Saturday, June 17, 2017

கல்லறைத் தோட்டத்தின் சந்தோஷக் கணங்கள்!

ந.வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 11 ஜூன் 2017

முதல் நாவலை எழுதி முடித்துவிட்டு, அடுத்த நாவலைக் கொண்டு வருவதற்கு, ஒரு நாவலாசிரியருக்கு இருபது ஆண்டுகள் தேவைப்படுகின்றன என்பது வாசகருக்கு வேண்டுமானால் மலைப்பாக இருக்கலாம். நாவலாசிரியருக்கோ, ‘உள்ளுக்குள் ஒரு படைப்பு உருவாகிக்கொண்டிருக்கும் காலம்’ அது!

 தான் எழுதிய முதல் நாவலுக்கே புக்கர் பரிசு கிடைக்கப் பெற்றவர் அருந்ததி ராய். அப்போது அவர் எழுத்தாளராக மட்டுமே இருந்தார். 1997-ம் ஆண்டு ‘காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்’ எனும் அவரின் முதல் நாவல் வெளியானது. சரியாக 20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘தி மினிஸ்ட்ரி ஆஃப் அட்மோஸ்ட் ஹேப்பினஸ்’ எனும் நாவல் பெங்குவின் பதிப்பக வெளியீடாக இந்த மாதம் 6-ம் தேதி உலகெங்கும் வெளியானது.

இந்த 20 ஆண்டுகளில் அருந்ததி ராய் என்பவர் எழுத்தாளராக மட்டுமே இல்லாமல், குறிப்பாக, புனைவு எழுத்தாளராக மட்டுமே தன்னைக் கருதிக்கொள்ளாமல், நாட்டில் அவ்வப்போது நிகழும் அரசியல் நிகழ்வுகளின் அடிப்படையில், அபுனைவு எழுத்துகள் மூலமும் தன் கருத்துகளைப் பிரதிபலித்துவந்திருக்கிறார். நர்மதா அணை உள்ளிட்ட மக்களுக்கு எதிரான வளர்ச்சித் திட்டங்களை விமர்சித்தல், தூக்குத் தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுத்தல், மாவோயிஸ்ட்டுகளுடன் தண்டகாரண்யம் காட்டுக்குள் பயணம் செய்தல் எனப் பல்வேறு விதங்களில் தன்னை ஒரு செயற்பாட்டாளராகவும் முன்னிறுத்திக்கொண்டிருக்கிறார்.

எழுத்தாளர் என்ற நிலையிலிருந்து செயற்பாட்டாளர் என்ற நிலைக்கு அவர் வர நேர்ந்திருக்கும் இருபது ஆண்டு அனுபவங்களின் அடிப்படையில் அவர் எழுதியிருக்கிற படைப்பாகத் தான் நாம் அவரின் இரண்டாவது நாவலை அணுக வேண்டும். இந்த நாவலின் கதை, இந்தியாவின் கடந்த இருபது ஆண்டு கால வரலாற்றில் நிகழ்ந்திருக்கும் அரசியல் நிகழ்வுகளின் திரட்சியாக அமைந்திருக்கிறது. அஞ்சும் என்ற திருநங்கை, காஷ்மீர் பிரிவினைவாதியைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட திலோத்தமா, காவல்துறையின் வன்புணர்வால் பிறந்த தன் மகளை டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் விட்டுச்செல்லும் ரேவதி எனும் மாவோயிஸ்ட் போராளி ஆகிய மூன்று பெண்களின் பார்வையில் கதை சொல்லப்படுகிறது. 


அஞ்சும் தனது வாழ்க்கையை நேர்க்கோட்டில் சொல்லிச் செல்ல, திலோத்தமாவின் வாழ்க்கையோ முன்னும் பின்னுமாகச் சொல்லப்படுகிறது. ரேவதியின் வாழ்க்கையோ கடித முறையில் சொல்லப்படுகிறது. இப்படி அந்தப் பெண்களின் வாழ்க்கையைச் சொல்லும் முறையில் வித்தியாசம் காட்டியதோடு, அவர்கள் நடமாடிய இடங்களான முறையே டெல்லி, காஷ்மீர், தெலங்கானா ஆகியவற்றின் நிலப்பரப்பையும் அந்தந்தக் காலச் சூழலில் நிலவிய அரசியல் பின்னணியோடு கதையை நெய்திருப்பதில் தேர்ந்த எழுத்தாளராக வெற்றி பெற்றிருக்கிறார் ராய். நாவலாசிரியராக வெற்றி பெற்றிருக்கிறாரா என்பது, இந்த நாவல் பரவலான வாசகப் பரப்பில் என்ன மாதிரியான அதிர்வலைகளை ஏற்படுத்தப்போகிறது என்பதைப் பொறுத்து அமையும்!

இறந்தவர்களைப் புதைக்கும் கல்லறைத் தோட்டம்தான் நாவலில் முக்கியமான சம்பவங்கள் நடைபெறும் இடம். அதுதான் பல்வேறு அரசியல் சூழல்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் ஒன்றுகூடும் இடமாகவும், எங்கோ தொலைத்த தங்களின் சந்தோஷக் கணங்களைத் தேடிக் கண்டடைகிற இடமாகவும் இருக்கிறது. ‘மனிதர்கள் தங்களின் உண்மையான மகிழ்ச்சியை இறந்த பிறகுதான் கண்டடைகிறார்கள்’ எனும் சிந்தனையின் குறியீடா கவும் கல்லறைத் தோட்டத்தை நாம் அணுகலாம்.

அவுரங்கசீப் காலத்தில் கடவுள் இல்லை என்று சொன்ன ஹஸ்ரத் ஷர்மத் ஷாஹீத்தின் வரலாற்றைச் சொல்வதில் தொடங்கி, இந்தியப் பிரிவினை, நெருக்கடிநிலைக் காலம், இந்திரா காந்தி கொலை, சீக்கியர் மீதான தாக்குதல், போபால் விஷ வாயுத் தாக்குதல், காஷ்மீர் தீவிரவாதம், பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம், இரட்டைக் கோபுரத் தாக்குதல், இராக்கில் அமெரிக்கா நடத்திய போர், ஆப்பரேஷன் ‘க்ரீன் ஹன்ட்’, மாட்டு அரசியல், அண்ணா ஹசாரே போராட்டம், உனா எழுச்சி உள்ளிட்ட இந்திய, உலக அரசியல் நிகழ்வுகளை எல்லாம் நாவலின் ஆங்காங்கே வரும் ஓரிரு கதாபாத்திரங்களின் மூலம் தொட்டுச் செல்கிறார் ராய். இந்தியாவின் கடந்த இருபது ஆண்டுகால வரலாற்றை இந்த நாவலின் மூலம் ஒரு கழுகுப் பார்வை பார்த்துவிட முடியும் என்பது இந்நாவலின் சிறப்பம்சம். தமிழகத்தில் சாதியம் எப்படி வேரூன்றியிருக்கிறது என்பதற்கு முருகேசன் எனும் ராணுவ வீரர் கதாபாத்திரம் மூலமாக அருந்ததி ராய் சொல்லும் செய்தி, மிகவும் அழுத்தமான ஒன்று!

‘சில்லுசில்லாக உடைந்திருக்கிற ஒரு கதையை எப்படி மொத்தமாகச் சித்தரிப்பது? எல்லாருமாக மாறுவதன் மூலம். இல்லை. எல்லாமுமாக மாறுவதன் மூலம்!’ என்று நாவலின் பின்னட்டையில் குறிப்பிடுகிறார் அருந்ததி ராய். நாமும் அப்படி நாவலின் ஒவ்வொரு கதாபாத்திரமாக மாறும்போது, ஒவ்வொரு அரசியல் சம்பவத்திலும் தன்னைப் பொருத்திப் பார்த்துக்கொள்ளும்போது, இந்த நாவலின் முழுமையை நம்மால் உணர முடியும். 

நன்றி: தி இந்து (கலை இலக்கியம்)

Monday, June 5, 2017

இயற்கையாக வாழ முடியாதா என்ன?

ந.வினோத் குமார்
பதிப்பிக்கப்பட்ட தேதி: 1 ஏப்ரல், 2017

‘பூமியின் மீது மெள்ள நட!' மிகவும் மென்மையாக இருக்கிறதல்லவா இந்த வரி? ஆனால், அது ஒரு வாழ்க்கை முறை என்றால், உங்களால் நம்ப முடிகிறதா? ஆம். நம் வாழ்க்கை முறை அப்படித்தான் இருக்க வேண்டும் என்கிறார் விக்ரம் சோனி.

 ‘நேச்சுரலி' எனும் புத்தக அட்டையில் இடம்பெற்றிருக்கும் இந்த வரி, புத்தகம் சொல்ல வரும் விஷயத்துக்கு மேலும் அழகூட்டுகிறது. இந்தப் பூமியில், இயற்கையைத் தொந்தரவு செய்யாமல் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைச் சொல்வதுதான் இந்தப் புத்தகத்தின் சாராம்சம்.
 
காடு காத்தவர்

டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகப் பணிபுரிந்தவர் விக்ரம் சோனி. அங்கிருந்து ஓய்வுபெற்ற பிறகும் இயற்பியல், இயற்கைப் பாதுகாப்பு தொடர்பான களங்களில் ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறார். அவர் எழுதி, ‘ஹார்பர் காலின்ஸ்' பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் புத்தகம்தான் ‘நேச்சுரலி'. பேராசிரியர், எழுத்தாளர் என்பதைத் தாண்டி, விக்ரம் சோனிக்கு இன்னொரு பெருமையும் உண்டு. டெல்லியில் உள்ள காடுகளைப் பாதுகாப்பதற்காக இவரும் இவரது நண்பர்களும் இணைந்து தொடுத்த பொதுநல வழக்குதான், சுற்றுச்சூழல் தொடர்பாக நாட்டில் தொடரப்பட்ட முதல் பொதுநல வழக்கு.

இந்தப் புத்தகத்தின் அறிமுக நிகழ்வுக்காகச் சமீபத்தில் சென்னையில் உள்ள ‘எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை'க்கு வந்திருந்த அவரிடம் பேசியதிலிருந்து...
 
சித்தாந்தத்தில் அடங்காத இயற்கை

“இமயமலையில் உள்ள குமாவுன் பகுதியில், காடுகளும் மலைகளும் அடர்ந்த நைனிடால் எனும் ஊரில் நான் பிறந்தேன். எனது தந்தை வன அலுவலர். அவருடன் காடுகளில் பல கல் தொலைவுக்கு அலைந்திருக்கிறேன். அப்போது நான் பெற்ற அனுபவங்கள், வாழ்நாள் முழுவதும் என்னை இயற்கை மீதான பிடிப்புடன் இருக்கப் பணித்தன.

இயற்கையின் இயங்கியல் முற்றிலும் வேறானது. அதில் எல்லா உயிர்களுக்கும் பங்குண்டு. ஆனால் மனிதனோ, தான் மட்டுமே உயர்ந்தவன், தனக்கு மட்டுமே பூமி சொந்தம் என்பதுபோல அகங்காரமாக நடந்துகொள்கிறான். அதனால் இயற்கையின் இயங்கியலின் சமநிலை சீர்குலைந்தது. அதனால் நாம் நிறைய பேரழிவுகளைக் கடந்து வந்திருக்கிறோம். மீண்டும் அந்தச் சமநிலையைச் சாத்தியப்படுத்துவதற்கு ஒரு புதிய வாழ்வியல் முறையை நாம் கைக்கொள்ள வேண்டி யிருக்கிறது. அதை எப்படிச் செய்வது என்று யோசித்த கணத்தில்தான் இந்தப் புத்தகம் உருப்பெற்றது.

கார்ல் மார்க்ஸ் சொன்ன இயங்கியல் பொருள்முதல்வாதமோ அல்லது ஜான் மேனார்டு கீன்ஸ், ஜான் ஸ்டூவர்ட் மில் ஆகியோர் சொன்ன ‘தாராளச் சந்தை' சிந்தனையோ... இப்படி எந்தச் சித்தாந்தச் சிமிழுக்குள்ளும் நமது பூமி அடங்கிவிடவில்லை.
 
வெள்ள வடிகால்களின் தேவை

“ஒரு சின்னப் பரிசோதனையை நீங்களே செய்து பாருங்கள். இரண்டு கண்ணாடிக் குடுவைகளை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஒன்றில் நீரையும் இன்னொன்றில் மணலையும் நிரப்புங்கள். இப்போது, குடுவையில் உள்ள நீரை, மணல் உள்ள குடுவையில் ஊற்றுங்கள். என்ன தெரிகிறது? நீர்க் குடுவையிலிருந்த பெருமளவு நீரை, மணல் உறிஞ்சியிருக்கும். ஆம், மணல் நீரைச் சேமித்து வைக்கும் தன்மை கொண்டது.

ஆற்றங்கரையோரம் பாருங்கள். அதன் இரண்டு புறங்களிலும் மணல் இருக்கும். அவைதான் வெள்ள வடிகால்கள். இந்த மணலுக்கு அடியில் குறைந்தபட்சம் 40 அடி ஆழம்வரை நீர் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு ஆற்றின் நீளம், வெள்ள வடிகால்களின் அகலம் ஆகியவற்றின் அடிப்படையில், மணலுக்குள் சேமிக்கப்படும் நீரின் அளவும் மாறுபடும்.

வருடத்திற்குச் சுமார் 1,300 மில்லிமீட்டர் மழையைப் பெறும் தமிழகம் போன்ற மாநிலங்களில் இப்படியான வெள்ள வடிகால்கள் நிறைய இருக்கின்றன. அவற்றை முறையாகப் பாதுகாத்தால் ஒவ்வொரு தமிழரும் இயற்கை ‘மினரல் வாட்டர்' அருந்த முடியும். ஆனால், துரதிருஷ்டவசமாக, மணல் கொள்ளையால் அப்படியான வெள்ள வடிகால்களைத் தமிழகம் இழந்துவருகிறது. 


கழிவு பூமிக்குக் கேடு

1920-களில் தாமஸ் மிட்ஜ்லி எனும் வேதியியலாளர் முக்கியமான இரண்டு கண்டுபிடிப்புகளைச் செய்தார். ஒன்று, வாகனங்களின் இன்ஜினில் ஏற்படும் பிரச்சினையைச் சமாளிக்கப் பெட்ரோலுடன் ஈயத்தைச் சேர்த்தது. இன்னொன்று, குளிர்சாதனப் பெட்டிகளில் குளோரோ ஃபுளூரோ கார்பன் எனும் வாயுவைச் சேர்த்தது. இந்த இரண்டு கண்டுபிடிப்புகள் தந்த கழிவுகள்தான் ஓசோனில் துளை ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணங்களாகக் கருதப்படுகின்றன.

இப்படியான கண்டு பிடிப்புகளை மனிதர்களுக்கு அறிமுகப்படுத்தும்போது, ‘இது பூமியின் ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிப்பதா?' எனும் கேள்வியை நாம் எப்போதாவது கேட்டிருக்கிறோமா?

தொழில்நுட்ப வளர்ச்சி கொண்டுவந்து கொட்டும் இந்தக் கழிவுகள் காற்றை, மண்ணை, நீரை, திறந்தவெளியை, காடுகளை, கடலை, உயிர்களை எப்படியெல்லாம் சிதைக்கின்றன? மனிதனின் உருவாக்கங்கள் எல்லாம் கழிவுகளையே தருகின்றன. ஆனால் இயற்கையைப் பாருங்கள். அது உருவாக்கும் எதுவொன்றும் கழிவு இல்லை. முக்கியமாக, நச்சுக் கழிவுகள் இல்லை. அப்படியே கழிவுகள் ஏற்பட்டாலும், அவற்றை உணவாக்கிக் கொள்ள இன்னொரு உயிரினத்தை, உணவுச் சங்கிலியில் இணைத்துவிடுகிறது இயற்கை. காலம்காலமாக உயிரினச் சுழற்சிச் சக்கரம் இப்படித்தான் சுழன்றுவருகிறது. ஆனால் மனிதன் உருவாக்கிய கழிவுகளால், எத்தனையோ உயிரினங்களை நாம் இழந்திருக்கிறோம்; இழந்து வருகிறோம். லண்டனில் உள்ள உயிரியல் சங்கம், ‘2006-ம் ஆண்டில் 29 சதவீத உயிரினங்களை இழந்தோம். 2015-ல் அந்த எண்ணிக்கை 52 சதவீதமாக உயர்ந்திருக்கிறது' என்று எச்சரிக்கிறது. என்ன செய்யப் போகிறோம் நாம்?
 
புத்தரைப் பின்பற்றுவோம்

“இதுவரையில் இந்தப் பூமியில் தோன்றிய மிகச் சிறந்த சூழலியலாளர், விஞ்ஞானி யார் என்று என்னைக் கேட்டால், நான் கௌதமப் புத்தரைத்தான் சொல்வேன். சுயம், சமூகம், பிரபஞ்சம் எனும் மூன்று நிலைகளில் இயற்கையோடு இணைந்து வாழப் புத்தர் நமக்கான வழியைக் காட்டுகிறார்.

சுயம் என்ற நிலையில், நமக்கு எது அத்தியாவசியமாகத் தேவைப்படுகிறதோ அதை மட்டும் நாம் வைத்துக்கொள்வது, சமூகம் என்ற நிலையில் ஏற்றத்தாழ்வுகள் கடந்து அனைவரையும் சமமாக நடத்துவது, பிரபஞ்சம் எனும் நிலையில் அனைத்து உயிர்களிலும் தன்னைக் காண்பது ஆகிய வழிகளைப் பின்பற்றினால் இந்தப் பூமி இன்னும் பல காலம் தழைத்திருக்கும். சுருக்கமாக ‘பூமியின் மீது மெள்ள மெள்ள நடை பயில்வோம்!'’ 

நன்றி: தி இந்து (உயிர் மூச்சு)