Wednesday, March 21, 2018

அந்த வனம் இன்னும் சாய்ந்துவிடவில்லை!

ந.வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 11 மார்ச் 2018


உலக வரலாற்றில் மிகவும் முக்கியமான பத்தாண்டு என்று 1960-களைச் சொல்லலாம். அப்போதுதான் ரேச்சல் கார்சன் எழுதிய ‘மவுன வசந்தம்’ வெளிவந்தது. உலக அளவில் சூழலியல் சார்ந்து வெளிவந்த முதல் படைப்பு. ‘காட்டுயிர்ப் பாதுப்புக்கான பன்னாட்டு நிதியம்’ (டபிள்யு.டபிள்யு.எஃப்), ‘கிரீன்பீஸ்’ போன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாகப் பணியாற்றும் அமைப்புகள் தொடங்கப்பட்டன. அதே பத்தாண்டில்தான் இந்தியாவில் மாபெரும் பஞ்சம் நிலவியது. இன்றைக்கு நம் விவசாயம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு மூல காரணமாகச் சொல்லப்படும் ‘பசுமைப் புரட்சி’ அப்போதுதான் கொண்டுவரப்பட்டது.

தமிழ் இலக்கியத்தில் சுற்றுச்சூழல் குறித்துப் பேசிய முதல் நாவலாக அறியப்படும் ‘சாயா வனம்’ அந்தப் பத்தாண்டில்தான் (1968) வெளிவந்தது. ‘வாசகர் வட்டம்’ அதை வெளியிட்டது. தன்னுடைய 25 வயதில் இதை எழுதிய சா.கந்தசாமிக்கு, இதுதான் முதல் நாவல். இது ஆங்கிலத்திலும் பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அந்த நாவலுக்கு, இது பொன்விழா ஆண்டு.

தஞ்சைக்கு அருகில் உள்ள சாயாவனம் என்ற ஊர்தான் நாவலின் கதைக் களம். அங்கு பரம்பரைப் பரம்பரையாகக் கடத்தப்பட்டுவரும் புளியந்தோப்பை விலைக்கு வாங்கி, அந்தத் தோப்பை அழித்து, அங்கு கரும்பு ஆலை ஒன்றைக் கட்ட நினைக்கிறான் கதையின் நாயகனான சிதம்பரம். அவனுடைய கனவு நிறைவேறியதா என்பதுதான் கதை. புளியந்தோப்பு என்பது வெறும் அடையாளத்துக்குத்தான். உண்மையில் அது ஒரு காடு. கந்தசாமியின் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமென்றால், அது ‘ஆரண்யம் போன்ற தோட்டம்’. சிதம்பரம் அந்தக் காட்டை எப்படி அழிக்கிறான் என்பதுதான் நாவலின் மையமாக இருக்கிறது. தனக்குத் துணையாகச் சிறுவர்கள் இருவரை வைத்துக்கொண்டு, அரிவாள், கோடரி போன்றவற்றைக் கொண்டு மரங்கள், செடிகள், கொடிகள் ஆகியவற்றை வெட்ட ஆரம்பிக் கிறான். இயன்றவரையில் வெட்டிவிட்டு, மீதம் இருக்கும் பகுதிகளைத் தீயிட்டுக் கொளுத்தி விடுகிறான்.

காலம் காலமாக, அந்தத் தோப்புதான் ஊர் முழுவதற்கும் புளியைக் கொடுத்துக்கொண்டிருந்தது. அந்தத் தோப்பை அழித்த பிறகு, வேறு ஊர்களிலிருந்து புளியை வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஆனால் அந்தப் புளி, கிராம மக்கள் யாருடைய மனதையும் நிரப்பவில்லை. அந்த ஊர் ஆச்சி ஒருவர் சொல்வதுபோல, ‘புளியெ வாயிலெ வைக்க முடியல்லே’. இறுதியில், அவன் நினைத்ததுபோல கரும்பு ஆலையைக் கட்டிவிடுகிறான். ஆனால், அதனால் அவனுக்கு நிம்மதியும் சந்தோஷமும் கிடைத்ததா என்றால், அது பெரிய கேள்வி.

அந்த ஆச்சி அவனிடம் புளியைப் பற்றிச் சொல்லும்போது, அந்த ஊருக்கு அவன் வந்த போது இருந்த புளிய மரங்கள் அவன் நினைவில் படர்கின்றன. அப்போது, அவனுக்குள் ஏதோ ஒரு கலக்கம் வந்துவிடுவதைச் சொல்லாமல் சொல்லிவிடுகிறார் கந்தசாமி. அந்த உணர்வு நமக்கும் படர்ந்துவிடுகிற கணத்தில், இந்தப் படைப்பு வெற்றிபெற்றுவிடுகிறது.

எந்த ஒரு திடீர்த் திருப்பங்களும் இல்லாத, மிகவும் எளிமையான கதை. அதைவிட எளிமை, ஆரவாரமற்ற மொழி நடை. யதார்த்தமான கதை மாந்தர்கள். உழைப்புக்குக் கூலியாகப் பணம் வாங்காமல் நெல் கேட்கிற, நெல்லைக் கொடுத்து நல்லெண்ணெய் வாங்குகிற பண்டமாற்றுக் கலாச்சாரம் என நாவலின் கட்டமைப்பு புதுமையான ஒரு கதை சொல்லல் முறையைக் கொண்டுள்ளது. 1960-களின் காலத்துக்கு அது புதுமைதான்! 

பணப் பயிர்த் தொழில் ஒன்றுக்காகக் காட்டை அழிப்பது என்கிற விஷயமே அப்போது புதியதுதான். அதை எழுத்தில் கொண்டுவந்தது, தமிழ் இலக்கியத்துக்குப் புதிய திறப்பை வழங்கியது. ஆனால், சா.கந்தசாமி, சுற்றுச்சூழலைப் பேசுகிற நாவலாகத்தான் அது இருக்க வேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டு எழுதவில்லை. சொல்லப்போனால், இந்த நாவலின் எந்த இடத்திலும், சுற்றுச்சூழலை, காடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்று பிரச்சார தொனியே இருக்காது. மாறாக, ‘சாயாவனம்’ என்கிற காடு எப்படி இருக்கிறது என்கிற விவரிப்புகள் மூலமாகவே, ‘அந்தக் காடு பாதுகாக்கப்பட வேண்டுமே’ என்கிற எண்ணத்தை நமக்குள் எழச் செய்துவிடுகிறார்.

‘ஒவ்வொரு செடியாக வெட்டி வீழ்த்திக்கொண்டே முன் நோக்கிச் சென்றுகொண்டிருந்தான் சிதம்பரம்’ என்று நாவலின் ஓரிடத்தில் சொல்லிவிட்டு, அடுத்த பத்தியில் ‘மரமும் செடியும் கொடியும் மனிதனோடு நடத்தும் ஒரு போராட்டம். ஒவ்வொரு அடியும் பலமான தோல்விதான் அவற்றுக்கு. ஆனால், தன்னு டைய எதிரியைக் கொடூரமாக - கர்வத்தோடு பலவீனப்படுத்தின. தற்காலிகமாகவாவது அவன் சோர்ந்து களைப்புற்றுப் போனான்’ என்று எழுதுகிறார் கந்தசாமி. இப்படி, நாவலின் பல இடங்களில் வனத்தைத் தன் எதிரியாகப் பார்க்கும் பார்வை பரவியிருக்கிறது. இதை எழுத்தாளரின் பார்வையாகக் கொள்ளத் தேவையில்லை. அப்படிச் செய்வது தவறு. அந்தப் பார்வை, கதை நாயகனின் பார்வை. அவ்வளவுதான். அப்படித் தான் பார்க்க வேண்டும்.

பிறகு, கந்தசாமி இப்படி எழுதுகிறார்: ‘அவன் சலிப்புற்று அமரும்போதெல்லாம், ஒரு மரமோ ஒரு செடியோ மெல்ல அசைந்து, மலர்களை எவ்விதப் பிரயாசையுமின்றி உதிர்க்கும்’. ஆம், இயற்கை அப்படித்தான் இருக்கும். என்னதான் மனிதன், இயற்கையைப் பல விதங்களில் பாதித்தாலும், அதிலிருந்து தன்னைப் புதுப்பித்துக்கொள்கிற, மீண்டெழுகிற தன்மை இயற்கைக்கு உண்டு. அதனால்தான், அது மனிதனை மீறிய பெரும் சக்தியாக இருக்கிறது.. ‘சாயாவன’மாக இருக்கிறது!

நன்றி: தி இந்து 

Thursday, March 1, 2018

டிரம்பின் ஓராண்டு: என்ன நினைக்கிறது அமெரிக்கா?

ந.வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 28 பிப்ரவரி 2018

 
ஜனவரி 20-ம் தேதியுடன் அமெரிக்க அதிபராக ஓராண்டை நிறைவுசெய்திருக்கிறார் டிரம்ப். வாழ்த்துகளைவிடவும் விமர்சனங்களைத்தான் அதிகம் எதிர்கொள்கிறார். அவரது ஆட்சியையும் செயல்பாடுகளையும் விமர்சிக்கும் புத்தகங்கள் அடுத்தடுத்து வெளியாகின்றன. தான்தோன்றித்தனமாகச் செயல்படுபவர் என்று தொடங்கி மனப்பிறழ்வு கொண்டவர் எனும் அளவுக்கு அவரைக் கடுமையாக விமர்சிக்கின்றன பத்திரிகைகள். நிக்ஸனுக்குப் பிறகு ‘இம்பீச்மென்ட்’டை (பதவிநீக்க நடவடிக்கை) எதிர்கொள்ளும் அளவுக்கு அதிருப்தி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறார் என்றும் பேசப்படுகிறது.

அமெரிக்காவின் அரசியல் குற்றச்சாட்டு நடைமுறைப்படி, அதிபர் பதவியில் இருக்கும்போது மட்டுமல்ல, அதற்கு முன்பு டிரம்ப் ஏதேனும் குற்றம் செய்திருந்தாலும் அவற்றை அரசியல் குற்றச்சாட்டின் கீழ் கொண்டுவர முடியும். அதேபோல, அதிபர் பதவியில் இருக்கும்போது அலுவல் சார்ந்த குற்றம் மட்டுமல்லாமல், தனி நபராகச் செய்யும் குற்றத்தையும் அரசியல் குற்றச்சாட்டின்கீழ் கொண்டுவர முடியும்.

டிரம்பைப் பொறுத்தவரை குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக அவர் முன்னிறுத்தப்பட்ட காலத்திலிருந்தே அவரது கடந்தகாலத் தவறுகள் தொடர்பாகப் பல விஷயங்கள் பேசப்பட்டன. அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிரான மனநிலை பரவலாகிவந்த சூழலில், ‘கறுப்பர்களுக்கு என்னால் வீடுகளை வாடகைக்கு விட முடியாது’ என்று சொன்னவர் டிரம்ப். இதனால் ‘நியாயமான வீட்டுவசதிச் சட்டம் 1968-ன் கீழ் அவர் மீது வழக்கும் தொடுக்கப்பட்டது. ஆனால் இன்று வரை, அந்த வழக்கு முடித்துவைக்கப்படவில்லை.

பொதுமக்களுக்கு என்று சொல்லி முறையான அனுமதி இல்லாமல் அறக்கட்டளையைத் தன் சுயநலத்துக்காக டிரம்ப் பயன்படுத்தியவர். இதுதொடர்பாகவும் ஒரு வழக்கு உண்டு. சட்டத்துக்குப் புறம்பாகக் குடியேறுபவர்களைத் தன் முதல் எதிரியாகக் காட்டிக் கொள்ளும் டிரம்ப், ஒரு காலத்தில் சட்டத்துக்குப் புறம்பாகப் பலரை அமெரிக்காவுக்கு வரவழைத்துத் தன்னுடைய ‘டிரம்ப் டவர்’ எனும் கட்டிடத்தைக் கட்டவும், ‘டிரம்ப் மாடல் மேனேஜ்மெண்ட்’ எனும் ‘அழகிப் போட்டி’ நிறுவனத்தில் வேலைசெய்யவும் ஈடுபடுத்தினார். அவர்கள் உழைப்பைச் சுரண்டினார் என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.

இந்தக் குற்றச்சாட்டுகளும் வழக்குகளும் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால், டிரம்ப் அதிபர் பதவியில் இருக்கும்போது அவர் மீது அரசியல் குற்றச்சாட்டு சுமத்தி, அவரைப் பதவியிலிருந்து விலக வைக்க முடியும் என்கிறார், ‘தி கேஸ் ஃபார் இம்பீச்மெண்ட்’ என்ற நூலை எழுதிய ஆலன் ஜே.லிட்ச்மன். வாஷிங்டனில் உள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைப் பேராசிரியராகப் பணியாற்றும் லிட்ச்மன், அமெரிக்காவின் கடந்த 30 ஆண்டு அதிபர் தேர்தல் முடிவுகளைக் கச்சிதமாகக் கணித்தவர் என்ற பெருமைக்குரியவர் – டிரம்ப் வெற்றி உட்பட!

 
அமெரிக்காவில் அதிபர் ஒருவரின் மீது அரசியல் குற்றச்சாட்டு பதிவானால், முதலில் அதை நீதித் துறைக் குழு விசாரிக்கும். பிறகு, அவர் மீது சுமத்தப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டின் மீதும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவையில் ஓட்டெடுப்பு நடக்கும். ஒரு குற்றச்சாட்டின் மீது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குகள் பதிவானால், மேலவையான செனட் சபையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். அந்த விசாரணையை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிதான் விசாரிப்பார். எனினும், செனட் சபையே அங்கு அனைத்து முடிவுகளையும் எடுக்கும். நீதிபதியின் தீர்ப்பைக்கூட அதனால் ஒதுக்கிவிட முடியும்.

இந்த நடைமுறையின் கீழ் இதுவரை ஆண்ட்ரூ ஜான்சன், பில் கிளிண்டன் ஆகியோர் மீது மட்டும்தான் பதவிநீக்க நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இருவருமே குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள். வியட்நாம் மீது போர் தொடுத்தது, ‘வாட்டர்கேட்’ ஊழல் ஆகிய காரணங்களுக்காக அதிபர் ரிச்சர்ட் நிக்ஸன் மீது பதவிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், விசாரணைக்கு முன்னரே பதவியை ராஜினாமா செய்துவிட்டார் நிக்ஸன். ராஜினாமா செய்த முதல் அமெரிக்க அதிபர் என்ற ‘பெருமை’யையும் அவர் பெற்றார்.

நிக்ஸன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, தேசத் துரோகம். இரண்டு, மானுடத்துக்கு எதிரான குற்றம். வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டுவர தன்னிடம் ரகசியத் திட்டம் இருப்பதாகக் கூறி, அமைதிப் பேச்சுவார்த்தையைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார். இதனால் பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்களையும் வியட்நாமியர்களையும் சாவின் விளிம்பில் நிறுத்தினார். இதைத் தேசத்துரோகக் குற்றமாக அமெரிக்கா கருதியது. 1965-ல் அமெரிக்காவின் வியட் நாம் போர், அருகிலிருந்த கம்போடியாவிலும் பரவியது. அங்கு அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு குண்டுப் பொழிவுகளை அமெரிக்கா மேற்கொண்டது. இந்த ரகசியப் போர் ‘மானுடத்துக்கு எதிரான குற்றம்’ என்று அழைக்கப் பட்டது.

டிரம்பின் கதையும் கிட்டத்தட்ட இதேதான். அதிபர் தேர்தலில் தான் வெற்றிபெறுவதற்காக ரஷ்யாவின் உதவியை நாடியதை தேசத் துரோகக் குற்றமாகக் கருத முடியும் என்கிறார் லிட்ச்மன். தேர்தல் பிரசாரத்தின்போது ஹிலாரி கிளிண்டனின் மின்னஞ்சல்களை ரஷ்யா பரிசோதிக்க வேண்டும் என்று டிரம்ப் கேட்டுக்கொண்டது மன்னிக்க முடியாத குற்றம் என்கிறார் அவர். அதேபோல, பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியதை ‘மானுடத்துக்கு எதிரான குற்றம்’ என்று கூறலாம்.

வெள்ளை மாளிகைக்குள் அதிபர் டிரம்பின் நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன என்பது குறித்து மைக்கேல் வுல்ஃப் என்பவர் எழுதிய ‘ஃபயர் அண்ட் ஃப்யூரி’ எனும் புத்தகம் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது. வெள்ளை மாளிகையில் பணியாற்றும் சிலரிடம் சேகரித்த தகவல்களைக் கொண்டு இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். தன்னுடைய எண்ணங்களை, வார்த்தைகளைக் கட்டுப்படுத்தத் தெரியாமல், தான்தோன்றித்தனமாக எதையாவது செய்வது டிரம்பின் வழக்கம் என்கிறார். அதற்கான ஒரு சான்று, ‘அணு ஆயுத பட்டன் என் கையிலும் இருக்கிறது’ என்று டிரம்ப் சொன்னது. ‘என்னை விடவும் இந்த விஷயத்தைப் பற்றி வேறு யாருக்கும் தெரியாது’, ‘என்னால் மட்டுமே இதைச் சரிப்படுத்த முடியும்’ என்று அடிக்கடிச் சொல்வது அவரது சுயமோகத்தைக் காட்டுகிறது என்று லிட்ச்மன் சுட்டிக்காட்டுகிறார். மற்றவர்களைத் தன்னுடைய சுயத்தின் ஒரு பகுதியாகவோ அல்லது தன்னுடைய நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கான கருவியாகவோ பார்க்கும் குணம் சுயமோகிகளுக்கு உண்டு. அடுத்தவர் சொல்லும் அறிவுரையையோ அல்லது விமர்சனத்தையோ அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த ‘மனநிலைப் பிறழ்வு’ விஷயத்தை விவாதிப்பதற்கும் ஒரு காரணம் உண்டு. அரசியல் குற்றச்சாட்டு நடைமுறைப்படி, அதிபர் பதவியில் இருப்பவருக்கு, அதிபர் அலுவல்களைக் கவனிக்க முடியாத அளவுக்கு உடல்நிலை அல்லது மனநிலை மோசமாக இருந்தால், அவரைப் பதவியிலிருந்து விலக்க முடியும். அமெரிக்க அரசியலமைப்பின் 25-வது சட்டத் திருத்தம் இதற்கு வழிவகுக்கிறது. ‘அதிபராக டிரம்ப் தொடர்வதற்கு, அவரிடம் போதிய மனநலம் இல்லை’ என்று அமெரிக்காவில் உள்ள பிரபல மனநல நிபுணர்கள், உளவியலாளர்கள், சமூகப் பணியாளர்கள் என 35 பேர் அடங்கிய குழு, ‘தி நியூயார்க் டைம்ஸ்’ இதழுக்குக் கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி, முதல் ஓராண்டிலேயே கடுமையான குற்றச்சாட்டுகளையும், பதவிநீக்க நடவடிக்கைக்கு உட்படுத்தப்படலாம் எனும் ஊகங்களையும் எதிர்கொண்டிருக்கும் டிரம்ப், எதுபற்றியும் அலட்டிக்கொள்ளவில்லை. அவர் சிரித்த முகத்துடன் பேசுகிறார்: “அமெரிக்க அதிபருக்கான ஆளுமை அதிகம் கொண்ட ஒரே அதிபர் நான்தான், ஆபிரஹாம் லிங்கனைத் தவிர!”

நன்றி: தி இந்து (தமிழ்)