Saturday, November 26, 2016

அந்த ஓபியத்தைப் புரிந்துகொள்வோம்!

ந.வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 2016 பிப்ரவரி 19

2015, பிப்ரவரி 20! இந்த நாளில்தான் கோவிந்த் பன்சாரே எனும் சமூகச் செயற்பாட்டாளரின் உயிர் பிரிந்தது. தன் வாழ்க்கை முழுவதும் மூடநம்பிக்கைகள், மதவாதம் ஆகியவற்றுக்கு எதிராகவும், மாணவப் பருவத்திலேயே மார்க்சியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டதன் காரணமாகத் தன்னை சி.பி.ஐ. கட்சியில் இணைத்துக்கொண்டு அடித்தட்டு மக்களின் மேம்பாட்டுக்காக உழைத்தும், பேசியும் எழுதியும்வந்தவர் கோவிந்த் பன்சாரே.

1933-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பிறந்த பன்சாரே மகாராஷ்டிரக்காரர். மராட்டிய வீரர் சிவாஜியை சிவ சேனா இந்துத்துவப் பின்னணியில் மக்களிடையே கொண்டு சென்றபோது, அதனைத் தடுத்து நிறுத்தும் விதமாக ‘சிவாஜி யார்?' எனும் புத்தகத்தை எழுதினார். அதன் காரணமாகவே இந்துத்துவவாதிகளின் எதிரியும் ஆனார்.

இப்படித் தன் வாழ்நாள் முழுவதும் அதிகார வர்க்கத்தின் துவேஷங்கள், காவிகளின் வரலாற்றுத் திரிபுகள் ஆகியவற்றை எதிர்த்து வந்தார். அதன் காரணமாக அவரின் தலைக்கும் ஒரு தோட்டா ‘இலக்கு' நிர்ணயிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி தனது மனைவியுடன் காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் அவரை நோக்கிச் சுட்டார்கள். அவரின் மனைவியைக் கீழே தள்ளிவிட்டுச் சென்றார்கள். நான்கு நாட்கள் கழித்து பன்சாரே உயிர் பிரிந்தது. அவரின் மனைவிக்குத் தலையில் அடிபட்டதால் அவர் இன்று வரை பக்கவாத நோயாளியாகப் படுக்கையில் இருக்கிறார்.

இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரை மட்டும் ஏழு மாதங்களுக்குப் பிறகு கைது செய்தது காவல்துறை. இது தொடர்பான விசாரணை மெத்தனமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதோ... இந்த ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி, பன்சாரேவின் முதல் நினைவு தினம்!

இந்தத் தருணத்தில் 'தி ரிபப்ளிக் ஆஃப் ரீசன்' எனும் புத்தகத்தை அறிமுகப்படுத்துவது அவசியமாகிறது.


மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடிய நரேந்திர தபோல்கர் கொலைக்குப் பிறகு, பன்சாரே கொல்லப்பட்டார். பன்சாரேவின் கொலைக்குப் பிறகு கர்நாடக மாநிலத்தில் எம்.எம்.கல்புர்கி கொலை செய்யப்பட்டார். இந்த மூவரின் கொலையும் நிகழ்கால இந்திய வரலாற்றின் பக்கங்களில் சிவப்பு மையால் அடிக்கோடிடப்பட வேண்டிய அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. காரணம், இவர்கள் மூவரும் நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் என்பதால் அல்ல. இவர்கள் மூவரின் உயிரும் துப்பாக்கித் தோட்டாவால் பறிக்கப்பட்டது என்பதால் அல்ல... இவர்கள் மூவரின் பணியும் இந்துத்துவத்துக்கு எதிராக இருந்தது என்பதுதான்!

'நீங்கள் பூக்களைப் பறிக்கலாம். ஆனால் வசந்தம் வருவதை உங்களால் தடுக்க முடியாது' என்ற பாப்லோ நெரூடாவின் வரிகளுக்கு ஏற்ப, இவர்கள் மூவர் இறந்துபோனாலும், இவர்களின் பணி, சுவடு தெரியாமல் போய்விடக் கூடாது என்பதற்காக, இவர்கள் எழுதிய மிக முக்கியமான சில கட்டுரைகளைத் தொகுத்து ‘தி ரிபப்ளிக் ஆஃப் ரீசன்' எனும் புத்தகமாக சஃப்தார் ஹாஷ்மி நினைவு அறக்கட்டளை வெளியிட்டுள்ளது. இது சென்ற ஆண்டு இறுதியில் வெளியானது.

இதில் கோவிந்த் பன்சாரே எழுதியிருக்கும் கட்டுரை மிகவும் முக்கியமானது. ‘மதம் மக்களுக்கு ஓபியத்தைப் போன்றது' எனும் கார்ல் மார்க்ஸின் வரியை நம்மில் பலர் பலமுறை கேட்டிருப்போம். சொல்லியிருப்போம். ஆனால் அந்த வரியின் உண்மையான அர்த்தம் தெரிந்திருக்குமா நமக்கு?

‘புரட்சியாளர்கள் மதத்தை எவ்வாறு அணுக வேண்டும்?' என்ற தலைப்பில் அமைந்த தன் கட்டுரையில், ‘இதுவரையில் மார்க்ஸின் இந்த வரியை நாம் தவறாகவே புரிந்துகொண்டு வந்திருக்கிறோம். ஏனெனில், இந்த வரி, தனியான வரி அல்ல. மார்க்ஸ் எழுதிய பத்தி ஒன்றில் வரும் வரி இது. இந்த வரிக்கு முன்பு உள்ள‌ வரிகளை எல்லாம் நாம் மறந்துவிட்டோம். அதனால் இந்த வரியின் உண்மையான அர்த்தம் நமக்கு விளங்கவில்லை' என்கிறார் பன்சாரே.

‘ஒடுக்கப்படுபவர்களின் இளைப்பாறலாக, இதயமற்ற உலகத்தில் அவர்களுக்கான இதயமாக, உயிரற்ற நிலையிலிருக்கும் தங்களுக்கு உயிராக மதம் இருக்கிறது. அது அவர்களுக்கு ஓபியம் போன்றதாக இருக்கிறது' என்று எழுதுகிறார் மார்க்ஸ்.

‘இதன் மூலமாக மார்க்ஸ் கூற வருவது என்னவென்றால், ‘மதம் தருகிற மாயையான இன்பத்தில் மூழ்காமல், மக்களை அதிலிருந்து வெளியே கொண்டு வந்து உண்மையிலேயே இன்பத்தை உருவாக்க முயற்சிக்க வேண்டும். இவ்வாறு மதம் தருகிற மாயையான இன்பம் என்பது ஓபியம் தரும் போதைக்கு நிகராக உள்ளது ‘என்பதுதான்' என்று புதிய விளக்கத்தைத் தருகிறார் பன்சாரே.

‘மதத்தைப் பற்றி நாம் எளிய மக்களிடையே விளக்கும்போது அலங்காரப் பூச்சுகள் இல்லாமல் நேரடியான மொழியைப் பயன்படுத்த வேண்டும். அதிகாரத்தையும், செல்வத்தையும் அடைவதற்கு மதம் ஆதிகாலத்திலிருந்து இன்று வரை எப்படியெல்லாம் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதை அவர்களுக்குச் சொல்ல வேண்டும். ஆனால் அதே சமயம், மதத்தின் சூழ்ச்சிக்குப் பலியானவர்களிடம் நாம் இரக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும். மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றுபவர்களின் உண்மையான முகத்தை நாம் தைரியமாக வெளிப்படுத்த வேண்டும். அவர்களைத் தோற்கடிப்பதுதான் நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும். இதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்' என்று அதே கட்டுரையில் சுட்டிக்காட்டுகிறார் பன்சாரே.

அந்த ஓபியத்தின் தன்மையைப் புரிந்துகொள்வோம். போராடுவோம்!

நன்றி: தி இந்து (இளமை புதுமை - சில திருத்தங்களுடன்)

Sunday, November 20, 2016

DR.B.R.AMBEDKAR 125 BIRTH ANNIVERSARY SERIES -VIII

இந்து தேசிய வியாபாரிகளின் அபகரிப்பு!


ந.வினோத் குமார்

அம்பேத்கரின் சிந்தனைகளை ஏற்றுக்கொள்பவர்களின் எண்ணிக்கை இன்றைய காலத்தில் அதிகரித்து வருகிறது. அதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. ஆனால் அரசியல் சுயலாபத்துக்காக அம்பேத்கரையே உரிமை கொண்டாடும் அபகரிப்பாளர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே வருவதுதான் ஆச்சரியம். அதில் முதன்மையான அபகரிப்பாளர்கள் யாரென்றால்... இந்து தேசிய வியாபாரிகள்!

அம்பேத்கரின் 125-வது பிறந்த ஆண்டு கொண்டாடப்படும் இந்த வேளையில், 'அம்பேத்கரும் எங்கள் செட்டுதான்' என்று கூவ ஆரம்பித்திருக்கின்றன இந்துத்துவ குழுக்கள்.

'அம்பேத்கர் ஒருபோதும் பிராமணியத்துக்கு எதிராக இருந்தவர் அல்ல' என்று இந்துத்துவவாதிகள் சொல்வது எவ்வளவு பெரிய புரட்டு, என்பதைத் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கிறது, 'அம்பேத்கர் அண்ட் இந்துத்துவா பாலிட்டிக்ஸ்' எனும் புத்தகம். மும்பை ஐ.ஐ.டி.யின் முன்னாள் பேராசிரியரும் தற்சமயம் சமூக நல்லிணக்கத்துக்காகத் தொடர்ந்து எழுதியும், களப்பணியாற்றியும் வரும் ராம் புனியானி இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். பாரோஸ் பதிப்பகத்தால் பதிப்பிக்கப்பட்ட இந்தப் புத்தகம் சமீபத்தில் வெளியாகியுள்ளது.


அம்பேத்கரின் 124-வது பிறந்த ஆண்டிலிருந்தே அவருக்குக் காவிச் சாயம் பூச முயற்சித்து வருகிறது ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு. அந்த அமைப்பைச் சேர்ந்த பிரச்சார் ப்ரமுக் மன்மோகன் வைத்யா, சர்சங்சலக் மோகன் பாகவத் போன்றோர் அம்பேத்கரின் கருத்தியலுக்கு இந்துத்துவப் பார்வையை வழங்க முற்படுகின்றனர். அதில் ஒன்றுதான் 'அம்பேத்கர் ஒருபோதும் பிராமணியத்துக்கு எதிராக இருந்தவர் அல்ல' எனும் கூற்று. அது உண்மைதானா?

நிச்சயமாக இல்லை. ஏனென்றால், அம்பேத்கர் 'பிராமணிய இந்து மதவாத'த்துக்கு எதிராகவும், மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதி ஆகியவற்றுக்கு ஆதரவானவராகவும் இருந்தார். ஆனால் ஆர்.எஸ்.எஸ். அமைப்போ பிராமணிய இந்து மதவாதம் மற்றும் இந்து தேசியம் ஆகிய இரண்டு தளங்களின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

ஒரு பேச்சுக்கு, அம்பேத்கரின் சிந்தனைகளைத்தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் கொண்டிருக்கிறது என்று வைத்துக்கொண்டாலும், 2015-ம் ஆண்டு குடியரசு தின விழா தொடர்பான ஊடக விளம்பரங்களில் 'மதச்சார்பின்மை', 'சோஷலிசம்' எனும் வார்த்தைகள் எப்படி விடுபட்டுப் போயின?

அம்பேத்கரின் 125-வது பிறந்த ஆண்டு கொண்டாடப்படும் இந்த வேளையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கியத் தலைவராகக் கருதப்பட்ட தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்தநாள் நூற்றாண்டை இந்துத்துவவாதிகள் கொண்டாடி வருகின்றனர்.

மகாத்மா காந்திக்கு இணையாக தீனதயாள் உபாத்யாயாவை சமூக‌ மைய நீரோட்டத்துக்குக் கொண்டு வரும் முயற்சிகள் நடந்து வருகின்றன. ஏனென்றால், அவர்தான் இந்து மதத்தின்படி வழி நடத்தப்படும் 'அகண்ட பாரதம்' எனும் கருத்தைப் பரப்பிவிட்டுச் சென்றார்.

அவருக்கு முன்பு சாவர்க்கர் 'இந்து தேசியம்' எனும் கருத்தை விட்டுச் சென்றார். ஆனால் அம்பேத்கர் அந்த 'இந்து தேசியம்' என்ற கருத்துக்கு எதிராக இருந்தவர். தன்னுடைய 'தாட்ஸ் ஆன் பாகிஸ்தான்' எனும் நூலில் அம்பேத்கர் இப்படிக் குறிப்பிடுகிறார்:

"சாவர்க்கரும் முகமது அலி ஜின்னாவும் 'இரண்டு தேசங்கள்' என்ற கருத்துக்கு உடன்படுபவர்களாகவே உள்ளனர். பாகிஸ்தான் என்றும், இந்துஸ்தான் என்றும் இரண்டு தேசங்கள் இருக்க வேண்டும். முன்னதில் இஸ்லாமியர்களும் பின்னதில் இந்துக்களும் இருந்துகொள்ளலாம் என்கிறார். சாவர்க்கரோ, இந்தியாவில் இந்துக்களும் இருக்கலாம். இஸ்லாமியர்களும் இருக்கலாம். ஆனால் இஸ்லாமியர்கள் 'இந்து தேசிய'த்தின் கீழ்தான் இருக்க வேண்டும். இந்து மத அரசியலமைப்புக்கு அவர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்கிறார்.

அவர் சொல்வது போல 'இந்து தேசியம்' ஏற்பட்டால், அது நாட்டுக்குக் கேடு விளைவிக்கும். இந்து மதம் என்பது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றுக்கு எதிரானதாக இருக்கும். அது ஜனநாயகத்தை நமக்கு வழங்காது. எனவே, இந்து ராஜ்ஜியம் அமைக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்".

அப்படியான இந்து தேசியம்தான், சாதி ஒழிக்கப்படுவதற்குத் தடையாகவும் இருக்கிறது என்கிறார், அம்பேத்கர். ஆனால் தீனதயாள் உபாத்யாயாவோ, "நம் சமூகத்திலிருக்கும் நான்கு வர்ணாசிரமங்கள் என்பது கடவுளுக்கு இருக்கும் நான்கு கைகளைப் போன்றது. அது ஒவ்வொன்றுக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. இதைப் புரிந்துகொண்டால், சாதி நமக்கு நல்லது செய்யும். இல்லையென்றால், அது அழிவைக் கொண்டு வரும்" என்று சாதியத்தைப் போற்றுகிறார்.

சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் மேம்பட்ட நிலைக்கு வந்துவிடக் கூடாது என்ற கடுப்புதான் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தொடக்கமாக இருக்கிறது என்கிறார் ராம் புனியானி. சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை மத அடையாளத்தை முன்னுக்குக் கொண்டு வருகிறதென்றால், மதக் கலவரங்களின் மூலம் சாதிய அடையாளம் மறைக்கப்பட்டு விடுகிறது. அப்படிப் பார்த்தால், சிறுபான்மையினருக்கு எதிரான‌ ஒவ்வொரு வன்முறைக்குப் பிறகும், இந்து மத அடையாளம்தான் தலித்துகளுக்கு முக்கியமாகிறது என்கிறார் அவர்.

இவ்வாறு மதக் கலவரங்கள் மூலம் 'இந்து தேசியம்' காண விரும்புகின்றன இந்துத்துவக் குழுக்கள். அப்படி ஒன்று ஏற்பட்டால், சாதி ஒழியாது. சாதி ஒழியாமல் சமத்துவம் இல்லை. ஆக, நாம் புரிந்துகொள்ள வேண்டியது... சனாதன தர்மம் ஒருபோதும் சமாதானத்தைக் கொண்டு வராது!

(அம்பேத்கரின் 125வது பிறந்த ஆண்டையொட்டி, இந்த ஆண்டு முழுக்க அம்பேத்கர் படைப்புகள், அம்பேத்கரைக் குறித்த படைப்புகள் ஆகியவை பற்றிய அறிமுகங்கள் இங்கு தொடர்ந்து பதிவேற்றப்படும். அதில் எட்டாவது பதிவு இது.)