Friday, April 22, 2016

இது திருடர் பாதை அல்ல!

ந.வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 22 ஏப்ரல், 2016

குழந்தைக்கு வாயில்
சொட்டு மருந்து!
வாக்காளருக்குக் கையில்
சொட்டு மருந்து!
இரண்டுமே போலியோ? 

என்ற ஒரு புதுக்கவிதை உண்டு. இந்தியா போன்ற ஒரு ஜனநாயகத்தின் அச்சாணி தேர்தல்தான். அதை வைத்துக்கொண்டு வாரிச் சுருட்டுபவரும் உண்டு. அதில் போட்டியிட்டு வாழ்க்கையைத் தொலைத்தவர்களும் உண்டு. வெற்றிபெற்று பலரை வாழ வைத்தவர்களும் உண்டு.

இந்தத் தேர்தல் ஜனநாயகத்தால்தான் இந்தியர்களின் சராசரி வாழ்நாள் 31.4 ஆண்டுகள் என்பதிலிருந்து 67 ஆண்டுகளாக உயர்ந்தது. மக்களின் கல்வி அறிவு 16 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாக உயர்ந்தது. சுமார் 94 சதவீதப் பெண் குழந்தைகள் பள்ளிக் கல்வியையாவது பெற முடிந்தது.

அப்படிப்பட்ட தேர்தல் இதோ அடுத்த மாதம் 16-ம் தேதி நமக்கு வருகிறது. ஜனநாயகத் திருவிழா என்று கொண்டாடப்படுகிற இந்தத் தேர்தலுக்கு இந்தியாவில் வளமான வரலாறு உண்டு. பண்டைய இந்தியா முதல் தற்போதைய ஃபேஸ்புக் கால இந்தியா வரை, தேர்தலின் தோற்றம், வளர்ச்சி, தேர்தல் ஆணையம் உருவான விதம், அது சந்தித்த சவால்கள், செய்த சாதனைகள், எதிர்பார்க்கும் மாற்றங்கள் உள்ளிட்டவற்றைப் பற்றிப் பேசுகிறது ‘அன் அன்டாக்குமென்டெட் வொண்டர்: தி மேக்கிங் ஆஃப் தி கிரேட் இந்தியன் எலக்ஷன்' எனும் புத்தகம்.

ஏப்ரல் 23-ம் தேதி 'உலகப் புத்தக நாள்' கொண்டாடப்படும் இந்தச் சமயத்தில், இந்தப் புத்தகம் குறித்து அறிந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்.

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷிதான் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர். கடந்த 2014-ம் ஆண்டு ரூபா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

தேர்தல் ஆணையராகவும், தலைமைத் தேர்தல் ஆணையராகவும் 2006-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டுவரை இவர் பணியாற்றிய காலம் மிகவும் குறிப்பிடத்தகுந்த ஒன்று. அரசியல் கட்சிகள் வாக்குக்குப் பணம் கொடுக்கும் நடவடிக்கைகளுக்குக் கடிவாளம் போட்டது, கட்சிகளின் தேர்தல் செலவுகளைக் கண்காணிக்கத் தனிப்பிரிவு அமைத்தது, இதர நாடுகளுக்கு தேர்தல் குறித்த பயிற்சிகளை அளிக்க ‘ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மைக்கான இந்திய சர்வதேசப் பயிற்சி நிலையம்' ஏற்படுத்தியது, ‘தேசிய வாக்காளர் தினம்' கடைப்பிடிக்கப்படும் வழக்கத்தை அறிமுகப்படுத்தியது என இவரின் சாதனைகள் பல. தன்னுடைய கறாரான நடவடிக்கைகளுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகங்கள் ஆகியோரிடம் எதிர்ப்புகளைச் சம்பாதித்தவர். 

அப்படிப்பட்ட ஒருவர் இந்தியத் தேர்தல் வரலாறு குறித்து எழுதும்போது அது மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்ததாகிறது. 


ஐரோப்பா, தெற்கு மற்றும் மத்திய அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களின் மொத்த மக்கள் தொகையைவிட இந்தியாவில் தேர்தலின்போது வாக்களிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்கிறார். 

கெளடில்யரின் ‘அர்த்தசாஸ்திர'த்திலும், உத்திரமேரூர் கல்வெட்டுகளிலும் ‘குடவோலை' உள்ளிட்ட தேர்தல் முறைகள் பற்றிக் குறிப்புகள் உள்ளதைச் சுட்டிக்காட்டும் அவர், இந்தியா சுதந்திரம் அடைந்த அடுத்த சில ஆண்டுகளிலேயே பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டிருப்பதைக் கவனப்படுத்துகிறார். 

கல்வி அறிவில் முதன்மையாக இருக்கும் கேரளத்தில்கூட‌ 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள‌ 140 தொகுதிகளில், 127 தொகுதிகளில் ஆண்களைவிடப் பெண்களின் வாக்குப்பதிவு அதிகமாக இருந்தது. எனினும், அங்கு 7 பெண்கள் மட்டுமே சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றனர், என்று அவர் சொல்லும் செய்தியின் மூலம், அரசியலில் இன்னும் பெண்களின் பங்களிப்பு பெருமளவில் இல்லாததை அடிக்கோடிட்டுக் காட்டுகிறார். 

1951-52-ம் ஆண்டுகளில்தான் இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. அன்று தொடங்கி இதுவரை 15 பொதுத்தேர்தல்கள், எண்ணற்ற சட்டமன்றத் தேர்தல்கள், இடைத் தேர்தல்கள் என அனைத்துத் தேர்தல்களிலும் கடைக்கோடியில் இருக்கும் வாக்குரிமை பெற்ற எந்த ஒரு மனிதரையும் உள்ளடக்கவே தேர்தல் ஆணையம் முயன்று வருகிறது. உதாரணமாக, கேரளத்தில் சரங்காட்டு தாசன் என்ற ஒருவருக்காக மட்டுமே 2004-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனியாக ஒரு வாக்குச் சாவடி அமைத்து, மூன்று தேர்தல் அலுவலர்கள், இரண்டு போலீஸார் மற்றும் ஒரு ஓட்டுநர் என 6 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

ஆனால் இவ்வளவு நடவடிக்கைகள் மேற்கொண்டும் இன்றுவரை நூறு சதவீத வாக்குப்பதிவு என்பது கனவாகவே இருந்து வருகிறது. 

‘ஒரு ஓட்டுதானேப்பா. அதுக்காக இவ்வளவு கஷ்டமா?' என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆனால், அந்த ஒரு ஓட்டு எப்படியெல்லாம் மாற்றங்களை நிகழ்த்துகிறது என்பதை கடந்த கால தேர்தல்களிலிருந்து எடுத்துக்காட்டுகிறார் ஆசிரியர். 

1998-ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி அமைத்தது. பதவியில் அமர்ந்து 13 மாதங்களுக்குப் பிறகு பா.ஜ.க. கூட்டணியில் இருந்த அ.தி.மு.க., தன்னுடைய ஆதரவைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டியிருந்தது. 1999-ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்ற அந்த வாக்கெடுப்பில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது. எதிர்க்கட்சியாலும் மாற்று அரசு அமைக்க முடியவில்லை. எனவே, அடுத்த சில மாதங்களில் மீண்டும் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. ஒரு ஓட்டு மதிப்பு இப்போது புரிந்திருக்குமே? 

1989-ம் ஆண்டுக்கு முன்பு வரை ‘அரசியல் கட்சிகள்' என்கிற பதமே எந்த ஒரு சட்டத்திலும் பயன்படுத்தப்படவில்லை. எல்லாம் இயக்கம், அமைப்பு என்பதாகத்தான் இருந்தது என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர். அப்படிப்பட்ட அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையத்துக்கு ஏற்படுத்தும் நெருக்கடிகள், விகிதாச்சார அடிப்படையிலான தேர்தல் முறை, தேர்தலில் வெற்றி பெற்ற ஒருவரைப் பதவியிலிருந்து நீக்கும் உரிமை, ‘நோட்டா'வின் தேவை, ‘நோட்டா'வைத் தேர்வு செய்யும் வாக்காளரின் ரகசியத்தன்மையைக் காப்பதன் முக்கியத்துவம், ‘பெய்ட் நியூஸ்' மூலம் சீரழியும் அரசியல் மற்றும் ஊடகக் கலாசாரம் என தேர்தல் தொடர்பான அனைத்துப் பக்கங்களையும் ஆழமாக விவாதிக்கிறார் ஆசிரியர். 

இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்கும்போது, தேர்தல் பாதை திருடர் பாதை அல்ல என்பது உங்களுக்குப் புரிய வரும். 

இந்தியாவில் ஒருவர் 18 வயது அடைந்துவிட்டவர் என்பதற்கான முதல் அத்தாட்சியே வாக்குரிமை பெறுவதுதான். ஆனால் இன்று அது ‘ஓட்டுப் போடுறதுன்னா என்னா? அது ஒண்ணுமில்லப்பா... ‘லைக்' பண்றது' என்கிற அளவில் சுருங்கிவிட்டது மிகவும் வேதனை தரக்கூடிய விஷயம்தான்.
‘ஒரு நாடு ஜனநாயக முறைக்குத் தகுதியில்லாமல் இருக்கலாம். ஆனால் ஜனநாயக முறை மூலம் தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ளலாம்' என்கிறார் நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்திய சென். அவ்வாறு ஒரு நாடு தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்வதற்கான முதல் படிதான் தேர்தல்!
அந்தத் தேர்தலில் உங்கள் வாக்கைச் செலுத்தத் தயாரா நீங்கள்? உங்களின் ஒரு ஓட்டு, நூறு சதவீத வாக்குப்பதிவுக்கு உதவட்டுமே! 

தேர்தல் வரலாறு: சில தகவல்கள்... 

* சுதந்திரம் அடைந்து மூன்றே ஆண்டுகளில் அதாவது, 1950-ம் ஆண்டே பெண்களுக்கு வாக்குரிமையைத் தந்துவிட்டது இந்தியா. ஆனால் அமெரிக்கா தன் நாட்டுப் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க 144 ஆண்டுகள் (1920) எடுத்துக்கொண்டது. சுவிட்சர்லாந்தோ 1971-ம் ஆண்டில்தான்!

* ஆங்கிலேயர் ஆட்சி செய்தபோது பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படவில்லை. 1919-ம் ஆண்டு சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அப்போது பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் மாகாணம் நமது சென்னை மாகாணம்! 

 * முதல் தேர்தல் 1951-ம் ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி இமாசலப் பிரதேசத்தில் தொடங்கி 1952-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி உத்தரப் பிரதேசத்தில் முடிந்தது. சுமார் 68 நாட்களுக்கு இந்தத் தேர்தல் நடைபெற்றது.

* அரசியல் கட்சி சின்னங்கள் வரைய தேர்தல் ஆணையத்தால் கடைசி பணியாளராக நியமிக்கப்பட்டவர் எம்.எஸ்.சேத்தி. அவர் வரைந்த நூற்றுக்கணக்கான சின்னங்கள்தான் இன்று 'ஃப்ரீ சிம்பல்' பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன. கட்சிகளுக்கு இந்தப் பட்டியலில் இருந்துதான் சின்னங்கள் ஒதுக்கப்படுகின்றன.

* தேர்தல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க 1950 எனும் 24 மணி நேரமும் செயல்படும் டோல் ஃப்ரீ எண்ணை தேர்தல் ஆணையம் வைத்துள்ளது. சரி. அது ஏன் 1950? அந்த ஆண்டில்தான் தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டது.

* வாக்குச்சாவடியில் குடியரசுத் தலைவர் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோரின் படங்கள் தவிர வேறு யாருடைய படங்களும் இருக்கக் கூடாது என்பது விதி.

* ஒளிப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலைப் பயன்படுத்திய முதல் மாநிலம் கேரளம். 

நன்றி: தி இந்து (இளமை புதுமை)

Wednesday, April 13, 2016

DR. B.R. AMBEDKAR 125 BIRTH ANNIVERSARY SERIES - I

சாதியை ஒழிக்கும் வழி என்ன?

ந. வினோத் குமார்

தமிழகம் மே மாதம் எதிர்கொள்ள இருக்கிற தேர்தல் முந்தைய தேர்தல்களைக் காட்டிலும் கொஞ்சம் விசேஷமானது. காரணம், பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கைகளில் 'சாதி வெறிக் கொலைகளைத் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என்கிற ரீதியிலான வாக்குறுதிகளை அள்ளி வீசியிருக்கின்றன.

இந்தத் தேர்தலில் யார் சாதிக்கப் போகிறார்களோ இல்லையோ, 234 தொகுதிகளில் பெரும்பாலானவற்றில் 'சாதி'தான் ஜெயிக்கப் போகிறது என்பது நிச்சயம்!

சாதி குறித்து எழுதும் போதெல்லாம் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. அவர் இப்படிச் சொன்னார்: 'நீங்கள் எந்தத் திசையில் திரும்பினாலும் சரி. உங்களின் பாதையில் சாதி எனும் பூதம் குறுக்கிடும். அந்த பூதத்தை நீங்கள் அழிக்கும் வரையில் உங்களால் அரசியல் சீர்திருத்தமோ, பொருளாதார சீர்திருத்தமோ மேற்கொள்ள முடியாது'. யெஸ்... Caste is the monster!

இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் ஆகியோர் படுகொலைக்கு உள்ளானது, பெருமாள் முருகன் உள்ளிட்ட படைப்பாளிகளுக்கு ஏற்பட்ட துர்பாக்கியங்கள் போன்ற தமிழகத்தின் சமீபத்திய நிகழ்வுகள் மற்றும் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கல்புர்கி ஆகியோருக்கு நேர்ந்த மரணங்கள் உள்ளிட்ட தேசிய அளவிலான நிகழ்வுகள் எதை உணர்த்துகின்றன?

இந்து மதத்தின் மீது கட்டப்பட்ட சாதி அமைப்பு இன்னும் உயிர்ப்போடு இருக்கின்றன என்பதைத்தானே?

இந்தச் சூழ்நிலையில்தான் அம்பேத்கரின் 125வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகின்றன. காரணம், தலித்துகள் மட்டுமல்லாது, வலதுசாரி அமைப்புகளும் அம்பேத்கரைக் கொண்டாடத் தொடங்கியிருக்கிறார்கள்.

இப்படியான நிலையில், அம்பேத்கரை நாம் வாசிப்பது, மறுவாசிப்புச் செய்வது மிகவும் அவசியமாகி இருக்கிறது. சாதியம் முன்னெப்போதையும் விட மிகவும் வீர்யத்துடன் இயங்கி வரும் இந்தச் சூழலில், அம்பேத்கரின் 'அனிஹிலேஷன் ஆஃப் காஸ்ட்' (Annihilation of Caste) புத்தகத்தைப் பற்றி அறிந்துகொள்வது மிகவும் பொருத்தமானது.

1936ம் ஆண்டு 'ஜாத் பட் தோடக் மண்டல்' எனும் இந்து மத சீர்திருத்த‌ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டம் ஒன்றில், இந்து மதத்தில் நிலவும் சாதியக் கொடுமைகள் பற்றிப் பேசுவதற்காக அம்பேத்கர் ஓர் உரையைத் தயார் செய்திருந்தார் (அம்பேத்கர் இந்தியாவில் நிலவும் சாதி அமைப்பு பற்றி முனைவர் பட்ட ஆய்வைச் செய்திருக்கிறார் என்பதை நினைவில் கொள்க!). ஆனால், கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக, அவர் எதைப் பற்றிப் பேசப் போகிறார் என்பது குறித்து அறிய அந்த அமைப்பினர் மும்முரமாக இருந்தனர்.

அம்பேத்கர் தன்னுடைய உரையில், வேத சாஸ்திரங்களைப் பற்றி விமர்சிக்கப் போகிறார் என்று தெரிய வந்ததும், அந்த அமைப்பினர் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தை ரத்து செய்துவிட்டனர். இதனால் அம்பேத்கர் அந்த உரையை ஆற்ற முடியாமல் போனது. பின்னர் அதனைத் தன் சொந்தச் செலவில் புத்தகமாக்கி 8 அன்னாக்களுக்கு விற்பனை செய்தார்.

அதே ஆண்டில் முதல் பதிப்பு முழுவதும் விற்றுத் தீர்ந்தது. அடுத்த ஆண்டே (1937) இரண்டாவது பதிப்பு வெளியாகி பரபரப்பாக விற்பனை ஆனது. முதல் பதிப்பு வெளியானபோது காந்தி தன்னுடைய 'ஹரிஜன்' இதழில் இந்தப் புத்தகத்துக்கு எதிராக நீண்ட விளக்கங்களை எழுதினார். அந்தச் சமயம் காந்தியை விட அம்பேத்கர் அவ்வளவு ஒன்றும் பெரிய 'செலிப்ரிட்டி'யாக இல்லை என்பதை கவனத்தில் கொள்க! (இரண்டாவது பதிப்பில் காந்தி எழுதிய விளக்கத்தையும், அதற்கு தான் அளித்த பதிலையும் சேர்த்துப் பதிப்பித்தார் அம்பேத்கர். அந்தப் புத்தகம்தான் தற்போது வரையிலும் பதிப்பிக்கப்படுகிறது).

ஆக, காந்தியே வரிந்துகட்டிக் கொண்டு பதில் எழுதும் அளவுக்கு, அம்பேத்கர் அந்தப் புத்தகத்தில் அப்படி என்ன சொல்லியிருக்கிறார்?


இந்தியாவில் நிலவும் சாதிப் பாகுபாட்டை 'தொழில் பிரிவு முறை' (டிவிஷன் ஆஃப் லேபர்) என்று சிலர் கருதுவதுண்டு. அதாவது, ஒவ்வொருவரும் அவர்கள் செய்யும் வேலையின் அடிப்படையில் சமூகத்தில் அவர்களுக்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதுதான் இதன் சாராம்சம்.

ஆனால் இது 'தொழில் பிரிவு முறை' அல்ல. மாறாக, 'தொழிலாளர்களைப் பிரிக்கும் முறை' (டிவிஷன் ஆஃப் லேபரர்ஸ்) என்கிறார் அம்பேத்கர். அதாவது, ஒவ்வொரு மனிதரையும் அவர்கள் செய்யும் வேலைக்கேற்ப அவர்களைச் சமூகத்தின் மேல் மற்றும் கீழ்ப் படிகளில் வைப்பதுதான் சாதி செய்கிற சதி என்கிறார்.

சாதி எனும் கட்டமைப்பு இந்து மதத்தின் மீது எழுப்பப்பட்டுள்ளது. உண்மையில், இந்து மதம் என்கிற மதமே இந்தியாவில் இல்லை. 'இந்து' என்கிற பெயர் கூட அந்நியப் பெயர்தான். 'இந்து' என்பது பல சாதிகளின் ஒன்றிணைவுதான் என்கிறார் அம்பேத்கர்.

இப்படிச் சொல்லும் அவர் இன்னொரு உண்மையையும் எடுத்துக்காட்டுகிறார். இந்து மதம் என்பது ஒரு 'பரப்புரை மதமாக' (மிஷனரி ரிலீஜியன்) இருந்தது. இந்த மதத்தில் சாதி அமைப்பு வளர்ந்த காரணத்தால்தான் அதனால், பரப்புரை மதமாக நீடிக்க முடியவில்லை என்கிறார்.

26 அத்தியாயங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தில் முதல் 13 அத்தியாயங்களில் சாதி குறித்த பின்னணித் தகவல்களைத் தரும் அம்பேத்கர், 14வது அத்தியாயத்தில் இருந்து சாதியை ஒழிப்பதற்கான வழிகளைச் சொல்கிறார். அதில் முதலாவது, ஒரு சிறந்த சமூகம் என்பது எவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறுகிறார். அதற்கான சிந்தனையை அவர் பிரெஞ்சுக் குடியரசில் இருந்து எடுக்கிறார். ஆம், ஒரு சிறந்த சமூகம் என்பது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் கொண்டதாக‌ இருக்க வேண்டும் என்கிறார்.


ஐரோப்பாவில் ஒருவர் தன்னுடைய பவுதீக ஆயுதத்தை ராணுவப் பணியில் ஈடுபடும் உரிமையின் மூலமும், போராட்டங்களின் மூலம் தனது அரசியல் ஆயுதத்தையும், கல்வியின் மூலம் தார்மீக ஆயுதத்தையும் பெற்றார்கள். ஆனால் இந்தியாவில் இந்த ஆயுதங்களை ஒடுக்கப்பட்ட மக்கள் பெற முடியாதபடிக்கு 'மேல் சாதியினர்' பார்த்துக் கொண்டார்கள். அவர்களுக்கு
'ஆர்ய சமாஜம்' போதிக்கிற 'நால்வர்ணம்' இந்த ஆயுதங்களைப் பெற்றுத்தராது என்கிறார்.

பகுத்தறிவும், ஒழுக்கமும் சீர்திருத்தவாதியின் இரண்டு முக்கிய ஆயுதங்கள் என்று கூறும் அம்பேத்கர், உண்மையிலேயே சாதி அமைப்பை உடைக்க வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி சாதி மறுப்புத் திருமணமே என்கிறார்!

சாதி என்பது ஒரு விதமான மனநிலை. அந்த மனநிலை கொண்டவர்களை நான் 'மனப்பிறழ்வுக்கு உண்டானவர்கள்' என்பேன். அந்த நிலை சரியாக, சாதி மறுப்புத் திருமணமே அருமருந்து!

'இந்துக்களின் மூச்சே சாதிதான். அதை அவர்கள் வெளியேற்றியதால் காற்றை மாசுபடுத்தி மற்றவர்களையும் பாதிப்படையச் செய்துவிட்டார்கள்' என்று புத்தகத்தின் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார் அம்பேத்கர். அந்தக் காற்றைச் சுத்தப்படுத்த காதலும், கலப்புத் திருமணமும்தான் கைகொடுக்கும் என்றால், அவற்றைப் பரிந்துரைக்கும் முதல் ஆளாக நான் இருப்பேன்!

(அம்பேத்கரின் 125வது பிறந்த ஆண்டையொட்டி, இந்த ஆண்டு முழுக்க அம்பேத்கர் படைப்புகள், அம்பேத்கரைக் குறித்த படைப்புகள் ஆகியவை பற்றிய அறிமுகங்கள் இங்கு தொடர்ந்து பதிவேற்றப்படும்)