Friday, July 8, 2016

அந்த ‘கோட்’ அவருக்கு எப்போது கிடைக்கும்?


ந.வினோத்குமார்
பதிப்பிக்கப்பட்ட தேதி: 8 ஜூலை, 2016

அந்த அரங்கத்தில் உலக அளவில் பிரபலமான பேராசிரியர்களும், பேராசிரியர்களையே மிஞ்சும் மாணவர்களும், ஆராய்ச்சியாளர்களும் அமர்ந்திருந்தனர். மேடையில் 41 வயதான அந்த‌ இளைஞர் தான் கடந்து வந்த பாதையைச் சொல்கிறார். தன்னால் உயர்ந்த மாணவர்களின் பின்னணியைச் சொல்கிறார். அவை ஒவ்வொன்றும் அங்கு அமர்ந்திருந்தவர்களைப் புல்லரிக்க வைக்கிறது. புத்துணர்வு கொள்ளச் செய்கிறது. கைதட்டல்களால் அரங்கம் அதிர்கிறது.

இது நடந்த இடம் அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி எனப்படும் எம்.ஐ.டி. நடந்த ஆண்டு 2014. அவர் ஆனந்தகுமார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அதே எம்.ஐ.டி. மற்றும் ஹார்வார்டு பல்கலைக்கழகங்கள் இணைந்து ஏற்படுத்தியுள்ள ‘எட் எக்ஸ்’ எனும் கல்வி வலைதளத்தில் கணிதப் பாடம் நடத்த அழைக்கப்பட்டுள்ளார். இதை ஆனந்த் குமாரே எதிர்பார்த்திருக்க மாட்டார்!

அந்த ஆனந்த் குமாரைப் பற்றித்தான் பேசுகிறது ‘சூப்பர் 30 ஆனந்த் குமார்’ எனும் புத்தகம். இதனை எழுதியவர் பிஜு மேத்யூ. பெங்குயின் வெளியீடான இந்தப் புத்தகம் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

 

ஆனந்த் குமார்...? பிஹார் மாநிலத்தின் ஒரு மூலையில் பிறந்த அவர், கணிதம் படிப்பதற்காகவே பிறந்தார் என்று சொன்னால் அது மிகையல்ல. பள்ளியிலும் கல்லூரியிலும் அவர் கணிதப் பாடத்தை அவ்வளவு விரும்பிப் படித்தார். அதன் விளைவு கல்லூரிக் காலத்திலேயே உலக அளவில் பிரபலமான கணித ஆய்விதழ்களில் கட்டுரைகள் வெளிட்டார். அது அவரை கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் மேற்படிப்புப் படிக்க வரவேற்றது.

ஆனால், வறுமையும், தான் உயரக் காரணமாக இருந்த தந்தையின் மரணமும் கேம்ப்ரிட்ஜ் கனவை, கனவாக மட்டுமே இருக்கச் செய்தன. அதனால் அவர் சோர்ந்துவிடவில்லை. ‘என்னைப் போன்று திறமை இருக்கும், வறுமையில் வாடும் மாணவர்களுக்குப் பயிற்சியளித்து, அவர்களை கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு அனுப்புகிறேன். அதுவரை என் அப்பா எனக்காகப் பரிசளித்த இந்த ‘கோட்’டை நான் அணியமாட்டேன்’ என்று சபதம் ஏற்றார். அந்த சபதம்தான் இன்று ‘சூப்பர்30’ என நிலைபெற்றிருக்கிறது!

வருடத்துக்கு 30 பேர். அவர்களை ஐ.ஐ.டி. நடத்தும் நுழைவுத் தேர்வுகளுக்குத் தயார்படுத்துவது. இதுதான் ஆனந்த் குமாரின் இலக்கு. 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் வெற்றிபெற்றுப் பொறியியல் படிப்புக்குத் தேர்வாகியிருக்கிறார்கள். சிலர், மேற்படிப்பு படிக்க வெளிநாடுகளில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் சேர்ந்திருக்கிறார்கள். விரைவில், ஆனந்த் குமாரின் மாணவர்கள் சிலர் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் காலடி எடுத்து வைப்பார்கள். ‘கோட்’ அவர் கைக்கு வரும் நாள் தொலைவில் இல்லை.

இந்தப் பயிற்சிகளுக்கு மாணவர்கள் எவ்வளவு செலவு செய்ய வேண்டும்? சொன்னால் நம்ப மாட்டீர்கள். அனைத்தும் இலவசம். உணவு, தங்கும் வசதி உட்பட!

இந்தத் திட்டத்தால் தங்கள் பிசினஸ் பாதிக்கப்படும் என்று கூறி, சில கோச்சிங் சென்டர் முதலாளிகள் அவரைக் கொலை செய்யக்கூடத் துணிந்திருக்கின்றனர். அத்தனையையும் தாண்டி, அவரால் இந்தத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த முடிகிறது என்றால், அதற்கு ஒரே காரணம், அவர் தன் மாணவர்களிடத்தில் சொல்கின்ற ‘சக்சஸ் சீக்ரெட்’ தான். அது: “வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க எப்போதும் பல வழிகள் உண்டு. அது கணிதத்துக்கும் பொருந்தும்!”

ஆனந்த் குமார் சிறுவனாக இருக்கும்போது, அவரின் தந்தை ஆனந்தின் காலில் விழுந்து வணங்குவாராம். அதனை ஆனந்த் பதறித் தடுத்து “ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?” என்று கேட்டபோது, அதற்கு அவரின் தந்தை “நீ பெரியவனாகி, சமூகத்தில் சிறந்த மனிதனாக விளங்கும்போது, ஒருவேளை நான் உயிரோடு இல்லாமல் போய்விட்டால், உன்னை எப்படி வணங்குவது? அதுதான் இப்போதே உன்னை வணங்குகிறேன்!” என்றாராம்.

ஆனந்த் குமாரின் முயற்சியால்தான் இன்று பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சலிங்கிற்கு ஆகும் செலவும், கல்விக் கடனுடன் சேர்த்து வழங்கப்படுகிறது. அதனால், இன்று பல மாணவர்களின் மனதில் அவர் கடவுளாகத் தெரிகிறார்.

இவன் தந்தை என்னோற்றான் கொல்..! 

நன்றி: தி இந்து (இளமை புதுமை)

No comments:

Post a Comment