Tuesday, October 30, 2018

ஆதிக்கத்தை வென்ற அன்னா பர்ன்ஸ்!

ந.வினோத் குமார் 

அவளுக்கு வயது 18. பத்துக் குழந்தைகள் உள்ள குடும்பத்தில் ஏழாவதாகப் பிறந்தவள். அதனால் அவள் ‘மிடில் சிஸ்டர்’ என்று அழைக்கப்படுகிறாள். பிரெஞ்சு மொழி வகுப்பில் படிக்கும் அவள், எப்போதும் சாலையில் நடந்து செல்லும்போது, 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தகங்களைப் படித்துக்கொண்டே செல்வாள். அது ஏன் 19-ம் நூற்றாண்டு? ஏனென்றால் அவளுக்கு 20-ம் நூற்றாண்டு, விரும்பத்தக்கதாக இல்லை.  

அன்றும் அப்படித்தான். பிரெஞ்சு வகுப்பை முடித்துவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, சர் வால்டர் ஸ்காட் எழுதிய ‘இவான்ஹோ’ நாவலைப் படித்துக்கொண்டே நடந்து போகிறாள். அப்போது, ஒரு வெள்ளை நிற வேன், அவள் அருகில் வந்து நிற்கிறது. ‘லிஃப்ட் வேண்டுமா?’ என்று கேட்கிறார் வேனுக்குள் இருந்தவர். கேட்டவர், 41 வயது ஆண். அவள் மறுக்கிறாள்.  

வெள்ளை நிற வேனில் வந்ததால் அவருக்கு ‘மில்க்மேன்’ என்று பெயரிடுகிறாள் அவள். அடுத்த சில நாட்களில், அவள் ‘ஜாகிங்’ சென்றுகொண்டிருக்கும்போது, இரண்டாவது முறையாக அவளைச் சந்திக்கிறார் ‘மில்க்மேன்’. அவர்கள் இருவரும் சாலையில் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்த சிலர், அவர்கள் இருவரும் காதலர்கள் என்று முடிவு கட்டுகிறார்கள். 

இதனால் அவளது வீட்டில் பிரச்சினை ஏற்படுகிறது. உண்மையில், அவள், ‘மில்க்மேனை’ காதலிக்கவில்லை. மாறாக, தனக்கு அறிமுகமாகி ஒரு வருடமேயான ‘இவனை நாம் ‘பாய் ஃபிரெண்ட்’ ஆக வைத்துக்கொள்ளலாமா..?’ என்று யோசிக்கச் செய்கிற ‘மேபீ – பாய் ஃபிரெண்ட்’டை காதலிக்கிறாள். அது காதல்கூட இல்லை. சும்மா ஒரு ‘டேட்டிங்’. அவ்வளவுதான். 

அவள் வேறொருவனைக் காதலிப்பது ‘மில்க்மேனு’க்குத் தெரிந்துவிடுகிறது. ‘என்னுடைய ஆசைக்கு அடிபணிந்து விடு’ என்று அவளைத் திரும்பத் திரும்ப ‘ஸ்டாக்கிங்’ செய்கிறார் அவர். அவள் மறுத்துவிடுகிறாள். ‘இதற்கு நீ சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால், உன் ‘மேபீ – பாய் ஃபிரெண்ட்’டைக் கொன்றுவிடுவேன்’ என்று மிரட்டுகிறார். அவருக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது? ஏனென்றால், அவர் அந்த தேசத்தின் அரசை எதிர்க்கும் மிக முக்கியமான தீவிரவாதக் கூட்டத்தில் மிக முக்கியப் பொறுப்பில் இருப்பவர். அந்த மாவட்டத்தில் அவர்தான் பெரிய ஆள்!  

அவரின் அந்தப் பயமுறுத்தலுக்கு ‘மிடில் சிஸ்டர்’ ஆற்றிய எதிர்வினை என்ன? அவளது ‘மேபீ – பாய் ஃபிரெண்ட்’ காப்பாற்றப்பட்டானா? இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது அன்னா பர்ன்ஸ் எழுதிய ‘மில்க்மேன்’ நாவல். 2018-ம் ஆண்டுக்கான புக்கர் பரிசை, இந்த நாவல் கடந்த 16-ம் தேதி பெற்றது!

 
*** 
இந்த நாவலில் எந்தக் கதாப்பாத்திரத்துக்கும் பெயர்கள் இல்லை. அவர்களின் உறவு முறை, அவர்கள் செய்யும் வேலை போன்றவற்றின் அடிப்படையில், அந்த உறவு முறையும், செய்யும் வேலையுமே பெயர்களாக வழங்கப்பட்டுள்ளன. இதனால், நாவலைப் படிக்கும்போது, யார், எதைச் சொல்கிறார்கள் என்ற குழப்பமும் அயற்சியும் ஏற்படுகிறது. எனவே விமர்சகர்கள் இதை, ‘உங்களைச் சோதிக்கும் நாவல்’ என்று சொல்கிறார்கள். ஆம்… நம் பொறுமையை ஏகத்துக்கும் சோதிக்கிறது! 

நாவல் முழுவதும், ‘மிடில் சிஸ்டர்’ எனும் நாயகி, தன் கதையைச் சொல்வது போல அமைந்திருக்கிறது. கதையில், வடக்கு ஐயர்லாந்து சிவில் போர், சர்வதேச அளவிலான பெண்ணியக் குழு உருவாதல், தலிபான்களின் அடக்குமுறை, ஸ்டாலின் கால ரஷ்யாவில் இருந்த நிலை, இன்றைப் பெரும் பரபரப்பைக் கிளப்பி வரும் ‘மீ டூ’ போன்ற பல அரசியல் நிகழ்வுகளின் சாயல் ஆங்காங்கே தென்படுகின்றன.  

புகழ்பெற்ற ஐயர்லாந்து நாடகாசிரியர் சாமுவேல் பெக்கெட்டின் எழுத்துச் சாயல், இந்த நாவலில் தெரிவதால், இதை ‘பெக்கெட்டியன்’ நாவல் என்றும் கருதுகிறார்கள் விமர்சகர்கள். ஆனால், அன்னாவோ, ‘இந்த நாவலை எழுதி முடிக்கும் வரை, நான் பெக்கெட்டைப் படித்ததே இல்லை’ என்கிறார். 

*** 
அன்னா பர்ன்ஸ், ஐக்கிய ராஜ்ஜியத்துக்கு உட்பட்ட வடக்கு ஐயர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளர். இதுவரை இரண்டு நாவல்களும், ஒரு குறுநாவலும் எழுதியிருக்கிறார். ‘மில்க்மேன்’, இவரது நான்காவது படைப்பாகும்.


இந்த நாவல், வடக்கு ஐயர்லாந்தின் தலைநகரமான பெல்ஃபாஸ்ட் நகரத்தில், 1970-களில் நடப்பதாகச் சித்தரித்துள்ளார் அன்னா. அந்தக் காலகட்டம் வடக்கு ஐயர்லாந்துக்கு மிகவும் சோதனையான காலகட்டம். ‘தி ட்ரபிள்ஸ்’ என்று அழைக்கப்பட்ட வடக்கு ஐலர்லாந்து சிவில் போர், அப்போதுதான் உச்சத்தில் இருந்தது.  

புரொட்டெஸ்டண்ட் மதப் பிரிவினரைப் பெரும்பான்மையினராகவும், கத்தோலிக்கர்களைச் சிறுபான்மையினராகவும் கொண்ட நாடு, வடக்கு ஐயர்லாந்து. சிறுபான்மையினருக்கு எதிராகத் தொடர்ந்து பல அநீதிகள் நடைபெற்று வந்தன. அதற்கு எதிராக, 1969-களின் மத்தியில், கத்தோலிக்கர்கள் போராட்டங்கள் நடத்த ஆரம்பித்தனர். புரொட்டெஸ்டண்ட்கள் அதை ஒடுக்க ஆரம்பிக்க, தொடங்கியது ‘தி ட்ரபிள்ஸ்’ சிவில் யுத்தம்.  

நாட்டின் அரசியலமைப்பு, இந்த யுத்தத்தின் மிக முக்கியமான அம்சமாக இருந்தது. புரொட்டெஸ்டண்ட்களோ, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஐக்கிய ராஜ்ஜியத்துடனேயே, வடக்கு ஐயர்லாந்து இணைந்திருக்க வேண்டுமென்று கூக்குரலிட்டார்கள். கத்தோலிக்கர்களோ, ஒருங்கிணைந்த ஐயர்லாந்துக் குடியரசுடன், வடக்கு ஐயர்லாந்து இணைய வேண்டும் என்றனர்.  

இந்த யுத்தம் அடுத்த சுமார் 30 ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது. இறுதியாக 1998-ம் ஆண்டு, ‘புனித வெள்ளி உடன்படிக்கை’ மூலம், அந்தப் போர் முடிவுக்கு வந்தது. அந்த உடன்படிக்கையின்படி, ஐக்கிய ராஜ்ஜியத்தின் நாடாளுமன்றத்தின் பொறுப்புகள், வடக்கு ஐயர்லாந்துக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. இன்று வரையில், அந்த உடன்படிக்கையின் அடிப்படையிலேயே வடக்கு ஐயர்லாந்தில் ஆட்சி நடைபெற்று வருகிறது.  

இப்படி ஒரு யுத்தப் பின்னணியைக் கொண்ட தேசத்திலிருந்து வந்த நாவலாசிரியர் அன்னா பர்ன்ஸ், புக்கர் பரிசை வென்ற முதல் ஐயர்லாந்து நாட்டு எழுத்தாளர் எனும் பெருமையைப் பெற்றிருக்கிறார்.  

புக்கர் பரிசு, அடிப்படையில், இங்கிலாந்து, அயர்லாந்து மற்றும் காமென்வெல்த் நாடுகளைச் சேர்ந்த ஆங்கில எழுத்தாளர்களுக்குத்தான் என்று இருந்தது. பிறகு, விதிகள் தளர்த்தப்பட்டு, 2014-ல்தான் அமெரிக்க எழுத்தாளர்களையே இதில் சேர்க்க ஆரம்பித்தார்கள். இந்த ஆண்டு, இந்த விருது தொடங்கப்பட்ட 50-வது ஆண்டு. ஆனால், கடந்த 49 வருடங்களில் வடக்கு ஐயர்லாந்தில் இருந்து, ஒரு எழுத்தாளருக்குக்கூட இந்த விருது போய்ச் சேரவில்லை. அந்த விருது, முதன்முதலில் அந்த நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்குப் போய்ச் சேர்ந்திருப்பது மட்டுமல்லாமல், இதுவரையில் இந்தப் பரிசுக்கான போட்டியில் இங்கிலாந்து எழுத்தாளர்கள் செலுத்தி வந்த ஆதிக்கமும் முடிவுக்கு வந்திருப்பதால், அன்னா பர்ன்ஸ் பெற்ற வெற்றி கொண்டாடப்பட வேண்டியதாகிறது!  

ஆ… சொல்ல மறந்துவிட்டோமே…. அன்னா பர்ன்ஸ், ஒரு கத்தோலிக்கர்!

நன்றி: காமதேனு (29/10/2018 - 05/11/2018)

Monday, October 15, 2018

துணிந்து நின்றாய் பெண்ணே!

ந.வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 14 அக்டோபர் 2018 

முதலில் ஹாலிவுட், பிறகு நோபல் இலக்கியப் பரிசுக் குழு, பின்னர் அமெரிக்க நீதிமன்றம், தொடர்ந்து பாலிவுட், அதைப் பின்பற்றி இந்தியப் பத்திரிகை, எழுத்துத் துறை என்று நீண்டு இப்போது கோலிவுட் வரை வந்து நிற்கிறது ‘மீ டூ’ (#MeToo). அதனால்தான், இது ‘மீ டூ’க்களின் காலமாக இருக்கிறது!

‘எந்த ஒரு வன்முறையிலும் முதலில் சீரழிக்கப்படுவது பெண்ணும் பேருந்தும்தான்’ என்பார்கள். வன்முறைக் காலத்தில் மட்டுமல்ல. அமைதிக் காலத்திலும், பெண்கள் ஆகப் பெரிய வன்முறைக்கு ஆளாகி வருகிறார்கள்.

2017 அக்டோபரில்தான் முதன்முறையாக ‘மீ டூ’ பிரசாரம் தொடங்கியது. இந்த ஆண்டு அக்டோபரில் ஓராண்டை நிறைவு செய்வதற்குள், இந்தியாவில் ‘மீ டூ’ பூகம்பம் வெடிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்தத் தருணத்தில், ‘மீ டூ’ பிரசாரத்தின் தொடக்கப்புள்ளியாக இருக்கும் ஹாலிவுட் நடிகை ரோஸ் மெக்கோவன், எழுதிய ‘பிரேவ்’ புத்தகம் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. அது பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களுக்கு மட்டுமல்லாது, மொத்த மானுடத்துக்குமே பல படிப்பினைகளைத் தருவதாக அமைந்துள்ளது.

  
கடவுளின் பெயரில் களியாட்டம் 

பிறந்த வீடுகளில், விரும்பி வந்த துறைகளில், ‘உன் உயர்வுக்கு நான் பொறுப்பு’ என்று கூட நின்றவர்களாலேயே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும்போது, பெண் முதல்முறையாக அவமதிக்கப்படுகிறாள். ‘உனக்கு நேர்ந்த துயரத்துக்கு நீயேதான் காரணம்’ என்று குற்றம்சாட்டும்போது, பெண் இரண்டாவது முறையாக அவமதிக்கப்படுகிறாள்.

ரோஸ் மெக்கோவனுக்கும் அதுதான் நேர்ந்தது. இத்தாலி நாட்டில் உள்ள கிராமம் ஒன்றில், ‘சில்ட்ரன் ஆஃப் காட்’ எனும் அமைப்பு நடத்தும் விடுதியில் பிறந்தார் ரோஸ். அவருடன் பிறந்தவர்கள் 5 பேர். அவரது பெற்றோரும் அங்குதான் மதப் பிரசாரம் செய்து பணியாற்றி வந்தார்கள். சிறு வயது முதலே இறை நம்பிக்கையற்றவராக ரோஸ் வளர்ந்தார். அதனால், அங்கு பணியாற்றிய ஊழியர்களால் உடல் ரீதியான தண்டனைகளுக்கு ஆளானார்.

அங்கு அவரைப் போன்ற சிறுவர்களுக்குப் பாலியல் ரீதியான தொந்தரவுகள் கொடுக்கப்பட்டு வந்தன. அதை எதிர்த்த சிலர், மர்மமான முறையில் கொல்லப்பட்டார்கள். இதனால், தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் அந்தத் துன்பம் நேரலாம் என்று அஞ்சிய ரோஸின் பெற்றோர், குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு அங்கிருந்து தப்பித்து அமெரிக்காவில் குடியேறினர்.

அமெரிக்கா காட்டிய வறுமை 

அமெரிக்காவுக்கு முதன்முறையாக விமானத்தில் வந்தபோதுதான், உலகில் நிலைக் கண்ணாடி என்ற விஷயம் இருப்பது ரோஸுக்குத் தெரிய வந்தது. கண்ணாடியில் முதன்முறையாகத் தன் முகத்தைப் பார்த்தவருக்கு எந்த உணர்வும் தோன்றவில்லை. காரணம், அவருக்கு அப்போது ‘அழகு’ என்றால் என்ன என்பதே தெரிந்திருக்கவில்லை. அப்போதுதான் அவர் பதின்பருவத்தில் காலடி எடுத்து வைத்திருந்தார்.

அமெரிக்கா என்பது பணக்கார நாடு என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில், அது பணம் படைத்தவர்களுக்குத்தான் அது பணக்கார நாடு. மற்றபடி, நிலையான வேலை இல்லாமல், முறையான வருமானம் இல்லாமல், ஒரு வேளை மட்டும் கிடைக்கக் கூடியதை உண்டுவிட்டு, நடைபாதைகளிலும் கல்லறைத் தோட்டங்களிலும் படுத்துக் கிடப்பவர்கள் நிறையப் பேர்.

அமெரிக்காவில், ரோஸின் தந்தை தொடங்கிய மதப் பிரசார அமைப்புக்குச் சரியான கூட்டம் இல்லை. அதனால் போதிய வருமானம் இல்லை. இதன் காரணமாக, வீட்டில் தினமும் சச்சரவுகள் ஏற்பட்டன. பெற்றோர்கள் விவாகரத்துப் பெற்றார்கள். ரோஸும் அவரது உடன்பிறந்தவர்களும் தனித்துவிடப்பட்டார்கள். காலப் போக்கில் அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசை நோக்கிப் போனார்கள். ரோஸ், போதைப் பொருளுக்கு அடிமையானார். மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு பாலியல் தொல்லைகள் ஏற்பட, அங்கிருந்து தப்பித்தார். இடுகாட்டிலும் திரையரங்கிலும் சொற்ப சம்பளத்துக்கு சில காலம் வேலை பார்த்தார்.

சினிமா தந்த சிக்கல்கள் 

திரையரங்கு ஒன்றில் ரோஸ் பணியாற்றிபோது, ‘ஹூ ஃபிரேம்ட் ரோஜர் ரேப்பிட்’ மற்றும் ‘வொர்க்கிங் கேர்ள்’ ஆகிய இரண்டு படங்கள் அவரை மிகவும் பாதித்தன. ஹாலிவுட்டில் கால் பதிக்கும் ஆசை அவருக்குத் துளிர்விட்டது. போதாக்குறைக்கு, அவர் மிகவும் அழகாக இருந்தார். நீண்ட கூந்தலும் இருந்தது.

அப்போது ரோஸ், தன் தந்தையுடன் வாடகை வீடு ஒன்றில் தங்கியிருந்தார். அந்த வீட்டுக்கு வாடகை கட்ட முடியாமல் திணறிக்கொண்டிருந்தபோது, படம் ஒன்றில் ‘எக்ஸ்ட்ரா’வாக வந்து செல்ல ஒரு வாய்ப்புக் கிடைத்தது. ஒரு நாளைக்குச் சுமார் 2 ஆயிரம் ரூபாய் கூலி என்பதால், ‘கிளாஸ் ஆஃப் 1999’ என்ற படத்தில் நடித்தார் ரோஸ். அதுதான் அவர் திரையில் தோன்றிய முதல் படம். அதற்குப் பிறகு, ‘டூம் ஜெனரேஷன்’, ‘ஸ்கிரீம்’ என அடுத்தடுத்துப் பட வாய்ப்புகள் வந்தன.

‘ஸ்கிரீம்’ படத்தைத் தயாரித்த ‘மிராமாக்ஸ்’ நிறுவனம்தான் 1997-ல் ‘ஃபேண்டம்ஸ்’ என்ற திரைப்படத்தையும் தயாரித்தது. அதில் நடித்துக் கொண்டிருந்த போதுதான், மிராமாஸ் உரிமையாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீனால் பாலியல் வன்கொடுமைக்கு ரோஸ் ஆளாக்கப்பட்டார். அதைப் பற்றி, அந்த நிறுவனத்தின் வழக்கறிஞர், நிர்வாகிகள் எனப் பலரிடம் முறையிட்டும் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ‘ஹாலிவுட்டில் அப்படித்தான் இருக்கும். பெண் என்றால் இவை அனைத்தையும் சந்தித்தே தீர வேண்டும்’ என்று ரோஸுக்குச் சொல்லப்பட்டது. அடுத்த 20 வருடங்களுக்கு அந்தத் துயரத்தைத் தன் மனதில் மறைத்து வைத்திருந்தார்.

இதற்கு இடையில், சில காதல்கள், சில திருமணங்கள், சில பிரிவுகளும் ரோஸ் வாழ்வில் அரங்கேறின. அந்தப் பிரிவுகள், தோல்விகள், அவை தந்த வேதனைகள் அனைத்துக்கும் ‘நீதான் ரோஸ் காரணம்’ என்று சொல்லப்பட்டதை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

  
தொடங்கியது ‘மீ டூ’ பூகம்பம்!  

இந்நிலையில் 2016-ல் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது டொனால்ட் ட்ரம்புக்கு எதிராகப் பெண்கள் பலர், ட்ரம்ப் தங்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினார் என்று வாக்குமூலம் கொடுத்தார்கள். அதையொட்டி, தனக்கு நேர்ந்த வன்கொடுமைகளை ரோஸ், ட்விட்டரில் பதிய, ‘நியூயார்க் டைம்ஸ்’ இதழ் புலனாய்வு மேற்கொண்டது. அப்படித்தான் வெளியாகின ஹார்வி வெய்ன்ஸ்டீனின் லீலைகள். ரோஸ் கொடுத்த துணிச்சலால், வெய்ன்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட இதர பெண்களும் வாக்குமூலம் கொடுக்க முன் வந்தார்கள். தொடங்கியது ‘மீ டூ!’. இதனால் ‘2017-ம் ஆண்டின் நபர்’ என்று ‘டைம்’ இதழால் கவுரவிக்கப்பட்டார். 

தான் சந்தித்த கசப்புகளை ‘பிரேவ்’ என்ற தலைப்பில் நூலாக எழுதியிருக்கும் ரோஸ், தன் புத்தகத்தில் ஹார்வி வெய்ன்ஸ்டீனின் பெயரைக் குறிப்பிடாமல், அவரை ‘மான்ஸ்டர்’ (பூதம்) என்றே குறிப்பிடுகிறார். எனில், அவர் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கக்கூடும்?

பெண்ணுக்கு, கூந்தல் என்பது அழகின் ஓர் அங்கம். ‘மீ டூ’ பிரசாரம் தொடங்கிய பிறகு, தனது கூந்தலை வெட்டி, மொட்டை அடித்துக்கொண்டார் ரோஸ். அதற்கு அவர் சொன்ன காரணம்: “நீண்ட கூந்தல் இருந்தால், நீ செக்ஸியாகத் தெரிவாய் என்றும், செக்ஸியாகத் தெரிந்தால்தான் எனக்குப் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் எண்ணம் என்னுள் இந்தச் சமூகத்தால் திணிக்கப்பட்டது. அதிலிருந்து வெளியேறவே நான் மொட்டையடித்துக்கொண்டேன். என் சுதந்திரத்தை உணர்ந்தேன்!”

‘பெண்களை எப்படி நடத்த வேண்டும் என்று உங்கள் மகன்களுக்குச் சொல்லிக்கொடுங்கள்’ என்று சொல்லும் ரோஸ், பெண்களுக்குச் சொல்லும் அறிவுரை இது: ‘எப்போதும் துணிச்சலுடன் இருங்கள். நீங்கள் விரும்பாத விஷயங்கள், உங்கள் மீது திணிக்கப்பட்டால் ‘முடியாது’ என்று சொல்லப் பழகுங்கள்!’

நன்றி: இந்து தமிழ் - பெண் இன்று (சில மாறுதல்களுடன்),  (ரோஸ் படம்) time.com

Monday, October 1, 2018

சமூகத்தை விசாரிக்கும் கொலைகள்!

ந.வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 18 டிசம்பர் 2016

வாழ்க்கையின் மீது நம்பிக்கையற்றும், வாழ்க்கை தந்த கசப்புகளாலும் ஒருவர் அடைந்த வெறுமையால் இன்னொருவரைக் கொல்ல முடியுமா?

முடியும் என்கிறது ‘இன் கோல்ட் ப்ளட்’ எனும் ஆங்கில நாவல். 1959-ம் ஆண்டு அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் ஹோல்காம்ப் எனும் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்டார்கள். அந்தக் கொலைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து ட்ரூமன் கபோட் எழுதியதுதான் இந்த நாவல்.


நாவலாக வருவதற்கு முன், இது ‘தி நியூயார்க்கர்’ பத்திரிகையில் 1965-ம் ஆண்டு நான்கு பாகங்கள் கொண்ட தொடராக வெளியானது. பின்னர் ரேண்டம் ஹவுஸ் பதிப்பகத்தால் 1966-ம் ஆண்டு புத்தகமாக வெளியிடப்பட்டது.

நாவலின் சிறப்பம்சம் என்னவென்றால், அந்தக் கொலைகளைச் செய்த இளைஞர்கள் ரிச்சர்ட் டிக் ஹிக்காக், பெர்ரி ஸ்மித் ஆகியோரின் வாழ்க்கையை மிக ஆழமாக கபோட் ஆராய்ந்திருப்பதுதான். இரண்டு பேருமே வேறு வேறு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அவர்களுக்கு ஏற்படுகிற பிரச்சினை ஒன்றுதான். தத்தமது அடையாளத்தை இழப்பதுதான் அது!

தங்கள் குடும்பத்தில் தங்களுக்கு நேர்ந்த கசப்புகளால் காயமடைந்தவர்கள் அவர்கள். வீட்டை விட்டு வெளியேறியவர்கள். இருவருமே தங்களின் திறன்களை நிரூபிக்கத் தேவையான வாய்ப்புகள் கிடைக்கப் பெறாதவர்கள். பெண்களால் போஷிக்கப்பட்டவர்கள். குற்றம் புரிந்தவர்கள். சிறை சென்றவர்கள்.

இப்படியானவர்கள் எந்த ஒரு காரணமும் இல்லாமல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரைக் கொல்வது ஆச்சர்யப்படத்தக்க விஷய மல்ல. ‘ஆளுமைச் சிதைவு’ உள்ள யாரும் ஒரு கட்டத்தில் அந்த இளைஞர்களின் நிலைக்குத்தான் தள்ளப்படுவார்கள். அவர்களைச் சிறையில் வைத்துத் தண்டிப்பதைவிட, மனநல மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும். ஆனால், நாம் ஏற்படுத்தியிருக்கும் சட்டங்கள் அதற்கு ஏற்றவை அல்ல, என்கிறார் கபோட். இப்படிச் சொல்வதன் வாயிலாக, சமூகத்தையும் அவர் இந்தக் குற்றத்தின் பின்னணியில் கொண்டுவருகிறார்.


சட்டங்கள் பற்றிப் பேசுகிற இந்த நாவல், மரண தண்டனை குறித்தும் பேசுகிறது. நாவலின் ஓரிடத்தில் ரிச்சர்ட் டிக் ஹிக்காக் இப்படிச் சொல்வான்: “மரண தண்டனை என்பது ஒரு பழிவாங்கல்தான். நான் தூக்கிலிடப்படாத வரை, அந்தப் பழிவாங்கல் தேவை என்றுதான் நானும் சொல்வேன்”.  இன்னொரு பக்கம், பெர்ரி ஸ்மித் இப்படிச் சொல்வான்: “நான் செய்த குற்றத்துக்காக மன்னிப்புக் கேட்பது முறையாகாது. அது அர்த்தமற்றது. ஆனாலும் நான் மன்னிப்புக் கேட்கிறேன்”.

மரண தண்டனை குறித்து அதிகளவில் உரையாடல்கள் நடைபெறும் இந்தக் காலகட்டத்தில், நாம் மேற்கண்ட இரண்டு பேரின் நிலைகளிலிருந்தும் சிந்தித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

நன்றி: இந்து தமிழ், (கபோட் படம்:  nypost.com)