Tuesday, August 30, 2016

DR.B.R.AMBEDKAR 125 BIRTH ANNIVERSARY SERIES - V

நீங்கள் எந்த 'வெர்ஷன்' பிராமணர்..?


ந.வினோத் குமார்
 
அம்பேத்கரியல் வரலாற்றில் இந்த ஆண்டு மிகவும் முக்கியமான ஆண்டு. அம்பேத்கரின் 125-வது பிறந்த ஆண்டு. அம்பேத்கர் எழுதிய 'இந்தியாவில் சாதிகள்' எனும் நூலுக்கு இந்த ஆண்டு 100 வயது. இவை எல்லாவற்றையும் விட மிகவும் முக்கியமான ஒரு விஷயம்... 'பட்டியலின வகுப்பினர்' எனும் பிரிவு ஏற்படுத்தப்பட்டு இந்த ஆண்டுடன் ஒரு நூற்றாண்டு ஆகிறது!

1909-ம் ஆண்டு ஆகா கான் குழுவின் அறிக்கையைச் சுட்டிக்காட்டி, 'தீண்டத்தகாதவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் உண்மையில் இந்துக்கள் அல்ல' என்ற தகவலை முன் வைத்து, அம்பேத்கர் ஓர் அறிக்கையை பிரிட்டிஷ் வைஸ்ராயிடம் சமர்ப்பிக்கிறார். அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஜே.ஹெச்.ஹட்டன் எனும் அதிகாரியின் தலைமையில் 1911-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அப்போது 'இந்துக்கள்' என்ற பிரிவிலிருந்து 'தீண்டத்தகாதவர்கள்' நீக்கப்பட்டு, அவர்களைத் தனியே கணக்கெடுப்புச் செய்தனர். பின்னர் 1916-ம் ஆண்டு 'ஒடுக்கப்பட்ட வகுப்பு' (Depressed Class) எனும் பிரிவு உருவாக்கப்படுகிறது. அதுதான் பின்னாளில், அதாவது 1935-ம் ஆண்டில் 'பட்டியலின வகுப்பு' என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. இதன்படி பார்த்தால், இந்த ஆண்டு 'பட்டியலின வகுப்பு'க்கு நூறு வயது!

இந்நிலையில், அம்பேத்கர் எழுதிய, அவரின் மறைவுக்குப் பின் வெளியான 'ரிட்டில்ஸ் இன் ஹிந்துயிஸம்' (இந்து மதத்தின் புதிர்கள்) எனும் நூலைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியது முக்கியமாகிறது.

மதம், சமூகம் மற்றும் அரசியல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் இந்து மதம் கொண்டிருக்கும் புதிர்கள் என்று 24 விஷயங்களை 8 பின்னிணைப்புகளுடன் அம்பேத்கர் எழுதுகிறார். அம்பேத்கரின் மறைவுக்குப் பிறகு இவற்றைத் தேடிக் கண்டுபிடித்து 'பாபாசாகேப் அம்பேத்கர் எழுத்தும் பேச்சும்' என்ற தலைப்பின் கீழ்  மகாராஷ்டிர மாநில அரசின் கல்வித் துறை வெளியிட்டது. அப்போது, 'இதிலிருக்கும் பெரும்பாலான கட்டுரைகள் நிறைவடையாததாக உள்ளன' என்ற குறிப்புடன் அந்தப் புத்தகம் வெளியானது.

அந்த 24 புதிர்களிலிருந்து 10 புதிர்கள் மற்றும் ஒரு பின்னிணைப்பு ஆகியவற்றைத் தேர்வு செய்து, அடிக்குறிப்புகள் கொடுத்து 'நவயானா' பதிப்பகம் சமீபத்தில் புத்தகமாக வெளியிட்டுள்ளது. இந்தப் புத்தகத்துக்கு காஞ்சா ஐலையா முன்னுரை எழுதியிருக்கிறார்.


இந்தப் புத்தகத்திலிருக்கும் முதல் புதிரே மிகவும் அதிர்ச்சியான ஒன்றாக இருக்கிறது. 'ஒருவர் ஏன் இந்துவாக இருக்கிறார் என்பதை அறிவது கடினம்' என்பதாக உள்ளது அந்தப் புதிர்.

"ஒரு இஸ்லாமியரிடம் 'நீங்கள் ஏன் இஸ்லாமியராக இருக்கிறீர்கள்?' என்று கேட்டால், அவர் 'நான் இஸ்லாத்தைப் பின்பற்றுகிறேன். அதனால் இஸ்லாமியராக இருக்கிறேன்' என்று சொல்வார். ஒரு கிறித்துவரிடம் 'நீங்கள் ஏன் கிறித்துவராக இருக்கிறீர்கள்?' என்று கேட்டால், அவர் 'நான் கிறித்துவைப் பின்பற்றுகிறேன். அதனால் கிறித்துவனாக இருக்கிறேன்' என்று சொல்வார். ஆனால் ஒரு இந்துவிடம் 'நீங்கள் ஏன் இந்துவாக இருக்கிறீர்கள்?' என்று கேட்டால் அவரால் பதில் சொல்ல முடியாது. ஏனென்றால், 'இந்து' என்று ஒரு மதம் இல்லவே இல்லை" என்கிறார் அம்பேத்கர்.

'இந்து மதம்' என்ற சொல்வழக்கே மிகவும் சமீபத்தில்தான் உருவாகியிருக்கிறது. 1816-17-ம் ஆண்டுவாக்கில் ராஜா ராம்மோகன் ராய் என்பவர்தான் இந்த வார்த்தையை முதன்முதலாகப் பயன்படுத்துகிறார். அதன்படி பார்த்தால், மனிதன் தோன்றிய காலத்திலிருந்து இன்று வரையிலும் 'இந்து மதம்' என்று தனியாக ஒரு மதம் இருப்பதாகத் தெரியவில்லை.

11-ம் நூற்றாண்டில் வாழ்ந்த அல் பிரூனி எனும் பயணி 1017-ம் ஆண்டுவாக்கில் இந்தியாவுக்கு வருகிறார். 'சிந்து' எனும் ஆற்றுக்குப் பக்கத்தில் வாழ்ந்து வந்த காரணத்தால் அப்பகுதி மக்களை அவர் 'ஹிந்த்' எனக் குறிப்பிட்டார். ஒரு நிலப்பரப்பைக் குறிக்கவே 'ஹிந்த்' எனும் சொல் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பிற்காலத்தில் இஸ்லாமியர்கள் படையெடுத்து வர, அந்த மக்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக்கொள்ள இந்த வார்த்தையைப் பயன்படுத்த, பின்னாளில் 'ஹிந்து' எனும் சொல் மதரீதியான புழக்கத்துக்கு வந்தது.

ஆக, இந்து மதத்தின் ஆரம்பமே ஆட்டம் காணும் நிலையில், 'நான்கு வர்ணங்கள்: பிராமணர்களுக்குத் தாங்கள் தோன்றிய வரலாறு உண்மையானதுதான் என்பது தெரியுமா?' என்ற கேள்வியை எழுப்புகிறார் அம்பேத்கர். இதனை இந்து மதத்தின் 16-வது புதிராக வைக்கிறார் அவர்.

"பிராமணன், ஷத்ரியன், வைசியன், சூத்திரன் ஆகிய நான்கு வர்ணங்கள் பிரஜாபதி என்பவரால் உருவாக்கப்பட்டது என்கிறது ரிக் வேதம். இன்னொரு வேதம், இவற்றை உருவாக்கியது காஸ்யபர் என்கிறது. மற்றுமொரு வேதம், இவற்றை மனு உருவாக்கினார் என்கிறது. வேதங்கள் தவிர்த்து, நம்மிடையே இருக்கும் இதர உபநிடதங்கள், ராமாயணம், மகாபாரதம் மற்றும் இதர புராணங்கள் போன்றவை இந்த வர்ணாஸ்ரமத்தைப் பற்றி ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதையைக் கூறுகின்றன. இவற்றில் எதை நம்புவது?" என்ற கேள்வியை முன் வைக்கிறார் அம்பேத்கர்.

அடுத்த முறை யாராவது நம்மிடம் 'நான் பிராமணன் தெரியுமா' என்று எகத்தாளம் பேசினால், 'வேதங்கள், காவியங்கள், புராணங்கள், உபநிடதங்கள் ஆகியவற்றின் எந்த 'வெர்ஷன்' பிராமணர் நீங்கள்?' என்று கேள்வி கேட்க வேண்டும்!

இந்து மதத்தின் 22-வது புதிராக 'பிரம்மம் என்பது தர்மம் அல்ல: பிரம்மத்தால் என்ன நன்மை?' என்ற கேள்வியை எழுப்புகிறார் அம்பேத்கர்.

இதுகுறித்து அலசும்போது அவர் இப்படி எழுதுகிறார்: "ஜனநாயகம் என்பது அரசியல் இயந்திரத்துக்கும் மேலானது. ஒரு சமூகக் கட்டமைப்பு என்பதை விடவும் மேலானது. அது ஒரு மனநிலை அல்லது வாழ்க்கையின் தத்துவம்.

சிலர் ஜனநாயகத்தை சமத்துவத்துடனும் சுதந்திரத்துடனும் ஒப்பிடுவார்கள். சமத்துவமும் சுதந்திரமும் ஜனநாயகத்தின் ஆழமான கரிசனங்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் எது சமத்துவத்தையும் சுதந்திரத்தையும் பேணிக் காக்கிறது? சிலர் 'சட்டம்' என்று பதில் சொல்லலாம். அது சரியான விடை அல்ல. அவற்றைக் காப்பது 'இன்னொருவரைத் தன்னைப் போல நினைக்கும் மனப்பான்மை'தான். இதைத்தான் பிரெஞ்சுக்காரர்கள் 'சகோதரத்துவம்' என்கின்றனர். ஆக சகோதரத்துவம்தான் ஜனநாயகத்தின் வேர்.

எனில், சகோதரத்துவத்தின் வேர் எது என்று பார்த்தால், அது மதம்தான். ஒருவரின் மதம் சகோதரத்துவத்தை வளர்த்தால், அந்தச் சமுதாயத்தில் ஜனநாயகம் சிறப்பாக உள்ளது என்று பொருள். சகோதரத்துவத்துக்கு இடமளிக்கவில்லை என்றால், அங்கு ஜனநாயகத்துக்கு வேலை இல்லை.

இந்தியாவில் ஏன் ஜனநாயகம் தழைக்கவில்லை? காரணம், இந்து மதம் சகோதரத்துவத்தை வளர்க்கவில்லை".

அப்புறமென்ன... புத்தரைத் தேடிப் போவோம் வாருங்கள்! 

(அம்பேத்கரின் 125வது பிறந்த ஆண்டையொட்டி, இந்த ஆண்டு முழுக்க அம்பேத்கர் படைப்புகள், அம்பேத்கரைக் குறித்த படைப்புகள் ஆகியவை பற்றிய அறிமுகங்கள் இங்கு தொடர்ந்து பதிவேற்றப்படும். அதில் ஐந்தாவது பதிவு இது.)

No comments:

Post a Comment