Sunday, November 20, 2016

DR.B.R.AMBEDKAR 125 BIRTH ANNIVERSARY SERIES -VIII

இந்து தேசிய வியாபாரிகளின் அபகரிப்பு!


ந.வினோத் குமார்

அம்பேத்கரின் சிந்தனைகளை ஏற்றுக்கொள்பவர்களின் எண்ணிக்கை இன்றைய காலத்தில் அதிகரித்து வருகிறது. அதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. ஆனால் அரசியல் சுயலாபத்துக்காக அம்பேத்கரையே உரிமை கொண்டாடும் அபகரிப்பாளர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே வருவதுதான் ஆச்சரியம். அதில் முதன்மையான அபகரிப்பாளர்கள் யாரென்றால்... இந்து தேசிய வியாபாரிகள்!

அம்பேத்கரின் 125-வது பிறந்த ஆண்டு கொண்டாடப்படும் இந்த வேளையில், 'அம்பேத்கரும் எங்கள் செட்டுதான்' என்று கூவ ஆரம்பித்திருக்கின்றன இந்துத்துவ குழுக்கள்.

'அம்பேத்கர் ஒருபோதும் பிராமணியத்துக்கு எதிராக இருந்தவர் அல்ல' என்று இந்துத்துவவாதிகள் சொல்வது எவ்வளவு பெரிய புரட்டு, என்பதைத் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கிறது, 'அம்பேத்கர் அண்ட் இந்துத்துவா பாலிட்டிக்ஸ்' எனும் புத்தகம். மும்பை ஐ.ஐ.டி.யின் முன்னாள் பேராசிரியரும் தற்சமயம் சமூக நல்லிணக்கத்துக்காகத் தொடர்ந்து எழுதியும், களப்பணியாற்றியும் வரும் ராம் புனியானி இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். பாரோஸ் பதிப்பகத்தால் பதிப்பிக்கப்பட்ட இந்தப் புத்தகம் சமீபத்தில் வெளியாகியுள்ளது.


அம்பேத்கரின் 124-வது பிறந்த ஆண்டிலிருந்தே அவருக்குக் காவிச் சாயம் பூச முயற்சித்து வருகிறது ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு. அந்த அமைப்பைச் சேர்ந்த பிரச்சார் ப்ரமுக் மன்மோகன் வைத்யா, சர்சங்சலக் மோகன் பாகவத் போன்றோர் அம்பேத்கரின் கருத்தியலுக்கு இந்துத்துவப் பார்வையை வழங்க முற்படுகின்றனர். அதில் ஒன்றுதான் 'அம்பேத்கர் ஒருபோதும் பிராமணியத்துக்கு எதிராக இருந்தவர் அல்ல' எனும் கூற்று. அது உண்மைதானா?

நிச்சயமாக இல்லை. ஏனென்றால், அம்பேத்கர் 'பிராமணிய இந்து மதவாத'த்துக்கு எதிராகவும், மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதி ஆகியவற்றுக்கு ஆதரவானவராகவும் இருந்தார். ஆனால் ஆர்.எஸ்.எஸ். அமைப்போ பிராமணிய இந்து மதவாதம் மற்றும் இந்து தேசியம் ஆகிய இரண்டு தளங்களின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

ஒரு பேச்சுக்கு, அம்பேத்கரின் சிந்தனைகளைத்தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் கொண்டிருக்கிறது என்று வைத்துக்கொண்டாலும், 2015-ம் ஆண்டு குடியரசு தின விழா தொடர்பான ஊடக விளம்பரங்களில் 'மதச்சார்பின்மை', 'சோஷலிசம்' எனும் வார்த்தைகள் எப்படி விடுபட்டுப் போயின?

அம்பேத்கரின் 125-வது பிறந்த ஆண்டு கொண்டாடப்படும் இந்த வேளையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கியத் தலைவராகக் கருதப்பட்ட தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்தநாள் நூற்றாண்டை இந்துத்துவவாதிகள் கொண்டாடி வருகின்றனர்.

மகாத்மா காந்திக்கு இணையாக தீனதயாள் உபாத்யாயாவை சமூக‌ மைய நீரோட்டத்துக்குக் கொண்டு வரும் முயற்சிகள் நடந்து வருகின்றன. ஏனென்றால், அவர்தான் இந்து மதத்தின்படி வழி நடத்தப்படும் 'அகண்ட பாரதம்' எனும் கருத்தைப் பரப்பிவிட்டுச் சென்றார்.

அவருக்கு முன்பு சாவர்க்கர் 'இந்து தேசியம்' எனும் கருத்தை விட்டுச் சென்றார். ஆனால் அம்பேத்கர் அந்த 'இந்து தேசியம்' என்ற கருத்துக்கு எதிராக இருந்தவர். தன்னுடைய 'தாட்ஸ் ஆன் பாகிஸ்தான்' எனும் நூலில் அம்பேத்கர் இப்படிக் குறிப்பிடுகிறார்:

"சாவர்க்கரும் முகமது அலி ஜின்னாவும் 'இரண்டு தேசங்கள்' என்ற கருத்துக்கு உடன்படுபவர்களாகவே உள்ளனர். பாகிஸ்தான் என்றும், இந்துஸ்தான் என்றும் இரண்டு தேசங்கள் இருக்க வேண்டும். முன்னதில் இஸ்லாமியர்களும் பின்னதில் இந்துக்களும் இருந்துகொள்ளலாம் என்கிறார். சாவர்க்கரோ, இந்தியாவில் இந்துக்களும் இருக்கலாம். இஸ்லாமியர்களும் இருக்கலாம். ஆனால் இஸ்லாமியர்கள் 'இந்து தேசிய'த்தின் கீழ்தான் இருக்க வேண்டும். இந்து மத அரசியலமைப்புக்கு அவர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்கிறார்.

அவர் சொல்வது போல 'இந்து தேசியம்' ஏற்பட்டால், அது நாட்டுக்குக் கேடு விளைவிக்கும். இந்து மதம் என்பது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றுக்கு எதிரானதாக இருக்கும். அது ஜனநாயகத்தை நமக்கு வழங்காது. எனவே, இந்து ராஜ்ஜியம் அமைக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்".

அப்படியான இந்து தேசியம்தான், சாதி ஒழிக்கப்படுவதற்குத் தடையாகவும் இருக்கிறது என்கிறார், அம்பேத்கர். ஆனால் தீனதயாள் உபாத்யாயாவோ, "நம் சமூகத்திலிருக்கும் நான்கு வர்ணாசிரமங்கள் என்பது கடவுளுக்கு இருக்கும் நான்கு கைகளைப் போன்றது. அது ஒவ்வொன்றுக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. இதைப் புரிந்துகொண்டால், சாதி நமக்கு நல்லது செய்யும். இல்லையென்றால், அது அழிவைக் கொண்டு வரும்" என்று சாதியத்தைப் போற்றுகிறார்.

சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் மேம்பட்ட நிலைக்கு வந்துவிடக் கூடாது என்ற கடுப்புதான் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தொடக்கமாக இருக்கிறது என்கிறார் ராம் புனியானி. சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை மத அடையாளத்தை முன்னுக்குக் கொண்டு வருகிறதென்றால், மதக் கலவரங்களின் மூலம் சாதிய அடையாளம் மறைக்கப்பட்டு விடுகிறது. அப்படிப் பார்த்தால், சிறுபான்மையினருக்கு எதிரான‌ ஒவ்வொரு வன்முறைக்குப் பிறகும், இந்து மத அடையாளம்தான் தலித்துகளுக்கு முக்கியமாகிறது என்கிறார் அவர்.

இவ்வாறு மதக் கலவரங்கள் மூலம் 'இந்து தேசியம்' காண விரும்புகின்றன இந்துத்துவக் குழுக்கள். அப்படி ஒன்று ஏற்பட்டால், சாதி ஒழியாது. சாதி ஒழியாமல் சமத்துவம் இல்லை. ஆக, நாம் புரிந்துகொள்ள வேண்டியது... சனாதன தர்மம் ஒருபோதும் சமாதானத்தைக் கொண்டு வராது!

(அம்பேத்கரின் 125வது பிறந்த ஆண்டையொட்டி, இந்த ஆண்டு முழுக்க அம்பேத்கர் படைப்புகள், அம்பேத்கரைக் குறித்த படைப்புகள் ஆகியவை பற்றிய அறிமுகங்கள் இங்கு தொடர்ந்து பதிவேற்றப்படும். அதில் எட்டாவது பதிவு இது.)

No comments:

Post a Comment