Tuesday, April 14, 2020

இது சிரிக்கும் விஷயம் அல்ல...!


.வினோத் குமார்

'Brevity is the soul of wit' என்பார்கள். அதாவது, ஒரு நகைச்சுவையின் உயிர் என்பது அதை எவ்வளவு தூரம் சுருங்கச் சொல்கிறோம் என்பதில் இருக்கிறது என்பது பொருள். கருத்து சொல்வதும், அடுத்தவர் முன்பு தனது அறியாமையைக் காட்டுவதன் மூலம் எழும் முட்டாள்த்தனமும் இன்று நகைச்சுவை என்று கருதப்படுகின்றன. சினிமா முதற்கொண்டு செய்தி ஊடகங்கள் வரை அந்தப் போக்கு இப்போது பரவலாக இருக்கிறது.

நகைச்சுவை என்பது உடல்மொழியோ, பேச்சோ அல்ல. இந்த இரண்டும் இல்லாமல் வெறுமனே வரைந்து காட்டுவதன் மூலமும் ஒருவரைச் சிரிக்க வைத்துவிட முடியும். அதுதான் ஆங்கிலத்தில் 'கார்ட்டூன்' என்றும், தமிழில் 'கேலிச் சித்திரம்' என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால் பல நேரங்களில் இந்தக் கேலிச் சித்திரங்கள் சிரிக்க மட்டுமே வைப்பதில்லை. சில நேரம் மட்டம் தட்டவும் பயன்படுத்தப்படுகிறது. அப்படி கேலிச் சித்திரங்கள் வாயிலாகத் தன் வாழ்நாள் முழுவதும் மட்டம் தட்டப்பட்டு வந்தவர் ஒருவர் இருக்கிறார் என்றால் அது அம்பேத்கர் தான்..!

அரசியலில் அம்பேத்கரின் வரவு என்பது ஒரு ஜனநாயக நிகழ்வு. 1919-ல் சவுத்பரோ ஆணையத்தின் முன்பு, தேர்தலில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று அவர் விடுத்த கோரிக்கைதான், பின்னாளில் இந்தியா ஒரு ஜனநாயக நாடாகத் தன்னை உருமாற்றிக் கொள்வதற்கு முதற்புள்ளியாக இருந்தது. 1919-லேயே அண்ணல், அரசியலுக்குள் வந்துவிட்டார் என்றாலும், கார்ட்டூன்கள் மூலமாக அவர் பரவலாக அறியப்பட்டது 1932-ல்தான். அப்போதுதான் மூன்றாம் வட்ட மேசை மாநாடு நடந்து முடிந்திருந்தது.

1919 முதல் 1932-க்கு இடைப்பட்ட காலத்தில் தலித்துகளின் முன்னேற்றத்துக்காக மஹத் சத்தியாகிரகம் உள்ளிட்டபல போராட்டங்களை அம்பேத்கர் முன்னெடுத்தார். அதன் காரணமாக தலித்துகளின் மனதில் அம்பேத்கர் உயர்ந்து நின்றார். மூன்றாவது வட்ட மேசை மாநாட்டில், இடஒதுக்கீட்டின் தொடக்கப் புள்ளி என்று சொல்லக்கூடிய 'கம்யூனல் அவார்ட்' கிடைத்தது. இதனால் தலித்துகளுக்கு என தனிப் பிரதிநிதித்துவம் கிடைக்க வழி ஏற்பட்டது. அதனால் அம்பேத்கரைத் தங்களின் தலைவராக தலித் மக்கள் வரித்துக்கொண்டார்கள்.

அம்பேத்கரின் இந்த வளர்ச்சி காந்தியின் வயிற்றில் புளியைக் கரைத்தது. அதனால்தான் 'தீண்டத்தகாதோரின் தலைவன் நானே' என்று சொல்லி வான்டட் ஆக வண்டியில் ஏறினார்.

1932-ல் 'கம்யூனல் அவார்ட்' கிடைத்த அந்த நொடி முதல் 1956-ல் பெளத்த மதத்தை அம்பேத்கர் தழுவும் வரை, ஆங்கில நாளிதழ்களில் அம்பேத்கர் குறித்து வெளிவந்த கார்ட்டூன்களை எல்லாம் தேர்வு செய்து 'நோ லாஃபிங் மேட்டர்' என்ற தலைப்பில் புத்தகமாகத் தொகுத்திருக்கிறார் உன்னமதி சியாமா சுந்தர். இவர் தற்போது டெல்லில் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர்பட்ட ஆய்வு மாணவராக இருக்கிறார். நவயானா வெளியீடாக இந்தப் புத்தகம் 2019-ல் வெளியானது.


2006-ம் ஆண்டு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (NCERT) பதிப்பித்த 11-ம் வகுப்பு அரசியல் அறிவியல் புத்தகத்தில் நத்தை மீது செல்லும் அம்பேத்கரை நேரு சவுக்கால் அடிப்பது போன்ற கார்ட்டூன் ஒன்று இடம்பெற்றிருந்தது (பார்க்க படம்: 1). அப்படி ஒரு கார்ட்டூன் பாடப் புத்தகங்களில் இருப்பது 2012-ல்தான் வெளிச்சத்துக்கு வந்தது. அந்தப் படத்தை முதன்முதலில் சுட்டிக்காட்டியவர் 'இந்தியக் குடியரசுக் கட்சி'யின் தலைவர் ராம்தாஸ் அத்வாலே (எங்கேயோ கேட்ட பெயர் போல் இருக்கிறதா..? 'கோ கொரோனா கோ' என்று மந்திரம் ஓதினாரே... அவரேதான்!). அவரைத் தொடர்ந்து தொல்.திருமாவளவன் அதை மக்களவையில் பிரச்சினையாக்கினார். பின்னே உயர்சாதி நேரு, தாழ்த்தப்பட்ட அம்பேத்கரை சவுக்கால் விளாசினால் விடுவோமா..? ஆனால் சில உயர்சாதி, இடதுசாரி இன்டலெக்சுவல்கள் 'கருத்து சுதந்திரம்' என்று அந்த கார்ட்டூனை வரைந்த ஷங்கருக்குக் குரல் கொடுத்தார்கள். எனினும் நாடு முழுக்க எழுத்த எதிர்ப்பால் அந்த கார்ட்டூன் பாடப் புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டது.


இந்த நிகழ்வுதான் இப்படியொரு புத்தகத்தை எழுத சியாமா சுந்தருக்குத் தூண்டுகோலாக இருந்தது. மொத்தம் 122 கார்ட்டூன்கள் இந்தப் புத்தகத்தில் உள்ளன. இவற்றில் பெரும்பாலான கார்ட்டூன்கள் 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' நாளிதழில் வெளிவந்தவை. அவற்றை வரைந்தது 'ஷங்கர்ஸ் வீக்லி' புகழ் ஷங்கர். வேறு பல நாளிதழ்களில் அம்பேத்கர் குறித்த கார்ட்டூன்கள் வெளிவந்துள்ளன என்றாலும், குறிப்பாக 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' பத்திரிகையை இங்கே சுட்டிக்காட்டுவதற்கு ஒரு காரணம் உண்டு. காந்தியின் போராட்டங்களுக்கு ஸ்பான்ஸர் செய்த ஜி.டி.பிர்லா தான் இந்தப் பத்திரிகை தொடங்கப்படுவதற்கும் நிதி அளித்தார். சில காலத்துக்குப் பிறகு பிர்லாவே இந்தப் பத்திரிகையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். இன்று வரையிலும் பிர்லா குடும்பத்தினர் கையில்தான் இந்தப் பத்திரிகை இருக்கிறது. இந்தப் பத்திரிகையில் காந்தியின் மகனான தேவதாஸ் காந்தி எடிட்டராக இருந்திருக்கிறார். அம்பேத்கரை மட்டம்தட்டி அதிக அளவில் இந்தப் பத்திரிகை ஏன் கார்ட்டூன்கள் வெளியிட்டது என்பது இப்போதும் புரிந்திருக்குமே..!

கோயில் நுழைவுப் போராட்டம், குள்ள உருவம், பூணூல் அணிந்த 'மார்டன் மனு', சேலை கட்டிய அம்பேத்கர் போன்ற 'தீம்'கள் (பார்க்க படம்:2) இந்த கார்ட்டூன்களில் திரும்பத் திரும்ப வருகின்றன. அதில் அவற்றை வரைந்தவர்களின் மேட்டிமைத்தனமும், அம்பேத்கர் பெரிய தலைவராக வந்துவிடக் கூடாதே என்கிற பதற்றமும் வெட்ட வெளிச்சமாகத் தெரிகின்றன.


ஒரு கார்ட்டூனை எடுத்துக்கொள்கிறார் நூலாசிரியர். அந்த கார்ட்டூன் வரையப்பட்ட காலகட்டத்தைச் சொல்கிறார். பிறகு அந்த கார்ட்டூனில் உள்ள விஷயங்களை அலசுகிறார். இதன் மூலம் ஒரு கார்ட்டூன் மூலம் கடந்த கால வரலாற்றை அறிய முடிவதுடன், அந்த கார்ட்டூனுக்குப் பின்னுள்ள 'சவர்னா' அரசியலையும் புரிந்துகொள்ள முடிகிறது.

அத்துடன், 'trivia' என்று சொல்லப்படும் முக்கியமில்லாத, ஆனால் வாசிப்புக்கு சுவாரஸ்யம் கூட்டுகிற தகவல்களையும் ஆங்காங்கே தந்து செல்கிறார் நூலாசிரியர். உதாரணத்துக்கு, அம்பேத்கரின் கனவுகளில் ஒன்றாக இருந்த 'இந்து கோட் பில்' என்று சொல்லப்படும் இந்து சட்ட மசோதாவை அப்போது வெளியான 'Mr and Mrs 55' என்ற இந்தித் திரைப்படத்தில் 'டைவர்ஸ் பில்' என்று நாயகன் குறிப்பிடுவதாகக் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அதாவது, அந்த சட்ட மசோதா பெண்களுக்குத் தரவுள்ள சுதந்திரத்தை, பெண்கள் எப்படி தவறாகக் கையாள்வார்கள் என்று சொல்வதற்கு அப்படி ஒரு வசனம்! அந்தக் காலத் திரைப்பட இயக்குநர்களுக்கு அவ்வளவுதான் அரசியல் அறிவு இருந்தது!

அம்பேத்கரை முதன் முதலில் 'ஜெய் பீம்' என்று வாழத்தியவர் எல்.என். ஹர்தாஸ், 1946-ல் அரசியல் சாசன சபையில் அம்பேத்கர் இடம்பெறுவதற்கு முக்கியக் காரணமாக இருந்த ஜோகேந்திரநாத் மண்டல் (இவர்தான் பின்னாளில் பாகிஸ்தானின் முதல் சட்ட அமைச்சராக இருந்தார். அந்நாட்டின் அரசியல் சாசன சபையின் தலைவராகச் சில காலம் பொறுப்பில் இருந்தவர். அங்கு இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளின் எதிர்ப்பால், 1950-ல் மீண்டும் இந்தியா வந்து இங்கேயே தனது வாழ்நாளைக் கழித்தார்), இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் (Preamble) உள்ள 'சமூகத்துவ' (socialist), 'சமயசார்பற்ற' (secular) போன்ற வார்த்தைகளைச் சிபாரிசு செய்தது கே.டி.ஷா எனும் பொருளாதார நிபுணர், சமஸ்கிருதத்தைப் படித்தால் வேதங்களில் உள்ள புரட்டுகளை மக்கள் தெரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கையில் அதை தேசிய மொழியாக்க வேண்டும் என்று அம்பேத்கர் கூறியது, காங்கிரஸை எரியும் வீடு (Congress is a burning house) என்று அம்பேத்கர் சொன்னதன் பின்னணி, மராத்தியில் 'பீம்' என்ற வார்த்தையுடன் 'யா' என்று சேர்த்து 'பீம்யா' என்று அழைப்பது இழிச்சொல், நான்காம் வகுப்பிலேயே புத்தரின் மீது அம்பேத்கருக்கு இருந்த நாட்டம் என இப்படி பல அறிவார்ந்த தகவல்களையும் தூவிச் செல்கிறார் உன்னமதி சியாமா சுந்தர்.  

அரசியலமைப்பை வடிவமைக்கும்போது, காந்தி உள்ளிட்ட தலைவர்கள், கிராமத்தை மையப்படுத்தியே நமது அரசியலமைப்பு இருக்க வேண்டும் என்றார்கள். ஆனால் அம்பேத்கரோ, தனிநபரை மையப்படுத்தித்தான் இருக்க வேண்டும் என்றார். ஏனெனில் அண்ணலைப் பொருத்தவரை கிராமம் என்பது 'a den of ignorance' (அறியாமையின் குகை!). உடனே 'நேஷனல் ஹெரால்ட்' (காங்கிரஸ் பத்திரிகைதான்) நாளிதழின் கார்ட்டூனிஸ்ட் பிரேஷ்வர், அம்பேத்கருக்கு ஒரு பூணூலை அணிவித்துவிட்டார் (பார்க்க படம்: 3). அதாவது, கிராமத்தை மையப்படுத்தாமல் அரசியலமைப்பை இயற்றுவதன் மூலம் அம்பேத்கர் நவீன தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறாராம்..!


இந்த கார்ட்டூன் வெளியான அதே நாளில் நவம்பர் 14 (ஆம், நேரு பிறந்தநாளில்தான்), 'ஷங்கர்ஸ் வீக்லி'யில் ஷங்கர் வரைந்த கார்ட்டூன் ஒன்று வெளியானது. அதில் 'கிராமங்களை 'அறியாமையின் குகை' என்று சொன்னதற்காக அம்பேத்கர் தாக்கப்பட்டுவிட்டார்' என்ற கேப்ஷனுடன் அந்த கார்ட்டூன் இருந்தது. உண்மையில் அப்படி ஒரு சம்பவம் நிகழவில்லை. கிராமங்களுக்கு சப்போர்ட் செய்த சில நாடாளுமன்ற'வியாதி'களை கிராமத்துப் பாமரர்களாக வரைந்து, அவர்களின் எதிர்ப்பை அம்பேத்கர் மீதான 'தாக்குதல்' என்று உருவகப்படுத்துவதற்காக அந்தப் பாமரர்களின் கையில் கத்தி, கம்பு போன்றவற்றைக் கொடுத்திருக்கிறார் ஷங்கர். ஆனால் அம்பேத்கர் கெத்தாக, 'ஒத்தையில நிக்கேன்... தில்லிருந்தா வாங்கலே..!' என்கிற ரீதியில் நெஞ்சு நிமிர்த்தி நிற்கிறார். அந்த கார்ட்டூன் தான் இந்தப் புத்தகத்தின் அட்டைப் படமாகவும் இருக்கிறது (பார்க்க படம்:4).


'ஒவ்வொரு தலித்துகளின் வெற்றிக்குப் பின்னாலும், ஒரு உயர்சாதிக்காரரின் பரிவு இருப்பதாக உயர்சாதியினர் பலர் நம்புகிறார்கள்' என்று புத்தகத்தின் ஓரிடத்தில் சொல்கிறார் நூலாசிரியர். அப்படி நம்புபவர்கள் இந்தப் புத்தகத்தைப் படித்தால் நிச்சயமாகத் தங்களின் எண்ணத்தை மாற்றிக் கொள்வார்கள்.

இந்த கார்ட்டூன்களில் இடம்பெற்றிருக்கும் உருவகங்களை அரைவேக்காட்டுத்தனம் என்கிறார் நூலாசிரியர். இந்த கார்ட்டூன்கள் அடங்கிய இந்தப் புத்தகத்தை இதற்கு முன்னுரை எழுதிய 'கேஸ்ட் மேட்டர்ஸ்' புகழ் சூரஜ் யங்டே 'This book is a museum of the perversities of the elites' என்கிறார். மேட்டிமைக்கார வக்கிரங்களின் அருங்காட்சியகம்! ஆம்... அம்பேத்கருக்குப் பூணூல் மாட்டுவதெல்லாம் நிச்சயம் சிரிக்கும் விஷயமில்லை சாரே...!

நன்றி: புத்தகத்துக்கு (படங்களுக்காக)

Sunday, February 16, 2020

சிநேகிதியின் காதலர்களுக்கு ஒரு விண்ணப்பம்..!


.வினோத் குமார்
                                             
விமர்சனக் கலையில் மிகவும் கடினமானது, கவிதைத் தொகுப்பை விமர்சனம் செய்வது. உரைநடை, வாசகர்களின் மனங்களில் பெருமளவு ஒரே மாதிரியான அதிர்வலைகளை ஏற்படுத்திவிடக் கூடிய சாத்தியங்களைக் கொண்டது. ஆனால் கவிதை அப்படியல்ல. ஒவ்வொருவரின் மனதிலும் ஒவ்வொரு வகையான சிலிர்ப்புகளை ஏற்றி வைக்கும் குணம் கொண்டது. எழுதியவனே எடுத்துப் படித்தாலும், ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமான அர்த்தங்களைக் கற்றுக் கொடுக்கும் திறன் படைத்தது.

எந்த ஒரு கவிதைக்குமான 'ஆன்மா' இது என்றாலும், காதல் கவிதைகளுக்குத் தனிச் சிறப்பு இருக்கிறது. பொதுவாக, காதல் கவிதைகள் கிறக்கம் தருபவை என்ற ஒரு பார்வை உண்டு. அந்தக் கவிதையை முதன்முறையாக வாசிக்கும்போது ஒரு கிறக்கம் ஏற்படலாம். ஆனால் அதே கவிதையை வேறு வேறு சூழல்களில் வாசிக்கும்போது ஒரு சிலருக்கு அதே கிறக்கம் இருக்கலாம். சிலருக்குச் சிரிப்பை வரவைக்கலாம். சிலர் அழலாம். சிலருக்கு வாழ்க்கை கசக்கலாம். ஆனாலும், ரொம்ப வருடங்களுக்குப் பிறகு பார்க்க நேர்கிற நம் முதல் காதலர் மீது நமக்கு ஏற்படும் சொல்லவொனாத தவிப்பு நமக்குள் நிகழ்த்தும் மாயம் இருக்கிறதல்லவா... அப்படியான ஒரு தவிப்பை அனுபவிக்கச் செய்பவை காதல் கவிதைகள்!

அப்படியான தவிப்பைக் கடந்த சில நாட்களாக அனுபவிக்க நேர்ந்தது, மனுஷ்ய புத்திரனின் 'சிநேகிதியின் காதலர்கள்' வழியாக நிகழ்ந்தது. வெறும் 'காதலர்கள்' அல்லது வேறு ஏதோ 'காதலர்கள்' என்று தலைப்பிட்டிருந்தால் நடந்து முடிந்தசென்னைப் புத்தகக் காட்சியில் இந்தப் புத்தகத்தை வாங்காமல் விட்டிருப்பேன். ஆனால் 'சிநேகிதியின்' காதலர்கள் என்பதால் ஒரு பரிதவிப்புடன் என் கரங்கள் இதைப் பற்றின.


மனுஷ்ய புத்திரனின் கவிதைகள் எதார்த்தங்களைச் சுமப்பவை. அந்த எதார்த்தங்களை ஒளிவு மறைவின்றி எடுத்து வைப்பதில் ஒரு அழகு இருக்கிறது. அந்தக் கவிதையை மனதுக்குள் காட்சியாக நிகழ்த்திப் பார்ப்பதில் மனதுக்கு ஒரு துள்ளல். உதாரணத்துக்கு இந்தக் கவிதையைப் பாருங்கள். ஆம் பாருங்கள் என்றுதான் சொல்கிறேன்...

பெண்மைக்குத்தான் எத்தனை நடனங்கள்
நீராடிச் சென்று நெடுநேரமாகியும்
குளியலறையில் நடனமாடுகிறது
உன் சோப்பின் வாசனை

இரவு 11.59 மணிக்கு எழுதப்பட்ட இந்தக் கவிதையை, உச்சி வேளை 12.30 மணிக்குப் படித்தாலும் உங்கள் கண்ணில் உங்கள் காதலி, குளியலறையிலிருந்து நளினமாகவெளிவரும் காட்சி உங்கள் மேனியைச் சிலிர்க்க வைக்கிறதல்லவா..? (ஆணால் எழுதப்பட்டதால் காதலி... பெண்கள் உங்கள் காதலரை நினைத்துக்கொள்ளவும்)

போதும், அந்தக் குளியலறைக் கதவைக் கொஞ்சம் அடைத்துவிட்டு இந்தக் கவிதையை வாசியுங்கள். ஒரு காதல் எப்போது கனக்கும், எப்போது இலகுவாகும்?

நான் ஒரு அன்பை
ஒரு காதலை
கொண்டு வரும்போது
அது ஒரு ரோஜா தோட்டமாக இருக்கிறது
என் கையில் அதை வைத்திருக்க முடியாதபடி
அப்படி கனத்துவிடுகிறது

யார் கையிலோ அதைத் தந்த மறுகணம்
ஒரு உதிர்ந்த மலர்போல
அத்தனை சிறியதாக
அத்தனை தனிமையுடையதாக
அது எப்படி மாறிவிடுகிறது?

'மருந்து' என்ற தலைப்பில் ஒரு கவிதை. இந்தத் தொகுப்பில் எனக்குப் பிடித்த மிகச் சில கவிதைகளில் ஒன்றுஏனென்றால், நான் நலமற்றுப் போன ஒரு நாளில்தான் என் காதலி என்னை விட்டுப் பிரிந்தாள்.

நான் நலமற்றுப் போகையில்
உன் அன்பை
ஒரு துளி கூடுதலாக வேண்டுவேன்

நான் உன் அன்பற்றிருக்கும் காலங்களில்
நலமற்றுப் போய்
உன்னை மீட்டுக்கொள்வேன்

சில கவிதைகளில் குறும்பு கொப்பளிக்கிறது. வாசகரை 'பிளேபாய்' அல்லது 'பிளேகேர்ள்' ஆக்கிவிடுகிறது. அப்படியான ஒரு கவிதை:

தூக்கத்தில் எழுப்பி
உன் கலைந்த குரல் கேட்க
எனக்கு மிகவும் பிடிக்கும்

உன் குரல் அப்போது
ஆடையில்லாமல்
பிறந்தமேனியாய் இருக்கும்

எத்தனை பேர் உங்கள் விருப்பத்துக்குரியவர் உங்களுடன் தொலைபேசும்போது அவரை உங்கள் மனதில் நிர்வாணப்படுத்தியிருக்கிறீர்கள்?

சில கவிதைகளில், ஒற்றை வரி மட்டும் காமத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன. தூக்கிவாரிப் போடுகின்றன. 'உன் யோனியின் மீன் வாசனை' என்ற வரியைப் படித்துவிட்டு, மூன்று நாட்களாக கனவில் மீன் பிடித்திருக்கிறேன். அதற்கு அடுத்த பக்கத்திலேயே இன்னொரு கவிதை வரி இப்படி மீட்டுகிறது:

உன் யோனியை
என்னிரு கைகளால் ஏந்திக்கொள்கையில்
நீ ஒரு பறவையின்
இறகைக் கோதுவதுபோல
கிறங்கிய கண்களுடன் என் தலையை வருடுகிறாய்...

காதலின் மகத்துவம் இது. இல்லையென்றால் யோனியை எப்படிச் சிறகாகப் பார்க்க முடியும்?


சில இடங்களில் கவிஞர், சார்லி சாப்ளின் ஆகிவிடுகிறார். உதாரணத்துக்கு இது:

எதை எதையோ நினைக்கிறேன்
இந்த இரவுகள் உறங்க அல்ல
நான் கண்ணீர் சிந்துவதை
யாரும் காணக்கூடாது

இன்னொரு இடத்தில் அவர், வரலாற்றாசிரியராகி விடுகிறார்.

புஷ்கின் எழுதிய எந்தக் கவிதையிலும் சிறந்தது
ஒரு பெண்ணிற்கான துப்பாக்கிச் சண்டையில்
அவன் கொல்லப்பட்டான் என்பது

இதன்படி பார்த்தால், தன் காதை வெட்டிக் கொடுத்த தருணம்தான், வான்காவின் மிகச் சிறந்த ஓவியம் என்ற ஒப்பீட்டுக்கு வந்துவிட முடியும்.

அவரே வேறொரு இடத்தில் சித்தர் ஆகி விடுகிறார். 'உடல் ஒரு கூடு' என்பார்கள் சித்தர்கள். கவிஞரோ, தனது இருப்பை ஒரு வீட்டுக்கு இணையாக உவமப்படுத்துகிறார்.

செளகர்யங்கள் குறைவெனினும்
நீ பயமின்றி புழங்கும்
அவ்வளவு பழகிய வீடு
போலிருக்கிறேன்

என்று அவர் எழுதுகையில், நமது இருத்தலும் ஒரு வீடாகிவிடுகிறது. தங்களின் வாழ்க்கையிலிருந்து தங்களின் காதலர் விலகிப்போகும்போது, சிலர் தன் வீட்டில் ஒட்டடை படிந்திருப்பதாக உணர்கிறார்கள். சிலருக்கு யாரோ உள்ளே வந்தவுடன், துடைத்து வைத்தாற் போன்று துலக்கமாகிவிடுகிறது.

அப்புறம்... மிகவும் முக்கியமான ஒரு 'கலாச்சார அல்லது சீரழிவுப் போக்கு' குறித்துக் கவலைப்படுகிறார் மனுஷ்.

ஒரு அன்பின் தருணத்தை
ஒரு செல்ஃபியாக்குகிறீர்கள்
ஒரு நேசத்தின் வாக்கியத்தை
ஸ்க்ரீன் ஷாட் ஆக்குகிறீர்கள்
ஒரு காதலின் உரையாடலை
ஒலிப்பதிவு செய்துகொள்கிறீர்கள்

எல்லாமே ஆவணங்களாக மாறும் எனில்
எதுதான் நம் இதயத்தில் தங்கும்?
இந்த அன்பு இல்லாமல்போகும்போது
இதையெல்லாம்
நீங்கள் ஒரு சாட்சியமாக்கக்கூடும்
அந்த அன்பு இல்லாமல் போய்விட்டது
என்பதைத் தவிர
வேறு எதை நீங்கள் நிரூபிக்க முடியும்?

காதலை, காதலினால் முகிழும் கூடலை 'ஸ்கிரீன்ஷாட்' ஆக்குகிற காலத்தில் எந்தக் காதல்தான் புனிதமானதாக இருந்துவிடக் கூடும்?

சந்தேகமே இல்லாமல் இது 'பாய் பெஸ்டி'க்களின் காலம். நட்பாகவும் இல்லாது, காதலாகவும் இல்லாது... ஆனால் சிநேகிதியின் காதலன் முன்பு அவள் தோள் மீது கைபோடுகிற பழக்கத்தை எப்படிப் புரிந்துகொள்வது? இந்தச் சிக்கல்தான் பல காதல்கள் சிதறக் காரணமாக இருக்கின்றன. அந்தக் காதலர்களைக் கதறவிடுவதுதான் இந்த 'பெஸ்டி'களின் வேலை. சிநேகிதியின் காதலர்களை மட்டம்தட்டுவதில் அவர்களுக்கு ஒரு அல்பத்தனமான சந்தோஷம்.

சிநேகிதிகளின் காதலர்கள்
வாழ்க்கையில் ஒரு புத்தகம்கூடப் படித்திராதவர்கள் என்பது
என் சிநேகிதிகளுக்கு
ஏன் ஒரு புகாராகவே இல்லை

என்று வருந்தும் அதே நேரத்தில்,

என் சிநேகிதியின் காதலனுக்குத் தெரியாத 
என் சிநேகிதிக்குப் பிடித்த ஒன்றை
அவனிடம் கூறும்போது
அவன் அசட்டுத்தனமாய்ப் புன்னகைப்பது
எனக்கு மிகவும் உற்சாகமாக இருக்கிறது

என்று எழுதுகிறார் கவிஞர். சிநேகிதி என்பதால் உரிமை எடுத்துக்கொள்ளவும் முடியாது. ஆனால் அவள் அணுக்கமும் ஆதரவும் வேண்டும். அவளைப் படுக்கைக்கு அழைக்க முடியாது. ஆனால் அதற்காக அவளுடன் '' ஜோக்குகளைப் பகிராமலும் இல்லை. அவள் காதல் 'பிரேக் அப்' ஆகும்போது சந்தோஷமடையவும் முடிகிறது. ஆனால் 'நீ ஏன் என்னைக் காதலிக்கலை/காதலிக்கக் கூடாது?' என்று கேட்கும் துணிச்சலும் இல்லை. 'பிரேக் அப்' ஆனவுடன், தன் நண்பன் மேல் காதல்கொள்வதற்கு வாழ்க்கை சினிமா இல்லை அல்லவா..?


ஒரு நல்ல கவிதை என்ன செய்துவிட முடியும்? அதைப் போன்ற இன்னொரு கவிதையைப் படைக்கத் தூண்டும். இந்தத் தொகுப்பிலிருக்கும் சில கவிதைகள், அதைப் போன்ற கவிதைகளை அல்ல... மாறாக, அந்தக் கவிஞனாகவே மாறி வாழ்ந்து பார்க்க, ஆசை கொள்ள வைக்கிறது.

அன்பின் காதலன்களே... அடுத்த முறை நாங்கள் உங்கள் காதலிகளைப் பார்க்க நேர்ந்தால் ஒரு ஐந்து நிமிடம் எங்களைத் தனிமையில்விடுங்கள். ஏனென்றால், கட்டங்கடைசியாக அவர்களிடம் நாங்கள் ஒன்றைச் சொல்ல வேண்டும். அதையும் கவிஞரே எழுதிக்கொடுத்திருக்கிறார்.

இன்றாவது என் காதலை உன்னிடம்
சொல்லிவிடலாம் என்றுதான் விரும்பினேன்
உன் காதலனை அருகில் வைத்துக்கொண்டு
எப்படிச் சொல்வது என்றுதான்
மிகவும் கூச்சமாக இருக்கிறது.