Friday, October 13, 2017

ஆருஷி கொலைக்கு 'அவர்களே' காரணம்!

ந.வினோத்குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 29 ஜனவரி 2016

இந்திய வரலாற்றில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘டாப் 10' கொலைக் குற்ற வழக்குகளைப் பட்டியலிட்டால் அதில் நிச்சயமாக இடம்பிடிக்கும் தன்மை கொண்டது ஆருஷி தல்வார் கொலை வழக்கு.

‘யார் கொன்றார்கள்?' இதுதான் அந்த வழக்கின் ஆரம்பத்தில் கேட்கப்பட்ட கேள்வி. ஆனால் அந்தக் கேள்வி கூட முக்கியமில்லை. 'ஆருஷியின் பெற்றோர்கள் இந்தக் கொலையைச் செய்தார்களா?' என்ற கேள்விதான் கேட்கப்பட வேண்டும் என்று வாதிடுகிறது 'ஆருஷி' புத்தகம்.

பத்திரிகையாளர் அவிரூக் சென் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர். வெளிநாட்டில் 'ஃப்ரிலான்ஸ்' பத்திரிகையாளராகச் செயல்பட்டுக் கொண்டிருந்த இவர், இந்த வழக்கு தொடர்பாக எழுதுவதற்காகவே இந்தியா வந்தார்.

ஆருஷியின் பெற்றோர் ராஜேஷ் தல்வார்-நுபுர் தல்வார் தம்பதிக்கு எதிராக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களை அவிரூக் சென் அலசும் விதத்தில் தெரிந்துகொள்ள முடிகிறது நியாயம் யார் பக்கமென்று!

அதைத் தவிர இந்திய சமூகத்தின் சமகால அரசியல், அறிவியல், போலீஸ் விசாரணை, நீதிமன்ற வழக்கங்கள், சிறை நடத்தை முறைகள் ஆகியவற்றையும் அங்கங்கே தொட்டுச் செல்வதின் மூலம், ஒரு குற்ற வழக்கை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சி எப்படியெல்லாம் கட்டமைக்கப்படுகிறது என்பதையும் படம் பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியர்.

இந்தியாவில் முதன்முதலில் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட‌ ‘நார்க்கோ அனாலிசிஸ்' விசாரணை 1989-ம் ஆண்டு டாக்டர் எஸ்.எல்.வயா எனும் பெண் ஒருவரால் நடத்தப்பட்டது எனும் தகவல்...

‘முன்பெல்லாம் வீட்டு வேலைக்காரர்கள் நம் குடும்பங்களில் ஒருவராக இருந்தனர். ஆனால் இப்போது அப்படியல்ல' எனும் சமூகப் பார்வை...

‘காவலர்கள் பலர் வழக்கைப் புலனாய்வு செய்வதை விடவும் வாக்குமூலங்களைப் பெறவே முனைகிறார்கள், காரணம் அதுதான் நீதிமன்றத்தில் சுலபமாகத் தண்டனை பெற்றுத் தரும் வழியும், சோம்பேறித்தனமான வழியுமாகும்' எனும் காவல்துறையின் போக்கு...

‘ஆருஷியின் ‘வஜைனல் ஸ்வாப்'பை நீங்கள் ஏன் அடையாளமிடவில்லை?' என்று மருத்துவர் ஒருவரைக் கேட்டதற்கு, ‘உத்தரப் பிரதேசத்தில் ‘வஜினல் ஸ்வாப்' எடுக்கும் வழக்கம் இல்லை' என்று சொன்னார் (இது 2008-ம் ஆண்டில் நடந்தது!) எனும் தகவலின் மூலம் நூலாசிரியர் முன்வைக்கும் மருத்துவத்துறையின் அக்கறையின்மை...

‘க்ரைம் ஸீன் ரீகன்ஸ்ட்ரக்ஷன்' எனும் முறையில் உள்ள குளறுபடிகள்... என பல தகவல்கள் மூலம் இந்த வழக்கை 360 டிகிரி கோணத்தில் அணுகி பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளார் அவிரூக் சென்.


சமீபத்தில் ‘தி இந்து' நடத்திய ‘லிட் ஃபார் லைஃப்' விழாவில் தன் புத்தகம் குறித்த உரையாடல் நிகழ்வுக்கு வந்திருந்த அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து...

உங்கள் புத்தகத்தைப் படிக்கும் ஒருவருக்கு இந்தக் கொலைக்கும் ஆருஷியின் பெற்றோருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது தெரிய வரும். ஆனால், அவர்களை 'இன்னொசன்ட்' என்று சொல்லி விட முடியுமா?

நீதிமன்றத்தில் ராஜேஷ் மற்றும் நுபுர் தம்பதிக்கு எதிராக வைக்கப்பட்ட சாட்சியங்களைப் பார்த்தாலே உண்மை விளங்கும். அவை அனைத்துமே ஜோடிக்கப்பட்டவை. தவிர, இந்தக் கொலையை விசாரிக்கத் தேவையான‌ அடிப்படையான இரண்டு விஷயங்கள். வெப்பன் (கொலை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம்) மற்றும் மோட்டிவ்! இவை இரண்டுமே இந்த வழக்கில் இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.

இந்த வழக்குக்காக தல்வார் தம்பதி உட்பட இதில் தொடர்புடைய அனைவரையும் சந்தித்துப் பேசியிருக்கிறீர்கள். ஆனால் தல்வார் வீட்டில் வேலை பார்த்துவந்தவரும் ஆருஷியுடன் கொல்லப்பட்டவருமான ஹேம்ராஜின் நண்பர்களை நீங்கள் ஏன் சந்திக்கவில்லை?

ஆருஷி மற்றும் ஹேம்ராஜ் ஆகியோர் கொல்லப்பட்ட சமயத்தில் நான் இந்தியாவில் இல்லை. ஆருஷி கொலை வழக்கு நீதிமன்றத்தில் தொடங்கப்போகும் சமயத்தில் ‘மும்பை மிரர்' பத்திரிகையிலிருந்து இந்த வழக்கை ரிப்போர்ட் செய்ய வேண்டும் என ‘அசைன்மென்ட்' வழங்கப்பட்டது. 
நான் இங்கு வந்த சமயத்தில் ஹேம்ராஜின் நண்பர்கள் மூன்று பேரும் நேபாளத்துக்குச் சென்று விட்டார்கள். நேபாளம்தான் அவர்களின் தாய்நாடு.

ஆருஷி கொலைக்குப் பிறகு சில மாதங்களில் அவர்களும் ‘நார்க்கோ அனாலிசிஸ்' உள்ளிட்ட விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் மூவருமே ‘இவன் தான் கொலை செய்தான், நான் பார்த்தேன்', ‘அவன் தான் கொலை செய்தான், நான் பார்த்தேன்' என ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்தியதும் தெரியவந்தது. இருந்தும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் விடுவிக்கப்பட்டார்கள். உடனே அவர்கள் நேபாளத்துக்குத் தப்பிவிட்டார்கள். அதனால் அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை.

இந்தக் கொலையை ‘ஆணவக் கொலை' என்று கூறப்படுவது பற்றி?

அது தவறான பார்வை. தல்வார் தம்பதியைக் குற்றவாளிகள் என்று கூறிய நீதிமன்றம் இந்தக் கொலையை ‘ஆணவக் கொலை' போன்று சித்தரித்துள்ளது. ஆனால் ‘இது ஆணவக் கொலையேதான்' என்று அது வெளிப்படையாகச் சொல்லவில்லை.

ஆருஷி கொலை வழக்கு சமீபத்தில் ‘தல்வார்' என்ற பெயரில் பாலிவுட்டில் திரைப்படமாக வந்ததே? நீங்கள் பார்த்தீர்களா?

ஆம். பார்த்தேன். நன்றாகவே இருந்தது. ஆனால் அது ஃபிக் ஷன். கொஞ்சமே கொஞ்சம் உண்மையான விஷயங்களுடன் ஒத்துப்போகிறது. என்னுடைய புத்தகமோ முழுக்க முழுக்க நான்-ஃபிக் ஷன்!

  
இந்த வழக்கில் மிகவும் நெருடலாக நீங்கள் உணர்ந்த விஷயம் எது?

ஆருஷி கொலை செய்யப்பட்டது தெரியவந்த 2008-ம் ஆண்டு மே15-ம் தேதி காலை, தல்வார் தம்பதி வீட்டுக்கு முதலில் சென்றது பாரதி மண்டல் எனும் வேலைக்காரப் பெண்தான். அன்று அவள் போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலம் வேறு. அதே வாக்குமூலம் வழக்கு நடைபெற்ற 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வேறு விதமாகத் திரிக்கப்பட்டது. அப்போது பாரதி மண்டல், ‘போலீஸார் எனக்கு என்ன சொல்லிக் கொடுத்தார்களோ, அதைத்தான் இங்கு சொல்கிறேன்' என்று வெளிப்படையாகவே சொன் னார். இதை என்னவென்று சொல்வது?

என்னதான் சொல்லுங்கள். தல்வார் தம்பதிக்கு வழங்கப்பட்டது ஒரு ‘ஸ்லோ டெத்!'

நன்றி: தி இந்து (இளமை புதுமை)

அவிரூக் சென் படம்: ந. வினோத்குமார்