Friday, September 30, 2016

DR.B.R.AMBEDKAR 125 BIRTH ANNIVERSARY SERIES - VI

மனுவின் 'மத'த்துக்கு எதிராக...


ந.வினோத் குமார்

இன்றைய தினத்தில் யாரிடமாவது 'பெண் விடுதலைக்காகப் போராடிய தலைவர்களின் பெயர்களைச் சொல்லுங்கள்?' என்று கேட்டால், 'காந்தி, பாரதியார், பெரியார்' என இப்படிச் சிலரின் பெயர்களை அவர்கள் பரிந்துரைக்கக்கூடும்.

'ஏன், அம்பேத்கர் உங்கள் நினைவுக்கு வரவில்லை?' என்று ஒரு கேள்வியைக் கேட்டால், 'அம்பேத்கர்... ம்ம்ம்... அவர் என்ன செய்தார்?' என்று அவர்கள் நம்மிடம் இன்னொரு எதிர்க் கேள்வியைக் கேட்கக்கூடும்.

அம்பேத்கரின் பெண்ணியச் சிந்தனைகள், பெண்ணியவாதிகளுக்கே தெரியாமல் இருக்கும் அளவுக்குத்தான் இன்றைய 'பெண்ணியம்' இங்கு இருக்கிறது. பெண்ணியவாதிகளுக்கே அம்பேத்கரின் பெண்ணியச் செயல்பாடுகள் பற்றித் தெரியாமல் இருக்கும்போது, மற்றவர்களை நாம் நொந்துகொள்வது நம் தவறுதான்.

'மகாத்மா பூலே, தன் மனைவிக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியது போன்று, அம்பேத்கர் தன் மனைவிக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை' என்பது சில பெண்ணியவாதிகளின் கருத்தாக இருக்கிறது. அப்படியே சிலர், அம்பேத்கரின் பெண்ணியச் சிந்தனைகளை ஏற்றுக்கொண்டாலும், அவற்றை 'தலித் அல்லது மஹர் இனப் பெண்களுக்கானச் செயல்பாடுகளாக' மட்டுமே பார்க்கும் குறுகிய மனப்போக்கும் இருக்கிறது.

இந்தக் கருத்திலிருந்து அவர்கள் வெளியே வர, முதலில் அம்பேத்கரின் வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்க வேண்டும். தன்னுடைய 'பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை' என்ற நூலை தனது மனைவி ரமாபாய்க்கு அர்ப்பணித்ததிலேயே அம்பேத்கர் எவ்வளவு முற்போக்காக இருந்தார் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

அடுத்து அவர்கள், ரமாபாயின் வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்க வேண்டும். 1927-ம் ஆண்டு நடைபெற்ற 'மஹர் சத்தியாகிரக'த்தில் சமையல் ஆளாகப் பணியாற்றியது முதல் மகாராஷ்டிர மாநிலத்தில் இன்றும் ரமாபாயின் வாழ்க்கை குறித்த பாடல் கேசட்டுகள் வெளிவந்து கொண்டிருப்பது வரையிலான விஷயங்களை ஆராய்ந்தால், அவர் எவ்வாறு அம்பேத்கரின் அரசியல் செயல்பாடுகளில் பங்குகொண்டிருந்தார் என்பது தெரிய வரும்.

அது மட்டுமல்ல. பிராமண ஆணாதிக்கத்தை வேரறுக்க அம்பேத்கர் என்ன மாதிரியான விஷயங்களை முன்னெடுத்தார் என்பதையும் அந்தப் பெண்ணியவாதிகள் தெரிந்துகொள்ள வேண்டும்.

இந்த விஷயங்களை எல்லாம் உள்ளடக்கித்தான் சமூகவியலாளர் ஷர்மிளா ரேகே 'அகைன்ஸ்ட் தி மேட்னஸ் ஆஃப் மனு' என்ற புத்தகத்தைத் தொகுத்தார். பூனே பல்கலைக்கழகத்தில் கிரந்திஜோதி சாவித்ரிபாய் பூலே மகளிர் ஆய்வு மைய இருக்கையின் தலைவராக இருந்த ஷர்மிளா தனது 48 வயதில் பெருங்குடல் புற்றுநோய் காரணமாக 2013-ம் ஆண்டு காலமானார். அவரின் மறைவுக்குப் பிறகு இந்தத் தொகுப்பை 'நவயானா' வெளியிட்டது.


பெளத்தம் பெண்களுக்கு எந்த விடுதலையும் தரவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்த காலத்தில், புத்தர் எவ்வாறு பெண் விடுதலைக்கு ஆதரவாக இருந்தார் என்பது குறித்தும், இந்துப் பெண்கள் தாழ்ந்துபோனதற்கு யார் காரணம் என்பது குறித்தும் அம்பேத்கர் எழுதிய கட்டுரைகளோடு, அம்பேத்கர் கொண்டு வரத் துடித்த 'இந்து சட்ட மசோதா' எவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்டது என்பது பற்றிய வரலாற்றையும் தகுந்த ஆவணங்களுடன் இந்தப் புத்தகத்தில் தொகுத்திருக்கிறார் ஷர்மிளா ரேகே.

1950-ம் ஆண்டு 'ஈவ்ஸ் வீக்லி' எனும் இதழில் இந்தியப் பெண்கள் தாழ்ந்துபோனதற்கு புத்தரே காரணம் என்கிற ரீதியில் கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது. அதற்கு எதிர்வினையாக அம்பேத்கர் ஒரு கட்டுரை எழுதுகிறார். அதில் புத்தரின் சீடரான ஆனந்தன் மீது வைக்கப்படும் ஐந்து குற்றச்சாட்டுகளைப் பட்டியலிடுகிறார்.

அதில் மூன்றாவதாக இருக்கும் குற்றச்சாட்டு: "புத்தர் இறந்துபோன பிறகு அவரது உடலுக்கு முதலில் பெண் சீடர்களை அஞ்சலி செலுத்த வைத்தார் ஆனந்தன். அப்போது அவர்களின் கண்ணீரால் புத்தரின் புனிதம் தீட்டுப்பட்டது". (இந்தக் குற்றச்சாட்டு, சபரிமலை கோயிலில் பெண்கள் நுழைய அனுமதி மறுக்கப்படுவதை நினைவூட்டுகிறது).

இந்தக் குற்றச்சாட்டை மறுதலிக்கும் அம்பேத்கர் அதற்கு விளக்கமும் தருகிறார். புத்தர் 'பெண்களை நெருங்கவிடாதே' என்று ஆனந்தனுக்குச் சொல்லியிருந்தால், அவர் நிச்சயம் பெண்களை அனுமதித்திருக்கமாட்டார். ஆனால், விதவைகளையும், பாலியல் தொழிலாளர்களையும்கூட தன் சீடர்களாக ஏற்றுக்கொண்ட புத்தர் எவ்வாறு பெண்களுக்கு எதிரானவராக இருந்திருக்க முடியும், என்று கேள்வி எழுப்புகிறார்.

புத்தர் மீதே வைக்கப்படும் இன்னொரு குற்றச்சாட்டு: "பெண் சீடர்களை ஆண் சீடர்களின் கீழ் வைத்திருந்தார்". அதற்கும் காரணம் உண்டு. ஆண் சீடர்கள் முதலில் புத்தரிடம் சேர்ந்த காரணத்தால், அவர் அவர்களுக்கு நிறைய விஷயங்களைக் கற்றுத் தந்திருந்தார். அதனால், அவர்களைக் கொண்டே பெண் சீடர்களுக்குக் கற்பித்தார். இதுபோன்ற 'ஆசிரிய--மாணவ' நடைமுறையை கிறிஸ்த்தவ மடாலயங்களிலும் உண்டு என்று நிறுவுகிறார் அம்பேத்கர்.

பெண்களுக்குத் துறவறத்தை அனுமதித்த மதம், பெளத்தம். அதனால், பெண்களும் சூத்திரர்களும் இந்த மதத்தில் இணைந்து துறவறத்தை அடைந்தனர். ஆனால், பெளத்தம் தோன்றி சுமார் 400 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் மனு, இந்து மதத்தைச் சேர்ந்த பல பெண்களும் சூத்திரர்களும் பெளத்த மதத்துக்கு மாறுவதைப் பார்த்துக் குமுறுகிறான். இதைத் தடுக்கவே, பெண்களுக்கும் சூத்திரர்களுக்கும் அறிவைப் பெறுவதற்குத் தடை விதித்தான். இப்படி இந்து மதத்திலிருந்து விலகிப் போகிற பெண்ணை மற்றவர்கள் தள்ளி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டான். ஆக, இந்துப் பெண்கள் தாழ்ந்து போனதற்கு மனுவே காரணம், மனுவின் 'மதமே' காரணம் என்று அம்பேத்கர் தெளிவுபடுத்துகிறார்.

இந்தக் கட்டுரையை எழுதிய அடுத்த வருடமே, 'இந்து சட்ட மசோதா'வுக்கானப் போராட்டத்தில் இறங்குகிறார் அம்பேத்கர். அவர் கொண்டு வர நினைத்த மிகப்பெரிய சமூகச் சீர்திருத்தங்களில் ஒன்று, 'இந்து சட்ட மசோதா'. 1947-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் 1951-ம் ஆண்டு செப்டம்பரில்தான் இந்த மசோதா மீதான விவாதம் நடைபெறுகிறது. அதற்கு முன்பே சில முறை விவாதம் நடந்திருந்தாலும், அது வெறும் பெயரளவுக்கே இருந்தன. ஆனால் இந்த முறை, விவாதம் நடந்ததோடு, அந்த மசோதாவுக்கும் முடிவு கட்டப்பட்டது. அதன் காரணமாகவே தனது சட்ட அமைச்சர் பொறுப்பிலிருந்து செப்டம்பர் 27-ம் தேதி அம்பேத்கர் ராஜினாமா செய்தார். அப்படிப் பார்த்தால், அந்தச் சட்ட மசோதாவுக்கு இந்த ஆண்டு 65 வயது!

அப்படி அந்த மசோதாவில் என்ன இருக்கிறது? அதுவும் பெண்களுக்கு? உண்டு! மகளுக்குச் சொத்துரிமை, ஜீவனாம்ச உரிமை, பலதார மணமுறைக்குத் தடை கோரும் உரிமை, விவாகரத்துப் பெறும் உரிமை எனப் பல உரிமைகளைப் பற்றிப் பேசியது அந்த மசோதா. அவை குறித்தெல்லாம் அறிய, இந்தத் தொகுப்பைப் படிப்பது அவசியம்.

பெண்களின் விடுதலைக்காக அம்பேத்கர் இப்படியெல்லாம் பாடுபட்டதன் நினைவாகத்தான் பின்னாளில் அம்பேத்கரிய பெண் இயக்கங்கள் ஒன்று சேர்ந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25-ம் தேதியை 'இந்தியப் பெண் விடுதலைக்கான நாளாக' கடைப்பிடித்து வருகின்றன, என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்? முக்கியமாக அம்பேத்கரை மறுதலிக்கிற பெண்ணியவாதிகளுக்கு?

(அம்பேத்கரின் 125வது பிறந்த ஆண்டையொட்டி, இந்த ஆண்டு முழுக்க அம்பேத்கர் படைப்புகள், அம்பேத்கரைக் குறித்த படைப்புகள் ஆகியவை பற்றிய அறிமுகங்கள் இங்கு தொடர்ந்து பதிவேற்றப்படும். அதில் ஆறாவது பதிவு இது.)
 

Thursday, September 15, 2016

அகதா கொடுத்த விஷம்

ந.வினோத் குமார் 

பதிப்பிக்கப்பட்ட தேதி: 11 செப்டம்பர் 2016

பொதுவாக மனிதர்கள், கதை அல்லது நாவல் சார்ந்த தங்களின் வாசிப்பை சுவாரஸ்யத்தின் அடிப்படையிலேயே அமைத்துக்கொள்கிறார்கள். பிறகு வாசிப்பு கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிபட, சுவாரஸ்யம் என்ற அடிப்படையிலிருந்து ஆழமான வாசிப்புக்கு நகர்கிறார்கள். பெரும்பாலும் அந்த சுவாரஸ்யமான வாசிப்பை, ‘க்ரைம்’ கதைகளே தருகின்றன என்று சொன்னால் அது மிகையில்லை. அப்படியான க்ரைம் நாவல்கள்தான் பெருந்திரளான மக்களை வாசிப்பை நோக்கி இழுத்து வந்தன. 

'க்ரைம்' நாவல் தளத்திலும்கூட ஆரம்பத்தில், ஆண் எழுத்தாளர்களே அதிகம் எழுதிவந்தார்கள். ஆனால், இந்தத் தளத்தில் இன்றைய காலத்தில் இந்தியா உட்பட பல நாட்டுப் பெண் எழுத்தாளர்கள் எழுதி வந்தாலும், அவர்களில் குறிப்பிடத் தகுந்தவர் அகதா கிறிஸ்டி. 1890-ம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று இங்கிலாந்தில் பிறந்த இவர், தன் வாழ்நாளில் மொத்தம் 66 நாவல்கள், 14 சிறுகதைத் தொகுப்புகள் எழுதியுள்ளார்.

அவர் ஒவ்வொரு கதையிலும் ஒரு குற்றத்தைத் தோற்றுவிக்கிறார். அந்தக் குற்றத்தை யார் செய்தது என்று நாம் அறிவதற்குப் பல இடங்களில் பல குறிப்புகளைக் கொடுத்துச் செல்வார். ‘இவர்தான் குற்றவாளி’ என்று வாசகர்கள் ஒரு கதாபாத்திரத்தைக் கட்டம்கட்டும்போது, வாசகர்கள் எதிர்பார்க்கவே செய்யாத ஒரு கதாபாத்திரத்தை ‘இவரே குற்றவாளி' என்று சொல்லி நம் முன் நிறுத்துவார். அந்த ஆச்சரியத்துடன் நாம் மீண்டும் அந்தக் கதையைப் படிக்கும்போது, அவர் தந்து சென்ற குறிப்புகள் எல்லாம் உண்மையில், அந்த உண்மையான குற்றவாளியை நோக்கியே இருப்பது நமக்குப் புரியும்.

இன்னும் சில கதைகளில் குற்றவாளி இவர்தான் என்று நேரடியாகவே சொல்லிவிடுவார். ஆனால் அவர் அந்தக் குற்றத்தை எப்படிச் செய்தார் எனும் புதிரை அவரே அவிழ்க்கும் வரை நாம் காத்திருக்க வேண்டும்.

இந்தச் சிறப்புகள் எல்லாம் ஒரு புறமிருக்க, இன்னொரு முக்கியச் சிறப்பம்சம், ஒரு குற்றத்தைச் செய்வதற்கு அவர் படைத்த‌ கதாபாத்திரங்கள் என்ன மாதிரியான ஆயுதத்தைத் தேர்வு செய்கின்றன என்பது. இவரின் பெரும்பாலான கதாபாத்திரங்கள் தேர்வுசெய்தது விஷம்!

விஷம் தோய்ந்த அந்தக் கதைகள் மற்றும் அந்தக் கதைகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் விஷம் குறித்து நமக்கு அறிமுகம் செய்கிறது ‘ஏ இஸ் ஃபார் ஆர்செனிக்’ எனும் புத்தகம். அகதா கிறிஸ்டியின் ரசிகரும் வேதியியலாளருமான காத்ரின் ஹர்குப் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். ப்ளூம்ஸ்பெர்ரி பதிப்பகம் வெளியிட்ட இந்தப் புத்தகம் கடந்த ஆண்டின் இறுதியில் வெளியானது.

 
அகதா தன் கதைகளில் 14 விதமான விஷங்களைப் பயன்படுத்துகிறார். அவர் காலத்தில் சமூகத்தில் புழக்கத்திலிருந்த பெருமளவு விஷ வகைகள், மருத்துவப் பயன்பாட்டுக்கு உதவின. அப்படியான விஷ வகைகள் மற்றும் மருத்துவப் பயன்பாடிலிருந்து முற்றிலும் நீக்கப்பட்ட விஷ வகைகள் ஆகியவற்றைக் கொண்டு அவர் தன் நாவல்களைப் படைத்திருந்தார்.

தன் கதாபாத்திரங்கள் பயன்படுத்தும் விஷம், அது மனித உடலில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து அறிவியல்பூர்வமான விவரங்களைத் தன் கதைகளில் விளக்கமாகச் சொல்லியிருப்பார் அகதா. இந்த அம்சம், அவரின் நாவல் ஒன்று ‘பார்மாசூட்டிக்கல் ஜர்னல் அண்ட் பார்மாசிஸ்ட்’ எனும் மருந்தியல் இதழ் ஒன்றால் மதிப்பீடு செய்யப்படும் அளவுக்கு அகதாவை உயர்த்தியது. ஆச்சரியப்படும் வகையில் அந்த நாவல், ‘தி மிஸ்டீரியஸ் அஃபயர்ஸ் அட் ஸ்டைல்ஸ்’ எனும் அவரின் முதல் நாவலாகும். அவரால் எப்படி இதைச் சாதிக்க முடிந்தது?

ஏனென்றால், அவர் அடிப்படையில் ஒரு செவிலியர். முதலாம் உலகப் போரில் செவிலித் தொண்டு புரிந்தவர். அப்போது அவர் மருந்துகளைக் கையாள வேண்டியிருந்தது. அந்த ஆர்வம், மருந்தியல் நிபுணர் ஒருவரிடம் தனிப்பட்ட முறையில் அவரை மாணவியாகச் சேர உந்தித் தள்ளியது. அந்த நாட்களில் அவர் பல விதமான விஷ மருந்துகளைப் பற்றி அறிந்துகொள்கிறார். அந்த அனுபவங்கள்தான் அவர் கதைகள் எழுதுவதற்குக் கைகொடுத்தன.

இவரின் நாவல்களைப் படித்துவிட்டு, பலர் அந்த நாவல்களில் சொல்லப்பட்டிருக்கும் விஷத்தை வாங்கிக் குற்றங்களைப் புரிந்தனர் என்பது இவர் மீது வைக்கப்படும் பொதுவான குற்றச்சாட்டு. ஆனால் அது உண்மையல்ல. மாறாக இவரின் ‘தி பேல் ஹார்ஸ்’ என்ற நாவலைப் படித்ததன் காரணமாக, மருத்துவமனை செவிலியர்கள் சிலர் ‘தாலியம்’ எனும் விஷத்தின் தாக்கத்தை உணர்ந்து, அந்த விஷத்தை உட்கொண்டவர்கள் பலரின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.

இப்படிப் பல விஷயங்களை அலசும் இந்தப் புத்தகத்தில், ஒரு குறிப்பிட்ட வகை விஷம் எப்படித் தோன்றியது, யாரால் கண்டுபிடிக்கப்பட்டது, அதன் மருத்துவக் குணங்கள் என்ன, அந்த விஷத்துக்கான விஷமுறி மருந்து என்ன, அந்த விஷம் தொடர்பான குற்ற வழக்குகள் என்ன, அந்த வழக்குகள் எப்படி அகதாவைக் கதை எழுதத் தூண்டின என்பது உள்ளிட்ட தகவல்களையும் தருகிறார் நூலாசிரியர்.

நச்சுயியல் துறையை அறிமுகப்படுத்தியவர் என்று அறியப்படும் பாராசெல்சஸ், ‘எல்லாவற்றிலும் விஷம் இருக்கிறது. விஷம் இல்லாத ஒரு விஷயமும் இல்லை. நாம் எடுத்துக்கொள்ளும் அளவுதான், ஒரு விஷயத்தை விஷமாகவோ அல்லது நிவாரணமாகவோ மாற்றுகிறது’ என்கிறார். அதைப் புரிந்துகொண்ட அகதா, தன் படைப்புகளின் வழியே நம் முன் வைப்பது ரசாயன விஷத்தை மட்டுமல்ல. மனித மனத்தின் விஷத்தையும் சேர்த்துத்தான். அதுவே அவரது எழுத்துக்களை வெறும் சுவாரஸ்யம் என்பதாகச் சுருக்கிவிடாமல் படைப்பின் தளத்துக்கு உயர்த்துகிறது. 

நன்றி: தி இந்து (கலை ஞாயிறு)