Thursday, October 24, 2013

வாய்சஸ் ஃப்ரம் செர்னோபில்



நார்வே மொழியில்: இங்க்ரிட் ஸ்டோர்ஹால்மென்
ஆங்கிலத்தில்: மரீட்டா டரால்ருட் மேட்ரெல்

.வினோத் குமார்

பேரழிவுகள்..! அதுதான் மனிதனை சற்று நிதானப்படுத்தி அவன் பலவீனத்தை அவனுக்கே உணர்த்துகிறது. இயற்கைப் பேரழிவுகளால் மனிதன் இயற்கையின் பலத்தைப் புரிந்து கொள்கிறான் எனில், மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளால் அவன் என்ன கற்றுக் கொள்கிறான்?

சிந்திக்கிறீர்களா..?

'ரொம்பவும் அதிகமாக சிந்திக்காதீர்கள். அதுதான் ஆபத்தானது. சிந்திக்க ஆரம்பித்தீர்கள் என்றால், நீங்கள் தொலைந்தீர்கள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேலை செய்யுங்கள். அது அது அப்படியே கடக்கட்டும், மாற்றங்களைப் பாருங்கள், எப்படி மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்'.



இப்படித்தான் முதல் அத்தியாயத்திலேயே நம்மை நிலைகுலைய வைக்கிறது 'வாய்சஸ் ஃப்ரம் செர்னோபில்' எனும் புத்தகம். ரஷ்ய நாட்டில் உள்ள செர்னோபில் அணு உலை விபத்து ஏற்பட்ட நிமிடம் முதல் அதற்குப் பிறகான நாட்களை அந்த விபத்தால் பாதிக்கப்பட்ட வெவ்வேறு உண்மை மனிதர்களின் நினைவுகளைக் கொண்டு எழுதி இருக்கிறார் இங்க்ரிட் ஸ்டோர்ஹால்மென். இந்நூலின் ஆசிரியர் நார்வே நாட்டைச் சார்ந்தவர். செர்னோபில் விபத்து நடந்து அந்த அணுக் கதிர்கள் நார்வே நாடு வரைக்கும் பரவியிருந்தது. அந்தக் கதிர்களால் தன் இரண்டு மூத்த சகோதரிகளையும் புற்றுநோய் தாக்கி இறந்துவிடுகிறார்கள். இந்த பாதிப்புதான் அவரை இந்தப் புத்தகத்தை எழுத வைத்திருக்கிறது. புத்தகம் எழுதத் தொடங்கிய போது அவருக்கு வயது 24 தான். ஆனால் புத்தகத்தின் மொழி நடை ரொம்பவும் மெச்சூர்ட்!

26 ஏப்ரல் 1986. செர்னோபில் அணு உலையில் விபத்து ஏற்படுகிறது. அது எப்படி ஏற்பட்டது என்று ஆழமான டெக்னிக்கல் டீட்டெய்ல்களுக்கு உள்ளே செல்லாமல் உடனே அதில் மனிதர்கள் எப்படி எல்லாம் பாதிக்கப்பட்டார்கள் என்பதைச் சொல்ல ஆரம்பிக்கும்போது நம்மை இந்தப் புத்தகம் உள்வாங்கிக் கொள்கிறது.

புத்தகம் நெடுக 'இப்படித்தான்... இதற்கு அடுத்து இது' என்று வரிசையாகக் கட்டமைக்கப்படவில்லை. முழுக்க முழுக்க மனிதர்களின் புலம்பல்கள்தான். ஆம் புலம்பல்கள்தான். விபத்தில் அடிபட்டுக் கிடக்கிற மனிதன் ஒருவன் எப்படி எல்லாம் புலம்புவானோ அப்படியான புலம்பல்கள். புத்தகத்தைப் படிப்பதே சர்ரியலிச ஓவியம் ஒன்றை பார்த்துக் கொண்டிருப்பது போன்று உள்ளது.

விபத்து நடந்த பிறகு தன் இரண்டு குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு மனைவியை மட்டும் ரஷ்யாவிலேயே விட்டுச் செல்கிற வெளிநாடு போகும் அணு உலை அதிகாரி ஒருவன்... வெளியே கசிந்த அணுக் கதிர்களைச் சுத்தம் செய்யப் போய் புற்றுநோயால் இறந்த காவலன் ஒருவனைச் சவப்பெட்டியில் வைத்து ஆறடி குழிக்குள் இறக்கும்போது ஓடிச்சென்று அந்தக் குழிக்குள் விழுந்து அவனுடன் தானும் செத்துப்போக விரும்பிய அவன் காதலி... இப்படி ஏராளமான உண்மை மனிதர்கள் வழிநெடுகிலும் தென்படுகிறார்கள். அவரவர்களுக்கென்று ஒரு புரிதல், ஒரு காரணம் இருக்கிறது.



விபத்து நடந்ததற்குப் பிறகு நடக்கிற சம்பவங்கள் நம்மை அதிர வைக்கின்றன. அணுக் கதிர்கள் வெளியானவுடனே ஒரு பணியாளன் ஐயோடின் மாத்திரைகளைத் தேடிச் செல்கிறான். பாவம் அங்கே இருந்ததோ பாதி காலியான மாத்திரைப் பட்டைகள். அதுவும் 1981ம் ஆண்டு வாங்கப்பட்ட காலவதியான மாத்திரைகள். விபத்து நடந்த அந்த ஆண்டில் மட்டும் சுமார் 2 லட்சம் கருச்சிதைவுகள் நடந்திருக்கின்றன. விபத்து நடந்த பிறகு ரஷ்ய அரசை விமர்சிக்கிற ஒவ்வொருவரும் கண்காணிக்கப்படுகிறார்கள். 'செர்னோபில் விபத்துக்குப் பிறகு கண்காணிப்பு என்பது மரணத்தைப் போல பின் தொடர்கிறது' என்று ஓர் உண்மை மனுஷி சொல்கிறாள்.

"...விபத்துக்குப் பிறகு 'செர்னோபில் டூரிசம்' வளர்கிறது. 'தடை செய்யப்பட்ட பகுதி' எனும் வார்த்தைகள் காடு, நதி என்பது போன்ற வழக்கமான சொற்களைப் போல மாறிவிட்டன. நாங்கள் இரண்டு காலங்களுக்கு இடையில் வாழ்கிறோம்...'after the emission and before the isotopes have gone'.

அணுக் கழிவுகளைப் புதைக்க முடியாது. அவ்வளவு எளிதில் அது மறைந்துவிடாது. ஸ்டாலின் மட்டுமே அந்த புகழ்பெற்ற வாக்கியத்தை உதிர்த்தான்: 'ஓர் அடி கூட பின்வாங்குதல் இல்லை'. இப்போது நாங்கள் எல்லோரும் பல மைல் தூரம் பின் தங்கி நிற்கிறோம்.. செர்னோபில்லில்! இங்கு வாழ்பவருடையவாழ்க்கை என்பது மரணத்தைப் போன்றதாக இருக்கிறது".

The reactor is no more dangerous than an illicit domestic distiller.
இப்படித்தான் அவர்கள் சொன்னார்கள். ஆனால் விபத்துக்குப் பிறகுதான் உண்மை தெரிந்தது.

And the politicians say budget, analysis, international, strategic, corruption, dismissal. They do not say pollution.
இந்த வார்த்தைகளைப் படிக்கிற போது அரசியல்வாதிகள் எல்லா நாட்டிலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள் என்பது மீண்டும் ஒருமுறை அழுத்தமாகப் புரிகிறது.

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான நட் ஹாம்சனின் 'ஹங்கர்' எனும் புத்தகத்தில் வரும் கதாபாத்திரத்தின் பெயரைக் கொண்ட 'சல்ட்' பரிசை வென்றுள்ளது இந்தப் படைப்பு. புத்தகத்தின் இறுதியில் இந்நூல் ஆசிரியரின் விரிவான நேர்காணலும் உண்டு. அதில் அவர் இப்படிச் சொல்கிறார்:

'அணு ஆற்றலையும் அணு ஆயுதங்களையும் பயன்படுத்துவதற்காக எதிர்காலம்தான் நமக்குத் தீர்ப்பு வழங்கும் என்று நினைக்கிறேன்'.

No comments:

Post a Comment