என்று கேள்வி எழுப்பும்.

அந்தக் கேள்விக்கு 'வருவாய் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் போன்றவற்றை கல்வி அறிவு பெறுவதால் மட்டுமே சமாளிக்க முடியும்' என்று பதில் சொல்லும் பிக்கெட்டி, புத்தகத்தின் ஓரிடத்தில் இப்படிச் சொல்கிறார்: 'மூலதனம் ஒருபோதும் அமைதியாக இருக்காது!'.

அதோடு இன்னொன்றையும் சேர்த்துக்கொள்ளலாம்... முதலாளித்துவமும்!