Monday, July 17, 2017

ஊழலை ஒழிக்க முடியுமா?

ந.வினோத் குமார்

இந்தியாவுக்கும் ஊழலுக்கும் கிழக்கிந்திய கம்பெனி இங்கு கால்பதிக்கத் தொடங்கியதிலிருந்தே உறவு இருக்கிறது. உயர் பதவிகளில் இருப்பவர்களிடையே மட்டுமல்ல. சாமானியர்களின் அன்றாட பேச்சு வழக்கு, கிசுகிசு, வாழ்க்கை முறை ஆகியவற்றில்கூட ஊழல் நீக்கமற நிறைந்திருக்கிறது. இதைத்தான் குன்னார் மிர்தால் எனும் ஸ்வீடன் நாட்டுப் பொருளாதார அறிஞர், ‘ஃபோக்லோர் ஆஃப் கரப்ஷன்’ என்றார்.

வரலாற்றாசிரியர் ஏ.கே.ராமானுஜன் தன்னுடைய ‘முந்நூறு ராமாயனங்கள்’ எனும் கட்டுரையின் இறுதியில் இப்படிச் சொல்லியிருப்பார்: “இந்தியாவில் எவர் ஒருவரும், ‘இப்போதுதான் ராமாயனத்தை முதன்முதலாகக் கேட்கிறேன்’ என்று சொல்லிவிட முடியாது. ஏனென்றால், இது காலம் காலமாக இருந்து வருகிறது”. இது ஊழலுக்கும் பொருந்தும். ‘இப்போதான்யா இப்படி ஒரு ஊழலைக் கேள்விப்படுறேன்’ என்று எந்த இந்தியரும் சொல்ல முடியாது. காரணம், பிறப்பு முதல் இறப்பு வரை இந்தியர் ஒருவர், பல்வேறு தளங்களில் ஊழலைப் பற்றி கேட்டு, பேசி, படித்து, சந்தித்து வருகிறார்.

 
இந்நிலையில், ‘ஊழலை ஒழிக்க முடியாதா?’ என்று உங்களுக்குள் கேள்வி எழுந்தால் என்ன செய்வீர்? ‘தி இந்து’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் என்.ராம் எழுதிய ‘ஒய் ஸ்கேம்ஸ் ஆர் ஹியர் டு ஸ்டே’ எனும் புத்தகத்தைப் படியுங்கள். ‘இந்தியாவில் நிகழும் அரசியல் ஊழலைப் புரிந்துகொள்ளுதல்’ எனும் உபதலைப்புடன் வந்திருக்கும் இந்தப் புத்தகத்தை ‘ஆலெஃப்’ பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

அரசியல் ஊழல்

ஊழலின் வகைகள், ஊழலின் வரலாறு, அதை வரையறுக்கும் முறை, இந்தியாவில் அதைப் பற்றிய புரிதல், தமிழகத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் ஊழலுக்குப் பின்னுள்ள அறிவியல் என்று பரந்த தளங்களில் பேசும் இந்தப் புத்தகம் ‘அரசியல் ஊழல்’ என்பதை மையமாக வைத்துச் சுழல்கிறது.

எது அரசியல் ஊழல்? தன்னுடைய சுயலாபத்துக்காகவோ அல்லது தன்னைச் சார்ந்தவர்களின் நலனுக்காகவோ, தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகப்படுத்தி காரியங்களைச் சாதித்துக் கொள்வது. இருக்கும் ஊழல்களிலேயே இதுதான் மிகவும் ஆபத்தான ஊழல். காரணம், இதில் பகடையாடப்படுவது நாட்டு மக்களும் அவர்களின் நலனும் அல்லவா!

போஃபர்ஸ் ஊழல்தான் இந்தியாவில் நடந்த முதல் பெரிய ஊழல். அதைத் தொடர்ந்து சிமெண்ட் ஊழல், தீவன ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், வியாபம் ஊழல் எனப் பல ஊழல்களை இந்த தேசம் சந்தித்திருக்கிறது. சரி, அந்த ஊழல்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று பார்த்தால்… உதட்டைப் பிதுக்குவதைத் தவிர வேறெதுவும் பதிலில்லை.

இந்தப் புத்தகத்தில், போஃபர்ஸ் ஊழலை ‘தி இந்து’ எப்படி வெளிக்கொணர்ந்தது, அப்போது அது சந்தித்த சவால்கள் என்ன, அந்த ‘ரிப்போர்டேஜ்’களினால் இந்திய பத்திரிகைத் துறையில் விளைந்த மாற்றங்கள் என்ன, அந்த ஊழல் மீது நீதித்துறை எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதைப் பற்றி விரிவாகப் பேசுகிறார் நூலாசிரியர்.

  
போஃபர்ஸ் ஊழலின் போது ‘தி இந்து’ தவிர, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’, ‘இந்தியா டுடே’ ஆகியவற்றின் பங்களிப்புகள் குறித்தும் தொட்டுச் செல்லும் அவர், ‘வியாபம்’ ஊழல் இவ்வளவு காலம் வெளிவராமல் இருந்ததற்கு இந்தி மொழி பத்திரிகைகளும் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

முதலாளித்துவத்தின் அங்கம்

ஊழலைப் பற்றிய புரிந்துகொள்ளல் இந்தியாவில் எப்படி இருக்கிறது என்பதைக் குறித்து விவரிக்கும்போது, ‘ஊழல் என்பது முதலாளித்துவத்தின் அங்கம்’ என்பதாகவே மார்க்சிஸம் கருதி வந்திருப்பதாக ராம் கூறுகிறார்.

அதனால்தான் என்னவோ, ஊழலின் வகைகள் குறித்துப் பேசும்போது, பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் மேற்கொள்ளும் ‘ஃப்ராடு’ தனங்களையும் ஊழலாகக் கருதுகிறார் அவர். அதற்கு உதாரணமாகப் பல ஆய்வுகளைக் காட்டுகிறார். அதில் சுவாரஸ்யமான ஒரு ஆய்வு 2017-ம் ஆண்டு எர்னஸ்ட் அண்ட் யங் நிறுவனத்துக்காக இப்சாஸ் எம்.ஓ.ஆர்.ஐ. எனும் நிறுவனம் மேற்கொண்டது. அதில் தங்களுடைய கரியரையும் ஊதியத்தையும் உயர்த்திக் கொள்வதற்காக சுமார் 41 சதவீத இந்திய ஊழியர்கள், எந்த விதமான அதர்மமான வழிகளையும் பின்பற்றத் தயாராக இருக்கிறார்கள் என்பது தெரிய வந்ததாம். அந்த ‘அதர்மமான வழிகளில்’ உயரதிகாரிகளுக்கு ‘சோப்பு’ போடுவதும் அடங்குமா என்பது தெரியவில்லை!

‘லைசன்ஸ் ராஜ்’ இருந்த காரணத்தினால்தான் இந்திய அரசியல் பொருளாதாரப் பரப்பில் ஊழல் என்பதே தோன்றியது என்று சொன்னவர்கள், எல்லாவற்றையும் தாராளமயமாக்கினால் ஊழல் ஒழிந்துவிடும் என்றும் சொன்னார்கள். ஆனால் தாராளமயமாக்கலுக்குப் பிறகும் ஊழல் தொடர்வதை என்னவென்று சொல்ல?

சாராயச் சாப்பாடு

இப்படியான ஊழல் தமிழகத்தில் எப்படி தலைவிரித்தாடுகிறது என்பதைச் சில வரலாற்றுத் தகவல்களுடன் நிரூபிக்கிறார் ராம். 1967-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வரும் வரை தமிழகம் ஊழலில்லாமல் ஓரளவு சுத்தமாகவே இருந்தது. அண்ணாவின் இரண்டு வருட ஆட்சியிலும் அந்தச் சுத்தம் தொடரவே செய்தது. ஆனால் 1972-ம் ஆண்டு தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆர். பிரிந்து வந்த பிறகு, தமிழகத்தில் மு.கருணாநிதி தலைமையிலான ஆட்சியில் எவ்வாறெல்லாம் ஊழல் நடந்திருக்கிறது என்பது தெரிய வந்தது. 

  
அதற்குப் பிறகு முதன்முறையாக ஆட்சியைப் பிடித்த எம்.ஜி.ஆர்., ஓரளவு சுத்தமான ஆட்சியை வழங்கவே செய்தார். ஆனால் அவரின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் (ஜூன் 1980 – டிசம்பர் 1984) இனி வரும் எல்லாக் காலத்துக்கும் தமிழகம் சந்திக்கவிருக்கிற அவமானத்துக்கு ‘டாஸ்மாக்’ மூலமாக அடிக்கல் நாட்டினார் எம்.ஜி.ஆர். டாஸ்மாக் தொடங்கப்பட்ட 1983-ம் ஆண்டு மே 23-ம் தேதி, ‘தமிழ்நாட்டில் அறிவியல்பூர்வமான அரசியல் ஊழல் தோன்றிய நாள்’ என்று குறிப்பிடுகிறார் ராம்.

டாஸ்மாக்கில் வந்த வருமானத்தை வைத்துத்தான் 1982-ம் ஆண்டு எம்.ஜி.ஆர்., தொடங்கிய மதிய உணவுத் திட்டம் தொடரப்பட்டதாகக் கருதப்படுகிறது. அந்த நிலை இன்றும் தொடர்கிறதா? அப்படியெனில், நம் குழந்தைகள் சாப்பிடுவது சாராயத்தில் வந்த சம்பாத்தியத்தில்தானா?

இதையெல்லாம் படித்து உங்கள் மனம் குமுறுகிறதா? ஊழலை ஒழிக்க என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறதா? அதற்கு நூலாசிரியர் தரும் தீர்வு, ‘இந்திய அரசியல் பொருளாதாரத்தில் ஆழமான மாற்றங்கள் உருவாக வேண்டும்!’ என்பதே!

படங்கள் உதவி:  (இந்தியா டுடே அட்டைப் படம் - dailyo.in, என்.ராம் படம் - thehindu.com)

Saturday, July 1, 2017

உங்கள் டாக்டர் நல்லவரா?

ந.வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 26 நவம்பர், 2016

கொஞ்சம் எதார்த்தம் பேசுவோம். மருத்துவமனையின் படிகளை மிதிக்கும்போது நம்மில் எத்தனை பேர், அனிச்சையாக நம் சட்டைப் பையைத் தடவிப் பார்ப்போம்; உடனடியாக அறுவைசிகிச்சை செய்ய வேண்டும். நம்மில் எத்தனை பேர் இன்னொரு மருத்துவரிடம் ‘செகண்ட் ஒபீனியன்’ கேட்க வேண்டும் என்ற அவசியத்துக்குத் தள்ளப்பட்டு இருக்கிறோம்? மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்துகள் வாங்கிப் பயன்படுத்துவது தவறு என்பது தெரிந்தும் நம்மில் பலர் மருந்துகளை வாங்குகிறோம்தானே?

இதற்கெல்லாம் காரணம், நமது மருத்துவர்கள் மீது நமக்கு நம்பிக்கையில்லாமல் போனதுதான்! ‘ஏன் அந்த நம்பிக்கை இல்லாமல் போனது?’ என்ற கேள்விக்கான பதிலைத் தேடுகிறது கமல் குமார் மஹாவர் எனும் மருத்துவர் எழுதிய ‘தி எதிகல் டாக்டர்’ எனும் புத்தகம். ஹார்பர் காலின்ஸ் பதிப்பகம் இந்தப் புத்தகத்தைச் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் பிறந்து, வளர்ந்து, மருத்துவம் படித்து, இங்குள்ள அரசுக் கட்டுப்பாடுகள், தலையிடல்கள், ஊழல்கள் போன்றவை ஏற்படுத்திய இடர்பாடுகளால், பல வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்துக்குச் சென்றவர்தான் இந்தக் கமல்குமார். தற்போது அங்குள்ள ‘தேசியச் சுகாதாரச் சேவை’ அறக்கட்டளை மருத்துவமனையில் எடைக் குறைப்பு அறுவைசிகிச்சை நிபுணராகப் பணியாற்றிவருகிறார். இந்திய மருத்துவத் துறையில் உள்ள குறைகளை விமர்சனப் பார்வையுடன் அணுகி வரும் இவர், அது தொடர்பான தன்னுடைய கருத்துகளை இந்தப் புத்தகத்தில் பதிவுசெய்துள்ளார். 

 
தடம் மாறும் மருத்துவம்

இந்திய மருத்துவர்கள், ‘மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா’ வகுத்துள்ள விதிமுறைகளின் கீழ்தான் நிர்வகிக்கப்படுகிறார்கள். பிரச்சினை என்னவென்றால், அதிலேயே பல குறைகள் இருப்பதுதான். முதலில் அவற்றைச் சீர் செய்ய வேண்டும் என்கிறார் கமல்குமார். அதற்கு அவர் சொல்லும் முக்கியக் காரணம்… போலி மருத்துவர்கள்!

மேற்கண்ட விதிமுறையின்படி, இந்தியப் பாரம்பரிய மருத்துவமுறைகளான ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவ முறைகளைப் பயன்படுத்தி மக்களுக்குச் சிகிச்சையளிப்பவர்கள், மருத்துவர்களாகவே கருதப்படுவதில்லை. ஆனால் காலம் காலமாக இந்த மருத்துவ முறைகள் நம் நாட்டில் நடைமுறையில் இருந்துவருகின்றன.

அலோபதி, பாரம்பரிய மருத்துவ முறைகள் எதையும் முறைப்படி கற்றுக்கொள்ளாமல், மக்களுக்குத் தவறான சிகிச்சையளித்து, கொள்ளையடிக்கிற போலி மருத்துவர்கள் கூட்டம், உண்மையான மருத்துவர்களுக்குப் போய்ச் சேர வேண்டிய நியாயமான வருமான வாய்ப்பைத் தடுக்கிறது. இதன் காரணமாக, உண்மையான மருத்துவர்கள் பலர், நோயாளிகளைப் பிடிக்க ஏஜெண்ட் வைப்பது, தேவையில்லாத மருந்துகளை எழுதித் தருவது, தேவையில்லாத பரிசோதனைகளைச் செய்யச் சொல்லி ஒரு குறிப்பிட்ட ‘லேப்’புக்கு மட்டும் அனுப்புவது, பிறகு அந்த ‘லேப்’பிலிருந்து குறிப்பிட்ட சதவீதத்துக்குக் கமிஷன் வாங்கிக் கொள்வது போன்ற குறுக்கு வழிகளில் வருமானத்தை ஈட்ட முயற்சிக்கிறார்கள். 
 
அடிப்படையே தவறு

இந்த நிலைமை ஏன் வந்தது என்ற கேள்விக்கு ‘அடிப்படையே தவறு’ என்கிறார் நூலாசிரியர். மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் எல்லோருமே தேவையான தகுதிகளோடு வெளியே வருகிறார்களா என்றால் இல்லை. எம்.பி.பி.எஸ்., மட்டும் படித்தால் போதாது. உயர்கல்வி கற்க வேண்டும். அதற்குக் கடின உழைப்பையும் கூடுதலான நேரத்தையும் செலவழிக்க வேண்டும். ஆனால், இளநிலை மட்டுமே படித்த ஒரு பயிற்சி மருத்துவர், சுமார் 16 முதல் 18 மணி நேரம்வரை அரசு மருத்துவமனைகளில் செலவிடுகிறார்.

அவருக்கு, அவருடைய பேராசிரியர்களிடமிருந்து சரியான வழிகாட்டுதல் கிடைப்பதில்லை. ஏனென்றால், அவருக்கு அரசு மருத்துவமனையில் போதிய வருமானம் கிடைக்காது. அதனால் தன்னுடைய அலுவலக நேரத்துக்குப் பிறகு தனியே ‘பிராக்டிஸ்’ செய்து லாபம் ஈட்டும் முனைப்பில் அவர் இருப்பார். அதனால், தனக்குக் கீழே பயிற்சி பெறும் மாணவருக்குப் போதுமான நேரத்தை அவர் செலவழிப்பதில்லை.

இது ஒரு புறமிருக்க, இன்னொரு புறம், மருத்துவம் படித்து வெளியே வரும் பெரும்பாலான மாணவர்கள் மிகக் குறைந்த காலத்தில் உடனடி லாபத்தை ஈட்ட நினைக்கிறார்கள். காரணம், அவர்கள் தங்கள் படிப்புக்கு லட்சக்கணக்கில் செலவு செய்திருப்பார்கள். எல்லாருக்குமே அரசுக் கல்லூரிகளில் படிக்க வாய்ப்பு கிடைக்காது, இல்லையா? அதனால் பலர் தனியார்க் கல்லூரிகளில் படிப்பார்கள். அங்குத் தாங்கள் செலவழித்த காசை எல்லாம், இந்தச் சமூகத்திலிருந்து எடுக்க நினைப்பார்கள். எனவே, பலர் நகரங்களை நோக்கிச் செல்கிறார்கள். இதனால் கிராமப்புறங்களில் தேவையான அளவு மருத்துவர்கள் இல்லை.

அப்படியே இருந்தாலும், அங்கும் அவர்களுக்குத் தேவையான அளவு வருமானம் கிடைப்பதில்லை. எனவே, குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அவர்களும் நகரத்தை நோக்கி நகர்கிறார்கள். ஆனால், துரதிருஷ்டவசமாக நகரங்களில் ஏற்கெனவே அவர்களுக்கு நிறையப் போட்டியாளர்கள் இருப்பார்கள். எனவே, தான் ஒரு சிறந்த மருத்துவர் என்பதை நிரூபிக்க அதிகமாகப் போராட வேண்டியிருக்கிறது. இதன் காரணமாகக் குறுக்கு வழிகள் ஈர்த்து விடுகின்றன.
 
பெரும் மாயை

பொதுவாக நம் ஊரில், குறைந்த கட்டணம் வாங்கும் ஒரு மருத்துவரை ‘இவரு அவ்ளோ நல்லா பார்க்க மாட்டாருப்பா’ எனும் விமர்சனத்துக்கு ஆளாக்கும் மனப்பான்மை நம்மில் பலருக்கும் உண்டு. கல்வித் துறையைப் போலவே பெரிய மருத்துவமனை, நிறைய பணம் வாங்கும் மருத்துவர்தான் சிறந்த மருத்துவர் என்றொரு மாயை இங்கு உண்டு. இது எப்படி ஏற்பட்டது? அதற்குக் காரணம், மருந்து நிறுவனங்களும் மருத்துவ ஆய்விதழ்களும் என்கிறார் ஆசிரியர். எப்படி?

உலகளவில் பிரபலமான நான்கைந்து மருத்துவ ஆய்விதழ்களில் மருத்துவர் ஒருவர் தனது ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டால், அவர் சிறந்த மருத்துவர் என்று கொண்டாடப்படும் மனநிலை பலருக்கும் உள்ளது. கூர்ந்து கவனித்தால், அவர் மேற்கொண்ட ஆய்வு குறிப்பிட்ட மருந்து நிறுவனத்தின் மருந்து நல்லது என்பதை நிரூபிக்கும் விதமாக இருக்கும்.

அவ்வளவு ஏன், அந்த ஆய்வே அந்த மருந்து நிறுவனத்தின் நிதியுதவியுடன் மேற்கொண்டதாகக்கூட இருக்கலாம். அதேபோலத் தனது ஆய்வு முடிவுகளைச் சக மருத்துவர்களுடன் பகிர்ந்துகொள்ள, அந்த மருந்து நிறுவனங்களே வெளிநாடுகளில் ஏற்பாடு செய்யும் கருத்தரங்குகளில் கலந்துகொள்வார்.

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் நோயாளிகள் சொல்வதைப் பல மருத்துவர்கள் காது கொடுத்துக் கேட்காததும், காது கொடுத்துக் கேட்கும் மருத்துவர்கள் மீது நோயாளிகளுக்கு நம்பிக்கையற்றுப் போனதுமே. அடுத்த முறை உங்களுக்கு நம்பகமான மருத்துவரைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால், நீங்கள் அவரை முழுமையாக நம்புங்கள். அதற்கு மருத்துவர்களும் மக்களை நோக்கி நெருங்கி வர வேண்டிய அவசியம் இருக்கிறது.
 
மருத்துவத் துறை: சுடும் நிஜங்கள்

  • நாட்டில் எத்தனை போலி மருத்துவர்கள் உள்ளனர் என்பதை அறிவதற்கான வழி இன்றைக்கு இல்லை. சரி, பதிவு பெற்ற உண்மையான மருத்துவர்கள் எத்தனை பேர், அவர்களில் எத்தனை பேர் எந்தெந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்றுள்ளனர், அவர்களில் எத்தனை பேர் கடந்த காலத்தில் ஒழுங்கீன நடவடிக்கைகளுக்கு உள்ளானவர்கள் என்பது பற்றியெல்லாம் தகவலறிய முறையான வலைத்தளம்கூடக் கிடையாது!  
  • மருத்துவர்கள் தாங்கள் பரிந்துரைக்கும் மருந்துகளின் வேதியியல் பெயர்களை (ஜெனரிக்) எழுத வேண்டுமா? அல்லது பிராண்ட் பெயர் எழுத வேண்டுமா? ஜெனரிக் மருந்துகளை எழுதிக் கொடுத்தால், அதிலேயே பல பிராண்ட்கள் இருக்கும். அதில் எதை மருந்துக் கடைக்காரர் தேர்வு செய்து கொடுப்பார்? அது மட்டுமல்லாமல் பிராண்டுக்குப் பிராண்ட் விலை அதிகரிக்கும், குறையும். இந்தக் கேள்விகளுக்கு இன்று பதிலில்லை. 
  • ‘நான் ஒரு நோயாளியை உயர்சிகிச்சைக்காக உன்னிடம் அனுப்புகிறேன். அதற்கான தொகையை எனக்குத் தந்துவிடு. அல்லது உன்னிடம் சாதாரண நோய்களுக்குச் சிகிச்சை பெற வருபவர்களை எனக்கு அனுப்பு’ எனும் ‘கட் பிராக்டீஸ்’ எனப்படும் மருத்துவர்களுக்கு இடையேயான பரஸ்பரத் தரகு முறையை ஒழிக்க, இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. 
  • மருத்துவர்களுக்குப் பயிற்சி வழங்க, நேரலை அறுவைசிகிச்சை மாநாடு (லைவ் ஆபரேட்டிங் கான்ஃபரன்ஸ்) போன்ற விஷயங்களில் மருத்துவமனைகள் ஈடுபடுவது சரிதானா? பதில் இல்லை! 
  • மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்துக்கடைகளில் மருந்து வாங்கும் நடைமுறைக்கு எதிராக இதுவரை ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? இல்லை!
  • வெளிநாடுகளிலிருந்து மருந்துகள், மருத்துவக் கருவிகள் போன்றவற்றை இறக்குமதி செய்தால் அவற்றின் மீது விதிக்கப்படும் வரிகளில் மருத்துவமனைகளுக்கு நிறைய சலுகைகள் தரப்படுவது உண்டு. அப்படிப் பல சலுகைகளைப் பெறும் மருத்துவமனைகள் ஏழைகளுக்குச் சிகிச்சை அளிக்கும்போது இலவசப் படுக்கைகளை வழங்கியாக வேண்டும். ஆனால், எத்தனை மருத்துவமனைகள் அப்படிச் செய்கின்றன? பதில் இல்லை.
  • மருத்துவமனைகளை நெறிப்படுத்த மருத்துவ நிறுவனங்கள் (பதிவு மற்றும் விதிமுறைகள்) சட்டம் 2010-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தை இதுவரை 10 மாநிலங்கள் மட்டுமே நடைமுறைப்படுத்தியுள்ளன. தமிழகத்தில் இந்தச் சட்டம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை!  
 நன்றி: தி இந்து (நலம் வாழ)