Tuesday, August 13, 2019

யுத்த நாளின் யானைகள்…!

வரலாற்றாசிரியர் தாமஸ் ஆர்.ட்ரவுட்மேன் நேர்காணல்


பேட்டி, படங்கள்: ந.வினோத் குமார் 

பதிப்பிக்கப்பட்ட தேதி: 28 பிப்ரவரி 2019


“குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் எப்போதும் வசீகரிக்கும் தன்மையுடையவை யானைகள். அவை என்னையும் வசீகரித்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை. இந்த ஒரு காரணம் போதாதா நான் யானைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்கு…” என்று சொல்லிப் புன்னகைக்கிறார் தாமஸ் ஆர்.ட்ரவுட்மேன்.

பிரபல வரலாற்றாசிரியர் ஏ.எல்.பாஷம் என்பவரின் மாணாக்கராக, லண்டனில் உள்ள ‘ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் அண்ட் ஆப்பிரிக்கன் ஸ்டடீஸ்’ மையத்தில், ‘அர்த்தசாஸ்திரம்’ குறித்து முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டவர் ட்ரவுட்மேன். பிறகு, அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் மானுடவியல் பேராசிரியராக இருந்தவர். அங்கு 1988 முதல் 2010 வரை பண்டைய இந்திய வரலாறு தொடர்பாகப் போதித்திருக்கிறார்.

அன்றைய சென்னையில் வாழ்ந்த ஆங்கிலேய அதிகாரி எல்லீஸ் குறித்து இவரது ஆய்வு, ‘திராவிடச் சான்று: எல்லீஸும் திராவிட மொழிகளும்’ என்ற தலைப்பில் பல ஆண்டுகளுக்கு முன்பு புத்தகமாகப் பதிப்பிக்கப்பட்டது. இந்தியாவில் போருக்காகப் பயன்படுத்தப்பட்ட யானைகள் குறித்து இவரது ஆய்வு, ’எலிஃபன்ட்ஸ் அண்ட் கிங்ஸ்: ஏன் என்விரான்மென்ட்டல் ஹிஸ்டரி’ என்ற தலைப்பில் 2015ஆம் ஆண்டு புத்தகமாக வெளிவந்தது. அந்தப் புத்தகத்தைத் தற்போது தமிழில் மொழிபெயர்த்து வருகிறார் பிரபல பறவையியலாளர் ப.ஜெகநாதன். 


ட்ரவுட்மேன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு (எம்.ஐ.டி.எஸ்) ‘ஆனையின் அடிச்சுவட்டில்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்த வந்திருந்தார். அப்போது நாம் அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து…

இப்போதெல்லாம் வரலாற்றாசிரியர்கள் சூழலியலாளர்களாக மாறி வருகிறார்களே..?

இறந்த காலத்தைப் பற்றி ஆய்வு செய்த வரலாற்றாசிரியர்கள் இப்போது வருங்காலம் குறித்துச் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். சுற்றுச்சூழலியல் வருங்காலத்துக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று என்பதை அவர்கள் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். ‘சூழலியல் வரலாறு’ என்பது சமீபகாலமாகத்தான் பேசப்பட்டு வருகிறது. முற்றிலும் புதிய துறைதான். ஆனால் மிகவும் வேகமான, ஆழமான, பரந்துபட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்போது வரை சூழலியல் வரலாறு தொடர்பாக நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளும், வெளிக்கொணரப்பட்ட படைப்புகளும் கடந்த இரண்டு நூற்றாண்டுகளை அடிப்படையாக வைத்துத்தான் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும்.

வரலாற்று ஆசிரியரான உங்களுக்கு யானைகளின் மீது ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

யானைகள் என்று சொல்லும்போது, குறிப்பாக ஆசிய யானைகள். இந்தியாவில் இருந்த யானைகள். இங்கு யானைகளின் வரலாறு என்பது, போருக்காகப் பயன்படுத்தப்பட்ட யானைகள்தான். அந்த யானைகளை அரசர்கள் பயன்படுத்திய விதமும், அந்த யானைகளுக்காக, யானைகளால் நிகழ்ந்த நிலப் பயன்பாட்டு மாற்றங்களும்தான் எனது ஆய்வு.

பல ஆண்டுகளாக இந்திய வரலாற்றை ஆய்வு செய்துவந்த நான், ஒருகட்டத்தில் டெல்லியில் இருந்த சுல்தான்களைப் பற்றிப் படிக்க நேர்ந்தது. அப்போதுதான் பேராசிரியர் சைமன் டிக்பி எழுதிய ‘வார் ஹார்ஸ் அண்ட் எலிஃபன்ட்ஸ்’ எனும் புத்தகம் எனக்கு அறிமுகமாகியது. அதைப் படித்தபோது, இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் குதிரைகளும், கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் யானைகளும் போருக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்ற உண்மை விளங்கியது.

அது தொடர்பாக மேலும் படிக்க நினைத்தபோது, சொற்பமான தகவல்களே கிடைத்தன. இந்தியாவில் இருந்த போர் யானைகள் பற்றி இன்னும் ஆழமான ஆய்வுகள் வேண்டும் என்று எண்ணினேன். அதை நாமே செய்யலாமே என்று இறங்கினேன்.


அந்த ஆய்வு குறித்துக் கொஞ்சம் விளக்குங்கள்…

ரிக் வேதத்தில் யானைகளை ‘ம்ருக ஹஸ்தின்’ என்று அழைத்திருக்கிறார்கள். அங்கிருந்துதான் இந்தியாவில் யானைகளின் வரலாறு தொடங்குகிறது. யானைகளை மனிதர்கள் பழக்கப்படுத்தியது அதற்குப் பின்னர்தான். சிந்து சமவெளி நாகரிகக் கால ஓவியங்களில் யானைகள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், அதன் மீது மனிதர்கள் சவாரி செய்வது போன்ற ஓவியங்கள் எதுவும் இல்லை. அவை வேட்டையாடப்பட்டிருக்கின்றன. ஆனால் அவை பழக்கப்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் இல்லை.

இந்தியாவைத் தவிர சீனாவிலும் யானைகள் இருந்திருக்கின்றன. அங்கு அவை பழக்கப்படுத்தப்பட்டிருந்தாலும், போருக்காகப் பயன்படுத்தப்படவில்லை. ‘போர் யானைகள்’ என்பது முழுக்க முழுக்க இந்தியாவின் கண்டுபிடிப்புதான். இந்தியாவின் மீது மாவீரன் அலெக்சாண்டர் படையெடுத்து வந்து சென்ற பிறகு, அவன் மூலமாகத்தான் மேற்கத்திய நாடுகளில் யானைகள் போருக்காகப் பயன்படுத்தப்பட்டன. மேற்கே ஸ்பெயின் நாடு வரைக்கும், கிழக்கே கம்போடியா நாடு வரைக்கும் யானைகள் போருக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அங்கிருந்த மன்னர்கள் எல்லோரும் இந்திய மன்னர்கள் பின்பற்றிய நுட்பங்களைப் பயன்படுத்தியே யானைகளைப் போருக்காகப் பழக்கப்படுத்தியிருக்கிறார்கள். அங்குசம் என்ற கருவிகூட இந்தியாவிலிருந்துதான் சென்றிருக்கிறது.


இந்திய மன்னர்கள் யானைகளைப் பயன்படுத்திய விதம் குறித்துக் கூறுங்கள்.

மகாபாரதத்தில் 60 வயது நிரம்பிய யானைகள்தான் போருக்காகப் பயன்படுத்தப்பட்டன என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையில் 20 வயதுள்ள யானைகள்தான் போருக்காகப் பழக்கப்படுத்தப்பட்டன. அதுவும் ‘மஸ்த்’ சுரந்து மதம் பிடித்த யானையைத்தான் பழக்கப்படுத்தினார்கள். யானை பிறந்து சில நாட்களே ஆன நிலையில் அவற்றைப் பிடித்துச் சென்றால், அவற்றுக்குச் சோறிட்டு மாள முடியாது என்ற காரணத்தால், அவை 20 வயதை நெருங்கும் வரை காட்டில் சுற்றவிட்டு, அந்தக் காட்டு யானைகளையே பிடித்துப் பழக்கினார்கள்.

சில நேரங்களில் நேரடியாகப் போரில் பயன்படுத்தாமல், போரைத் தவிர்ப்பதற்கும் யானைகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆம்… தங்கள் நாட்டின் மீது போர் தொடுத்து வராமல் இருப்பதற்காக, இதர நாட்டு அரசர்களுக்கு யானைகளை அன்பளிப்பாகக் கொடுக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. அலெக்சாண்டரின் வழித்தோன்றல்களுக்கு சந்திரகுப்தர் சுமார் 500 யானைகளைப் பரிசாக வழங்கியதாகக் குறிப்பு உள்ளது. யானைகளை மட்டுமல்லாமல், யானைப் பாகன்களையும் சேர்த்தே அனுப்பும் வழக்கம் இருந்திருக்கிறது. அதனால்தான், அன்றைய கிரேக்கத்தில் யானைப் பாகன்களை ‘தி இந்தியன்ஸ்’ என்று அழைத்திருக்கிறார்கள்.

‘கஜ சாஸ்திரம்’, ‘மானசலோஸா’ போன்று யானைகள் தொடர்பான அறிவியல் இலக்கியங்களும் இந்தியாவில்தான் தோன்றின. சீன மன்னர்கள், தங்கள் நாட்டு விவசாயிகளைக் காப்பதற்காக, யானைகள் விவசாய நிலங்களை அழித்துவிடாமல் இருக்க, அவற்றைக் கொன்றார்கள். ஆனால் இந்தியாவிலோ, யானைகளையும் விவசாயத்தையும் சமமாக வைத்துப் பேணியிருக்கிறார்கள். தந்தங்களுக்காக யானைகளை வேட்டையாடிய குற்றத்துக்காக மரண தண்டனை விதித்திருக்கிறார்கள். மாறாக, இயற்கையாக இறந்துபோன யானைகளின் தந்தங்களைக் கொண்டு வந்து கொடுத்தால், அவர்களுக்குச் சன்மானம் அளித்திருக்கிறார்கள்.


போர் யானைகள் என்றில்லாமல், பொதுவாகவே யானைகளின் நிலை இன்று எப்படியிருக்கிறது?

19ஆம் நூற்றாண்டு வரை போர் யானைகள் பயன்பாட்டில் இருந்தன. எனக்குத் தெரிந்து 1833ஆம் ஆண்டில் கம்போடியாவில் நடந்த போரில்தான் கடைசியாக யானைகள் போருக்காகப் பயன்படுத்தப்பட்டன. அதற்குப் பிறகு போருக்காக யானைகள் பயன்படுத்தப்படவில்லை. இந்தியாவில், ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பிறகு, வேட்டையாடலுக்காக யானைகள் பயன்படுத்தப்பட்டன. தென்னாப்பிரிக்காவில் யானைகளின் மீது அமர்ந்து ஐரோப்பியர்கள் வேட்டையாடி வந்தனர். அவர்களிடமிருந்து ஆங்கிலேயர்கள் ‘காப்பி’ அடித்தார்கள்.

பழக்கப்படுத்தப்பட்ட யானைகளின் வாழ்க்கை பரிதாபகரமானதுதான். தாய்லாந்தில், மர வேலைப் பயன்பாட்டுக்காக யானைகள் பழக்கப்படுத்தப்பட்டன. சில ஆண்டுகளுக்கு முன்பு அப்படி யானைகளைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டது. இப்போது அவை சாலைகளில் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கின்றன. இந்தியாவிலும் கோயில்களில் யானைகள் அதைத்தானே செய்கின்றன?

ஆனால், காட்டு யானைகளுக்கு நல்வாழ்க்கை அமைந்திருக்கிறது. அதுவும் தமிழகம், கேரளம் உள்ளிட்ட தென்னிந்தியக் காடுகளில் யானைகள் நலமுடன் வலம் வருகின்றன. சுற்றுலா போன்றவற்றால், அவற்றுக்குப் பொருளாதார மதிப்பும் கிடைத்துள்ளன. யானைகள் அதிகரித்தால் மனித - விலங்கு எதிர்கொள்ளல் நிகழ்ச்சிகள் அதிகரிக்கத்தான் செய்யும். அவற்றை எப்படிக் கையாள்கிறோம் என்பதில் தெரியும் அவற்றுக்கு நாம் செய்யும் மரியாதை..!

நன்றி: மின்னம்பலம்

No comments:

Post a Comment