Wednesday, May 14, 2014

அயோத்யா: தி டார்க் நைட்



அயோத்யா: தி டார்க் நைட்
கிருஷ்ணா ஜா, தீரேந்திர கே. ஜா

.வினோத்குமார்

இந்தியா என்பது மூன்று பக்கமும் கடல் சூழ்ந்த தீபகர்ப்பம். ஆனால் நான்கு பக்கமும் கதைகள் சூழ்ந்த துணைக் கண்டம். இந்தியாவின் தொன்மை என்பது அதன் நாகரிகம் மட்டுமல்ல. நாகரிக வளர்ச்சியினூடாகத் தோன்றிய புராணங்களும், புனைவுகளும்தான். புராணங்களைக் கொண்டு வரலாற்றைச் செம்மைப்படுத்தத் துவங்கிய நிகழ்வில் ஏதோ ஒரு கட்டத்தில் புராணங்களையே வரலாறாக மாற்றிக்கொண்ட தவறு நிகழ்ந்தது.

புராணங்கள் மூலமாக பாடங்கள் கற்பித்தது போய், பாடங்கள் மூலமாக புராணங்கள் உண்மையென்றும், அதில் உள்ள வரலாறே உண்மையான வரலாறு என்றும் கற்பிக்கப்படலாயிற்று. புராணங்களைக் கொண்டு நீதிபோதனைகள் கற்றுத் தந்த காலம் மலையேறி, புராணப் புரட்டுகளை முன் வைத்து நீதி சமைக்கப்படுகிற காலம் நிலைபெற்றது.

புதைந்துகிடக்கும் பல நல்ல விஷயங்களை விட்டுவிட்டு, புராணத்தின் எங்கோ சில மூலைகளில் அடிக்கோடிடப்பட்டிருக்கிற பொய்களையும், தீயவைகளையும் மட்டுமே எடுத்தாள்கிற குழுக்கள் நம் நாட்டில் நிறைய இருக்கின்றன. ஆரம்பத்தில் ஒற்றை இலக்கமாக இருக்கும் இந்தக் குழுக்கள், அவை மேற்கொண்டிருக்கிற புராண நம்பிக்கைகளை எதிர்க்கிற சில குரல்கள் எழும்போது, மழைக்காளான்களைப் போல பல மடங்குகளாக அந்தக் குழுக்கள் தோன்றுகின்றன.

இத்தகைய 'புராணப் புரட்டுக் குழுக்கள்', அவை சொல்கிற கருத்தை புராணத்தில் இருந்தே எடுத்துக் காட்டும். எதிர்க் கருத்துகளுக்குப் பதில் சொல்லவும் அதே புராணத்தில் இருந்து பதில் தரும். புராணத்தில் அந்தக் கேள்விகளுக்கான பதில் இல்லையென்றால், 'இதோ இருக்கிறது பதில்கள்' என இல்லாத ஒன்றைக் கட்டமைத்து 'உண்மைப் புராணம் இதுதான்' என்று நிறுவ முயற்சிக்கும்.  

இப்படி நிறுவ முயற்சிப்பதில் இருக்கும் ஆபத்துக்களில் ஒன்று, நிஜத்தில் சில விஷயங்களைச் செய்துவிட்டு, அதற்கேற்ப புராணங்களை வசதியாக வளைக்க முற்படுவது ஆகும்.

'கடவுள் இருக்கிறாரா?' என்ற கேள்விக்கு 'இதோ' என்று ராமாயணத்தை எடுத்துக்காட்டுவார்கள். 'கடவுள் மனித உரு கொண்டவனா?' என்று எதிர்க்கேள்வி கேட்டால், அதற்கும் ராமாயணத்தை எடுத்துக்காட்டுவார்கள். 'ராமனின் இருப்பிடம் அயோத்தி என்றால், அவன் இருந்ததற்கு அடையாளமாக இன்று எந்தத் துரும்பும் இல்லையே' என்று கேட்டால், 'அதற்கென்ன பாபர் மசூதியை இடித்துவிட்டு அந்த இடத்தில் ராமர் கோயிலைக் கட்டினால் போயிற்று. ராமாயணப் புராணம் உண்மையாகிவிடும்' என்று கொக்கரிக்கிற நிலையை மனதில் அசைபோட்டுப் பார்த்தால், மேற்சொன்ன 'தியரி' விளங்கும்.

இவ்வாறாக, நிஜத்தில் ஒரு தவறை நிகழ்த்திவிட்டு, அதற்கேற்றவாறு புராணத்தைக் களங்கப்படுத்தும் முயற்சியில்தான் இன்று 'இந்துத்வா', 'ஆர்.எஸ்.எஸ்.', 'விஷ்வ ஹிந்து பரிஷத்', 'இந்து மகாஜன சபா' போன்ற எண்ணற்ற 'புராணப் புரட்டுக் குழுக்கள்' இருக்கின்றன. இன்று இவற்றின் ஒற்றைக் குறிக்கோளாக இருப்பது 'அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது' என்பதுதான்.

அயோத்தி என்பது மதச்சார்பின்மைக்கு அடையாளமா அல்லது மதவெறிக்கான களமா என்ற தேடலில் பல புதுவிஷயங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது 'அயோத்யா: தி டார்க் நைட்' எனும் புத்தகம். ஆங்கிலத்தில் இப்புத்தகத்தை கிருஷ்ணா ஜா, திரேந்திர கே ஜா எனும் இரண்டு பத்திரிகையாளர்கள் எழுதியிருக்கிறார்கள்.

அயோத்யாவில் இருள் கவிழ்ந்து பல வருடங்கள் ஆகிவிட்டதென நமக்குத் தெரியும். ஆனால், 'தி சீக்ரட் ஹிஸ்டரி ஆஃப் ராமா'ஸ் அப்பியரென்ஸ் இன் பாப்ரி மஸ்ஜித்' எனும் புத்தகத் தலைப்பின் கீழான 'கேப்ஷன்' தான், அயோத்தியின் இத்தனை வருட இருட்டிற்குக் காரணம் என்னவென்பதைப் பட்டவர்த்தனமாக உரைக்கிறது.


ஆழமான கள ஆய்வுகள் மூலம் உருவெடுத்திருக்கிறது இப்புத்தகம். பலருக்கும் பாப்ரி மஸ்ஜித் எனும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் டிசம்பர் 6, 1992 என்ற அளவில் மட்டும்தான் அரசியல் அறிவு இருக்கிறது. ஆனால், உண்மையில் இதற்கான தொடக்கம் டிசம்பர் 22, 1949லேயே விதைக்கப்பட்டு விட்டது எனும் தகவலுக்குப் பின்னுள்ள அரசியல்... மதவெறியின் அரசியல்!

டிசம்பர் 22, 1949ம் ஆண்டு பாபா அபிராம் தாஸ் எனும் சாது, குட்டி ராமர் சிலை ஒன்றைத் தன் கைகளில் ஏந்தி கள்ளத்தனமாக இரவில் பாபர் மசூதிக்குள் புகுந்து அந்தச் சிலையை ஒரு பீடத்தின் மீது வைத்துவிடுகிறான். அதன் பிறகு இந்து சாதுகள் கூட்டம் கூட்டமாக மசூதிக்குள் நுழைகின்றனர். இதைத் தடுக்க இஸ்லாமியர்களால் முடியவில்லை. மாநில, மாவட்ட நிர்வாகங்களும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் முகத்தைத் திருப்பிக் கொள்கின்றன.

அதன் பிறகு...? அடுத்த சில மாதங்களுக்கு 'இந்துத்வா', 'இந்து ராஷ்ட்ரீய' எனும் இந்து தேச உணர்வுகள் மக்களிடையே தூண்டிவிடப்படுகின்றன. ஆனால் விதி வலியது ஆயிற்றே! நேருவின் மதச்சார்பின்மை நடவடிக்கைகளால் காங்கிரஸ் கட்சியில் சர்தார் வல்லபாய் பட்டேலின் ஆட்கள் ஓரம்கட்டப்பட, கட்சியினுள் 'இந்துத்வா' பலம் குறைகிறது. பட்டேலின் இறப்பிற்குப் பிறகு மொத்தமாக இல்லாமல் போகிறது.

மசூதிக்குள் ராம சிலையை வைத்தது அபிராம் தாஸ் எனும் தனி மனிதனின் முயற்சியல்ல. அதற்குப் பின் காந்தியின் கொலையில் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகப் பட்டியலில் வைக்கப்பட்ட சாவர்க்கர், திக்விஜய் நாத், கே.கே.கே.நாயர், இந்து மகாசபா எனப் பலர் காரணிகளாகச் செயல்பட்டிருக்கிறார்கள்.

1949ல் விதைத்தது 1992ல் பாரதிய ஜனதா கட்சிக்கு பலன் தந்தது. 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. 1998ல் அதை வைத்து அரசியல் செய்ய, ஆட்சி அவர்களின் மடியில் விழுந்தது. மீண்டும் 2000களில் ராமர் கோயில் பற்றி கர சேவகர்கள் புத்துணர்வு பெற்றார்கள். அதற்காக, நாடு முழுவதிலும் இருந்து பல கர சேவகர்கள் அயோத்தியில் ஒன்று கூடினார்கள். இவ்வாறான ஒரு பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில்தான் கோத்ரா சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிப்புச் சம்பவம் நடைபெறுகிறது. ஆக, ராமர் கோயில் கட்டும் முயற்சியின் சங்கிலித் தொடராகத்தான் கோத்ரா சம்பவத்தை நாம் பார்க்க வேண்டும், என்கிறது இப்புத்தகம்.

ஒரு தேசியக் கட்சியின் நிகழ்கால அரசியலின் மையப் புள்ளியைப் புரிந்து கொள்ள மதச்சார்பின்மையின் மீது நம்பிக்கை கொண்டுள்ள எவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது!

No comments:

Post a Comment