Thursday, February 23, 2023

விஜயமும் வீழ்ச்சியும்!

ந.வினோத்குமார்

'சல்மான் ருஷ்டி ஒரு பிசாசு' என்றார் கல்வியாளர் ஒருவர். 'ஆமாம் சார்... எழுத்து, உழைப்பு, கற்பனை பிசாசு' என்றேன். சல்மான் ருஷ்தியின் புதிய நாவலான 'விக்டரி சிட்டி'யை வாசித்தவர்கள் யாரும் என் கருத்துடன் உடன்படவே செய்யலாம்.

ருஷ்தியின் மீது நடத்தப்பட்ட படுகொலைத் தாக்குதலுக்குப் பிறகு வரும் அவரது நூல் என்பதே, இந்தப் படைப்புக்குப் போதுமான அளவுக்கு 'புரொமோஷன்' கொடுத்துவிட்டது. தவிர, இந்தியாவின் ஒரு காலகட்ட வரலாற்றில் ஆதிக்கம் செலுத்திய ஒரு பேரரசு குறித்த கதையைச் சொல்கிறது என்பது, 'அந்தப் படைப்பு எப்போது வரும்?' என்ற எதிர்பார்ப்பைத் தீவிரப்படுத்திவிட்டது.

தற்போது புத்தகம் வெளியாகி ஏறக்குறைய இரண்டு வாரங்களாகிவிட்டது. எப்படி இருக்கிறது புத்தகம்? ஒரு வரியில் சொல்வதானால் 'விக்டரி சிட்டி... ஜெயம்..!'


'விஜயநகரம்' என்பதுதான் 'விக்டரி சிட்டி'. 12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டில் முகலாயர்களின் தென்னகம் நோக்கிய படையெடுப்பைத் தடுத்து நிறுத்தியதில் விஜயநகரப் பேரரசுக்கு முக்கியப் பங்குண்டு.

"துங்கபத்திரை கிருஷ்ணா பேராறுகளுக்குத் தெற்கிலுள்ள தென்னிந்தியப் பெரும்பகுதியில் தென்னாட்டுக் கலாசாரமும் சமயங்களும் அரசியல் முறைகளும் அழிந்துபடாது நிலைபெற்றிருக்கவே விஜயநகரப் பேரரசு தோன்றியதெனக் கூறலாம். கி.பி. 1336 ஆம் ஆண்டில் அமைக்கப்பெற்ற விஜயநகரம் என்னும் நகரமானது 1565 ஆம் ஆண்டு வரையில் பெரியதொரு பேரரசாக வளர்ந்து, ஹொய்சாளர்கள், காகதீயர்கள், சோழர்கள், பாண்டியர்கள் முதலிய அரச வமிசங்களால் ஆளப்பெற்ற நிலைப்பகுதிகளைத் தன்னகத்தே கொண்டு, பெரும்புகழுடன் விளங்கியது" என்று தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தால் 1977 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 'விஜயநகரப் பேரரசின் வரலாறு' என்ற புத்தகம் சொல்கிறது. இதை எழுதியவர் டாக்டர் அ.கிருஷ்ணசாமி.

எல்லோராலும் புனைவு எழுதிவிட முடியாது. அதிலும் வரலாற்றுப் புனைவை வரலாற்றுக்கு நெருக்கமாக சிலரால் மட்டுமே எழுத முடியும். 'வரலாற்றுக்கு நெருக்கமாக' என்ற சொற்களை நான் 'கான்ஷியஸாக'வே இங்கு பயன்படுத்துகிறேன். இருக்கின்ற தகவல்கள், ஆவணங்களை வைத்துக்கொண்டு வரலாற்றைக் கூட எழுதிவிட முடியும். அப்படி எழுதிவிட்டால் அது வரலாறு. பாட புத்தகம். அது புனைவு ஆகாது. ஆனால் வரலாற்றைத் திரிக்காமல், உள்ளது உள்ளபடி சொல்ல வேண்டும். அதையும் நெருடல் இல்லாது சொல்ல வேண்டும். அதை மக்களை மயக்கும் மொழியில் சொல்ல வேண்டும். அந்த மயக்கம், வாசகர்களை விழிப்புறச் செய்வதாகவும் அமைய வேண்டும்.

பலரும் வரலாற்றுப் பாட நேரத்தில் தூங்கி விழுவதும், வரலாற்றுப் புதினங்களைத் தூங்காமல் விழுந்து விழுந்து படிப்பதும் ஏன் என்று நினைக்கிறீர்கள்..? முன்னதில் தேதிகள் முக்கியம், அதனால் தூக்கம். பின்னதில் வார்த்தைகள். அதனால் விழிப்பு. எனவேதான் ருஷ்தியும் இந்நாவலில் சொல்கிறார் இப்படி: "Words are the only victors".

நாவலில் எங்குமே தேதிகளோ, ஆண்டுகளோ இல்லை. மாறாக, நிகழ்வுகளை விவரிப்பதன் மூலம் அந்தந்த காலகட்டத்தை நம் கண் முன் கொண்டு வந்துவிடுகிறார். விஜயநகரப் பேரரசைப் பற்றிச் சொல்லும்போது அதன் நாயகர் கிருஷ்ண தேவராயர் என்பார்கள். ஆனால் இந்த நாவலைப் பொறுத்த வரையில் பம்பா கம்பனா என்பவள்தான் நாயகி!

யார் அந்த பம்பா கம்பனா?  அரசியா, இளவரசியா? அப்படியும் சொல்லலாம். கவிஞரா, வரலாற்றை முன் கூறுபவளா? அப்படியும் சொல்லலாம். 247 ஆண்டு கால ஒற்றை வாழ்க்கை என்பது அவளுக்கு வரமா, சாபமா? கேள்விகள் ஏராளம். அதற்கான பொருத்தமான விடைகளைத் தேடிக்கொள்ளும் பொறுப்பை நமக்கே விட்டுவிடுகிறார் ருஷ்தி.


ஒரு நாட்டில் ஒரு அரசன். அந்த அரசனுக்குப் பல மனைவிகள். அந்த நாட்டின் மீது திடீரென்று ஒரு போர். அதில் அந்த அரசன் கொல்லப்படுகிறான். அந்நாளைய வழக்கப்படி, கொல்லப்பட்ட அரசனின் மனைவிமார்கள், அந்தப் போரில் கணவனை இழந்த பெண்கள் எல்லோரும் கூட்டாக 'சதி'யில் எரிந்துபோகிறார்கள். அப்படி இறந்துபோன பெண்ணொருத்தின் மகள்தான் பம்பா கம்பனா. அந்த நிகழ்வுக்குப் பிறகு, அவளுக்கு தெய்வீக சக்தி கிடைக்கிறது. அந்த சக்தியால் தன் கையில் கிடைத்த சில விதைகளை நிலத்தில் தூவி ஒரு நகரத்தை உருவாக்குகிறாள். அந்த நகரத்தில் மக்களைப் படைக்கிறாள். இந்தப் பூமியில் அவர்கள் பிறந்ததற்கான நோக்கம் என்னவென்று அவர்களின் வாழ்க்கையை அவர்களின் காதுகளில் ஓதி, அவர்களுக்கு உயிர் கொடுக்கிறாள். நகரமும் மக்களும் வளர்கிறார்கள். அரசர்கள் பிறக்கிறார்கள். போர்கள் நடைபெறுகின்றன. வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருகின்றன. மதங்கள் வளர்கின்றன. கலைகள் உயர்கின்றன. பின்னர், தங்கள் செயல்களால் தங்கள் கண் முன்னேயே அந்த நகரம் அழிவதைப் பார்க்கிறார்கள் அரச வம்சத்தினர்.

இந்தக் கதையை  கவிதை நடையில் எழுதி 'ஜெயா பரஜெயா' (அதாவது, ஜெயா வெற்றி, பரஜெயா வீழ்ச்சி/தோல்வி) என்று அதற்குத் தலைப்பிட்டு, ஒரு பானையில் போட்டு மூடிவிடுகிறாள். பின்னாளில், அனாமதேயர் ஒருவரால் அந்தப் புத்தகம் கண்டுபிடிக்கப்பட்டு வெளிச்சத்துக்கு வருகிறது. அந்தக் கற்பனையான புத்தகத்தைப் பற்றிச் சொல்வதன் வழியே, வரலாற்றில் நிகழ்ந்த சில நிகழ்ச்சிகளைக் கொண்டு, உண்மையான சில மனிதர்கள், உண்மை போன்று தோற்றமளிக்கும் சில கற்பனைக் கதாப்பாத்திரங்களின் உதவியோடு விஜயநகரப் பேரரசின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார் ருஷ்தி.

விஜயநகரப் பேரரசின் புகழுக்கு நிறைய காரணங்கள் இருந்தாலும், 'தென்னாட்டில் இந்துக்களை அணி திரட்டியது' என்பது முக்கியமானது. அதுவே கூட அதன் புகழுக்கு ஒரு கரும்புள்ளி என்றும் கூடச் சொல்லலாம். ருஷ்தியின் நாவலை கடந்த பத்து ஆண்டு கால இந்திய அரசியல் வரலாற்றுக்கும் கூட நம்மால் பொருத்திப் பார்க்க முடியும். அதைத்தான் ருஷ்தி இவ்வாறு சொல்கிறார்: "History is the consequence not only of people's actions, but also of their forgetfulness".

இந்த நாவலில் நிறைய தமிழ்த் தொடர்புகள் உண்டு. கள்ளர்/மறவர்கள் வருகிறார்கள். சோழர்களும் நடராஜரும் குறிப்பிடப்படுகிறார்கள். மதுரா விஜயம் வருகிறது. சம்புவராயர்கள் பற்றி ஒரு வரி உண்டு. ஆண்டாள் வருகிறாள். அதிரசம் கூட வருகிறது. படிக்கப் படிக்க அவ்வளவு சுவையாக இருக்கிறது!

இந்த நாவலைப் பற்றிய அறிமுகத்தை, இந்த நாவலில் ருஷ்தி எழுதிய சில‌ வரிகளைக் கொண்டே  முடிக்கிறேன். அதுதான் படைப்புக்கான மரியாதையாகவும், அறிமுகத்தின் முத்தாய்ப்பாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.

"Fictions could be as powerful as histories, revealing the new people to themselves, allowing them to understand their own natures and the natures of those around them, and making them real".

நன்றி படங்கள்: அமேசான் (புத்தக அட்டை), தி நியூயார்க்கர் (சல்மான் ருஷ்தி)