Monday, November 10, 2014

இந்தக் கவிதைகளின் நிறம் பச்சை!


ந.வினோத் குமார்

குல்சார்!

இந்தியத் திரைப்பட வரலாற்றில் தவிர்க்க இயலாத ஒரு பெயர். கவிஞர். பாடலாசிரியர். வசனகர்த்தா எனப் பன்முகம் கொண்டவர். 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தில் ஏ.ஆர்.ரகுமானின் இசைக்கு இவர் எழுதிய 'ஜெய் ஹோ' பாடல் இவருக்கு ஆஸ்கர் விருதைப் பெற்றுத் தந்தது.

திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதாத நேரத்தில் தனது கவிதைகளின் மூலம் வசீகரிக்கும் இவர், இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தில் தான் எழுதிய இயற்கை சார்ந்த கவிதைகளை 'க்ரீன் போயம்ஸ்' என்ற பெயரில் தொகுப்பாகக் கொண்டு வந்தார்.

அந்தத் தொகுப்பை இந்தியில் இருந்து ஆங்கிலத்தில் முன்னாள் வெளியுறவுத்துறை அதிகாரி பவண் கே.வர்மாவால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 
 
 
அந்தப் புத்தகத்தில் இருந்து சில கவிதைகள்...
 
ஒரு நதியின் கதை

இது ஒரு நதியின் கதை
ஒருநாள் கவிஞனை கேட்டது
தினமும் என்னை இருகரைகளும் சுமக்கின்றன‌
என்னை வழிநடத்துகின்றன‌
தினமும் என் முதுகில்
அக்கரைக்குப் படகுகளைச் சுமந்து செல்கிறேன்

தினமும் வாலிபர்களைப் போல‌
என் நெஞ்சில் எதையேனும் எழுதுகின்றன அலைகள்

எதுவும் நடைபெறாமல்
எந்த நாளேனும் இருக்காதா
ஒரு மாலைப் பொழுதேனும்
எனது முதுகைச் சாய்த்துக்கொள்ளவும்
எதுவும் செய்யாமல் கிடக்கவும் இயலாதா
வாசித்த பின் அசைவற்றிருக்கும்
ஒரு கவிதையைப் போல...

வனம்

வனம் புகுகையில் எனது முன்னோர்கள்
என்னைச் சூழ்ந்திருப்பதாய்த் தெரிகிறது
பிறந்த குழந்தையாய் என்னை உணர்கிறேன்

மரங்கள் என்னைத் தூக்கிச் சுமக்கின்றன‌
பூச்சொறிகின்றன, நீர்த் தெளிக்கின்றன‌
மடியில் வைத்துத் தாலாட்டுகின்றன‌

அவை
நான் நடக்கத் தொடங்கிவிட்டதாகவும்
அவர்களைப் போல் ஒரு நாள்
பூமியில் வேரூன்றி சூரியனைப் பிடிக்க‌
முயற்சிப்பேன் எனவும் சொல்கின்றன‌

மரம் மேலும் சொன்னது:
நீ இப்போதுதான் பூமிக்கு வந்திருக்கிறாய்
நீ அலைந்துகொண்டிருப்பதைப் பார்க்கிறேன்
எனது கிளையில் நீ ஏறலாம் இறங்கலாம்
என்னைச் சுற்றி வரலாம்
என்னைவிட்டு ஓடிச் செல்லலாம்
திரும்பி வராமல் போகலாம்
அல்லது அந்த மலைகளின் ஒருபகுதியாய் மாறலாம்

இருந்தும்
உன்னில் ஓடும் நீர்
உன்னில் உள்ள மண்
அவை நாங்கள் தந்தது
என்னில் நீ மீண்டும் விதைக்கப்படுவாய்
என்னிடம் நீ மீட்டுத் தரப்படுவாய்.
 
மரங்கள்

மரங்கள் சிந்திக்காத‌போது
மலர்கள் மலர்ந்தன‌
அவற்றின் விரல்கள்
வெயிலில் அமிழ்கின்றன‌
அசையும் கிளைகளில்
எண்ணங்களை எழுதுகின்றன‌
பல வண்ணங்களில்
பல வார்த்தைகள் பறிக்கின்றன‌
மணத்தால் உரையாடுகின்றன‌
மனிதர்களை உறவாட அழைக்கின்றன‌

ஆனால் பாருங்கள்

மணம் வீசும் எதையும்
மறுகனம் கொய்வது
மனித இயல்பு!

 
நிலாவாசிகள்

நாங்கள் நிலவுக்குப் புதியவர்கள்
காற்றில்லை
நீரில்லை
தூசியில்லை
குப்பையில்லை
சப்தமில்லை
செயலில்லை
புவியீர்ப்பு விசையில்லை ஆதலால்
பாதங்கள் தரையில் இல்லை
எடை பற்றிய உணர்வில்லை

திரும்பிச் செல்வோம்
எவ்வளவுதான் மோசமாய் இருந்தாலும்
நமக்குப் பழக்கமானது பூமிதான்!

 
இலையுதிர் காலத்தின் வருகை

இதுவரை இலைகள் உதிரவில்லை
இலையுதிர் காலமோ
வெளியில் நின்றிருந்தது
பொன் நிறத்தில்
புத்தனின் காதுகளைப் போன்று
தொங்கிக் கொண்டிருந்த இலைகள்
ஒற்றை வார்த்தைக்காகத் தவமிருந்தன:
'அந்தக் கிளைகளை விட்டு வாருங்கள்
பிணைப்புகளை உடையுங்கள்
உங்களை விடுவிக்க வருகிறது காற்று!'
 
நன்றி: தி இந்து

No comments:

Post a Comment