Sunday, December 8, 2013

தி பிரிட்ஜஸ் ஆஃப் மேடிசன் கவுண்ட்டி



தி பிரிட்ஜஸ் ஆஃப் மேடிசன் கவுண்ட்டி (The Bridges of Madison County)

ந.வினோத் குமார்

உச்சகட்ட காமத்தின் போது ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் பரவசம் போன்றதான ஒன்றை அனுபவித்தபடியே இந்தப் பதிவை எழுதுகிறேன். ஒரு புத்தகத்தைப் படிப்பது மட்டுமல்லாது அதைப் பற்றி பேசுவது, எழுதுவது கூட இவ்வளவு மகிழ்வைத் தருமா என்பது நினைக்க நினைக்க ஆச்சர்யமாக உள்ளது.

ஒரு நாடோடி. ஐயோவா நகரத்தில் பண்ணையை கவனித்துக் கொண்டு வசித்து வரும் முன்னாள் ராணுவ வீரனின் மனைவி. நாடோடிக்கும் ராணுவ வீரனின் மனைவிக்கும் நிகழும் மத்திம வயது நான்கு நாள் காதல், அது அந்த இருவரின் வாழ்விலும் உருவாக்கும் மாற்றங்கள்... அந்தக் கதையை முன்னும் பின்னுமாக 'ஃப்ளாஷ்பேக்' முறையில் சொன்ன விதத்தில் வாசக இதயத்தினுள் கடத்தப்படும் சோகம்... இதுதான் 'தி பிரிட்ஜஸ் ஆஃப் மேடிசன் கவுண்ட்டி' என்ற நாவல் என்று இறுதியிட்டுச் சொல்ல முடியாது. இதுவாகவும் கூட இருக்கலாம். 'இப்படித்தான் காதல் இருக்க வேண்டும்' என்று யாரேனும் விதிகள் வகுக்க முடியுமா என்ன? அதுபோன்றுதான் இந்தப் புத்தகமும். வாசிக்கிற ஒவ்வொருவரின் மனதிலும் வேறு வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் நாவல் இது!

ராபர்ட் ஜேம்ஸ் வேல்லர் என்பவரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நாவல் இது. தன் முன்னுரையில் சொல்லியிருப்பது போல இது உண்மை நிகழ்வுகளும் புனைவும் சேர்த்து உருவாக்கப்பட்ட படைப்பு.



ராபர்ட் கின்கெய்ட் என்பவர் தன் 50களில் இருக்கிறார். விவாகரத்துப் பெற்றவர். 'நேஷனல் ஜியாகரஃபி' இதழுக்குப் புகைப்படம் எடுப்பவர். காடுகள், மலைகள், பாலைவனங்கள் என உலகின் மூலை முடுக்கெல்லாம் சென்று அரிய விஷயங்களை புகைப்படமாக எடுத்து வாசகர்களை வியக்க வைப்பவர். சில சமயம் தானே கட்டுரைகளையும் எழுதுபவர். ஒரு அசைன்மென்ட்டுக்காக அமெரிக்காவின் ஐயோவா நகரத்தை தேடிச் செல்கிறார்.

ஓரிடத்தில் வழி கேட்க ஒரு வீட்டின் முன் தன் காரை நிறுத்துகிறார். அப்போது அங்கு அவருக்கு உதவுபவர் ஃபிரான்செஸ்கா ஜான்சன். முன்னாள் ராணுவ வீரனின் மனைவி. அவளுக்கு இரண்டு குழந்தைகள். 40களில் இருப்பவள்.

ராபர்ட் கின்கெய்ட்டைப் பார்த்தவுடனே ஃபிரான்செஸ்காவின் மனதில் இனம்புரியாத ஒரு தடுமாற்றம். 'ரோஸ்மேன் பிரிட்ஜ்'க்கு வழிகாட்டிய படியே கின்கெய்ட் உடன் பயணிக்கிறாள் ஃபிரான்செஸ்கா. அன்று மாலை வரை அவளின் வீட்டில் களைப்பாறுகிறார் ராபர்ட் கின்கெய்ட். ஃபிரான்செஸ்காவின் உதவி செய்யும் பாங்கு, அவளின் ஒவ்வொரு நகர்விலும் உதவி என்பதைத் தாண்டிய ஓர் ஈர்ப்பு, அதில் தனக்கான காதலைத் தேடுதல் என்று கின்கெய்ட் அவளிடம் மனதைப் பறிகொடுக்கிறார். அன்று இரவு நகரின் வெளியே இருக்கும் தன் ஹோட்டல் அறைக்குத் திரும்பி விடுகிறார் கின்கெய்ட்.

அப்புறம்... அடுத்த நாள். அதற்கடுத்து இரண்டு நாள். மொத்தம் நான்கு நாட்கள். இந்த நான்கு நாட்களுக்களில் இருவருக்கிடையில் நடைபெறும் உரையாடல்களும், பரஸ்பர அன்பு கூறுதலும்... அடடா.. வாசிக்க வாசிக்க.. நாம் ராபர்ட் கின்கெய்ட் ஆகவோ, ஃபிரான்செஸ்கா ஆகவோ மாறிவிடுகிறோம்.

'அவனது அறையில் அவனுக்குப் பிடித்த வாசகங்களை எழுதி ஒட்டி வைத்திருப்பான்' என்று நாயகனை அறிமுகப்படுத்துவதிலேயே சுவாரஸ்யத்தைக் கூட்டி விடுகிறார் நாவலாசிரியர். 'நான் அவளை விட்டு விலகியிருந்ததைக் காட்டிலும் அதிகமாக என்னைவிட்டு அவள் விலகிப்போனாள்' என்று கின்கெய்ட்டின் தனிமையை எடுத்துரைப்பதாகட்டும், 'நான் மனிதனாவதற்கு நீண்ட காலம் முன்பு அம்பாக இருந்தேன்' என்று நாயகனின் இயல்பை விளக்குவதாகட்டும் நாவலாசிரியர் அசரடித்து விடுகிறார்.


நாவலின் பல இடங்களில் ஜென் போன்றதான வாசகங்கள் நிறைய...
உதாரணமாக...

* தீர விசாரிப்பது அனைத்தையும் காலி செய்துவிடும். சில விஷயங்கள், சில மாயமான விஷயங்கள், அவை அர்த்தம் புரியாமல்தான் இருக்க வேண்டும். அர்த்தம் அறிய முயற்சித்தால் எல்லாம் போச்சு!

* பழைய கனவுகள் நல்ல கனவுகள். அவை நிறைவேறாமல் போயிருக்கலாம். ஆனால் அந்த கனவுகளைக் கொண்டதற்காக நான் மகிழ்கிறேன்.

* ஒரு விதத்தில் ஆண்கள் எல்லோரும் கவிஞர்களாகவும், காதலர்களாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் பெண்கள்.

* செக்ஸ் இருக்க வேண்டிய இடத்தில் சயின்ஸ் இருப்பதால் எந்தவிதத்திலும் நஷ்டம் இல்லை என்று பெரும்பாலான சமயங்களில் பெண்கள் நினைக்கிறார்கள்.

* ஆண்கள் முதுமையை அடையும்போது அவர்கள் நீரை நோக்கி நகர்கிறார்கள்.

* நாம் ஒரு திசையில் செல்ல, உலகம் இன்னொரு திசையில் செல்கிறது. பாக்கெட்டில் கைவிட்டுக் கொண்டு கடைப் பொருட்களைக் கண்ணாடி வழியாக குனிந்து பார்ப்பது போல நான் உலகைப் பார்க்கிறேன்.

* உண்மையில், எளிமையாக இருப்பதுதான் மிகப்பெரிய சவால்.

இந்த நாவலில் நாயகன் ஒரு போட்டோகிராஃபர் என்பதால், அத்துறை சம்பந்தமான சில விஷயங்களும் வருகின்றன. உதாரணத்துக்கு நாயகன் ஓரிடத்தில் சொல்கிறான் இப்படி... 'ஒளியை பிரதிபலிப்பதற்குத்தான் ஆப்ஜெக்ட்ஸ்'. (பெரும்பாலும், ஆப்ஜெக்ட்ஸ் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் ஒளியைப் பயன்படுத்துகிறார்கள்). இன்றெல்லாம், ஜஸ்ட் ஒரு 'க்ளிக்' மூலம் படத்தை அப்போதே பார்த்துவிட முடியும். ஆனால் அன்றைய காலகட்டத்தில் நாவலின் படி நாயகன் தன் பிலிம் ரோல்களை நியூயார்க் நகரத்துக்கு அனுப்பி டெவலப் செய்து, பிரிண்ட் எடுத்து பத்திரிகை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். அங்கு எடிட்டர்கள் அதைப் பார்த்துவிட்டு திரும்பவும் போட்டோகிராஃபரை அழைத்து ஏதாவது திருத்தங்கள் செய்யச் சொல்வார்களாம். 

இந்த நாவலின் மைய நீரோட்டமாக 'எரோடிசிசம்' இருக்கிறது. சிலர் 'எரோட்டிக்' ஆக எழுதுகிறேன் என்று சொல்லிவிட்டு சில விஷயங்களை எழுத அது அபாசமாகி விடும். தமிழ் நாவல் உலகில் 'எரோடிசிசம்' வகையை மிக லாவகமாகக் கையாண்டவர் எழுத்துச் சித்தர் பாலகுமாரன் என்பது என் கருத்து. ஆங்கிலத்தில் இதை, இந்நாவலாசிரியர் மொழியின் துணையுடன் மிக நுட்பமாகப் பதிவு செய்கிறார்.

ஓரிடத்தில், ராபர்ட் கின்கெய்ட்டின் போட்டோகிராஃபி சார்ந்த நடவடிக்கைகளைப் பார்த்து ஃபிரான்செஸ்கா தன் மனதை இழக்கிறாள். அப்போது அவளின் நிலையில் இருந்து நாவலாசிரியர் எழுதுகிறார்... 'மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவள் கால்களுக்கிடையே ஈரத்தை உணர்ந்தாள்'. ஆங்கிலத்தில் உள்ள சொல் வளத்திற்கு, அந்த இடத்தில் 'ass', 'vagina'  போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் வெறுமனே 'கால்கள்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதில் ஆபாசத்தில் இருந்து அந்த இடம் தப்பித்தது!

'இப்போது அவன் நிர்வாணமாகக் குளித்துக் கொண்டிருப்பான் இல்லையா?' என்று ஷவர் சத்தத்திலேயே ஃபிரான்செஸ்கா வெட்கம் கொள்ளும் இடம், 'இந்த நீர் தானே அவனைத் தழுவியது' என்று அவள் பரவசமடைகிற இடம், 'நீண்ட நாட்களுக்குப் பிறகு அவள் நிர்வாணமாக உறங்கினாள்' என்று நாயகியின் நிலையில் இருந்து நாவலாசிரியர் எழுதுமிடம் என... yes, eroticism is a matter of subtlety, an art form of its own!

அதேபோன்று, கதாபாத்திரங்களின் மனதை மிக நுட்பமாக விளக்குவதிலும் சாதிக்கிறார் நாவலாசிரியர். 'இந்த ஐயோவா நகர சமையலறையில் நாங்கள் இருவர் மட்டும் பேசிக் கொண்டிருக்க, சமையலறையின் தேய்ந்து போன கதவு 'க்ளிக்' என்று மூடிக் கொள்ளாதா' என்று நாயகன் நினைப்பது போல் வரும் வரிகள் இதற்கு எடுத்துக்காட்டு!
  
நாவலில் சமூக சிந்தனைக்கும் இடமிருக்கிறது. கதைப்படி, ஃபிரான்செஸ்கா ஆரம்ப காலங்களில் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றுகிறாள். அப்போது அங்கு அவள் சந்திக்கும் சங்கடங்கள், ஆசிரியர்கள் மாணவர்களிடையே எவ்வளவு இன்னலுக்கு உள்ளாகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அதை தமிழில் எழுத சங்கடமாக இருந்ததால் ஆங்கிலத்திலேயே தருகிறேன்.

"...She remembered Matthew Clark looking at the boy beside him and then forming his hands as if to cup them over a woman's breasts when she read, "The golden apples of the sun"..."

இந்த நாவலை 'For the peregrines'  என்று சமர்ப்பித்திருக்கிறார் நாவலாசிரியர்.

'பெரிகிரின்' எனும் ஆங்கில வார்த்தைக்கு அகராதியில் அர்த்தம் தேடினால், 'வேட்டைப் பருந்து', 'அலைதல்' என்ற வார்த்தைகள் கிடைக்கின்றன. இந்த அற்புதமான காதல் கதையை ஏன் இந்த வார்த்தைகளுக்குக் கொடுத்தார் என்று வாசிக்கும் போது கேள்வி எழுந்து கொண்டே இருந்தது. அதற்கான விடையையும் ஃபிரான்செஸ்காவின் வாயிலாகவே தருகிறார்.

'அகராதியில் 'பெரிகிரின்' எனும் வார்த்தைக்கு 'வேட்டைப் பருந்து', 'அலைதல்' போன்ற அர்த்தங்கள் காணக் கிடைக்கின்றன. இந்த இலத்தீன் வார்த்தைக்கு 'அந்நியன்', 'வழிப்போக்கன்' என்ற அர்த்தங்களும் உண்டு. ஆம் அவன் ஒரு 'வழிப்போக்கனாக'த்தான் எனக்கு அறிமுகமானான்'.

நாவலை வாசித்து முடிக்கையில் காதலை மட்டுமல்லாமல் ராபர்ட் கின்கெய்ட் மற்றும் ஃபிரான்செஸ்காவையும் சேர்த்தே நேசிக்க முடியும். ஒரு நல்ல நாவல் (கவனிக்க, புத்தகமல்ல..) உங்களை அழ வைக்கும் அல்லது பெருமூச்சொறிய வைக்கும் அல்லது கவிதை எழுத வைக்கும். எனக்கு முதல் இரண்டையும் ஏற்படுத்தியது இந்நாவல். வேறொருவர் இதை வாசிக்கையில் உலகின் எந்த மூலையிலாவது நல்ல கவிதை எழுதப்படலாம்!

நாவலின் ஓரிடத்தில் இப்படிச் சொல்லப்படுகிறது...

"In an universe ambiguity, this kind of certainty comes only once, and never again, no matter how many lifetimes you live!"

மேற்கண்டவார்த்தைகள் இந்த நாவலுக்கும் பொருந்தும்!  

நன்றி: http://rememberingletters.wordpress.com
(ரோஸ்மேன் பிரிட்ஜ் புகைப்படத்திற்கு)
 

No comments:

Post a Comment